செங்கிஸ் கான்
மங்கோலியப் பேரரசைத் தோற்றுவித்தவர் (அண். பொ. ஊ. 1162-1227) / From Wikipedia, the free encyclopedia
செங்கிஸ் கான் (இயற்பெயர் தெமுஜின்; அண். 1162 — 25 ஆகத்து 1227) அல்லது மகா செங்கிஸ் கான்[5] என்பவர் மங்கோலியாவைச் சேர்ந்த ஓர் ஆயர் நாடோடி ஆவார். இவர் சிங்கிஸ் கான்[lower-alpha 1] என்ற பெயராலும் அறியப்படுகிறார். இவர் மங்கோலியப் பேரரசைத் தோற்றுவித்தார். அதன் முதல் ககானாகச் (பேரரசன்) செயல்பட்டார். கி.பி. 1206இல் மங்கோலியத் துருக்கிய இனக்குழுக்களை இணைத்து மங்கோலியப் பேரரசை அமைத்தார். உலக வரலாற்றின் மிகவும் குறிப்பிடத்தக்க இராணுவத் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[6] இவரது இறப்புக்குப் பிறகு இவரது அரசு உலக வரலாற்றின் மிகப் பெரிய தொடர்ச்சியான நிலப் பேரரசானது. இன்றும் வரலாற்றின் மிகப் பெரிய தொடர்ச்சியான நிலப் பேரரசு இது தான்.
செங்கிஸ் கான் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஒரு 14ம் நூற்றாண்டு யுவான் சகாப்த செருகேட்டில் சித்தரிக்கப்பட்டுள்ள செங்கிஸ் கான். ஓவிய ஆண்டு 1278 (தேசிய அரண்மனை அருங்காட்சியகம், தாய்பெய், தாய்வான்). | |||||||||||||
மங்கோலியப் பேரரசின் முதல் ககான் | |||||||||||||
ஆட்சிக்காலம் | இளவேனிற்காலம் 1206 – ஆகஸ்ட் 25, 1227 | ||||||||||||
முடிசூட்டுதல் | மங்கோலியாவில் உள்ள ஆனன் ஆற்றினருகில் 1206ம் ஆண்டின் இளவேனிற்காலத்தில் நடந்த குறுல்த்தாய் | ||||||||||||
பின்னையவர் | ஒக்தாயி கான் | ||||||||||||
பிறப்பு | தெமுஜின்[குறிப்பு 1] மே 1, 1162[2] கென்டீ மலைகள், கமக் மங்கோல் | ||||||||||||
இறப்பு | ஆகத்து 25, 1227[3] (அகவை 65) இன்சுவான், மேற்கு சியா | ||||||||||||
துணைவர் | போர்ட்டே உஜின் கதுன் கஞ்சு கதுன் குலான் கதுன் எசுகென் கதுன் எசுலுன் கதுன் இசுகன் கதுன் கஞ்சு கதுன் அபிகா கதுன் குர்பசு கதுன் சகா கதுன் மொகே கதுன் மற்றும் பலர் | ||||||||||||
குழந்தைகளின் பெயர்கள் | சூச்சி சகதாயி கான் ஒக்தாயி கான் டொலுய் மற்றும் பலர் | ||||||||||||
| |||||||||||||
மரபு | போர்ஜிகின் | ||||||||||||
அரசமரபு | செங்கிசியம் | ||||||||||||
தந்தை | எசுகெய் | ||||||||||||
தாய் | ஓவலுன் | ||||||||||||
மதம் | தெங்கிரி மதம் |
1155 மற்றும் 1167க்கு இடையில் இவர் பிறந்தார். இவருக்கு தெமுஜின் என்ற பெயர் கொடுக்கப்பட்டது. போர்ஜிகின் மங்கோலியத் தலைவனாகிய எசுகெய் மற்றும் அவரது மனைவியாகிய ஒலகோனுடு இனத்தின் ஓவலுன் ஆகியோருக்கு முதல் குழந்தையாக இவர் பிறந்தார். தெமுஜினுக்கு எட்டு வயதாகிய போது இவரது தந்தை இறந்தார். இவரது குடும்பத்தை இவரது பழங்குடியினம் கைவிட்டு விட்டுச் சென்று விட்டது. வேட்டையாடி-சேகரித்து உண்ணும் வாழ்க்கை முறையை பின்பற்றியதன் மூலம் தனது குழந்தைகளுக்கு எவ்வாறு பிழைப்பது என்பதை ஓவலுன் கற்றுக் கொடுத்தார். இவரது குழந்தைப் பருவத்தின் போது தன்னுடைய நிலையை உறுதிப்படுத்துவதற்காக தெமுஜின் தன்னுடைய ஒன்று விட்ட சகோதரனாகிய பெக்தரைக் கொன்றார். ஓர் இளைஞனாக வளர்ந்து வந்த போது இவர் தனக்கென ஆதரவாளர்களைச் சேர்க்க ஆரம்பித்தார். சமுக்கா மற்றும் தொகுருல் என்று அழைக்கப்பட்ட இரு முக்கியமான புல்வெளித் தலைவர்களுடன் கூட்டணியை ஏற்படுத்தினார். தெமுஜினின் கடத்தப்பட்ட மனைவி போர்ட்டேயை மீட்பதற்காக இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டனர். இவரது பெயர் வளர்ந்து வந்த போது சமுக்காவுடனான இவரது உறவு முறையானது மோசமடைந்து ஒரு வெளிப்படையான போரானது. அண். 