இந்திய தரைப்படை உலகின் இரண்டாவது மிகப்பெரிய தரைப்படையாகும். From Wikipedia, the free encyclopedia
இந்தியத் தரைப்படை என்பது இந்தியப் படைத்துறையின் மிகப்பெரிய பிரிவாகும்.இது இந்தியாவின் எல்லை கண்காணிப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, அமைதி நிலைநாட்டல், பயங்கரவாத எதிர்ப்புப் ஆகிய பங்களில் ஈடுபடுகின்றது. இது இயற்கை பேரிடர் மற்றும் பிற இடையூறுகளின் போது மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
இந்தியத் தரைப்படை Indian Army | |
---|---|
உருவாக்கம் | 26 சனவரி 1950 (தற்போதைய வடிவத்தில்)
1 ஏப்ரல் 1895 (பிரித்தானிய இந்திய இராணுவமாக) |
நாடு | இந்தியா |
வகை | தரைப்படை |
பொறுப்பு | தரைச் சண்டை |
அளவு | |
பகுதி | இந்தியப் பாதுகாப்புப் படைகள் |
தலைமையகம் | ஒருங்கிணைந்த பாதுகாப்பு தலைமையகம், பாதுகாப்புத் துறை அமைச்சகம், புது டெல்லி |
குறிக்கோள்(கள்) | சேவா பரமோ தர்மா ("தனக்கு முன் சேவை") |
நிறம் | தங்கம், சிவப்பு மற்றும் கருப்பு |
அணிவகுப்பு | கடம் கதம் பதாயே ஜா (முன்னோக்கிச் செல்லுங்கள்) |
ஆண்டு விழாக்கள் | இராணுவ தினம்: 15 சனவரி |
சண்டைகள் | |
இணையதளம் | indianarmy.nic.in |
தளபதிகள் | |
குறிப்பிடத்தக்க தளபதிகள் | |
படைத்துறைச் சின்னங்கள் | |
கொடி | |
வானூர்திகள் | |
உலங்கு வானூர்தி | எச்ஏஎல் ருத்ரா, பிரசந்த், துருவ், சேத்தக், சீத்தா |
இந்திய தரைப்படை பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. இந்தியக் குடியரசுத் தலைவர் இந்திய தரைப்படையின் உச்ச தளபதியாக செயல்படுகிறார். இதன் தொழில்முறைத் தலைவராக தரைப்படைப் பணியாளர்களின் தலைவரான தரைப்படை தலைமைத் தளபதி செயல்படுகிறார். தரைப்படையின் தலைமைப் பதவி படைத்துறை உயர் தளபதியாகும். இந்நாள் வரை சாம் மானேக்சா மற்றும் கரியப்பா ஆகிய இரண்டு தரைப்படை பட்டாளர்கள் மட்டுமே இந்த உயர் பதவியை அடைந்திருக்கின்றனர்.
இந்தியத் தரைப்படை 1895 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் நாள் நிறுவப்பட்டது. இந்தப் படைகள் உலகப் போர்களில் பெரும் பங்காற்றின. இந்திய விடுதலைக்கு பிறகு அண்டை நாடுகளான பாக்கித்தான் மற்றும் சீனாவுடன் பல போர்களில் ஈடுபட்டுள்ளது. இந்திய தரைப்படை உலகின் பல சச்சரவுப் பகுதிகளில் ஐக்கிய நாடுகள் அவையின் அமைதி காக்கும் படையாக பணியாற்றியுள்ளது.
இந்தியத் தரைப்படை செயல்பாட்டு மற்றும் புவியியல் ரீதியாக ஏழு கட்டளைகளாக பிரிக்கப்பட்டுள்ளது, இவை மேலும் அடிப்படைப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. நிரந்தர படைப்பிரிவுகள் தங்கள் சொந்த ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சிக்கு பொறுப்பாகும். தன்னார்வப் படையான இந்தியத் தரைப்படை, 12 இலட்சத்திற்கும் அதிகமான தயார் நிலை துருப்புக்கள் மற்றும் ஏறத்தாழ 10 இலட்சம் இருப்பு வீரர்களுடன் உலகின் மிகப் பெரிய தரைப்படையாக உள்ளது.
