இஸ்ரேல்
மேற்கு ஆசிய நாடு From Wikipedia, the free encyclopedia
Remove ads
இசுரேல்[a] (Israel, எபிரேயம்: יִשְׂרָאֵל; யிஸ்ராஎல்; அரபி: إِسْرَائِيل, யிஸ்ராஎல், அலுவலக ரீதியாக இசுரேல் நாடு;[b] [மெதிநாத் யிஸ்ராஎல்](எபிரேயம்), [தவுலத் இஸ்ராஇல்](அரபு)) என்பது மேற்காசியாவின் தெற்கு லெவண்ட் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இந்நாடு வடக்கே லெபனான், வட கிழக்கே சிரியா, கிழக்கே யோர்தான், தென்மேற்கே எகிப்து மற்றும் மேற்கே நடுநிலக் கடல் ஆகியவற்றுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. கிழக்கே மேற்குக் கரையின் பாலத்தீன நிலப்பரப்புகளும், தென்மேற்கே காசாக்கரை மற்றும் வடகிழக்கே சிரியாவின் கோலான் குன்றுகள் ஆகிய பகுதிகளை இந்நாடு ஆக்கிரமித்துள்ளது. இதன் தெற்கு கோடி முனையில் செங்கடலில் ஒரு சிறிய கடற்கரையை இந்நாடு கொண்டுள்ளது. சாக்கடலின் பகுதி இந்நாட்டின் கிழக்கு எல்லையின் நெடுகில் அமைந்துள்ளது. இந்நாட்டின் அறிவிக்கப்பட்ட தலைநகரம் எருசலேம் ஆகும்.[9] அதே நேரத்தில், டெல் அவீவ் இந்நாட்டின் மிகப்பெரிய நகர்ப்புறப் பகுதியாகவும், பொருளாதார மையமாகவும் திகழ்கிறது.
இசுரேல் தேசம் என்று அறியப்படும் ஒரு பகுதியில் இசுரேல் அமைவிடத்தைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இப்பகுதி கானான், திருநாடு, பாலத்தீனப் பகுதி மற்றும் யூதேயா ஆகியவற்றுக்கு ஒப்பானதாக உள்ளது. பண்டைக் காலத்தில் இந்நாடு கானானிய நாகரிகத்துக்குத் தாயகமாக இருந்தது. இதற்குப் பிறகு இசுரேல் மற்றும் யூதேயா இராச்சியங்கள் அமைந்திருந்தன. கண்டங்கள் சந்திக்கும் ஒரு பகுதியில் அமைந்துள்ள இப்பகுதியானது உரோமானியர்கள் முதல் உதுமானியர்கள் வரையில் பேரரசுகளின் ஆட்சிக்குக் கீழ் மக்கள் தொகை மாற்றங்களைக் கண்டது. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய யூத எதிர்ப்பானது சியோனியத்துக்கு வடிவம் கொடுத்தது. பாலத்தீனத்தில் யூதர்களுக்கு ஒரு தாயகத்தை நிறுவ இக்கொள்கை விரும்பியது. பால்போர் சாற்றுதலுடன் பிரித்தானியாவின் ஆதரவை இது பெற்றது. முதலாம் உலகப் போருக்குப் பிறகு பிரித்தானியா இப்பகுதியை ஆக்கிரமித்தது. 1920-இல் கட்டளைப் பாலத்தீனத்தை நிறுவியது. பெரும் இன அழிப்பு காரணமாக நடந்த அதிகரித்து வந்த யூத புலப்பெயர்வு மற்றும் மத்திய கிழக்கில் பிரித்தானிய அயல்நாட்டுக் கொள்கை ஆகியவை யூதர் மற்றும் அரேபியருக்கு இடையில் பிரச்சனைக்கு வழி வகுத்தது.[10][11] ஐக்கிய நாடுகள் அவையானது இந்த இரு மக்களுக்கு இடையே நிலத்தைப் பிரிப்பதை முன் மொழிந்ததற்குப் பிறகு 1947-இல் இது ஓர் உள்நாட்டுப் போராகத் தீவிரமடைந்தது.
பாலத்தீனத்துக்கான பிரித்தானிய கட்டளைப் பகுதியின் முடிவுக்குப் பிறகு 14 மே 1948 அன்று இசுரேல் சுதந்திரத்தை அறிவித்தது. அடுத்த நாள் அண்டைப் பகுதி அரபு நாடுகள் படையெடுத்தன. முதல் அரபு-இசுரேலிய போர் தொடங்கியது. 1949-இல் போர் நிறுத்த ஒப்பந்தத்தால் ஐக்கிய நாடுகள் சபையின் பிரிப்புத் திட்டம் குறிப்பிட்டதை விட அதிக நிலப்பரப்பின் கட்டுப்பாடு இசுரேலிடம் விடப்பட்டது.[12] முந்தைய கட்டளை நிலப்பரப்பின் எஞ்சிய பகுதிகளானவை காசாக் கரை மற்றும் மேற்குக் கரை என முறையே எகிப்து மற்றும் யோர்தானிடம் இருந்ததால் எந்த ஒரு புதிய சுதந்திரமான அரபு நாடும் உருவாக்கப்படவில்லை.[12][13][14] தற்போது, நக்பா என்று அறியப்படும் நிகழ்வில் பாலத்தீன அரேபியர்களில் பெரும்பான்மையானவர்கள் இப்பகுதியிலிருந்து தப்பி ஓடினர் அல்லது வெளியேற்றப்பட்டனர். எஞ்சியவர்கள் புதிய நாட்டின் முதன்மையான சிறுபான்மையினராக உருவாயினர்.[15][16][17] தொடர்ந்த தசாப்தங்களில் அரேபிய உலகத்திலிருந்து புலம் பெயர்ந்தோ, தப்பித்து வந்தோ அல்லது வெளியேற்றப்பட்டோ இருந்த யூதர்களின் திரளான வரவை இந்நாடானது பெற்றதால் இசுரேலின் மக்கள் தொகையானது பெருமளவுக்கு அதிகரித்தது என்று குறிப்பிடப்படுகிறது.[18][19]