1187இல் தெமுஜின் தீர்க்கமாகத் தோற்கடிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளை இவர் சின் அரசமரபின் ஒரு குடிமகனாகச் செலவழித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 1196ஆம் ஆண்டு இவர் மீண்டும் தோன்றுகிறார். வேகமாக சக்தியைப் பெறத் தொடங்குகிறார். தெமுஜினை ஓர் அச்சுறுத்தலாக தொகுருல் காண ஆரம்பித்தார். 1203இல் தெமுஜின் மீது ஓர் எதிர்பாராத தாக்குதலைத் தொடங்கினார். தெமுஜின் பின் வாங்கினார். மீண்டும் தன்னுடைய ஆதரவாளர்களைச் சேர்த்து தொகுருலை வீழ்த்தினார். நைமன் பழங்குடியினத்தைத் தோற்கடித்ததற்குப் பிறகு, சமுக்காவை மரண தண்டனைக்கு உட்படுத்தியதற்குப் பிறகு மங்கோலியப் புல்வெளியின் ஒரே ஆட்சியாளராக இவர் எஞ்சியிருந்தார்.
தெமுஜின் அதிகாரப் பூர்வமாக "செங்கிஸ் கான்" என்ற பட்டத்தை 1206ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு குறுல்த்தாயில் தனது 44ஆம் வயதில் பெற்றார். இப்பட்டத்தின் பொருள் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. நீண்ட கால அமைதியை உறுதி செய்வதற்கென வடிவமைக்கப்பட்ட சீர்திருத்தங்களை மேற்கொண்டார். ஆளும் குடும்பத்திற்கு சேவையாற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட, தகுதியை அடிப்படையாகக் கொண்ட ஓர் அமைப்பை உள்ளடக்கியதாக மங்கோலியப் பழங்குடியின அமைப்பை இவர் மாற்றினார். ஒரு சக்தி வாய்ந்த பூசாரியிடம் இருந்து வந்த ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடித்ததற்குப் பிறகு செங்கிஸ் கான் தன்னுடைய சக்தியை நிலைப்படுத்தத் தொடங்கினார். 1209இல் அண்டை நாடான மேற்கு சியாவிற்குள் ஒரு பெருமளவிலான ஊடுருவலுக்குத் தலைமை தாங்கினார். அதைத் தொடர்ந்த ஆண்டு மங்கோலிய நிபந்தனைகளுக்கு அந்நாடு ஒப்புக் கொண்டது. பிறகு சின் அரசமரபுக்கு எதிராக ஒரு படையெடுப்பைத் தொடங்கினார். இப்படையெடுப்பு நான்கு ஆண்டுகளுக்கு நீடித்தது. 1215இல் சின் தலைநகரான சொங்குடு (தற்கால பெய்ஜிங்) கைப்பற்றப்படுவதுடன் இது முடிவடைந்தது. இவரது தளபதி செபே 1218ஆம் ஆண்டு நடு ஆசியாவில் இருந்த காரா கிதை நாட்டை இணைத்தார். தன்னுடைய தூதுவர்கள் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டதால் கோபமடைந்த செங்கிஸ் கான் அதைத் தொடர்ந்த ஆண்டில் குவாரசமியப் பேரரசு மீது படையெடுத்தார். குவாரசமிய அரசானது அதிகாரத்தை இழந்தது. திரான்சாக்சியானா மற்றும் குராசான் ஆகிய பகுதிகள் அழிவுக்கு உட்படுத்தப்பட்டன. அதே நேரத்தில் செபேயும், அவரது இணைத் தளபதி சுபுதையும் சார்சியா மற்றும் கீவ உரூசு ஆகியவற்றை அடைந்த ஒரு நீண்ட தூரப் பயணத்திற்குத் தலைமை தாங்கினர். 1227இல் கிளர்ச்சியில் ஈடுபட்ட மேற்கு சியாவை அடி பணிய வைக்கும் போது செங்கிஸ் கான் இறந்தார். இதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இடைக் காலமானது வந்தது. செங்கிஸ் கானின் மூன்றாவது மகனும், வாரிசுமான ஒக்தாயி 1229ஆம் ஆண்டு அரியணையில் அமர்ந்தார்.