இந்திய தரைப்படையின் கோட்பாடுகள் மற்ற படைப்பிரிவுகளை போன்றே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அமையப்பட்டன.[3]
1833 இன் சாசனச் சட்டத்தின் மூலம், கிழக்கிந்திய அரசாங்கச் செயலகம் ஒரு இராணுவத் துறை உட்பட நான்கு துறைகளாக மறுசீரமைக்கப்பட்டது. பல்வேறு மாகாணங்களின் தரைப்படைகள் 1895 ஏப்ரல் 1 அன்று ஒன்றாக இணைக்கப்பட்டு, பிரித்தானிய இந்தியத் தரைப்படையாக உருவாக்கப்பட்டது.[4][5] 20ஆம் நூற்றாண்டில், முதலாம் உலகப் போரில் பிரித்தானியப் பேரரசின் படைகளுக்குத் துணையாக இந்திய தரைப்படையின் ஏறத்தாழ 13 இலட்சம் வீரர்கள் போரிட்டனர். இதில் 75 ஆயிரம் வீரர்களுக்கு மேல் போரில் கொல்லப்பட்டனர்.[6]
பெரும்பாலான சிப்பாய்கள் இந்தியர்களாக இருந்த போதிலும், 1918 மற்றும் 1932 க்கு இடையில் 69 இந்திய அதிகாரிகள் மட்டுமே பணியமர்த்தப்பட்டனர். இந்திய அதிகாரிகளை உருவாக்க 1932 இல் இந்திய இந்தியப் படைத்துறைக் கல்விக்கூடம் நிறுவப்பட்டது.[7] இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக, ஏறத்தாழ 3,000 பிரித்தானிய அதிகாரிகளுடன், 500 இந்திய அதிகாரிகளைக் கொண்டிருந்தது.[8] இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளுக்கு ஆதரவாக இந்தியத் தரைப்படை போரிட்டது. போரின் உச்சக்கட்டத்தில் ஏறத்தாழ 25 இலட்சம் வீரர்களைக் கொண்டிருந்தது. இந்தப் போரில் 85,000 க்கும் அதிகமான இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.[9] சப்பானியப் பேரரசால் கைப்பற்றப்பட்ட ஏறத்தாழ 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய போர்க் கைதிகள் மோகன் சிங்கால் தோற்றுவிக்கப்பட்டு பின்னர் சுபாசு சந்திர போசால் வழிநடத்தப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்தனர். இவர்கள் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுக்கு எதிராக இந்திய விடுதலை இயக்கதிற்கு ஆதரவாகப் போரிட்டனர்.[10][11]
1947 இல் இந்தியப் பிரிவினை மற்றும் இந்திய விடுதலைக்குப் பிறகு பத்து கூர்க்கா படைப்பிரிவுகளில் நான்கு பிரித்தானிய இராணுவத்திற்கு மாற்றப்பட்டன. மீதமுள்ள படைகள் புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய ஒன்றியம் மற்றும் பாக்கித்தான் இடையே பிரிக்கப்பட்டது.[12] சுதந்திரத்திற்குப் பிறகு ஏறக்குறைய அனைத்து மூத்த பிரித்தானிய அதிகாரிகளும் வெளியேறியதும், அவர்களுக்குப் பதிலாக இந்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.[13][14] 1950 சனவரி 26 ஆம் நாள் இந்தியா குடியரசாக மாறியதைத் தொடர்ந்து, அதிகாரபூர்வமாக இந்தியத் தரைப்படை எனப் பெயர் பெற்றது.[15]
சுதந்திரத்திற்குப் பிறகு உடனடியாக, இந்தியாவிற்கும் பாகித்தானுக்கும் இடையே மோதல்கள் வெடித்தது. அப்போதைய சுதந்திர பிரதேசமான காசுமீர் அதிகமான இசுலாமியர்களைக் கொண்டிருந்த போதிலும், இந்து மன்னரான அரி சிங்கால் ஆளப்பட்டது. இசுலாமிய பெரும்பான்மை பிரதேசமாக இருந்த காசுமீரை பாக்கித்தான் ஆக்கிரமிக்க முயன்றது. இதன் விளைவாக, பாக்கித்தான் காசுமீர் மீது 1947 அக்டோபர் 22 ஆம் நாள் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து மகாராசா அரி சிங் இந்தியாவின் உதவியை நாடினார். இந்திய ஒன்றியத்துடன் சேர கையெழுத்திட்ட பிறகு, இந்தியத் தரைப்படை அக்டோபர் 27 ஆம் நாள் போரில் ஈடுபட தொடங்கியது.