1967-ஆம் ஆண்டின் ஆறு நாள் போரைத் தொடர்ந்து இசுரேல் மேற்குக் கரை, காசாக் கரை, எகிப்திய சினாய் தீபகற்பம் மற்றும் சிரிய கோலான் குன்றுகள் ஆகியவற்றை ஆக்கிரமித்தது. 1973-ஆம் ஆண்டின் யோம் கிப்பூர்ப் போருக்குப் பிறகு எகிப்து மற்றும் யோர்தானுடன் இசுரேல் அமைதி ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டது. 1982-இல் சினாய் தீபகற்பத்தை எகிப்திடம் ஒப்படைத்தது. 1993-இல் இசுரேல் ஆசுலோ ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. மேற்குக் கரை மற்றும் காசாவின் பகுதிகளில் பரற்பர அங்கீகரிப்பு மற்றும் வரம்புக்குட்பட்ட பாலத்தீன சுய-நிர்வாகம் ஆகியவற்றை இந்த ஒப்பந்தம் நிறுவியது. 2020-களில் ஆபிரகாம் ஒப்பந்தங்கள் வழியாக மேற்கொண்ட பல அரபு நாடுகளுடன் இந்நாடு உறவு முறைகளைப் புதுப்பித்தது. எனினும், இடைக்கால ஆசுலோ ஒப்பந்தங்களுக்குப் பிறகு இசுரேல்-பாலத்தீனப் பிணக்கைத் தீர்க்கும் முயற்சிகளானவை வெற்றியடையவில்லை. இந்நாடு பாலத்தீனக் குழுக்களுடன் பல போர்கள் மற்றும் சண்டைகளில் ஈடுபட்டுள்ளது. பன்னாட்டு சட்டங்களுக்கு முரணாக, சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்புகளில் இசுரேல் தன்னை நிறுவி, குடியிருப்புகளை விரிவாக்குவதைத் தொடர்ந்து வருகிறது. பெரும்பாலும் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்படாத நிகழ்வுகளாக கிழக்கு எருசலேம் மற்றும் கோலான் குன்றுகளை செயல்பாட்டு ரீதியில் இந்நாடு இணைத்துள்ளது. இந்நாடு ஆக்கிரமித்துள்ள பாலத்தீன நிலப்பரப்புகளில் இசுரேலின் செயல்பாடுகளானவை நிபுணர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அவை அதிகாரிகள் ஆகியோரிடமிருந்து போர்க் குற்றங்களைப் புரிந்துள்ளது, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலத்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலை ஆகியவற்றுடன் நீடித்த பன்னாட்டு ரீதியிலான விமர்சனத்தைப் பெற்றுள்ளது.
இந்நாட்டின் அடிப்படைச் சட்டங்களானவை விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையால் தேர்தெடுக்கப்படும் ஒரு நாடாளுமன்றத்தை நிறுவியுள்ளன. இது கெனெசெட் என்று அழைக்கப்படுகிறது. பிரதமரால் தலைமை தாங்கப்பட்ட அரசாங்கத்தில் உள்ளவர்களை இது தீர்மானிக்கிறது. பெயரளவு அதிகாரமுடைய அதிபரைத் தேர்ந்தெடுக்கிறது.[20] மத்திய கிழக்கில் மிகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றையும்,[21] ஆசியாவிலேயே மிக உயர்ந்த வாழ்க்கைத் தரங்களில் ஒன்றையும், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் உலகின் 26-ஆவது மிகப் பெரிய பொருளாதாரத்தையும், பெயரளவு தனிமனித மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16-ஆவது இடத்தையும் இசுரேல் கொண்டுள்ளது.[22][23] உலகளவில் தொழில்நுட்பத்தில் மிக முன்னேறிய நாடாகவும், வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாகவும் இசுரேல் உள்ளது. உலகில் எந்த ஒரு நாட்டையும் விட தகவுப் பொருத்த அளவில் ஆய்வுக்கும், விருத்திக்கும் அதிகம் செலவழிக்கும் நாடாக இது உள்ளது.[24][25] இந்நாடு அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது என்பது பரவலாக நம்பப்படும் ஒன்றாகும். இசுரேலியப் பண்பாடானது யூத மற்றும் வெளிநாடு வாழ் யூதக் காரணிகளைக் கொண்டுள்ளது. இந்நாட்டின் பண்பாடு அரேபியத் தாக்கங்களையும் கொண்டுள்ளது.
