From Wikipedia, the free encyclopedia
மகாராட்டிராவின் கட்டிடக்கலை (Architecture of Maharashtra) இந்தியாவில் மகாராட்டிரா மாநிலத்தில் குகைகள் மற்றும் பாறை-வெட்டு கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது. எகிப்து, அசிரியா, ஈரான்,கிரேக்கம் ஆகிய நாடுகளில் காணப்படும் குகைகள் மற்றும் பாறையில் வெட்டப்பட்ட கட்டிடக்கலைகளை விட மகாராட்டிராவில் காணப்படுபவை வகைகள் பெரிதானவை என்று கூறப்படுகிறது. பௌத்த பிக்குகள் முதன்முதலில் கிமு 2ஆம் நூற்றாண்டில், தியானத்திற்கான அமைதியான சூழலைத் தேடி இந்த குகைகளை அடைந்தனர். மேலும் அவர்கள் இந்த குகைகளை மலைப்பகுதிகளில் கண்டனர்.[1][2]
எல்லோரா மற்றும் அஜந்தா குகைகளிலுள்ள பௌத்த மற்றும் இந்து குகைக் கோயில்கள் சிறந்த கலை வடிவமைப்பு கூறுகளைக் கொண்டுள்ளன. மேலும் இந்தியாவின் பழமையான சுவர் ஓவியங்களையும் இங்கே காணலாம். மகாராட்டிராவின் புகழ்பெற்ற பாறைக் குகைகள் பல தனித்துவமான கலை கூறுகளைக் கொண்டுள்ளன. ஆனால் அந்தக் காலத்தின் சிற்பங்கள் நவீன பார்வையாளர்களுக்கு கடினமானவை என்றும் மாறும் தன்மை கொண்டவை என்றும் கருதப்படுகின்றன. பௌத்த குகைகள், குறிப்பாக கோயில்கள் (சைத்யங்கள்) அல்லது மடங்கள் (விகாரைகள்) மிக பழையவை.
மன்சாரில் வகாடகா இடிபாடுகள் மாநிலத்தின் மிகப் பழமையான கட்டிடமாகும்.
பௌத்த ஆட்சியுடன் பாறையில் வெட்டப்பட்ட கட்டிடக்கலையும் திரும்பியது. கிழக்கில் பீகார் மற்றும் மேற்கில் மகாராட்டிரா போன்ற பகுதிகளில் குறிப்பிடத்தக்க பௌத்த நினைவுச்சின்னங்கள் உருவாக்கப்பட்டன. மலைப்பகுதியில் உள்ள இயற்கைக் கோட்டைகளிலும் குகைகளிலும் பௌத்த பிக்குகளால் தோண்டப்பட்டு புகழ்பெற்ற பிரார்த்தனை அரங்குகளாகவும் மடங்களாகவும் மாற்றப்பட்டன.
துறவு மேற்கொள்வதற்கான சிறிய அறைகள் முதல் மகத்தான, விரிவாக செதுக்கப்பட்ட கோயில்கள் வரை, அவை திடமான பாறையிலிருந்து கையால் வெட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கிமு 3ஆம் நூற்றாண்டின் தோற்றம் பௌத்த பிக்குகளுக்கு தற்காலிக தங்குமிடங்களாக இருந்ததாகத் தெரிகிறது. கனமழைக் காலங்களில் அவர்களின் சாதாரண பயண வாழ்க்கை முறை சாத்தியமில்லாமல் போகவே இங்கே தங்க ஆரம்பித்தனர்.
ஆரம்பகால இடைக்காலத்தில், மகாராட்டிரிய பிராந்தியத்தின் கட்டிடக்கலை பெரும்பாலும் பழைய மற்றும் புதிய இந்துக் கோயில் கட்டிடக்கலை (நாகரா) பாணிகளின் கலவையை அடிப்படையாகக் கொண்டது. இந்த இரண்டு நாகரா பாணிகளின் தனித்துவமான கலவையாக பீமாசங்கர் கோயில் கருதப்படுகிறது. பிற்பகுதியில், தேவகிரியின் யாதவர்களின் அரசவையிலிருந்த அறிஞர்கள் பல கோயில்களை உருவாக்க தங்களது தனித்துவமான கூட்டு நாகரா பாணியைப் பயன்படுத்தினர். அவை ஏராளமான இசுலாமிய மோதல்களால் இந்து வழிபாட்டுத் தலங்கள் அழிந்தாலும், கோயில்களின் மேல் அவர்கள் கொண்ட ஆர்வத்தாலும் அவை மீண்டும் கட்டிஎழுப்பப்பட்டன. இவற்றில் முதன்மையானது நாசிக், திரிம்பகேஸ்வரர் கோயில், துள்ஜாபூரிலுள்ள துளஜா பவானி கோவில், ஔரங்கபாத், கிருஷ்ணேசுவர் கோவில் போன்றவை.