செங்கிஸ் கான் ஒரு புரிந்து கொள்ள இயலாத மற்றும் சர்ச்சைக்குரிய மனிதராக இன்றும் தொடர்கிறார். தன்னுடைய ஆதரவாளர்களுக்கு ஈகைக் குணம் கொண்டவராகவும், கடுமையான விசுவாசத்தையும் அளித்தார். ஆனால் தனது எதிரிகளை நோக்கி இரக்கமற்றவராக இருந்தார். உலகை ஒரே நாடாக்கும் தன்னுடைய இலக்கிற்கு என யாரிடம் இருந்தும் வந்த ஆலோசனையை இவர் வரவேற்றார். உலகை ஒரே நாடாக்கும் பணியானது ஷாமன் மத உச்சபட்ச தெய்வமான தெங்கிரியால் தனக்கு விதிக்கபட்ட விதி என இவர் நம்பினார். செங்கிஸ் கானின் ஒருங்கிணைந்த மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட இராணுவமானது தசம இலட்சக்கணக்கானவர்களைக் கொன்றுள்ளது. அதே நேரத்தில் இவரது இராணுவ வெற்றிகள் அதற்கு முன்னர் இருந்திராத அளவில் வணிகம் மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்திற்கான ஒரு பகுதியையும் உருவாக்கியது. உருசியா மற்றும் முசுலிம் உலகத்தில் இவர் ஒரு பிற்போக்குவாத, காட்டுமிராண்டி கொடுங்கோலனாகவும், மேற்குலக நாடுகளில் நேர்மறை மற்றும் எதிர் மறைப் பண்புகளைக் கொண்ட கலவையான மனிதராகவும் நினைவுபடுத்தப்படுகிறார். மங்கோலியாவில் இவர் தெய்வமாக்கப்பட்டுள்ளார். பல நூற்றாண்டுகளாக சமய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்துள்ளார். தற்கால மங்கோலியர்கள் இவரை தங்களது நாட்டின் நிறுவனத் தந்தையாக அடையாளம் கண்டு கொள்கின்றனர்.
இவரது வழக்கத்திற்கு மாறான சிறப்பு வாய்ந்த இராணுவ வெற்றிகள் இவரை வரலாற்றின் மிக முக்கியத் துரந்தரர்களில் ஒருவராக்குகிறது. மங்கோலிய சாம்ராச்சியத்தில் தகுதி அடிப்படையில் பதவி வழங்குவதையும், சமய சகிப்புத்தன்மையையும் ஊக்குவித்தார்.[7] பட்டுப் பாதையை ஓர் ஒத்திசைவான அரசியல் சூழலின் கீழ்க் கொண்டு வந்ததன் காரணமாகச் செங்கிஸ் கான் புகழப்படுகிறார். இது தொடர்பு மற்றும் வர்த்தகத்தை வடகிழக்கு ஆசியாவிலிருந்து முஸ்லிம் தென்மேற்கு ஆசியா, கிறித்தவ ஐரோப்பாவிற்குக் கொண்டு சேர்த்தது. மூன்று கலாச்சாரப் பகுதிகளின் எல்லைகளையும் விரிவுபடுத்தியது. 1995இல் ஐக்கிய அமெரிக்காவின் பெரிய மற்றும் புகழ்பெற்ற தி வாசிங்டன் போஸ்ட் பத்திரிகை, தாங்கள் வாக்களிக்கக் கேட்டுக் கொண்ட வரலாற்றாளர்களில் பெரும் அளவாக 3இல் 2 பங்கினர் தேர்ந்தெடுத்ததன் அடிப்படையில், இவரைக் கடந்த ஆயிரம் ஆண்டுகளின் மிக முக்கியமான மனிதனாகத் தேர்ந்தெடுத்தது.[8][9]
இவரது 30 வயதுப் பேரன்கள் “பெரிய பையன்களின் படையெடுப்பு” என்று மங்கோலியாவில் அழைக்கப்பட்ட படையெடுப்பை உருசியா மீது தளபதி சுபுதையைக் கொண்டு பொ. ஊ. 1237இல் நடத்தினர். அதை வென்று 240 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தனர். அவர்கள் உருசியா மீது குளிர்காலத்தில் படையெடுத்து வென்றனர். சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு நெப்போலியன் மற்றும் இட்லர் ஆகியோர் உருசியாவைக் குளிர் காலத்தில் வெல்ல முயன்று தோல்வியடைந்தனர். 1 இலட்சம் படைவீரர்களைக் கொண்ட இவரது இராணுவம் 10 கோடி மக்களைக் கொண்ட பேரரசை உருவாக்கியது.[10] வரலாற்றில் படையெடுத்துச் சென்ற சிறிய இராணுவங்களில் இதுவும் ஒன்றாகும்.[9] இவர் சிறு இராணுவத்தைக் கொண்டு பெரும் பேரரசுகளை வீழ்த்தினார். செங்கிஸ் கானின் குதிரையின் பெயர் “சிகி” ஆகும்.