Remove ads
பெயர்க் காரணம்
இசுரேலின் நிலம் மற்றும் இசுரேலின் குழந்தைகள் ஆகிய பெயர்கள் வரலாற்று ரீதியாக முறையே விவிலிய இசுரேலிய இராச்சியம் மற்றும் ஒட்டு மொத்த யூத மக்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இசுரேல் (எபிரேயம்: யிஸ்ரஏல்; செப்துவசிந்தா பண்டைக் கிரேக்கம்: Ἰσραήλ, இஸ்ரேல், "எல் (கடவுள்) உளதாயிருக்கிறார்/ஆள்கிறார்") என்ற பெயரானது மூதாதையரான யாக்கோபுவைக் குறிப்பிடுகிறது. எபிரேய வேதாகமத்தின் படி அவர் கடவுளின் தேவதூதனுடன் மல்யுத்தம் செய்து வெற்றி பெற்றதற்குப் பிறகு இப்பெயர் அவருக்குக் கொடுக்கப்பட்டது.[26] ஒட்டு மொத்தமாக இஸ்ரேல் என்ற சொல்லைக் குறிப்பிடும் தொடக்க காலத்தில் அறியப்பட்ட தொல்லியல் பொருளானது பண்டைய எகிப்தின் மெனப்தா கல்வெட்டு ஆகும் (இது பொ. ஊ. மு. 13-ஆம் நூற்றாண்டின் பிந்தைய பகுதிக்குக் காலமிடப்படுகிறது).[27][28][29][fn 1][31]
பிரித்தானிய கட்டளைப் பகுதிக்குக் (1920–1948) கீழ் இந்த ஒட்டு மொத்த பகுதியும் பாலத்தீனம் என்று அறியப்பட்டது.[32] 1948-இல் இந்நாடு நிறுவப்பட்டதைத் தொடர்ந்து இது அலுவல் பூர்வமாக இஸ்ரேல் அரசு (எபிரேயம்: מְדִינַת יִשְׂרָאֵל, மெதினாத் யிஸ்ரயேல்; அரபி: دَوْلَة إِسْرَائِيل, தவ்லத் இஸ்ரைல்) என்ற பெயரைப் பின்பற்றத் தொடங்கியது. இசுரேல் தேசம் (எரெட்ஸ் இஸ்ரேல்), எவெர் (எபேர் என்ற முன்னோரிடமிருந்து பெறப்பட்டது), சீயோன் மற்றும் யூதேயா உள்ளிட்ட முன்மொழியப்பட்ட பிற பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.[33] ஆனால், அவை நிராகரிக்கப்பட்ட பிறகு இப்பெயர் பின்பற்றப்பட்டது. இசுரேல் என்ற பெயரானது டேவிட் பென்-குரியனால் பரிந்துரைக்கப்பட்டது. 6-3 என்ற வாக்களிப்பின் அடிப்படையில் பின்பற்றப்பட்டது.[34] நிறுவப்பட்டதற்குப் பிறகு தொடக்க வாரங்களில் இந்த அரசின் ஒரு குடிமகனைக் குறிப்பிட இஸ்ரேலி என்ற சொல்லை அரசாங்கம் தேர்ந்தெடுத்தது.[35]
Remove ads
வரலாறு
வரலாற்றுக்கு முந்தைய காலம்
இசுரேலில் உள்ள வரலாற்றுக்கு முந்தைய உபேய்தியா தளமானது சுமார் 15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தொல்வழக்கான மனிதர்களின் ஓர் இனமானது இருந்ததைக் காட்டுகிறது.[36] ஆப்பிரிக்காவுக்கு வெளியே உடலமைப்பில் நவீன மனிதர்களின் இரண்டாவது மிகப் பழமையான ஆதாரமானது இசுரேலின் மிசுலியா குகையில் இருந்து பெறப்பட்ட ஓர் 2 இலட்சம் ஆண்டுகள் பழமையான புதை படிவமாகும்.[37] நூத்துபியப் பண்பாடானது (அண். 10,000 பொ. ஊ. மு.) நிலையான வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்தியது. ஆதி ஆப்பிரிக்க-ஆசிய மொழியுடன் இது தொடர்புடையதாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[38][39] புதுக்கற்காலப் புரட்சியின் போது இப்பகுதியில் வேளாண்மையின் தொடக்கமானது நகல் ஒரேன் போன்ற தளங்களை ஆதாரமாகக் கொண்டுள்ளது.[40]
வெண்கல மற்றும் இரும்புக் காலங்கள்
"கானான்" மற்றும் "கானானியர்" குறித்த தொடக்க கால குறிப்புகளானவை பண்டைய அண்மைக் கிழக்கு மற்றும் எகிப்திய நூல்களில் (அண். 2000 பொ. ஊ. மு.) காணப்படுகிறது. இந்த மக்கள் தொகைகளானவை அரசியல் ரீதியாக சுதந்திரமான நகர அரசுகளாக அமைக்கப்பட்டிருந்தன.[41][42] பிந்தைய வெண்கலக் காலத்தின் (1550–1200 பொ. ஊ. மு.) போது கானானின் பெரும்பாலான பகுதிகள் புது எகிப்திய இராச்சியத்திற்குத் திறை செலுத்தும் அரசுகளாக இருந்தன.[43] பிந்தைய வெண்கலக் காலத்தின் வீழ்ச்சியின் ஒரு விளைவாக கானான் அமைதியின்மையில் மூழ்கியது. இப்பகுதி மீதான எகிப்தின் கட்டுப்பாடானது வீழ்ச்சியடைந்தது.[44][45] இசுரயேலரின் முன்னோர்களில் இப்பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்த பண்டைக்கால செமித்திய-மொழி பேசிய மக்களும் உள்ளடங்குவர் என்று எண்ணப்படுகிறது.[46]:78–79 ஒரு தனித்துவமான ஒரு கடவுள் (பிற கடவுள்களை மறுக்காது ஒரு கடவுளை மட்டும் வழிபடும் முறை) வழிபாடு - மற்றும் பிறகு ஒரு கடவுட் கொள்கை - ஆகியவற்றின் வளர்ச்சி வழியாக கானானிய மக்களிடமிருந்து இசுரேலியர்களும், அவர்களது பண்பாடும் கிளையாகப் பிரிந்தது என நவீன கால தொல்லியல் ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. இவர்களின் சமயமானது யாவேயை மையமாகக் கொண்டிருந்ததாக அமைந்திருந்தது.[47][48] அவர்கள் விவிலிய எபிரேயம் என்று அறியப்படும் எபிரேயத்தின் ஒரு தொல்வழக்கான வடிவத்தைப் பேசினர். இதே நேரம் வாக்கில் பிலிஸ்தினியர்கள் தெற்கு கடற்கரைச் சமவெளியில் குடியமர்ந்தனர்.[49][50]
Remove ads
முற்காலம்
பின்னர் வந்த அசிரிய, பாபிலோனிய, பாரசீக, கிரேக்க, ரோமானிய, பைசாந்திய அரசுகளின் ஆட்சியில் சிறிதும் பெரிதுமாய் யூதர்கள் இசுரேலை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் யூதர்களின் எண்ணிக்கை அங்கே மிகவும் அருகிவிட்டது.
சியோனிசம் அலியா
இசுரேல் அல்லது அலியா என்னும் இன்றுள்ள நாட்டின் நிலத்தில் தற்காலக் குடியேற்றம் 1881ல் தொடங்கியது. பிற நாடுகளில் சிறுபான்மையாராக வாழ்ந்து இனவேற்றுமையாலும் பிற துன்பங்களாலும் உழன்ற யூதர்கள் மோசசு ஃகெசு (Moses Hess) என்பவர் போன்ற கருத்துக்களைப் பின்பற்றி இசுரேல் நிலத்தைமீண்டும் பெறுவதற்காக சிறிது சிறிதாக நிலங்களை ஆட்டோமன் மற்றும் அரேபியர்களிடமமிருந்து வாங்கத் தொடங்கினர்.