தௌலதாபாத் கோட்டையிலுள்ள சில கட்டமைப்புகள் [note 1] மகாராட்டிராவில் இந்திய-இசுலாமிய கட்டிடக்கலைக்கு முந்தைய எடுத்துக்காட்டுகளாகும். [3]
இடைக்கால அகமதுநகர் சுல்தான்களால் கட்டப்பட்ட அகமதுநகர் கோட்டையில், இரண்டாம் சலாபத்கானின் கல்லறையும், அகமதுநகரில் அமைந்துள்ள ரௌஸாபாக் என்ற தோட்டமும் [4] அவர்களின் பாணியையும் தக்காண சுல்தான்களின் பாணியையும் கொண்டுள்ளது.
மகாராட்டிராவில் முகலாயக் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக முகலாய பேரரசர் ஔரங்கசீப் கட்டிய தாஜ் மஹாலின் பிரதியான பீபி கா மக்பாராவைக் கூறலாம்
மராட்டியப் பேரரசு 17 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஆட்சி செய்தது. முகலாய சாம்ராஜ்யத்திற்கு எதிராக அவர்கள் தொடர்ந்து போரில் ஈடுபட்டனர். எனவே, சனிவார்வாடா, பிரதாப்காட் கோட்டை, ராய்கட் கோட்டை மங்காட் கோட்டை உட்பட பல கோட்டைகள் இப்பகுதி முழுவதும் கட்டப்பட்டன. பேரரசர் சிவாஜி புனேவில் லால் மகாலைக் கட்டினார். கூட்டமைப்பு காலத்தில், பிரபலமான பல கோவில்கள் மகாராட்டிரா முழுவதும் கட்டப்பட்டன / புதுப்பிக்கப்பட்டன. அவை மராத்தாக் கட்டிடக்கலை என்று கருதப்படும் ஒரு விசித்திரமான கட்டடக்கலை பாணியை பிரதிபலிக்கின்றன.
மும்பையில் போத்துக்கீசர்களின் ஆட்சியின் போது , மத் கோட்டை மற்றும் காஸ்டெல்லா டி அகுவாடா உட்பட பல கோட்டைகள் நகரத்தில் கட்டப்பட்டன.
பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் குறிப்பாக மும்பையில் ஐரோப்பிய பாணிகள் நடைமுறையில் இருந்தன. மும்பையில் இரண்டு உலக பாரம்பரிய களங்களான சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் (கோதிக் புதிய பாணியில் பிரெட்ரிக் வில்லியம் ஸ்டீவென்ஸ் என்பவர் வடிவமைத்தார்), மும்பையின் விக்டோரியா அலங்கார வேலைப்பாடுகள் குழுமம் ( பம்பாய் உயர் நீதிமன்றம், ராஜபாய் கடிகார கோபுரம், மும்பை பல்கலைக்கழகம்) போன்றவை.[5][6] மற்ற எடுத்துக்காட்டுகளாக மும்பை, மாநகராட்சி அலுவலகக் கட்டிடம், ஆசிய அமைப்பின் வளாகம், புனேவின் பெர்க்குசன் கல்லூரி ஆகியவை அடங்கும்.
இந்தோ சரசனிக் பாணி எனப்படும் புதிய கட்டடக்கலை பாணி உருவாக்கப்பட்டது. இது பிரித்தானிய மற்றும் இந்திய பாணிகளின் கலவையாகும். இந்த பாணியின் சிறந்த எடுத்துக்காட்டுகளாக மும்பைஉஇலுள்ள இந்தியாவின் நுழைவாயில் , தாஜ் மகால் பேலஸ் மற்றும் டவர், சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயம் [note 2] (இது முன்னர் இளவரசர் வேல்ஸ் அருங்காட்சியகம் என்றழைக்கப்பட்டது ) அமைந்துள்ளது.
மும்பை மாநகரம் அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்த கட்டிடங்களின் மிகப்பெரிய தொகுப்புகளில் ஒன்றாகும்.
அனைத்துலகக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்ட நவீன வானளாவிய கட்டிடங்களான தி இம்பீரியல், அண்டிலியா, பாலாய்ஸ் ராயல் ஆகியவை மும்பையின் வானளாவியக் கட்டிடங்களாக உருவாகியுள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.