[16] ஒரு தீவிரமான போருக்கு பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டைத் தொடர்ந்து 1948 ஆம் ஆண்டின் இறுதியில் அமைதி திரும்பியது. ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தின் படி ஒரு எல்லை கட்டுப்பாட்டுக் கோடு வரையறுக்கப்பட்டு, இந்திய மற்றும் பாக்கித்தான் படைகள் போருக்கு முந்தைய எல்லைகளுக்கு இடம் பெயரை வேண்டும் எனவும், காசுமீரில் இருந்து பாக்கித்தான் படைகள் வெளியேற வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இதை பின்பற்ற பாக்கித்தான் மறுக்கவே, உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு காசுமீரை இந்திய மற்றும் பாகித்தான் நாடுகள் இடையே பிரித்தது.[17][18]
இந்தியாவின் பிரிவினைக்குப் பிறகு, ஐதராபாத் இராச்சியம் ஐதராபாத் நிசாம் ஆட்சியின் கீழ் சுதந்திரமாக இருக்கத் தேர்ந்தெடுத்தது. அணைத்து திசைகளிலும் இந்திய நாட்டால் சூழப்பட்ட இந்து மக்கள்தொகை அதிகமாக இருந்த இந்த இராச்சியத்தில், இசுலாமிய ஆட்சியின் உரிமைமீறல்களுக்கு எதிராக போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து, அப்போதைய இந்தியத் துணைப் பிரதமர் சர்தார் வல்லபாய் படேல் ஐதராபாத்தை பாதுகாக்க இந்தியப் படைகளுக்கு உத்தரவிட்டார். போலோ நடவடிக்கை என்ற பெயரிடப்பட்ட இந்த ஐந்து நாள் சண்டையின் போது, இந்தியத் தரைப்படை மற்றும் வான்படை தாக்குதலில் ஈடுபட்டன. இதனால் ஏற்பட்ட மோதல் நிசாம் அரசின் சரணடைதலுடன் 12 செப்டம்பர் 1948 அன்று முடிவுக்கு வந்தது.
இந்திய தரைப்படை தனது ஒரு பட்டாளத்தை ஐக்கிய நாடுகள் அவையின் பணிகளுக்காக ஒதுக்கியுள்ளது. தனது நீண்ட, கடினமான அமைதி காக்கும் படைப் பணிகளை உலகம் முழுவதும் செய்து தொடர்ச்சியாக நிகழ்த்தி வருவதை ஐக்கிய நாடுகள் அவை பாராட்டியுள்ளது. இந்தியா 43 அமைதி காக்கும் பணிகளில் பங்கேற்றுள்ளது. ஏறத்தாழ 160,000 துருப்புக்கள் மற்றும் கணிசமான எண்ணிக்கையிலான காவல்துறை பணியாளர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.[19][20] 1950 ஆம் ஆண்டின் கொரியப் போரில் இந்தப் படைகள் முதன்முதலாக மருத்துவ உதவிக்காக அனுப்பப்பட்டது. இந்தியத் தரைப்படை அமைதி காக்கும் படையாக அங்கோலா, கம்போடியா, சைப்ரஸ், காங்கோ மக்களாட்சி குடியரசு, எல் சால்வடோர், நமீபியா, லெபனான், லைபீரியா, மொசாம்பிக், ருவாண்டா, சோமாலியா, இலங்கை, வியட்நாம் ஆகிய நாடுகளில் பணியாற்றியுள்ளது. இத்தகைய பணிகளின் போது 157 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.[21]
ஆங்கிலேய, பிரெஞ்சு ஆதிக்க சக்திகள் 1947 ஆம் ஆண்டுக்கு பிறகு படிப்படியாக இந்தியாவை விட்டு வெளியேறி விட்ட பின்னரும், கோவா, தாமன் தியு பகுதிகளைக் கைவசம் கொண்ட போர்த்துகீசியர் அப்பகுதிகளை விட்டு வெளியேற மறுத்தனர். 1961 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 12ஆம் நாள், இந்திய அரசு விசய் நடவடிக்கை என்ற பெயரில் போர்த்துகீசிய பகுதிகளை கைப்பற்றும் நடவடிக்கையைத் தொடங்கியது. இருபத்தியாறு மணி நேரத்தில் கோவா, தாமன், தியு பகுதிகள் இந்தியாவின் வசம் வந்தது. ஏறத்தாழ மூன்றாயிரம் வீரர்களுடன் போர்த்துகீசிய தளபதி இந்தியத் தரைப்படையின் தளபதியிடம் சரணடைந்தார்.