தியோடோர் ஹெர்ட்சு (1860–1904) என்னும் ஆஸ்திரிய யூதர் சியோனிய இயக்கம் ஒன்றைத் தொடங்கினார் 1896ல் செருமானிய மொழியில் டெர் யூடென்ஸ்டாட் ("யூதர் நாடு) என்னும் வெளியீட்டைக் கொண்டு வந்தார். அதற்கு அடுத்த ஆண்டு முதல் உலக சியோனியப் பேரவையைக் கூட்ட உதவினார்.
சியோனிய இயக்கம் தொடங்கிய பின்னர் இரண்டாவது அலியா அமைக்க வழி வகுத்தது. சுமார் 40,000 யூதர்கள் 1904–1914 ஆண்டுகளில் வந்துசேர்ந்தனர். 1917ல் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் ஆர்தர் பால்ஃவோர் அவர்கள் பால்ஃவோர் பேரறிவிப்பு எனப்படும் அறிவிப்பில் யூதர்களுக்கென தாயகமாக ஒரு தனி பாலசுத்தீனம் அமைப்பதில் இசைவான நோக்குடையவர்களாக இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். 1920ல் பாலசுத்தீனம் உலகநாடுகள் குழுமத்தில் பிரித்தானியர் ஆட்சி செலுத்தும் ஒரு நிலமாக மாறியது.
முதலாம் போருக்குப் பின்னர், மூன்றாவது அலையாக 1919-1923 ஆம் ஆண்டுகளிலும், நான்காவது அலையாக 1924–1929 ஆம் ஆண்டுகளிலும், யூதர்களின் குடியேற்றம் நிகழ்ந்தது. இவை அலியா-3 என்றும் அலியா-4 என்றும் அழைக்கப்படுவன. 1929ல் நிகழ்ந்த அரேபியக் கலவரங்களில் 133 யூதர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 67 பேர் எபிரோனைச் சேர்ந்தவர்கள்.
1933 வாக்கில் எழத்தொடங்கிய நாசிசத்தால் ஐந்தாவது அலையாக யூதர்கள் குடியேறினர். இந்த அலியா-5 க்குப் பிறகு, 1922ல் அப்பகுதியில் இருந்த மக்கள் தொகையில் 11% யூதர்களாக இருந்தநிலை மாறி, 1940ல் யூதர்கள் மக்கள் தொகையில் 30% ஆக உயர்ந்தார்கள். நிலப்பகுதியில், 28% ஐ சியோனிச நிறுவனங்கள் வாங்கியிருந்தன. இது தவிர யூதர்கள் தனிப்பட்ட முறையிலும் நிலங்களை வாங்கியிருந்தனர். இசுரேலின் தென் பாதி வறண்ட பாலை நிலமாகவும், மக்கட்தொகை நெருக்கமற்றதாகவும் இருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் ஐரோப்பாவில் மிகப்பெரிய அளவில் நிகழ்ந்த இனப்படுகொலையில் ஏராளமான யூதர்கள் கொல்லப்பட்ட பின்னர், ஒப்புதலின்றி (சட்டமுரணாக) ஏராளமான வெளி நாட்டு யூதர்கள் வந்து இறங்கினர். இரண்டாம் உலகப் போரின் இறுதியில் பாலசுத்தீனத்தில் சுமார் 600,000 யூதர்கள் இருந்தனர்.
1939ல், பிரித்தன் பாலஸ்தீனத்தில் யூத வந்தேறுதலை யுத்ததின் போது 75000 க்கு கட்டுப்படுத்தவும், அவர்களால் நிலம் விலைக்கு வாங்கப்படுவதை கட்டுப்படுத்தவும் திட்டமிட்டது. அது 36-39 அரபு ரகளைகளுக்கு பதிலாக இருக்கலாம். இத்திட்டம் யூதர்களாலும், சியோனிஸ்டுகளாலும், 1917 பால்பர் ஆணைக்கு எதிரான நம்பிக்கைத்துரோகமாகக் கருதப்பட்டது. அராபியர்களும் திருப்தி அடையவில்லை; ஏனெனில் அவர்கள் யூத வந்தேறுவதை முற்றிலும் தடுக்கக் கோரினர். அப்படியும், இத்திட்டத்தை பிரிட்டன் ஐநா ஒப்பாட்சி முடியும் வரை கடைப்பிடித்தது.
யூதர்களின் தலைமறைவான குழுக்கள் (பாசறைகள்)
பாலஸ்தீனர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே வலுவடைந்து வந்த முரண்பாடுகளாலும், பிரித்தானியரிடம் இருந்து யூதர்களுக்கான உறுதிகோள் ஏதும் வராததினாலும் யூதர்கள் தாங்களே தங்களை பாதுகாக முடிவெடுத்தனர்.
பால்பூர் அறிவிப்பையும் யூத தேசத்தையும் எதிர்த்த அரபு தேசீயவாதிகள், யூதர்களுக்கு எதிரான கலவரங்களை எரூசலம், ஹீப்ரான், ஜாப்பா, ஹைபாவில் தூண்டினர். 1921 யூத எதிர்ப்பு கலவரங்களை தொடர்ந்து, ஹகானா என்ற அமைப்பு தற்காப்பிற்காக யூதர்களால் ஆரம்பிக்கப்பட்டது. 1931, ஹகானாவிள் பிளவு ஏற்பட்டு, இர்குன் அமைப்பு வெளியேறியது. இர்குன் இன்னும் தீவிர செயல் நோக்கை பின்பற்றி, யூதர்களிள் மேல் ஏற்பட்ட வன்முறைகளுக்கு பதிலடி கொடுத்து, பிரித்தானிய ஐநா ஒப்படைப்பு அரசாங்கத்தின் மீதும் தாக்கியது. இர்குனிலிருந்து இன்னும் தீவிர செயல்வாத லேஹி குழு பிளந்து வெளியேறியது. இர்குன் கொள்கைக்கு மாற்றாக, அது உலகப் போரில், பிரித்தனுடன் ஒத்துழைப்பை மறுத்தது. இக்குழுக்கள் 1948 அரபு-இஸ்ரேலிய போர் முன், இஸ்ரேலி பாதுகாப்பு சேனை உதயத்திலும், அலியா-பெத் போன்ற இஸ்ரேலிய அகதிகள் வரவழிப்பிலும், பெரும் தாக்கம் ஏற்படுத்தின.
நாடு நிறுவப்படுதல்

1947ல் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே மிகுதி பெற்று வந்த வன்முறை நிகழ்வுகளைக் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ இயலாத நிலையில், பிரிட்டன் நாடு தன் ஆட்சி உரிமையில் இருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்தது. 1947ல் உலகநாடுகளின் பேரவை (UN General Assemby), பாலசுத்தீனத்தை இருநாடுகளாகப் பிரிக்க ஒப்புதல் அளித்தது. யூதர்கள் இருக்க நிலப்பகுதியில் 55% யும், அராபியர்கள் இருக்க நிலத்தில் 45% யும் தருவதென இருந்தது. எருசலேம் நகரம் உலகநாடுகள் நிர்வகிக்கும் நகரமாக இருக்கட்டும் என்றும் முடிவு செய்தது. எருசலேமை ஈரின மக்களும் தமக்கே வேண்டும் என மிக வல்லுரிமையோடு கோருவார்கள் என்றும் அதனைத் தவிர்ப்பதற்காக இம்முடிவு என்று கூறப்பட்டது.
இரு நாடுகளாகப் பிரிப்பது என்னும் திட்டத்தை உலகநாடுகளின் பேரவை நவம்பர் 29, 1947ல் ஏற்ற உடன், யூதர்களின் சார்பாக டேவிட் பென்கூரியன் (David Ben-Gurion) தற்காலிகமாக ஏற்றுக்கொண்டார், ஆனால் அரேபியர்களின் குழு (Arab League) மறுத்தது. இதைத் தொடர்ந்து அரேபியர்கள் யூதர்களின் மீதும், யூதர்கள் அரேபியர்களின் மீதும் நடத்திய தாக்குதல்களின் விளைவாகப் பரவிய உள்நாட்டுப் போர், 1948க்கான இசுரேலிய விடுதலைப்போரின் முதல் கட்டமாக அமைந்தது.
பிரித்தானியரின் ஆட்சி உரிமை மே 15, 1948 பிற்பகல் 5 மணிக்கு முடிவடையும் முன்னரே, மே 14, 1948ல் இசுரேலிய நாடு தம் நாடு உருவானதை அறிவித்தது.
விடுதலைப் போரும் மக்கள் திரண்டு வருவதும்
இசுரேல் ராஜ்ஜியத்தின் நிர்மாணத்தின் பின், எகிப்து, சிரியா, யோர்தான், இராக் நாடுகளின் சேனைகள் போரில் கலந்து கொண்டு, 1948 அரபு-இசுரேலி போர் இரண்டாம் நிலை தொட்டது. வடக்கிலிருந்து வந்த சிரியா, லெபனான், இராக் படைகள் இசுரேல் எல்லையில் நிறுத்தப்பட்டன; யோர்தான் படைகள் கிழக்கு எருசலேமை கைப்பற்றி மேற்கு எருசலேமை முற்றுகையிட்டன. ஹகானா அப்படி ஊடுருவிய படைகளை நிறுத்தியது, இர்குன் படைகள் எகிப்து படைகளை நிறுத்தியது. 1948 ஜூனில், ஐ.நா. ஒரு மாத போர்நிறுத்த பிரகடனம் செய்தது; அச்சமயம் இசுரேல் பாதுகாப்பு படை அரசாங்க ரீதியில் நிறுவப்பட்டது. பல மாத போருக்குப் பின், 1949ல், போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, தாற்காலிக எல்லைகள் நிலைக்கப் பட்டன. இசுரேல் யோர்தான் நதிக்கு மேற்கே ஒப்பந்த பகுதிகளின் 26% நிலைத்தை அடைந்தது. யோர்தான் 'மேற்குக் கரை' என்ற யூதேயா, சமாரியா போன்ற மலைப் பிரதேசங்களை ஏற்றது. எகிப்து காசா என அழைக்கப்படும் சிறிய கடலோர நிலத்தை அடைந்தது.
போரின்போதும், பின்னும் இசுரேலிய பிரதான அமைச்சர் டேவிட் பென்குரியன் , பல்மாக், இர்குன், லேஹி முதலிய அமைப்புகளைக் கலைக்க உத்தரவிட்டார். ஒரு சுவீட நாட்டு தூதுவாலய ஊழியர் கொலை செய்யப்பட்டதால், இர்குன்னும் லேஹியும் பயங்கரவாத அமைப்புகளாக அழைக்கப்பட்டு தடை செய்யப்பட்டன.
பல அரபு மக்கள் புதிய இசுரேலிய நாட்டினிலிருந்து வெளியேறினர் அல்லது வெளியேற்றப்பட்டனர். (அகதிகள் எண்ணிக்கை 600000 ந்து 900000 ஆக கணக்கிடப்பட்டுள்ளது; ஐ.நா. கணக்கு 711000 ஆகும்.) அதே சமயம் 1000000 யூதர்கள் அரபு நாடுகளிலிருந்து துரத்தப்பட்டனர். (ஆதாரங்கள் சந்தேகத்திற்கு உரியது)
யூத இன அழிப்பிலிருந்து (ஹோலோகாஸ்ட்) பிழைத்தவர்களும், அரபு நாடுகளிலிருந்த வந்த யூத அகதிகளும் இசுரேல் மக்கள் தொகையை ஒரே வருடத்தில் இரு மடங்காக்கினர்.