இது காசுமீரின் அக்சாய் சின் மற்றும் அருணாச்சலப் பிரதேச பகுதிகளின் கட்டுப்பாடு தொடர்பான சர்ச்சையாகும். அக்சாய் சின் பகுதி இந்தியாவால் காசுமீரின் ஒரு பகுதியாக உரிமை கோரப்பட்டது. சீனா இடத்தி சின்சியாங்கின் ஒரு பகுதி எனக்கோரி, திபெத் மற்றும் சீனாவின் பிற பகுதிகளை இணைக்கும் சாலையை இந்த வழியாக நிர்மாணித்தது மோதலுக்குத் தூண்டுதலாக இருந்தது. 1961 ஆம்ஆண்டுக்கு முன் அவ்வப்போது இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே சிறிய அளவிலான மோதல்கள் வெடித்தன.[22] திபெத் விவாகரத்தில் இந்தியாவின் தலையீடு மற்றும் தலாய் லாமாவுக்கு இந்திய அடைக்கலம் கொடுத்தது, இரு நாடுகளுக்கும் இடையே மேலும் விரிசல்களை உருவாக்கியது.[23]
1962 ஆம் ஆண்டில், பூட்டானுக்கும் அருணாச்சலப் பிரதேச எல்லைக்கும் அருகே சர்ச்சைக்குரிய மேக்மோகன் எல்லைக் கோட்டிற்கு வடக்கே அமைந்துள்ள தாக் லா மலைமுகடுக்கு செல்லுமாறு இந்திய தரைப்படைக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கிடையில், சீனத் துருப்புகளும் இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் ஊடுருவல் செய்தன. மேலும் அக்சாய் சினில் சீனாவால் கட்டப்பட்ட சாலையை இந்தியப் படைகள் கண்டுபிடித்தபோது பதட்டங்கள் புதிய உச்சத்தை எட்டின. சீனாவின் இந்த நடவடிக்கை இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, அக்டோபர் 12 அன்று அக்சாய் சினில் இருந்து சீனர்களை வெளியேற்ற அப்போதைய இந்தியப் பிரதமர் நேரு உத்தரவிட்டார். இருப்பினும் இந்திய தரைப்படையின் பல்வேறு பிரிவுகளின் மோசமான ஒருங்கிணைப்பு மற்றும் இந்திய வான்படையை தாமதாக களமிறங்கியது போன்ற தவறுகளால், சீனவின் காய் ஓங்கியது. அக்டோபர் 20 அன்று, சீன வீரர்கள் வடமேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரு பகுதிகளிலிருந்தும் இந்தியாவைத் தாக்கி, அக்சாய் சின் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் பெரும் பகுதிகளை கைப்பற்றினர்.
பின்னர் அருணாச்சல பிரதேசத்திலிருந்து படைகளை திரும்பப் பெற்றுக்கொண்ட சீனா, அக்சய் சின் பகுதியை முழுவதும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இந்தியாவின் இராணுவத் தளபதிகள் மற்றும் அரசியல் தலைமையின் மோசமான முடிவுகள் பல கேள்விகளை எழுப்பின. இந்திய படைகளின் மோசமான செயல்பாட்டிற்கான காரணங்களைக் கண்டறிய இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழுவானது, இந்தியப் பகுதிகள் மீது சீனாவின் வான்வழி எதிர்த்தாக்குதலுக்கு பயந்து இந்திய வான்படையை போராட அனுமதிக்காத முடிவை கடுமையாக விமர்சித்தது. இந்தத் தோல்வியை தொடர்ந்து இந்தியத் தரைப்படையை நவீனமாக புதிய தளவாடங்கள் வாங்க ஆவண செய்யப்பட்டது.[24]
பாகித்தானுடனான இரண்டாவது மோதல் 1965 இல் நடந்தது. [25][26][27] பாக்கித்தானின் சனாதிபதி அயூப் கான் உத்தரவின் பேரில், ஆகத்து 1965 இல் பாக்கித்தான் துணை ராணுவப் படையினர் இந்திய-ஆட்சிக்குட்பட்ட காசுமீருக்குள் ஊடுருவி கிளர்ச்சியைத் தூண்ட முயன்றனர். சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சீனப் போரில் இருந்து இன்னும் இந்தியா மீண்டுவரவில்லை எனவும், ராணுவத் தாக்குதலையும் கிளர்ச்சியையும் ஒன்றுசேர சமாளிக்க முடியாது என்று பாகித்தான் தலைவர்கள் நம்பினர். இந்தியா உடனடியாக பதிலடி கொடுத்து பாகித்தானுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தியது. செப்டம்பர் 1 ஆம் தேதி பாகித்தான் இந்தியாவின் சம்ப்-சவுரியன் பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தியத்தைத் தொடர்ந்து இந்தியத் தரைப்படை மேற்கு பாக்கித்தானுடனான அனைத்து எல்லை பகுதிகளிலும் தாக்குதல் நடத்தியது.
இந்தியப் படைகள் மூன்று முக்கியமான நிலைகளைக் கைப்பற்றியதை தொடர்ந்து செப்டம்பர் 9 ஆம் தேதிக்குள், பாக்கித்தானுக்குள் கணிசமான அளவில் ஊடுருவியது.[28] போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நேரத்தில், ஏறத்தாழ 3,000 பேர் உயிரிழந்ததாக இந்தியா அறிவித்தது. மறுபுறம், மோதலில் 3,800 க்கும் மேற்பட்ட பாகித்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[29][30] போரில் ஏறத்தாழ 300 பாக்கித்தான் பீரங்கிகளை இந்தியத் தரைப்படை சுட்டு வீழ்த்தியது.[31][28][32] தாசுகண்ட் பிரகடனத்தைத் தொடர்ந்து போருக்கு முந்தைய நிலைகளுக்குத் திரும்ப முடிவு செய்தது. இந்தியப் படைகள் போரில் வென்று, பாகித்தானின் பல பகுதிகளைக் கைப்பற்றிய போதிலும், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அழுத்தத்தை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.[33]
1967 ஆம் ஆண்டு சீன மற்றும் இந்தியப் படைகளுக்கு எதிராக மீண்டும் சண்டை வெடித்தது. அப்போது இந்தியாவின் பாதுகாப்பில் இருந்த சிக்கிம் மீது சீன இராணுவம் படையெடுத்தது. அக்டோபர் 10ம் தேதி இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் இந்தியத் தரைப்படையின் 88 வீரர்கள் கொல்லப்பட்டனர். சீனப் படையினர் 340 பேர் பதில் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.[34] மோதலின் முடிவில் சீனப்படையினர் சிக்கிம் மாகாணத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.[35][36][37]
கிழக்கு பாகித்தானில் சுதந்திரத்துக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்தபோது, அது பாகித்தானியப் படைகளால் நசுக்கப்பட்டது. பெரிய அளவில் அட்டூழியங்கள் அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான வங்காள மக்கள் அண்டை நாடான இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். 1971 ஆம் ஆண்டின் முற்பகுதியில், வங்காள சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இந்தியா ஆதரவளித்தது. 20 நவம்பர் 1971 அன்று, இந்தியத் தரைப்படையின் 45ஆம் படைப்பிரிவினர் கிழக்கு பாக்கித்தானில் தாக்குதல் நடத்தினர். 3 திசம்பர் அன்று பாக்கித்தான் வான்படை இந்தியாவின் வான்படைத் தளங்களின் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியப் படைகள் பதில் தாக்குதல்களில் ஈடுபட்டனர்.[38][39] இந்தப் போரில் ஏறத்தாழ 2500 இந்திய படைவீரர்களும், 9000 பாக்கித்தான் வீரர்களும் கொல்லப்பட்டனர்.[40] 16 திசம்பர் 1971 அன்று இந்தியத் படையின் தளபதி சகசித் சிங் அரோரா முன்னிலையில் கிழக்கு பாக்கித்தான் படிகள் சரணடைந்தன. ஏறத்தாழ 90,000 பாக்கித்தான் படைவீரர்கள் போர்கைதிகளாக ஆக்கப்பட்டனர்.[30] இதைத் தொடர்ந்து வங்காளதேசம் ஒரு சுதந்திர நாடாக உருவானது. சிம்லா ஒப்பந்தத்தின் படி பாக்கித்தான் போர்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் மற்றும் மேற்கு பாக்கித்தானில் போரின் போது இந்தியா ஆக்கிரமித்த இடங்களை திரும்ப அளித்தது.[41]
சியாச்சின் பனியாறு காசுமீர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், 1947 இல் தயாரிக்கப்பட்டு இந்தியா-பாக்கித்தான் இடையே பரிமாறப்பட்ட வரைபடங்களில் இதன் உரிமை வரையறுக்கப்படவில்லை. இதன் விளைவாக, 1980கள் வரை இது இருதரப்பாலும் ஆக்கிரமிக்கப்படவில்லை. 1980 களின் முற்பகுதியில், பாகித்தான் அரசாங்கம் சியாச்சின் பகுதியில் மலையேறுபவர்களுக்கு பயண அனுமதிகளை வழங்கியது. சியாச்சினை பாகித்தானின் ஒரு பகுதியாக அமெரிக்க இராணுவ வரைபடங்கள் காட்டத் தொடங்கின.[42]
இதனால் எரிச்சலடைந்த இந்தியா, ஏப்ரல் 1984 இல் இந்தப்பகுதியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியது. இந்தியத் தரைப்படையின் குமாவோன் படிப்பிரிவு, இங்கு பாக்கித்தான் படையுடன் மோதலின் ஈடுபட்டது. மோதலின் முடிவில் இந்தியப் படைகள் ஏறத்தாழ 1000 சதுர கி.மீ. பகுதியை இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.[43] சியாச்சின் பனிப்பாறை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை இந்தியப் படைகள் தொடர்ந்து கட்டுப்படுத்தி வருகின்றன. சியாச்சின் பகுதியை மீண்டும் கைப்பற்ற பாகித்தான் பல முயற்சிகளை மேற்கொண்டும் தொடர்ந்து தோல்வியடைந்தது.[44][45]
1999 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், பாகித்தானிய துணை இராணுவப் படைகளும், பயங்கவாதிகளும் இந்தியாவின் கார்கில் மாவட்டத்தில் உள்ள சிலப் பகுதிகளைக் கைப்பற்றினர். பாகித்தானிய ஊடுருவலின் தகவல் பெறப்பட்டதும், இந்தியத் தரைப்படை துருப்புகள் பதில் தாக்குதலைத் தொடங்கின. இருப்பினும் உயர்ந்த மலைப்பகுதிகள் பாக்கித்தானிய கட்டுப்பாட்டில் இருந்ததால், இந்தியத் துருப்புகள் அதிக இழப்பைச் சந்திக்க நேர்ந்தது.[46][47][48] இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்திய துருப்புக்கள் தாங்கள் இழந்த பெரும்பாலான பகுதிகளை மெதுவாக மீட்டெடுத்தனர்.[49][50]
சூலை 4 ஆம் தேதி வாசிங்டன் உடன்படிக்கையைத் தொடர்ந்து, பாக்கித்தான் பிரதமர் நவாசு செரிப், பாக்கித்தான் துருப்புக்களைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்டார், இதன் பின்னர் பெரும்பாலான சண்டைகள் படிப்படியாக நிறுத்தப்பட்டன.[51] சூலை கடைசி வாரத்தில் இந்தியப்படைகள் இறுதித் தாக்குதலை நடத்தின. பாக்கித்தான் படைகள் இந்தியப் பகுதிகளில் இருந்து முழுவதுமாக அகற்றப்பட்டவுடன், சூலை 26 அன்று சண்டை நிறுத்தப்பட்டது.[52] போரில் 500க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். பாக்கித்தானியத் தரப்பில் 700 வீரர்கள் மற்றும் 3000 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.[53]
தேசத்திற்குள் உள்நாட்டு ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் மற்றும் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போரிடுவதில் இந்தியத் தரைப்படை முக்கியப் பங்காற்றுகிறது. பதற்றமான காசுமீர் பகுதிகளில் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் பிரதான பொறுப்பைக் கொண்டுள்ளது. 1980களில் சீக்கிய கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போரிட்டது.[54][55][56] இந்தியப் படைகள் வடகிழக்கு இந்தியாவில் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றன.[57]
இந்தியக் குடியரசுத் தலைவர் இந்திய தரைப்படையின் உச்ச தளபதியாக செயல்படுகிறார். இதன் தொழில்முறைத் தலைவராக தரைப்படைப் பணியாளர்களின் தலைவரான தரைப்படை தலைமைத் தளபதி செயல்படுகிறார். தரைப்படையின் தலைமைப் பதவி படைத்துறை உயர் தளபதியாகும். இந்நாள் வரை சாம் மானேக்சா மற்றும் கரியப்பா ஆகிய இரண்டு தரைப்படை பட்டாளர்கள் மட்டுமே இந்த உயர் பதவியை அடைந்திருக்கின்றனர்.
இந்தியத் தரைப்படை ஆறு செயல்பாட்டு கட்டளைகளையும் ஒரு பயிற்சி கட்டளையையும் கொண்டுள்ளது.[58]
இந்திய தரைப்படையில் 12 இலட்சத்திற்கும் அதிகமான துருப்புக்கள் பணியாற்றுகின்றனர். ஒரு கட்டளை பொதுவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட படைத்துறைகளைக் கொண்டுள்ளது. இந்திய இராணுவத்தில் 14 படைத்துறைகள் உள்ளன. ஒவ்வோர் படைத்துறையும் மூன்று அல்லது நான்கு படைப்பிரிவுளைக் கொண்டுள்ளது. இந்தியத் தரைப்படையில் 40 படைப்பிரிவுகள் உள்ளன. ஒரு படைப்பிரிவு ஒன்றுக்கும் மேற்பட்ட படைத்தொகுதிகளால் ஆனது. ஒரு படைத்தொகுதி ஏறத்தாழ மூன்றாயிரம் வீரர்களைக் கொண்டது. படைத்தொகுதிகள் படையணிகளால் ஆனது. படையணிகள் மேலும் சிறு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.[58]
இந்தியத் தரைப்படைக்கு தேவையான பெரும்பாலான உபகரணங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. உள்நாட்டு உபகரணங்களை தயாரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு இந்திய இராணுவத்திற்காக சிறிய ஆயுதங்கள், பீரங்கிகள், ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிகள் உட்பட பல்வேறு ஆயுதங்களை உருவாக்கியுள்ளது. பாதுகாப்பு அமைக்ககத்தின் கீழ் செயல்படும் சிறிய ஆயுத தயாரிப்பு தொழிற்சாலைகள் இந்தியாவில் பல இடங்களில் செயல்படுகின்றன.
இந்திய தரைப்படையின் வானூர்திப் பிரிவு போக்குவரத்து மற்றும் உளவு பார்த்தல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றது. துருப்பு போக்குவரத்து மற்றும் தாக்குதல் இந்திய வான்படையின் கடமைகளாகும். இந்தியத் தரைப்படை உலங்குவானூர்திகள் மற்றும் ஆளில்லாத வானூர்திகளை இயக்குகின்றது.[59]
இந்தியத் தரைப்படை பெரும்பாலும் இன்சாஸ் துப்பாக்கிகளை பயன்படுத்துகின்றன. ஏகே-203 மற்றும் சிக்-516 ரக நவீன துப்பாக்கிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[61] இது தவிர பல்வேறு கைத்துப்பாக்கிகள், மறைசுடு மரைகுழல் துப்பாக்கிகள் மற்றும் இயந்திரத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.[62][63]
இந்தியத் தரைப்படை பல்வேறு பீரங்கி வண்டிகளைப் பயன்படுத்துகின்றன. அவற்றில் முக்கியமானவை பின்வருமாறு:
இது தவிர பல்வேறு கவச சண்டை வாகனங்கள், போக்குவரத்து வாகனங்கள் மற்றும் சிறப்பு பயன்பாடு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியத் தரைப்படை அக்னி, பிரமோஸ், நிர்பை, சவுரியா, திரிசூல், பிரகார், பிரளயம், பிரித்வி மற்றும் பினாகா உட்பட பல ஏவுகணைகளைக் கொண்டுள்ளது.[69][70][71]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.