1950களிலும் 1960களிலும்
1954–1955 ஆண்டுகளில் தலைமை அமைச்சராய் இருந்த மோசே சாரெட் அரசு எகிப்து மீதான குண்டுவீச்சில் தவறியதால் மதிப்பிழந்தது. 1956ல் எகிப்து நாடு பிரித்தானியரும், பிரெஞ்சுக்காரரும் அதிருப்தி அடையத்தக்க வகையில் சுயஸ் கால்வாயை (Suez Canal) நாட்டுடைமையாக்கியது. இதைதொடர்ந்து இசுரேல் இவ்விரு ஐரோப்பிய அரசாங்களுடன் மறைமுக அணி அமைத்து, எகிப்து மீது போர் தொடுத்தது. சூயஸ் முட்டுதலுக்கு பின், உலக நிர்பந்தத்தினால் இசுரேல் சைனாய் குடாவிலிருந்து வெளியேறியது.
1955ல் பென் குரியன் மீண்டும் தலைமை அமைச்சராகி 1963ல் பதவி விலகினார். அவருக்குப் பின் லீவை எஷ்கால் தலைமை அமைச்சரானார்.
1961ல், 'கடைசி முடிவு' என்றழைக்கப் பட்ட யூத அழிவுத் திட்டத்தை இயக்கிய நாஜி யுத்த குற்றவாளி அடால்ப் ஐக்மனைக் கைது செய்து இசுரேலுக்குக் கொண்டுவந்து விசாரித்துத் தூக்கிலிட்டனர். ஐக்மன் இசுரேலிய வழக்கு மன்றங்களினால் தூக்கு போடப்பட்ட ஒரே நபர் ஆவார்.
மே 1967 ல், இசுரேலுக்கும், அதன் பக்க நாடுகளுக்கிடையே மறுபடியும் சூடு பிடித்தது. சிரியா, யோர்தான் எகிப்து போர் வீராப்பு பேசின; எகிப்து ஐ.நா. பார்வையாளர்களை வெளியேற்றியது. எகிப்து இசுரேலிய கப்பல்களுக்கு திராணா குடாவில் தடையிட்ட போது, அது போருக்கான அறிகுறியாகக் கருதி, இசுரேல் எகிப்தை முன்னேற்பாடாக சூன் 5ல் தாக்கியது. ஆறு நாட்கள் நீடித்த அரபு-இசுரேலிய போரில், இசுரேல் அரபுப்படைகளைத் தோற்கடித்து, விமானப்படைகளைத் தூளாக்கி வென்றது. கிழக்கு எருசலேம், மேற்குக்கரை, காசா நிலப்பட்டை, சைனாய், கோலன் சிகரங்கள் இவற்றை அரபு நாடுகளிடமிருந்து கைப்பற்றியது. 'பச்சை கோடு'-1949 கைப்பற்றப்பட்ட நிலங்களின் நிர்வாக எல்லையாயிற்று. பத்து வருடங்களுக்குப் பின், எகிப்துடன் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி காசாவை எகிப்துக்குக் கொடுத்தது.
1967ல், அமெரிக்க கப்பலான லிபர்ட்டி இசுரேல் விமானங்களால் தாக்கப்பட்டு 34 அமெரிக்க துருப்புகள் உயிரிழந்தனர்; பின்னர் மேற்கொண்ட ஆய்வின்படி அது கப்பலை சரியாக அடையாளம் காண முடியாமல் செய்த பிழை என உறுதியிடப்பட்டது.
1969ல் கோல்டா மேர் என்ற பெண் தலைமை அமைச்சரானார்.
1970களில்
1967ன் போருக்குப் பின் 1968–1972 ஆண்டுகளில் இசுரேல், சிரியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கிடையே பற்பல சண்டைகள் நிகழ்ந்தன. 1970 முதலில், பாலஸ்தீன பயங்கரவாத அமைப்புகள் இசுரேல், யூத குறிகள் மீது பல தாக்குதல்களைத் தொடங்கியன. இவற்றில் முதன்மையானது, 1972 ஒலிம்பிக் விளையாட்டுகளில், பாலஸ்தீன பயங்கரவாதிகள் இசுரேல் விளையாட்டு வீர்ர்களைப் பிணையாகப் பிடித்து, அவர்களைக் கொன்றனர். பதிலுக்கு, இசுரேல் 'கடவுள் பழி' என்ற செய்கைகளினால் மொசாத் ஆட்களின் மூலம் பல பயங்கரவாதிகளை கொன்றது.
அக்டோபர் 6, 1973, யோம் கிப்புர் யூத நோன்பு நாளில், எகிப்து, சிரிய படைகள் திடீரென்று, முன்னறிவிப்பன்றி தாக்கின. ஆனால், முதலில் திகிலாக்கியும், அவை 1967ல் இஸ்ரேலுலிடம் இழந்த நிலங்களை மீள்கொள்ள முடியவில்லை. போரின் பின் பல வருடங்கள் சண்டையின்றி இருந்ததால், சமாதான பேச்சுகளுக்கு உடந்தையாக இருந்தது.
1974ல், மைரின் பதவி விலகளுக்குப்பின், இட்ஷாக் ரபின் ஐந்தாவது பிரதான அமைச்சரானார். 1977 கெனெச்சட் தேர்தல்களில் 1948 லிருந்து ஆளுமணியிலிருந்த மார்ச் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியே வந்தது. மேனாசம் பெகின் தலைமையிலான புதிய லிகுட் கட்சி அரசாங்கத்தை பொறுப்பேற்றது.
1974 நவம்பரில், எகிப்து ஜனாதிபதி அன்வர் சாதத், யூத நாட்டுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் செய்து கெனெச்சட் என்ற மக்களவைக்கு மொழி பெயர்ந்தார். இதுவே இசுரேலுக்கு ஒரு அரபு நாட்டின் முதல் ஏற்றுக்கொள்ளுதல் ஆகும். அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பித்து காம்ப் டேவிட் இழைகளுக்கு வித்திட்டது . மார்ச் 1979ல், வாஷிங்டனில், இசுரேல்-எகிப்து சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இசுரேல் 1967ல், எகிப்தினிடம் கைப்பற்றிய எல்லா பகுதிகளையும் திருப்பிக் கொடுத்தது. பாலஸ்தீனர்களுக்கும் சுயாட்சி நடத்தலாம் என்றும் ஒத்துக்கொள்ளப்பட்டது.
1980கள்
சூலை 7 ஆம் நாள் 1981ல் இசுரேலிய வானூர்திப் படை இராக் நாட்டில் ஓசிரிக் என்னும் இடத்தில் இருந்த (அணுக்கரு உலை உள்ள) அணுக்கரு நிலையத்தைத் தாக்கியழித்தனர். இராக்கியர்கள் அணுகுண்டு தயாரிப்பதைத் தடுக்கவே இம்முயற்சி என்று கூறப்பட்டது.
1982ல் இசுரேல் லெபனான் மீது தாக்குதல் தொடங்கியது. இஸ்ரேல் 1975 முதல் உள்நாட்டுப் போரில் முழுகியிருந்த லெபனான் மேல் படையெடுத்தது. அதை முதலில் வடக்கிலிருக்கும் குடிகளை பாலஸ்தீனிய பயங்கரவாத தாக்குதலிருந்து காப்பாற்றுவதாக என்று சாக்கு சொல்லப் பட்டது. ஆனால் 40 கி.மீ. எல்லைக்கு வெளியே காப்பு மண்டலம் ஏற்படுத்திய பின், இஸ்ரேலிய படை இன்னும் வடக்கே முன்னேறி, லெபனான் தலைநகர் பெய்ரூட்டைக் கைப்பற்றியது. பாலஸ்தீன விடுதலை அணி லெபனானிலிருந்து வெளியேற்றப்பட்டபின், டுநீசியாவின் தலைநகர் டூனிசிக்கு புலம் பெயர்ந்தன. இந்த விளைவினால் ஆரம்பித்த லெபனான் போர்களில் சோர்வுற்ற பிரதமர் பெகின் 1983ல் பதவி விலகி, இட்ஷாக் ஷமீருக்கு இடம் விட்டார்.. 1986ல், லெபனானிலிருந்து பெரியளவில் வெளியேறினாலும், காப்பு மண்டலம் 2000 வரை வைக்கப்பட்டது. அதையும் 2000ல், காலி செய்தது.
1980ல் அரசாங்கம் இடது-வலதுசாரிகளினிடையே மாறி மாறி ஆயிற்று. 1984ல் இடது சாரி ஷிமோன் பெரெஸ் பிரதமரானார்; 1986ல் ஷமீர் மறுபடியும் பதவியேற்றார். பாலஸ்தீன முதல் எழுச்சி (இண்டிபாடா) 1987ல் தொடங்கி வன்முறைகள் நிகழ்ந்தன. அதனால் ஷமீர் 1988ல், பிரதம அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படார்.
1990கள்
வளைகுடா யுத்தத்தில், ஒரு பங்கும் இல்லாமலேயே, ஒரு கட்சியும் சாராமலேயே, இஸ்ரேல் பல இராக்கிய ஏவுகணைகளால் அடிக்கப்பட்டு 2 குடிகள் கொல்லப்பட்டனர்.
1990ல், அப்போது குலைந்த சோவியத் ஒன்றியத்திலிருந்து பேரளவு யூத வந்தேறிகள் புகுந்தனர். அவர்கள் 'மீள்வருகை நீதி'யின் படி, இஸ்ரேலிய குடிமக்கள் உரிமையை உடனே பெற்றனர். 1990-91ல், 380000 பேர் வந்து குடியிருப்பு உரிமை பெற்றனர். அவர்கள் வாக்குகளைக் கவர தொழிலாளர் கட்சி, வேலையில்லாமை, வீடு மூட்டப் பிரச்சினைகள் போன்றவற்றை ஆளும் லிகுத் கட்சியின் மேல் போட்டு பரப்புரை செய்தது. அதனால் வந்தேரிகள் தொழிலாளர் கட்சிக்கே 1992 தேர்தலில் ஆதரவு காட்டி வாக்கிட்டு, அக்கட்சிக்கு மக்களவையில் 61% பெரும்பான்மை உரிமையை கொடுத்தனர்..
தேர்தல் தீர்ப்பின்படி, இட்ஷாக் ரபின் பிரதம அமைச்சராகி, இடது சாரி அரசாங்கத்தை மேற்கொண்டார். தேர்தலின் போது, அவர் இஸ்ரேலியர்களுக்கு தற்காப்பும், அராபிகளுடன் மொத்த சமாதானத்தையும் 9 மாதங்களுக்குள் காட்டுவதாக சூளுரைத்தார். 1993ல். அரசாங்கம் மட்றீட் சமாதான பேச்சைக் கைவிட்டு, நார்வே தலைநகர் ஆஸ்லோவில் பாலஸ்தீன விடுதலை அணியுடன் சமாதான சம்மதம் அளித்தது. அதனால் ஜோர்டன் இசுரேலை ஏற்றுக்கொள்ளும் இரண்டாவது அரபு நாடானது.
முதலில் பெருமளவிலிருந்த சமாதான சம்மதத்தின் ஆதரவு, ஹமாஸ் போன்ற பாலஸ்தீன சம்மதத்தின் எதிரிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்களால் கீழிறங்கியது. நவம்பர் 4, 1995-இல் இகால் அமீர் என்ற யூத வெறியாளர் பிரதமர் ரபீனை சுட்டுக் கொன்றார். இக்கொலையினால் கொந்தளிப்புற்ற பொதுமக்கள், ஆஸ்லோ சம்மதத்தின் எதிரிகளின் மேல் வெறுப்பு கொண்டு, சம்மதத்தின் யூகியான ஷிமொன் பெரசுக்கு ஆதரவு காட்டத் தொடங்கினர். ஆனால், புதிய பாலஸ்தீனிய தற்கொலை சம்பவங்களாலும், பயங்கரவாதத்தைப் புகழ்ந்த யாச்சர் ஆராபத் மேலிருந்த எரிச்சலாலும், பெரச் ஆதரவு ஓரளவு மலிந்து, 1996 தேர்தலில் பெரெச், லிகுட் வேட்பாளர் பின்யமின் நடன்யாகு என்பவரிடம் தோற்றார்.
ஆஸ்லோ சமாதானத்தின் எதிரி போல தோன்றினாலும், நடன்யாகு ஹெப்ரான் பகுதியிலிருந்து வெளியேறி, பாலஸ்தீன தேசீய மன்றத்திற்கு மேலும் ஆதீனம் கொடுக்குமாறு கையெழுத்திட்டர். நடன்யாகு ஆட்சிகாலத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் ஓரளவு மழுங்கின. ஆனால் 1999 தேர்தல்களில் தொழிலாளர் கட்சி எஹூத் பராக் நடன்யாகுவை பெருவித்தியாசத்தில் தோற்கடித்து, அடுத்த பிரதமரானார்.
Remove ads
இசுரேலின் நில நாட்டு அமைப்பு



இசுரேலுக்கு வடக்கில் லெபனான், கிழக்கில் சிரியா, ஜோர்தான், மற்றும் மேற்குக் கரை, தென்மேற்கில் எகிப்து மற்றும் காசா கரை ஆகிய நாடுகளும் பகுதிகளும் அமைந்தன. மேற்கில் நடுநிலக்கடலும் தெற்கில் அக்காபா விரிகுடாவிலும் கடற்கரைகள் உள்ளன.
1967ல் நிகழ்ந்த ஆறுநாள் போரில் இசுரேல் யோர்தானைச்சேர்ந்த மேற்குக்கரை (West Bank) சிரியாவைச் சேர்ந்த கோலான் குன்றுகள் (Golan Heights), எகிப்த்தைச் சேர்ந்த காசாப் பகுதி ஆகியவற்றைக் கைப்பற்றியிருந்தது. 1982வுக்கு முன் பல படையினர்களும் குடியேற்றவர்களும் சைனைவிலிருந்து திரும்பப்பெற்றுள்ளது. மேற்குக்கரை, காசா கரை, கோலான் குன்றுகள் ஆகிய பகுதிகளின் நிலைமையை இன்று வரை முடிவு செய்யவில்லை.
1967ல் கைப்பற்றின நிலங்களை தவிர இசுரேலின் மொத்த பரப்பளவு 20,770 கி.மீ.² அல்லது 8,019 சதுர மைல்; (1% நீர்). இசுரேல் சட்டத்தின் படி கிழக்கு ஜெரூசலெம் மற்றும் கோலான் குன்றுகள் உட்பட மொத்த பரப்பளவு 22,145 கி.மீ.² அல்லது 8,550 மைல்²; ஒரு சதவீதம் கீழே நீர். இசுரேல் கட்டுப்பாட்டில் மொத்த பரப்பளவு 28,023 கி.மீ.² அல்லது 10,820 மைல்² (~1% நீர்).
மாநகரப் பரப்பளவுகள்
2004 இசுரேல் புள்ளியியல் மையத்தின் கணக்கெடுப்பின் படி டெல் அவீவ் (மக்கள் தொகை 2,933,300), ஹைஃபா (மக்கள் தொகை 980,600), பீர்ஷெபா (மக்கள் தொகை 511,700) ஆகிய மூன்று மாநகரங்கள் இசுரேலில் உள்ளன.[51] ஜெரூசலெமும் இசுரேலின் மாநகரங்களில் சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் இந்நகரத்தின் எல்லைகள் உறழ்வு பட்டுள்ளது காரணமாக சரியாக மக்கள் தொகையை கணக்கெடுக்கமுடியாது. 2005 கணக்கெடுப்பின் படி அரசின் படி ஜெரூசலெம் மக்கள் தொகை 706,368 ஆகும். சில வேளைகளில் அரபு முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையான நாசரேத்தும் மாநகரமாக குறிப்பிட்டுள்ளது. பரணிடப்பட்டது 2007-11-12 at the வந்தவழி இயந்திரம்.
சட்ட மன்றம்

இசுரேலின் ஆட்சி ஒரேயொரு சட்டமன்றத்தின் அடிப்படையில் நிகழுகின்றது. இசுரேலின் நாடாளும் சட்டமன்றத்திற்கு கெனெசெட் (Knesset ஃஈபுரு மொழியில் כנסת = கூட்டம், மன்றம், assembly) என்று பெயர். இதில் 120 கெனெசெட் உறுப்பினர்கள் (நாடாளுமன்ற உறுப்பினர்கள்) உண்டு.
ஆட்சி செலுத்துவோர்
இசுரேலியக் குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவர் எனினும் அதிக ஆட்சிப்பொறுப்புகளும் ஆணை மற்றும் கட்டளை இடும் உரிமையும் அற்றவர். தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற கட்சியின் தலைவரை தலைமை அமைச்சராய் தேர்ந்தெடுப்பது குடியரசுத் தலைவரின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்று. நாட்டை நடத்தும் பொறுப்பும் அதிகாரமும் தலைமை அமைச்சரைச் சேர்ந்தது. தலைமை அமைச்சர் தன் அமைச்சர் குழுவைக்கொண்டு நாட்டை நடத்துவார்.
Remove ads
மக்கள்
மக்கள் வகைப்பாடு
இசுரேலின் நடுவண் புள்ளியியல் துறையின் மே 2006 ஆம் ஆண்டின் கணக்குப்படி இசுரேலில் 7 மில்லியன் உள்ளனர். அவற்றில் 77% மக்கள் யூதர்கள், 18.5% அராபியர்கள், 4.3% மற்ற இனத்தவர்..[52] யூதர்களில் 68% மக்கள் இசுரேலில் பிறந்தவர்கள் (இவர்களை சபரா என்பர்), அல்லது ஐரோப்பாவில் இருந்து குடியேறியவர் (இவர்கள் ஓலிம் எனப்படுபவர்), 22% மக்கள் ஐரோப்பாவில் இருந்தும் அமெரிக்காவில் இருந்தும் வந்து குடியேறியவர், 10% ஆசியா-ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறியவர்.[53]
Remove ads
ஆதாரங்களும் மேற்கோள்களும்
குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads