கல்சி அரசமரபின் துருக்கிய-ஆப்கானிய சுல்தான் (ஆட்சி. 1296-1316) From Wikipedia, the free encyclopedia
அலாவுதீன் கல்சி (ஆட்சி. 1296–1316) என்பவர் இந்தியத் துணைக் கண்டத்தில் தில்லி சுல்தானகத்தை ஆண்ட கல்சி அரசமரபைச் சேர்ந்த ஓர் ஆட்சியாளர் ஆவார். இவரது இயற்பெயர் அலி குர்ஷஸ்ப் ஆகும். வருவாய், விலைவாசி கட்டுப்பாடுகள் மற்றும் சமூகம் தொடர்பான, முக்கியமான ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நிர்வாக சீர்திருத்தங்களை அலாவுதீன் தொடங்கி வைத்தார். இந்தியா மீதான பல மங்கோலிய படையெடுப்புகளிலிருந்தும் வெற்றிகரமாக தற்காத்துக் கொண்டார்.
அலாவுதீன் கல்சி علاءالدین خِلجی | |||||
---|---|---|---|---|---|
சுல்தான் சிக்கந்தர்-இ-சானி (இரண்டாம் அலெக்சாந்தர்) | |||||
அலாவுதீன் கல்சி குறித்த ஒரு 17ஆம் நூற்றாண்டு ஓவியம் | |||||
13வது தில்லி சுல்தான் | |||||
ஆட்சிக்காலம் | 19 சூலை 1296–4 சனவரி 1316 | ||||
முடிசூட்டுதல் | 21 அக்டோபர் 1296 | ||||
முன்னையவர் | ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜி | ||||
பின்னையவர் | சிகாபுதீன் ஒமர் | ||||
அவத்தின் ஆளுநர் | |||||
காலம் | அண். 1296–19 சூலை 1296 | ||||
காராவின் ஆளுநர் | |||||
காலம் | அண். 1266–1316 | ||||
முன்னையவர் | மாலிக் சஜ்ஜு | ||||
பின்னையவர் | அலாவுல் முல்க் | ||||
அமீர்-இ-துசுக் (நிகழ்ச்சிகளை மேற்பார்வையிடுபவருக்கு ஒப்பானது) | |||||
காலம் | அண். 1290–1291 | ||||
பிறப்பு | அலி குர்ஷஸ்ப் அண். 1266 | ||||
இறப்பு | 4 சனவரி 1316 49–50) தில்லி (தற்கால இந்தியா) | (அகவை||||
புதைத்த இடம் | அலாவுதீன் கல்சியின் மதராசா மற்றும் சமாதி, தில்லி[1] | ||||
துணைவர் |
| ||||
குழந்தைகளின் பெயர்கள் |
| ||||
| |||||
மரபு | கில்ஜி வம்சம் | ||||
தந்தை | சிகாபுதீன் மசூத் (ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜியின் அண்ணன்) | ||||
மதம் | சன்னி இசுலாம் |
அடிமை அரசமரபினரை பதவியில் இருந்து தூக்கி எறிந்து விட்டு ஜலாலுதீன் தில்லி சுல்தானாக மாறிய நேரத்தில், அலாவுதீனுக்கு அமீர்-இ-துசுக் என்ற பதவி கொடுக்கப்பட்டது. இதன் பொருள் நிகழ்ச்சியை மேற்பார்வையிடுபவர் என்பதாகும். ஜலாலுதீனுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியை ஒடுக்கியதற்குப் பிறகு 1291ஆம் ஆண்டு காராவின் ஆளுநர் பதவியை அலாவுதீன் பெற்றார். பில்சா மீதான ஒரு வருவாய் ஈட்டிய ஊடுருவலுக்கு பிறகு 1296இல் அவத்தின் ஆளுநர் பதவியை பெற்றார். 1296இல் அலாவுதீன் தேவகிரி மீது ஊடுருவல் நடத்தினார். ஜலாலுதீனுக்கு எதிராக ஒரு வெற்றிகரமான கிளர்ச்சியை நடத்துவதற்கு தேவையான கொள்ளைப் பொருட்களை பெற்றார். ஜலாலுதீனைக் கொன்றதற்குப் பிறகு, தில்லியில் இவர் தனது ஆட்சியை நிலைப்படுத்தினார். முல்தானிலிருந்த ஜலாலுதீனின் மகன்களை அடிபணிய வைத்தார்.
அடுத்த சில ஆண்டுகளுக்கு சகதாயி கானரசில் இருந்து வந்த மங்கோலிய படையெடுப்புகளிலிருந்து அலாவுதீன் வெற்றிகரமாக தற்காத்துக் கொண்டார். இதில் ஜரன்-மஞ்சூர் (1297–1298), சிவிஸ்தான் (1298), கிளி (1299), தில்லி (1303), மற்றும் அம்ரோகா (1305) ஆகிய படையெடுப்புகள் அடங்கும். 1306இல் இவரது படைகள் மங்கோலியர்களுக்கு எதிராக இராவி ஆற்றங்கரைக்கு அருகில் ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற்றன. தற்கால ஆப்கானித்தானில் இருந்த மங்கோலிய நிலப்பரப்புகள் மீது பிறகு சூறையாடல் செய்தன. மங்கோலியர்களுக்கு எதிராக இவரது இராணுவத்திற்கு வெற்றிகரமாக தலைமை தாங்கிய இராணுவ தளபதிகளில் சாபர் கான், உலுக் கான் மற்றும் இவரது அடிமை-தளபதி மாலிக் கபூர் ஆகியோர் அடங்குவர்.
அலாவுதீன் குசராத்து (1299இல் ஊடுருவல், 1304இல் இணைத்து கொள்ளப்பட்டது), ஜெய்சால்மர் (1299), இரந்தம்பூர் (1301), சித்தோர் (1303), மல்வா (1305), சிவானா (1308) மற்றும் சலோர் (1311) ஆகிய இராச்சியங்களை வென்றார். இந்த வெற்றிகள் பல்வேறு இராசபுத்திர மற்றும் பிற இந்து அரச மரபுகளை முடிவுக்கு கொண்டு வந்தன. இதில் பரமாரப் பேரரசு, வகேலாக்களின் அரசமரபு, இரணதம்பபுரத்தின் சகாமனாக்கள் மற்றும் சலோர், குகிலாக்களின் இராவல் பிரிவினர் மற்றும் அநேகமாக யச்வபாலர்களையும் முடிவுக்கு கொண்டு வந்தன. விந்திய மலைத்தொடருக்கு தெற்கே பல்வேறு படையெடுப்புகளுக்கு இவரது அடிமை-தளபதி மாலிக் கபூர் தலைமை தாங்கினார். தேவகிரி (1308), வாரங்கல் (1310) மற்றும் துவாரசமுத்திரம் (1311) ஆகிய இடங்களில் இருந்து குறிப்பிடத்தக்க அளவிலான செல்வத்தை பெற்றார். இந்த வெற்றிகள் யாதவ முன்னரான இராமச்சந்திரா, காக்கத்திய மன்னரான பிரதாபருத்ரா மற்றும் போசளப் பேரரசின் மன்னராகிய மூன்றாம் பல்லாலா ஆகியோரை அலாவுதீனுக்கு திறை செலுத்துபவர்களாக ஆக்கின. கபூர் பாண்டிய நாட்டின் மீதும் ஊடுருவல் (1311) நடத்தினார். பெருமளவிலான செல்வம், யானைகள் மற்றும் குதிரைகளை பெற்றார்.
இவரது வாழ்வின் கடைசி ஆண்டுகளின் போது அலாவுதீனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. நிர்வாகத்தை கையாள மாலிக் கபூரை இவர் சார்ந்திருந்தார். 1316இல் இவரது இறப்பிற்கு பிறகு அலாவுதீன் மற்றும் அவரது இந்து மனைவி ஜத்யபாலியின் மகனாகிய சிகாபுதீனை ஒரு கைப்பாவை முடியரசராக மாலிக் கபூர் நியமித்தார். அலாவுதீனின் மூத்த மகன் குத்புதீன் முபாரக் ஷா இவரது இறப்பிற்கு சிறிது காலத்திலேயே ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார்.
அலாவுதீனின் குழந்தைப் பருவம் குறித்து சம கால வரலாற்றாளர்கள் பெரிதாக எதையும் எழுதவில்லை. 16/17ஆம் நூற்றாண்டு வரலாற்றாளரான அஜி உத் தபீரின் கூற்றுப் படி, இரந்தம்பூருக்கு தனது அணி வகுப்பை தொடங்கிய போது (1300–1301) அலாவுதீனுக்கு 34 வயதாகி இருந்தது. இதைச் சரியானது என்று எடுத்துக் கொண்டால் அலாவுதீன் பிறந்த ஆண்டானது 1266–1267 என்று காலமிடப்படுகிறது.[2] இவரது உண்மையான பெயர் அலி குர்ஷஸ்ப் ஆகும். கல்சி அரசமரபை நிறுவிய சுல்தான் ஜலாலுதீனின் அண்ணனாகிய சிகாபுதீன் மசூதின் மூத்த மகன் இவர் ஆவார். இவருக்கு மூன்று சகோதரர்கள் இருந்தனர்: அல்மசு பெக் (பிந்தைய உலுக் கான்), குத்லுக் திகின் மற்றும் முகம்மது.[3]
சிகாபுதீனின் இறப்பிற்கு பிறகு அலாவுதீனை ஜலாலுதீன் வளர்த்தார்.[4] அலாவுதீன் மற்றும் இவரது தம்பி அல்மசு பெக் ஆகிய இருவருமே ஜலாலுதீனின் மகள்களை திருமணம் செய்து கொண்டனர். தில்லியின் சுல்தானாக ஜலாலுதீன் ஆனதற்குப் பிறகு அலாவுதீன் அமீர்-இ-துசுக் (விழாக்களை மேற்பார்வையிடுபவார் என்ற பதவிக்கு ஒப்பானது) என்ற பதவிக்கும், அல்மசு பெக் அகுர்-பெக் (குதிரைகளை மேற்பார்வையிடுபவார் என்ற பதவிக்கு ஒப்பானது) என்ற பதவிக்கும் நியமிக்கப்பட்டனர்.[5]
அலாவுதீன் ஜலாலுதீனின் மகளான மலிகா-இ-ஜகானை 1290ஆம் ஆண்டு கல்சிப் புரட்சிக்கு நீண்ட காலத்திற்கு முன்னதாகவே திருமணம் புரிந்து கொண்டார். எனினும், இந்தத் திருமணமானது மகிழ்ச்சிகரமான ஒன்றாக இல்லை. ஒரு முடியரசனாக ஜலாலுதீனின் வளர்ச்சிக்குப் பிறகு திடீரென ஓர் இளவரசியானதால் இப்பெண் மிகவும் திமிர் கொண்டும், அலாவுதீன் மீது ஆதிக்கம் செலுத்தவும் முயற்சித்தார். ஆஜிவுத் தபீர் என்பவரின் கூற்றுப்படி, அலாவுதீன் இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அப்பெண்ணின் பெயர் மகுரு ஆகும். மாலிக் சஞ்சர் என்று அழைக்கப்பட்ட அல்ப் கானின் சகோதரி இப்பெண் ஆவார்.[6] தனது கணவர் இரண்டாவதாக ஒரு மனைவியை எடுத்துக் கொண்டார் என்ற தகவலால் மலிகா-இ-ஜகான் பெருமளவுக்குச் சினம் கொண்டார். தபீரின் கூற்றுப்படி, அலாவுதீன் மற்றும் அவரது முதல் மனைவிக்கு இடையிலான புரிந்து கொள்ளாத தன்மைக்கு முதன்மையான காரணமாக இது திகழ்ந்தது.[6] ஒரு நேரத்தில் அலாவுதீனும், மகுருவும் ஒரு தோட்டத்தில் ஒன்றாக இருந்தனர். பொறாமை காரணமாக மகுருவை ஜலாலுதீனின் மகள் தாக்கினார். பதிலுக்கு அலாவுதீன் மலிகா-இ-ஜகானைத் தாக்கினார். இந்நிகழ்வு குறித்து ஜலாலுதீனிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால், அலாவுதீனுக்கு எதிராக எந்த வித நடவடிக்கையும் ஜலாலுதீன் எடுக்கவில்லை.[5] அலாவுதீன் தன்னுடைய அத்தையுடனும் நன்முறையில் உறவுகளைக் கொண்டிருக்கவில்லை. அத்தை சுல்தான் மீது பெருமளவுக்குச் செல்வாக்குக் கொண்டிருந்தார். 16ஆம் நூற்றாண்டு வரலாற்றாளர் பெரிஷ்தாவின் கூற்றுப்படி, நாட்டின் ஒரு தொலை தூரப் பகுதியில் ஒரு சுதந்திரமான இராச்சியத்தை ஏற்படுத்த அலாவுதீன் திட்டமிடுவதாக ஜலாலுதீனுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். அவர் அலாவுதீனை நெருக்கமாகக் கண்காணித்து வந்தார். அலாவுதீனிடம் தனது மகளின் ஆங்கார நடத்தையை ஊக்குவித்தார்.[7]
1291இல் காராவின் ஆளுநர் மாலிக் சஜ்ஜுவின் ஒரு கிளர்ச்சியை ஒடுக்குவதில் அலாவுதீன் ஒரு முக்கியப் பங்கை ஆற்றினார். இதன் விளைவாக ஜலாலுதீன் இவரை காராவின் புதிய ஆளுநராக 1291ஆம் ஆண்டு நியமித்தார்.[5] காராவில் இருந்த மாலிக் சஜ்ஜுவின் முந்தைய அமீர்கள் (துணை உயர் குடியினர்) ஜலாலுதீனை ஒரு பலவீனமான மற்றும் செயல்திறன் அற்ற ஆட்சியாளராகக் கருதினர். தில்லியின் அரியணையை முறையற்ற வகையில் கைப்பற்ற அலாவுதீனைத் தூண்டினர்.[6] இது, இவரது மகிழ்ச்சியற்ற தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவை இணைந்து ஜலாலுதீனை அரியணையில் இருந்து அகற்ற அலாவுதீன் முடிவெடுக்கக் காரணமாயின.[4]
ஜலாலுதீனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய அலாவுதீனைத் தூண்டிய அதே நேரத்தில், மாலிக் சஜ்ஜுவின் ஆதரவாளர்கள் ஒரு பெரிய இராணுவத்தைத் திரட்டவும், ஒரு வெற்றிகரமான ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தவும் அலாவுதீனுக்கு நிறைய பணம் தேவை என்பதைக் குறிப்பிட்டனர்: நிதி ஆதாரம் இல்லாததால் மாலிக் சஜ்ஜுவின் கிளர்ச்சியானது தோல்வியடைந்திருந்தது.[6] ஜலாலுதீனை அரியணையிலிருந்து அகற்றும் தனது திட்டத்திற்கு நிதியளிக்க அலாவுதீன் அண்டை இந்து இராச்சியங்கள் மீது ஊடுருவல்களை நடத்த முடிவு செய்தார். 1293இல் இவர் மால்வாவின் பரமார இராச்சியத்தின் ஒரு செல்வச் செழிப்பு மிக்க பட்டணமான பில்சா மீது ஊடுருவல் நடத்தினார். பில்சா பல படையெடுப்புகளால் பலவீனமடைந்திருந்தது.[4] தக்காணப் பகுதியில் இருந்த தெற்கு யாதவ இராச்சியத்தின் பெரும் செல்வம் குறித்து பில்சாவில் இவர் அறிந்தார். அவர்களது தலைநகரான தேவகிரிக்குச் செல்லும் வழிகளைப் பற்றியும் அறிந்தார். சுல்தானின் நம்பிக்கையைப் பெறுவதற்காக பில்சாவிலிருந்து பெற்ற கொள்ளைப் பொருட்களை ஜலாலுதீனிடம் அலாவுதீன் கூர்மதியுடன் சரணடைய வைத்தார். அதே நேரத்தில், யாதவ இராச்சியம் குறித்த தகவல்களை அவரிடம் வெளியிடவில்லை.[8] மகிழ்ச்சியடைந்த ஜலாலுதீன் அலாவுதீனை அரீசு-இ-மாலிக் (போர் அமைச்சர்) ஆக்கினார். மேலும், இவரை அவத்தின் ஆளுநராகவும் கூட ஆக்கினர்.[9] இதனுடன் மேற்கொண்ட துருப்புகளைச் சேர்ப்பதற்கு வருவாய் மிகுதியைப் பயன்படுத்த வேண்டும் என்ற அலாவுதீனின் கோரிக்கைக்கும் சுல்தான் அனுமதியளித்தார்.[10]
ஆண்டுக்கணக்கிலான திட்டமிடல் மற்றும் ஆயத்தத்திற்குப் பிறகு 1296இல் தேவகிரி மீது வெற்றிகரமாக அலாவுதீன் ஊடுருவல் நடத்தினார். தேவகிரியிலிருந்து ஒரு பெரும் அளவிலான செல்வத்துடன் திரும்பிச் சென்றார். இதில் விலை மதிப்புள்ள உலோகங்கள், ஆபரணங்கள், பட்டுப் பொருட்கள், யானைகள், குதிரைகள் மற்றும் அடிமைகளும் அடங்குவர். [11]அலாவுதீனின் வெற்றி குறித்த செய்தியானது ஜலாலுதீனை அடைந்த போது சுல்தான் குவாலியருக்கு வந்தார். கொள்ளையிடப்பட்ட பொருட்களை தன்னிடம் அலாவுதீன் அங்கு வழங்குவார் என்று நம்பினார். எனினும், அலாவுதீன் அனைத்து செல்வங்களுடன் காராவிற்கு நேரடியாக அணி வகுத்தார். சந்தேரியில் அலாவுதீனை இடைமறிக்கலாம் என அகமது சப் போன்ற ஜலாலுதீனின் ஆலோசகர்கள் பரிந்துரைத்தனர். ஆனால், ஜலாலுதீன் தனது அண்ணன் மகன் மீது நம்பிக்கை கொண்டிருந்தார். காராவிலிருந்து செல்வத்தை தில்லிக்கு அலாவுதீன் கொண்டு வருவார் என்ற நம்பிக்கையில் தில்லிக்குத் திரும்பினார். காரவை அடைந்த பிறகு அலாவுதீன் சுல்தானுக்கு ஒரு மன்னிப்புக் கடிதத்தை அனுப்பினார். தான் இல்லாத நேரத்தில் சுல்தானின் மனதில் தனக்கு எதிரான எண்ணங்களை தனது எதிரிகள் விதைத்திருக்கலாம் என்று கவலை தெரிவித்தார். மன்னிப்பு வழங்கி விட்டதாக ஒரு கடிதத்தை சுல்தான் கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தன்னுடைய தூதுவர்கள் மூலம் சுல்தான் இதை உடனடியாக அனுப்பினார். காரவில் அலாவுதீனின் இராணுவ வலிமை மற்றும் சுல்தானைப் பதவியிலிருந்து அகற்றும் அவருடைய திட்டங்கள் குறித்து ஜலாலுதீனின் தூதுவர்கள் அறிந்தனர். எனினும், அலாவுதீன் அவர்களைப் பிடித்து வைத்தார். சுல்தானுடன் தொடர்பு கொள்வதில் இருந்து அவர்களைத் தடுத்தார்.[12]
இதே நேரத்தில் அலாவுதீனின் தம்பியும், ஜலாலுதீனின் இன்னொரு மகளைத் திருமணம் புரிந்திருந்தவருமானஅல்மாசு பெக் (பின்னாட்களில் உலுக் கான் என்று அறியப்பட்டவர்) அலாவுதீனின் விசுவாசம் குறித்து சுல்தானுக்கு உறுதி கொடுத்தார். காராவுக்கு வருகை புரியவும், அலாவுதீனைச் சந்திக்கவும் ஜலாலுதீனை இவர் இணங்க வைத்தார். சுல்தான் நேராக வந்து மன்னிக்காவிட்டால் குற்ற உணர்ச்சி காரணமாக அலாவுதீன் தற்கொலை செய்து கொள்வார் என்று கூறினார். ஏமாற்றப்பட்ட ஜலாலுதீன் தன்னுடைய இராணுவத்துடன் காராவிற்குப் புறப்பட ஆரம்பித்தார். காராவை நெருங்கிய போது தன்னுடைய முதன்மையான இராணுவத்தை காராவுக்கு நிலம் வழியாகக் கொண்டு செல்ல அகமது சபிற்கு இவர் ஆணையிட்டார். அதே நேரத்தில் சுல்தான் சுமார் 1,000 வீரர்களைக் கொண்ட ஒரு சிறிய குழுவுடன் கங்கை ஆற்றைத் தானே கடக்க முடிவு செய்தார். 20 சூலை 1296 அன்று சுல்தானுக்கு வரவேற்பு அளிப்பது போல நடித்து அலாவுதீன் ஜலாலுதீனைக் கொன்றார். தன்னைத் தானே புதிய மன்னனாக அறிவித்துக் கொண்டார். ஜலாலுதீனின் ஆதரவாளர்களும் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், அகமது சபின் இராணுவமானது தில்லிக்குப் பின் வாங்கியது.[13]
சூலை 1290இல் தான் பதவிக்கு வரும் வரை அலி குர்ஷஸ்ப் என்று அறியப்பட்ட அலாவுதீன் அலாவுத்துன்யா வத் தின் முகம்மது ஷா-உஸ் சுல்தான் என்ற பட்டத்துடன் காராவில் புதிய மன்னனாக அதிகாரப்பூர்வமாக தன்னை அறிவித்துக் கொண்டார். இதே நேரத்தில் ஜலாலுதீனின் தலையானது இவருடைய முகாமில் ஓர் ஈட்டி முனையில் அணிவகுப்புக் காட்சிக்கு வைக்கப்பட்டது. பிறகு அவத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.[3] அடுத்த இரண்டு நாட்களுக்கு அலாவுதீன் ஒரு தற்காலிக அரசாங்கத்தைக் காராவில் உருவாக்கினார். ஏற்கனவே இருந்த அமீர்களை மாலிக்குகள் என்ற பதவிக்கு உயர்த்தினார். தன்னுடைய நெருங்கிய நண்பர்களைப் புதிய அமீர்களாக நியமித்தார்.[14]
அந்நேரத்தில், கடுமையான மழைப் பொழிவு ஏற்பட்டது. கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டது. ஆனால், தில்லியை நோக்கி ஓர் அணிவகுப்புக்கான ஆயத்தங்களை அலாவுதீன் மேற்கொண்டார். தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு படை வீரர்களைத் திரட்டுமாறு தனது அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். உடல் தகுதி தேர்வுகள் அல்லது பின் புலங்கள் ஆராயப்படாமல் இவர்கள் சேர்க்கப்பட்டனர்.[14] பெரும் மக்கள் ஆதரவு கொண்ட ஒருவராகத் தன்னை சித்தரிப்பதன் மூலம் பொது மக்களின் அரசியல் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்துவது என்பதே இவரது இலக்காக இருந்தது.[15] தன்னை ஓர் ஈகைக் குணம் உள்ள மன்னனாகக் காட்டுவதற்காக காராவில் ஒரு கூட்டத்தை நோக்கி மஞ்சனிக்குகளில் (பெரிய கவண் விற்கள்) இருந்து 5 மன் (சுமார் 15 கிலோ) எடையுள்ள தங்கக் காசுகளை வீசுமாறு இவர் ஆணையிட்டார்.[14]
இவர் மற்றும் நுசுரத் கானால் தலைமை தாங்கப்பட்ட இவரது இராணுவத்தின் ஒரு பிரிவானது தில்லிக்கு பதாவுன் மற்றும் பாரான் (நவீன புலந்தசகர்) வழியாக அணி வகுத்தது. மற்றொரு பிரிவானது சாபர் கானின் தலைமையில் தில்லிக்கு கோயில் (நவீன அலிகர்) வழியாக அணி வகுத்தது.[14] தில்லிக்கு அலாவுதீன் அணி வகுத்த நேரத்தில் தங்கத்தை விநியோகித்ததோடு இவர் படை வீரர்களையும் சேர்க்கிறார் என்ற செய்தியானது பட்டணங்கள் மற்றும் கிராமங்களில் பரவியது. இராணுவம் மற்றும் இராணுவம் சாராத பின்புலங்களைக் கொண்ட பல மக்கள் இவருடன் இணைந்தனர். பதாவுனை இவர் அடைந்த நேரத்தில் இவரிடம் 56,000 பேரைக் கொண்ட குதிரைப்படை மற்றும் 60,000 பேரைக் கொண்ட காலாட்படை இருந்தது.[14] பாரானில் இவரைத் தொடக்கத்தில் எதிர்த்த ஜலாலுதீனின் ஏழு சக்தி வாய்ந்த உயர்குடியினர் இவருடன் இணைந்தனர். இந்த உயர் குடியினர் தாசுல் முல்க் கச்சி, மாலிக் அபாசி அகுர்-பெக், மாலிக் அமீர் அலி திவானா, மாலிக் உஸ்மான் அமீர்-அகுர், மாலிக் அமீர் கான், மாலிக் உமர் சுர்கா, மற்றும் மாலிக் இரன்மார் ஆகியோர் ஆவர். அலாவுதீன் இவர்களில் ஒவ்வொருவருக்கும் 30 முதல் 50 மன் (90 முதல் 150 கிலோ) எடையுள்ள தங்கத்தைக் கொடுத்தார். இவர்களின் ஒவ்வொரு படை வீரர்களுக்கும் 300 வெள்ளி தன்காக்களை (சுத்தியலால் அடிக்கப்பட்ட நாணயங்கள்) கொடுத்தார்.[15]
தில்லி நோக்கிய அலாவுதீனின் அணி வகுப்பானது யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் குறுக்கீடு செய்யப்பட்டது. இடைப்பட்ட நேரத்தில் தில்லியில் ஜலாலுதீனின் விதவையான மல்கா-இ-சகான் தன்னுடைய உயர் குடியினருடனும் கலந்தாலோசிக்காமல் தன்னுடைய கடைசி மகனான காதிர் கானை உருக்னுதீன் இப்ராகிம் என்ற பட்டத்துடன் புதிய மன்னனாக நியமித்தார். இவரது மூத்த மகனும், முல்தானின் ஆளுநருமான அர்காலி கானுக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியது. ஜலாலுதீனின் உயர்குடியினர் அலாவுதீனுடன் இணைந்தனர் என்பதை அறிந்த மல்கா-இ-சகான் அர்காலியிடம் மன்னிப்புக் கோரினார். அரியணையை அவருக்கு அளிக்க முன் வந்தார். முல்தானிலிருந்து தில்லிக்கு அணி வகுத்து வருமாறு அவரை வேண்டினார். எனினும், தன் தாயின் உதவிக்கு வர அர்காலி மறுத்து விட்டார்.[15]
அலாவுதீன் தில்லியை நோக்கிய தனது அணி வகுப்பை அக்டோபர் 1296ன் இரண்டாவது வாரத்தில் யமுனையில் வெள்ளம் குறைந்திருந்த போது மீண்டும் தொடர்ந்தார். இவர் சிரி கோட்டையை அடைந்த போது உருக்னுதீன் இவருக்கு எதிராக ஓர் இராணுவத்திற்குத் தலைமை தாங்கினார். எனினும், நள்ளிரவில் உருக்னுதீனின் இராணுவத்தின் ஒரு பிரிவினர் அலாவுதீன் பக்கம் கட்சி தாவினர்.[15] மனச்சோர்வடைந்த உருக்னுதீன் பிறகு பின் வாங்கி, தன்னுடைய தாய் மற்றும் விசுவாசமான உயர்குடியினருடன் முல்தானுக்குத் தப்பினார். அலாவுதீன் பிறகு நகரத்திற்குள் நுழைந்தார். அங்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான உயர் குடியினர் மற்றும் அதிகாரிகள் இவருடைய அதிகாரத்தை ஏற்றுக் கொண்டனர். 21 அக்டோபர் 1296 அன்று அலாவுதீன் தில்லியில் அதிகாரப்பூர்வமாக சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.[16]
தொடக்கத்தில் தாராளமான பணக்கொடைகள், அறக்கொடைகள் மற்றும் அரசாங்கப் பதவிகளுக்கு பல பேரை நியமித்ததன் மூலமாக அலாவுதீன் தன்னுடைய ஆட்சியை வலுப்படுத்தினார்.[17] அடிமை அரசமரபினரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், ஜலாலுதீனால் நியமிக்கப்பட்டவர்கள் மற்றும் தனது சொந்த நியமிப்புகள் ஆகியோருக்கு இடையே அதிகாரத்தை சம நிலைப்படுத்தினார்.[16] சுல்தானகத்தின் இராணுவத்தின் வலிமையையும் கூட இவர் அதிகரித்தார். ஒவ்வொரு படை வீரனுக்கும் ஒன்றரையாண்டு சம்பளத்தை பணமாக அன்பளிப்பு அளித்தார். சுல்தானாக அலாவுதீனின் முதல் ஆண்டை வரலாற்றாளர் சியாவுதீன் பரணி தில்லி மக்கள் வரலாற்றில் கண்ட மிக மகிழ்ச்சியான ஆண்டு இது தான் என்று எழுதியுள்ளார்.[17]
இந்நேரத்தில் ஜலாலுதீனின் முந்தைய நிலப்பரப்பில் அனைத்தின் மீதும் தன்னுடைய அதிகாரத்தை அலாவுதீனால் பயன்படுத்த இயலவில்லை. பஞ்சாப் பகுதியில் இவரது அதிகாரமானது இராவி ஆற்றுக்குக் கிழக்கே இருந்த பகுதிகளுக்குள் அடங்கி விட்டது. இலாகூரைத் தாண்டி இருந்த பகுதியானது மங்கோலிய ஊடுருவல்கள் மற்றும் கோகர் கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்டது. முல்தானின் கட்டுப்பாடானது ஜலாலுதீனின் மகனான அர்காலியிடம் இருந்தது. அவர் தில்லியிலிருந்து தஞ்சமடைந்தவர்களை தன்னுடன் வைத்திருந்தார்.[17] நவம்பர் 1296ல் முல்தானை வெல்வதற்காக உலுக் கான் மற்றும் சாபர் கான் தலைமையிலான ஓர் இராணுவத்தை அலாவுதீன் அனுப்பினார். இவரது ஆணைப்படி நுசுரத் கான் ஜலாலுதீன் குடும்பத்தில் எஞ்சியிருந்த உறுப்பினர்களை கைது செய்தல், பார்வையற்றோர் ஆக்குதல் மற்றும்/அல்லது கொல்லுதல் ஆகிய செயல்களைச் செய்தார்.[18][19]
முல்தானை வென்றதற்குப் பிறகு சீக்கிரமே அலாவுதீனும் நுசுரத் கானை தன்னுடைய வாசிராக (பிரதம மந்திரி) நியமித்தார்.[20] தில்லி மீது தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்திய பிறகு தன்னுடைய சொந்த நியமிப்புகளாக இல்லாத அதிகாரிகளை சுல்தான் நீக்கத் தொடங்கினார்.[21] 1297ல்[22] அலாவுதீனுடன் இணைவதற்காக ஜலாலுதீனின் குடும்பத்தைக் கைவிட்ட உயர் குடியினர் (மாலிக்குகள்) கைது செய்யப்பட்டனர், பார்வையற்றோர் ஆக்கப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர். அலாவுதீன் இவர்களுக்கு முன்னர் கொடுத்த பணம் உள்ளிட்ட இவர்களது அனைத்து உடைமைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் பறிமுதல்களின் விளைவாக அரசு கருவூலத்திற்கு ஒரு பெருமளவிலான பணத்தை நுசுரத் கான் பெற்றார். ஜலாலுதீன் காலத்தைச் சேர்ந்த வெறும் மூன்று மாலிக்குகள் மட்டுமே இதிலிருந்து தப்பினர்: மாலிக் குத்புதீன் அலாவி, மாலிக் நசுருதீன் ராணா மற்றும் மாலிக் அமீர் சமால் கல்சி.[23] எஞ்சிய பழைய உயர் குடியினருக்குப் பதிலாக புதிய உயர் குடியினர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அலாவுதீனுக்கு மட்டு மீறிய அளவுக்கு விசுவாசமாக இருந்தனர்.[24]
இடைப்பட்ட காலத்தில் காராவில் அலாவுதீனின் ஆளுநராக இருந்த அலாவுல் முல்க் தன்னுடைய அனைத்து அதிகாரிகள், யானைகள் மற்றும் காராவில் அலாவுதீன் விட்டு வந்த செல்வம் அனைத்துடனும் தில்லிக்கு வந்தார். தில்லியின் கொத்தவாலாக அலாவுல் முல்க்கை அலாவுதீன் நியமித்தார். அனைத்து துருக்கியர் அல்லாத நகரப் பணியாளர்களையும் இவரது அதிகாரத்தின் கீழ் கொடுத்தார்.[21] அலாவுல் முல்க்கின் உடற் பருமன் மிகவும் அதிகரித்ததால் காராவின் ஆளுநர் பதவியானது நுசுரத் கானுக்கும் வழங்கப்பட்டது. பறிமுதல்கள் காரணமாக தில்லியில் பிரபலமற்றவராக நுசுரத் கான் இருந்தார்.[24]
1297ஆம் ஆண்டின் குளிர்காலத்தில், சகதாயி கானரசின் ஒரு நோயனின் தலைமையிலான மங்கோலியர்கள் பஞ்சாப் மீது தாக்குதல் நடத்தினர். கசூர் வரை முன்னேறினர். 1298ஆம் ஆண்டு பெப்ரவரி 6ஆம் திகதி, உலுக் கானால் தலைமை தாங்கப்பட்ட அலாவுதீனின் படைகள் மங்கோலியர்களைத் தோற்கடித்தன. அமீர் குஸ்ராவ்வின் கூற்றுப்படி, யுத்தத்தில் 20,000 மங்கோலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் தில்லிக்குக் கைதிகளாகக் கொண்டு வரப்பட்டுக் கொல்லப்பட்டனர்.[25] 1298-99இல் மற்றொரு மங்கோலிய இராணுவமானது சிந்துப் பகுதி மீது படையெடுத்தது. இவர்கள் சகதாயி கானரசிலிருந்து தப்பிய கரவுனாக்கள் எனக் கருதப்படுகிறது. சிவிசுதான் கோட்டையை அவர்கள் ஆக்கிரமித்தனர். இந்த முறை அலாவுதீனின் தளபதி சாபர் கான் படையெடுப்பாளர்களைத் தோற்கடித்தார். கோட்டையை மீண்டும் கைப்பற்றினார்.[26][27]
1299ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் குசராத்து மீது படையெடுக்க உலுக் கான் மற்றும் நுஸ்ரத் கானை அலாவுதீன் அனுப்பினார். அங்கு வகேலா மன்னனான கர்ணன் ஒரு பலவீனமான எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அலாவுதீனின் இராணுவம் பல பட்டணங்களைச் சூறையாடியது. தில்லி இராணுவமானது பல மக்களையும் பிடித்தது. இதில் வகேலா இராணியான கமலா தேவியும், அடிமை மாலிக் கபூரும் அடங்குவர். அலாவுதீனின் தெற்குப் படையெடுப்புகளுக்குப் பிற்காலத்தில் மாலிக் கபூர் தலைமை தாங்கினார்.[28][29] தில்லிக்கு இராணுவம் திரும்பிக் கொண்டிருந்த பயணத்தின் போது ஜலோருக்கு அருகில் இந்த இராணுவத்தின் சில மங்கோலியப் போர் வீரர்கள் ஒரு வெற்றியடையாத கிளர்ச்சியை நடத்தினர். இதற்குக் காரணம் சூறையாடப்பட்ட பொருட்களில் ஒரு பங்கை அவர்களிடம் இருந்து கட்டாயப்படுத்திப் பெற தளபதிகள் முயற்சி செய்ததே ஆகும். தில்லியில் இருந்த கிளர்ச்சியாளர்களின் குடும்பங்களுக்கு மிருகத் தனமான தண்டனைகளை அலாவுதீனின் நிர்வாகம் கொடுத்தது. தாய்களின் முன் குழந்தைகள் கொல்லப்பட்டதும் இதில் அடங்கும்.[30] ஜியாவுதீன் பரணியின் கூற்றுப்படி போர் வீரர்களின் குற்றங்களுக்காக அவர்களது மனைவிகள் மற்றும் குழந்தைகளைக்குத் தண்டனை கொடுக்கும் பழக்கமானது தில்லியில் நடந்த இந்த நிகழ்வில் இருந்து தொடங்கியது.[31]
1299இல் சகதாயி ஆட்சியாளரான துவா தில்லியை வெல்வதற்காகக் குத்லுக் கவாஜா தலைமையில் ஒரு மங்கோலியப் படையை அனுப்பினார்.[32] இதைத் தொடர்ந்து நடந்த கிளி யுத்தத்தில் அலாவுதீன் தானே தில்லிப் படைகளுக்குத் தலைமை தாங்கினார். ஆனால் அலாவுதீனின் ஆணைக்குக் காத்திருக்காமல் அவரது தளபதி சாபர் கான் மங்கோலியர்களைத் தாக்கினார். படையெடுப்பாளர்கள் மீது கடுமையான சேதத்தை சாபர் கான் ஏற்படுத்திய போதும், யுத்தத்தில் சாபர் கானும் அவர் பிரிவில் இருந்த மற்ற போர் வீரர்களும் கொல்லப்பட்டனர்.[33] குத்லுக் கவாஜாவும் கடுமையாகக் காயமடைந்தார். இதனால் மங்கோலியர்கள் பின் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.[34]
இதே நேரத்தில் அலாவுதீன் தனது கவனத்தைத் தற்போதைய இராசத்தானை நோக்கித் திருப்பினார். குசராத்து, மால்வா மற்றும் மேலும் தெற்கு நோக்கிய படையெடுப்புக்கு ஒரு தளத்தை பாதுகாப்பாக அமைப்பதற்காக இராசபுத்திர இராச்சியங்களை அடிபணிய வைப்பதற்காகத் தனது கவனத்தைத் திருப்பினார். 1299இல் முதலாம் ஜய்ட் சிங் கீழ் அந்நேரத்திலிருந்த பட்டிகளால் ஆளப்பட்ட ஜெய்சால்மர் கோட்டையை அலாவுதீன் முற்றுகையிட்டார். ஒரு நீண்ட முற்றுகையைத் தொடர்ந்து உணவு மற்றும் பொருட்கள் குறைந்தது காரணமாக இறுதியாக முற்றுகையிடப்பட்ட இராசபுத்திரர்கள் முலராஜாவின் தலைமையில் சகா என்ற நிகழ்வை நடத்தினர். அதில் பெண்கள் கூட்டாகத் தீக்குளித்தனர். ஆண்கள் இறுதிவரை போரிட்டு மரணம் அடைந்தனர். இவ்வாறாக அலாவுதீன் வெற்றிகரமாகப் பட்டிகளின் நிலப்பரப்புக்குள் உட்புகுந்தார். ஜெய்சால்மர் வெற்றிக்குப் பிறகு இது கல்ஜிக்களுக்குக் கீழ் மேலும் சில ஆண்டுகளுக்கு இருந்தது.[35]
1301இல் இரந்தம்பூர் மீது படையெடுக்க உலுக் கான் மற்றும் நுஸ்ரத் கானுக்கு அலாவுதீன் ஆணையிட்டார். இரந்தம்பூரின் மன்னனான ஹம்மிரதேவன் ஜலோருக்கு அருகில் நடந்த கிளர்ச்சியின் தலைவர்களுக்குப் புகலிடம் அளித்திருந்தார். முற்றுகையின் போது நுஸ்ரத் கான் கொல்லப்பட்ட பிறகு முற்றுகை நடவடிக்கைகளுக்கு அலாவுதீன் தானே பொறுப்பேற்றுக் கொண்டார். 1301 சூலையில் கோட்டையை வென்றார்.[36] இரந்தம்பூர் படையெடுப்பின் போது அலாவுதீன் மூன்று வெற்றியடையாத கலகங்களை எதிர் கொண்டார்.[37] மேற்கொண்டு எதிர்காலக் கலகங்களை ஒடுக்குவதற்காக ஓர் உளவியல் மற்றும் கண்காணிப்பு அமைப்பை இவர் நிறுவினார். தில்லியில் ஒட்டுமொத்த மதுவிலக்கை அறிமுகப்படுத்தினார். தன்னுடைய உயர் குடியினர் ஒருவருக்கொருவர் கூட்டு ஏற்படுத்துவதைத் தடுப்பதற்காகச் சட்டங்களை இயற்றினார். பொதுமக்களிடம் இருந்து சொத்துக்களைப் பறிமுதல் செய்தார்.[38]
1302-1303ஆம் ஆண்டு குளிர்காலத்தில் காக்கத்தியரின் தலைநகரான வாரங்கலைச் சூறையாடுவதற்காக ஒரு இராணுவத்தை அலாவுதீன் அனுப்பினார். அதே நேரத்தில் இரத்தினசிம்மனால் ஆளப்பட்ட குகில இராச்சியத்தின் தலைநகரான சித்தோரை வெல்வதற்காக மற்றுமொரு இராணுவத்திற்குத் தானே தலைமை தாங்கினார்.[39] எட்டு மாத கால நீண்ட முற்றுகைக்குப் பிறகு அலாவுதீன் சித்தோரைக் கைப்பற்றினார்.[40] இவரது அவையோர் அமீர் குஸ்ராவ்வின் கூற்றுப்படி இந்த வெற்றிக்குப் பிறகு 30,000 உள்ளூர் மக்களைப் படுகொலை செய்ய இவர் ஆணையிட்டார்[41]. சில பிற்கால மரபுவழிக் கதைகள் இரத்தினசிம்மனின் அழகான இராணியான பத்மினியைப் பிடிப்பதற்காகவே சித்தோர் மீது அலாவுதீன் படையெடுத்தார் என்று குறிப்பிடுகின்றன. ஆனால் பெரும்பாலான நவீன வரலாற்றாளர்கள் இத்தகைய மரபு வழிக் கதைகளின் நம்பகத்தன்மையை நிராகரிக்கின்றனர்.[42]
ஏகாதிபத்திய இராணுவங்கள் சித்தோர் மற்றும் வாரங்கல் படையெடுப்புகளில் மூழ்கியிருந்த நேரத்தில் 1303ஆம் ஆண்டு ஆகத்து மாதம் வாக்கில் மங்கோலியர்கள் தில்லி மீது மற்றொரு படையெடுப்பைத் தொடங்கினர்.[43] படையெடுப்பாளர்களுக்கு முன்னால் தில்லியை அலாவுதீனால் அடைய முடிந்தது. எனினும் ஒரு வலிமையான தற்காப்புக்குத் தயாராக அவருக்குப் போதிய நேரம் இல்லை.[44][45] அதே நேரத்தில் வாரங்கல் படையெடுப்பும் தோல்வி அடைந்தது. ஜியாவுதீன் பரணியின் கூற்றுப்படி இதற்குக் காரணம் கடுமையான மழையாகும். இராணுவமானது ஏராளமான ஆட்கள் மற்றும் அவர்களது பொருட்களை இதில் இழந்தது. இந்த இராணுவமோ அல்லது அலாவுதீனின் மாகாண ஆளுநர்களால் அனுப்பப்பட்ட வலுவூட்டல்களோ தில்லி நகரத்திற்குள் நுழைய முடியவில்லை. ஏனெனில் மங்கோலியர்கள் ஏற்கனவே சுற்றி வளைத்து விட்டனர்.[46][47] இந்தக் கடினமான சூழ்நிலைகளுக்குக் கீழ் அப்போது கட்டப்பட்டுக் கொண்டிருந்த சிரி கோட்டையின் கடுமையான பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஒரு முகாமில் அலாவுதீன் காப்பிடம் பெற்றார். இவரது படைகளுக்கு எதிராகச் சில சிறு சண்டைகளில் மங்கோலியர்கள் ஈடுபட்டனர். ஆனால் எந்த ஓர் இராணுவமும் ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற இயலவில்லை. படையெடுத்து வந்த மங்கோலியர்கள் தில்லியையும் அதன் அண்டைப் பகுதிகளையும் சூறையாடினர். எனினும், சிரி கோட்டைக்குள் நுழைய முடியாததால் இறுதியாகப் பின் வாங்க முடிவெடுத்தனர்.[48] 1303ஆம் ஆண்டின் மங்கோலியப் படையெடுப்பானது இந்தியா மீது நடத்தப்பட்ட மிகக் கடுமையான படையெடுப்புகளில் ஒன்றாகும். இது மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்காக அலாவுதீன் பல நடவடிக்கைகளை எடுப்பதற்கு இது தூண்டுகோலாக அமைந்தது. இந்தியாவுக்கான மங்கோலிய வழிகளுக்குப் பக்கவாட்டில் கோட்டைகளையும், இராணுவ இருப்பையும் இவர் வலுப்படுத்தினார்.[49] ஒரு வலிமையான இராணுவத்தைப் பேணுவதற்காகப் போதிய வருவாய் வருவதை உறுதி செய்வதற்காக ஒரு தொடர்ச்சியான பொருளாதாரச் சீர்திருத்தங்களையும் இவர் நடைமுறைப்படுத்தினார்.[50]
1304இல் குசராத்து மீது ஓர் இரண்டாவது படையெடுப்புக்கு அலாவுதீன் ஆணையிட்டதாகத் தோன்றுகிறது. தில்லி சுல்தானாகத்துடன் வகேலா இராச்சியம் இணைக்கப்படுவதில் இது முடிந்தது.[51] 1305இல் நடு இந்தியாவில் மால்வா மீது ஒரு படையெடுப்பை இவர் தொடங்கினார். பரமாரப் பேரரசின் மன்னனான இரண்டாம் மகாலகதேவனின் தோல்வி மற்றும் இறப்பில் இது முடிந்தது.[52][53] யஜ்வபால அரசமரபானது மால்வாவின் வடகிழக்குப் பகுதியை ஆண்டு வந்தது. அதுவும் அலாவுதீனின் படையெடுப்பபில் வீழ்ந்ததாகத் தோன்றுகிறது.[54]
திசம்பர் 1305இல் மங்கோலியர்கள் இந்தியா மீது மீண்டும் படையெடுத்தனர். கடுமையான பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்த தில்லி நகரத்தைத் தாக்குவதற்குப் பதிலாக, இமயமலை அடிவாரத்தின் பக்கவாட்டில் தென் கிழக்கே கங்கைச் சமவெளியை நோக்கிப் படையெடுப்பாளர்கள் முன்னேறினர். மாலிக் நாயக்கால் தலைமை தாங்கப்பட்ட அலாவுதீனின் 30,000 வீரர்களைக் கொண்ட வலிமையான குதிரைப்படையானது அம்ரோகா யுத்தத்தில் மங்கோலியர்களைத் தோற்கடித்தது.[55][56] பல மங்கோலியர்கள் கைதுசெய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர்.[57]
1306இல் துவா அனுப்பிய மற்றொரு மங்கோலிய இராணுவமானது இராவி ஆறு வரை முன்னேறியது. வரும் வழியில் நிலப்பரப்புகளைச் சூறையாடியது. மாலிக் கபூரால் தலைமை தாங்கப்பட்ட அலாவுதீனின் படைகள் மங்கோலியர்களைத் தீர்க்கமாகத் தோற்கடித்தன.[58] அடுத்த ஆண்டு துவா இறந்தார். அதற்குப் பிறகு அலாவுதீனின் ஆட்சியின்போது இந்தியா மீது மேற்கொண்ட படையெடுப்புகளை மங்கோலியர்கள் தொடங்கவில்லை. மாறாக அலாவுதீனின் தீபல்பூர் ஆளுநரான மாலிக் துக்ளக் தற்போதைய ஆப்கானித்தானில் இருந்த மங்கோலிய நிலப்பரப்புகள் மீது தொடர்ந்து ஊடுருவல்களை நடத்தினார்.[59][60]
1308 வாக்கில் தேவகிரி மீது படையெடுக்க மாலிக் கபூரை அலாவுதீன் அனுப்பினார். 1296ஆம் ஆண்டு உறுதியளித்த திறை செலுத்துவதை மன்னர் இராமச்சந்திரா நிறுத்தியிருந்தார். பாக்லானாவில் வகேல மன்னன் கர்ணனுக்கு புகலிடமும் அளித்திருந்தார்.[61] கபூருக்கு அலாவுதீனின் குசராத் ஆளுநரான அல்ப் கான் ஆதரவு அளித்தார். கபூரின் படைகள் பாக்லானாவின் மீது படையெடுத்தன. கர்ணனின் மகள் தேவலதேவியைச் சிறை பிடித்தனர். தேவலதேவி பிறகு அலாவுதீனின் மகன் கிசிர் கானுக்கு மணம் முடித்துக் கொடுக்கப்பட்டார்.[62] தேவகிரியில் கபூர் ஓர் எளிதான வெற்றியைப் பெற்றார். வாழ்நாள் முழுவதும் அலாவுதீனுக்குத் திறை செலுத்துவதாக இராமச்சந்திரா ஒப்புக் கொண்டார்.[63]
இடைப்பட்ட காலத்தில் மார்வார் பிரதேசத்தில் இருந்த சிவானா கோட்டையை அலாவுதீனின் iராணுவத்தின் ஒரு பிரிவானது பல ஆண்டுகளாக வெற்றியின்றி முற்றுகையிட்டுக் கொண்டிருந்தது.[64] 1308ஆம் ஆண்டில் ஆகத்து-செப்தம்பர் மாதங்களில் சிவானாவில் நடைபெற்ற முற்றுகை நடவடிக்கைகளுக்கு அலாவுதீன் தானே பொறுப்பேற்றுக் கொண்டார்.[53] சிவானா முற்றுகையில் கோட்டையை தில்லி இராணுவமானது கைப்பற்றியது. நவம்பர் 1308ல் தற்காத்துக் கொண்டிருந்த ஆட்சியாளரான சிதலதேவா கொல்லப்பட்டார்.[65]
தேவகிரியிலிருந்து பெற்ற கொள்ளைப் பொருட்கள் பிற தெற்கு இராச்சியங்கள் மீது படையெடுக்கத் திட்டமிட அலாவுதீனைத் தூண்டின. இந்த இராச்சியங்கள் பெருமளவிலான செல்வத்தைக் கொண்டிருந்தன. வட இந்தியாவைச் சூறையாடிய அயல் நாட்டு இராணுவத்தினரிடமிருந்து இவை பாதுகாக்கப்பட்டிருந்தன.[66] 1309ம் ஆண்டின் பிந்தைய பகுதியில் காக்கத்தியத் தலைநகரான வாரங்கலைச் சூறையாட மாலிக் கபூரை இவர் அனுப்பினார். தேவகிரியின் இராமச்சந்திராவால் உதவி பெறப்பட்ட கபூர் சனவரி 1310ல் காக்கத்திய நிலப்பரப்புக்குள் நுழைந்தார். வாரங்கலுக்குச் செல்லும் வழியில் பட்டணங்கள் மற்றும் கிராமங்களைச் சூறையாடினார்.[67] வாரங்கல் மீதான ஒரு மாத கால நீண்ட முற்றுகைக்குப் பிறகு காக்கத்திய மன்னரான பிரதாபருத்திரன் அலாவுதீனுக்குத் திறை செலுத்த ஒப்புக் கொண்டார். படையெடுத்து வந்தவர்களுக்கு ஒரு பெரும் அளவிலான செல்வத்தைக் கொடுத்தார். இதில் அநேகமாக கோகினூர் வைரமும் இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.[68]
இடைப்பட்ட காலத்தில் சிவானாவை வென்றதற்குப் பிறகு தில்லிக்குத் திரும்பி வருவதற்கு முன்னர் மார்வாரின் பிற பகுதிகளை அடிபணிய வைக்குமாறு தனது தளபதிகளுக்கு அலாவுதீன் ஆணையிட்டார். மார்வாரில் இவரது தளபதிகளின் ஊடுருவல்கள், இவரது தளபதிகள் சலோரின் சகமானா ஆட்சியாளரான கன்கததேவாவுடன் பிணக்குகளுக்கு இட்டுச் சென்றன.[69] 1311ல் அலாவுதீனின் தளபதி மாலிக் கமாலுதீன் குர்க் சலோர் கோட்டையே கன்கததேவாவைத் தோற்கடித்துக் கொன்றதற்குப் பிறகு கைப்பற்றினார்.[70]
வாரங்கல் முற்றுகையின் போது மேலும் தெற்கே அமைந்திருந்த போசளப் பேரரசு மற்றும் பாண்டிய நாட்டின் செல்வம் குறித்து மாலிக் கபூர் அறிந்தார். தில்லிக்குத் திரும்பிய பிறகு இப்பகுதிகளுக்குள் இராணுவ நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்க அலாவுதீனின் அனுமதியைப் பெற்றார்.[71] நவம்பர் 1310ல் தில்லியிலிருந்து தனது அணிவகுப்பைக் கபூர் தொடங்கினார்.[72] 1311ம் ஆண்டின் தொடக்க காலத்தில் தக்காணப் பகுதியைக் கடந்தார். இதற்கு அலாவுதீனுக்குத் திறை செலுத்திய இராமச்சந்திரா மற்றும் பிரதாபருத்திரன் ஆகியோரின் ஆதரவும் பயன்படுத்தப்பட்டது.[73]
இந்த நேரத்தில் இரு சகோதரர்களான வீரபாண்டியன் மற்றும் சுந்தரபாண்டியனுக்கு இடையிலான வாரிசுரிமைப் போரால் பாண்டிய நாடானது பலவீனப்பட்டிருந்தது. இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட போசள மன்னன் வல்லாளன் பாண்டிய நிலப்பரப்பு மீது படையெடுத்தான். கபூரின் அணி வகுப்பு குறித்து அறிந்த வல்லாளன் தன் தலைநகரான துவாரசமுத்திரத்துக்கு அவசரமாகக் கிளம்பினான்.[77] எனினும், அவனால் ஒரு வலிமையான எதிர்ப்பைக் காட்ட இயலவில்லை. ஒரு சிறிய முற்றுகைக்குப் பிறகு கபூருடன் அமைதி உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டான். தனது செல்வத்தை ஒப்படைத்து விடவும், அலாவுதீனுக்குத் திறை செலுத்தவும் ஒப்புக் கொண்டான்.[78][79]
துவாரசமுத்திரத்திலிருந்து மாலிக் கபூர் பாண்டிய நாட்டை நோக்கி அணி வகுத்தார். மதுரை வரை பல்வேறு பட்டணங்கள் மீது இவர் ஊடுருவல்களை நடத்தினார். வீரபாண்டியன் மற்றும் சுந்தரபாண்டியன் தங்களது தலைநகரிலிருந்து சென்று விட்டனர். இவ்வாறாக அலாவுதீனுக்குத் திறை செலுத்துபவர்களாக அவர்களை ஆக்க கபூரால் இயலவில்லை. இருந்த போதிலும், தில்லி இராணுவமானது பல பொக்கிஷங்கள், யானைகள் மற்றும் குதிரைகளை கொள்ளைப் பொருட்களாகப் பெற்றது.[80] தில்லி வரலாற்றாளர் சியாவுதீன் பரணி தில்லியை முசுலிம்கள் கைப்பற்றியதிலிருந்து பெறப்பட்ட மிகப் பெரிய செல்வமாக துவாரசமுத்திரம் மற்றும் பாண்டிய நாட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட செல்வங்களைக் குறிப்பிட்டுள்ளார்.[81]
இந்தப் படையெடுப்பின் போது மங்கோலியத் தளபதி அப்பாச்சி பாண்டியர்களுடன் இணைய முயற்சித்தார். இதன் விளைவாகத் தில்லியில் அவர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். இது, அலாவுதீனுக்கு எதிரான அவர்களது பொதுவான மனக் குறைகள் ஆகியவை மங்கோலியர்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சி ஏற்படுவதற்குக் காரணமாயின. இசுலாமுக்கு மதம் மாறிய பின்னர் இந்தியாவில் இந்த மங்கோலியர்கள் குடியமர்ந்து இருந்தனர். மங்கோலியத் தலைவர்களில் ஒரு பிரிவினர் அலாவுதீனைக் கொல்லத் திட்டமிட்டனர். ஆனால், இத்திட்டமானது அலாவுதீனின் உளவாளிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. தன்னுடைய பேரரசில் இருந்த மங்கோலியர்களைப் பெருமளவில் ஒட்டு மொத்தமாகக் கொல்ல அலாவுதீன் பிறகு ஆணையிட்டார். பரணியின் கூற்றுப்படி 20,000 அல்லது 30,000 மங்கோலியர்களின் இறப்பில் இது முடிந்தது.[82]
இடைப்பட்ட காலத்தில் இராமச்சந்திரனின் இறப்பிற்குப் பிறகு தேவகிரியில் அவருடைய மகன் அலாவுதீனின் மேலாட்சியைத் தூக்கி எறிய முயற்சித்தார். 1313ல் தேவகிரி மீது மாலிக் கபூர் மீண்டும் படையெடுத்தார். அவரைக் கொன்றார். தேவகிரியின் ஆளுநரானார்.
இவரது அரசமரபிலேயே மிக சக்தி வாய்ந்த ஆட்சியாளர் அலாவுதீன் தான்.[83] தில்லி சுல்தானகத்தின் முந்தைய ஆட்சியாளர்கள் ஏற்கனவே இருந்த நிர்வாக அமைப்பைப் பெரும்பாலும் சார்ந்திருந்தனர். ஆனால், அலாவுதீன் பெருமளவிலான சீர்திருத்தங்களைத் தொடங்கி வைத்தார்.[84] மங்கோலியப் படையெடுப்புகள் மற்றும் ஏராளமான கிளர்ச்சிகளை எதிர் கொண்டதற்குப் பிறகு ஒரு பெரிய இராணுவத்தைப் பேணுவதற்கும், தனக்கு எதிராக ஒரு கிளர்ச்சியை நடத்த வாய்ப்புள்ளவர்களைப் பலவீனப்படுத்துவதற்கும் ஏராளமான சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்.[85] வரலாற்றாளர் சதீசு சந்திராவின் கூற்றுப்படி, நல்ல அரசாங்கம் மற்றும் இவரது இராணுவ இலக்குகள் ஆகியவற்றுக்கு அடிப்படையாக பயம் மற்றும் பிறர் மீதான கட்டுப்பாட்டை அலாவுதீனின் சீர்திருத்தங்கள் அடிப்படையாகக் கொண்டிருந்தன. தன்னுடைய கைகளில் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தைக் கொண்டிருக்கவும், ஒரு பெரிய இராணுவத்தைப் பேணுவதற்கும் இவரது நடவடிக்கைகளில் பெரும்பாலானவை வடிவமைக்கப்பட்டிருந்தன.[86]
அலாவுதீனின் நிலச் சீர்திருத்தங்களில் சில இவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்களாலும் தொடரப்பட்டன. சேர் சா சூரி மற்றும் அக்பர் போன்ற பிந்தைய ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்திய விவசாயச் சீர்திருத்தங்களுக்கு அடிப்படையாக இவை அமைந்தன.[87] எனினும், விலைக் கட்டுப்பாடு உள்ளிட்ட இவரது பிற சட்டங்கள் இவரது இறப்பிற்கு சில மாதங்களுக்குப் பிறகு இவரது மகன் குத்புதீன் முபாரக் ஷாவால் திரும்பப் பெறப்பட்டன.[88]
அலாவுதீனின் ஆட்சிக் காலத்தின் போது கிராமப் புறங்களும், விவசாய உற்பத்தியும் கிராமத் தலைவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இவர்கள் உள்ளூர் ஆளும் வர்க்கத்தினராக இருந்தனர். இவர்களது நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்பைத் தன்னுடைய ஆட்சியைப் பாதித்த முதன்மையான பிரச்சனையாக இவர் கண்டார். தன்னுடைய அரசவையில் கூட்டுச் சதித் திட்டங்கள் குறித்த பேச்சுக்களையும் கூட இவர் எதிர் கொள்ள வேண்டி வந்தது.[89]
தொடக்கத்தில் சில சதித் திட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ளூர் மக்களின் கிளர்ச்சிகள் ஆகியவற்றுக்குப் பிறகு இவரது ஆட்சிக் காலத்தின் தொடக்க காலத்தின் போது தன்னுடைய இராணுவத்திற்கான ஆதரவு மற்றும் தனது தலைநகரத்துக்கு உணவு வழங்கலை உறுதி செய்வதை நோக்கமாகக் கூட கொண்ட சீர்திருத்தஙக்ளை அறிமுகப்படுத்தியதன் மூலம் பிரச்சனைகளின் மூலங்களை இவர் சரி செய்தார். தன்னுடைய அரசவையினர் மற்றும் உயர் குடியினரின் அனைத்து நில உடைமைகளை எடுத்துக் கொண்டார். ஒப்படைக்கப்பட்ட வருவாய் வசூலிப்பு அதிகாரங்களை இரத்து செய்தார். இதன் மூலம் வருவாய் வசூலிப்பு மைய அதிகாரத் துறைகளால் கட்டுப்படுத்தப்பட்டன. எனவே, "ஒவ்வொருவரும் அன்றாட வாழ்வுக்கு பணம் சம்பாதிக்க வேண்டியிருந்தது. ஆதலால், ஒருவர் கூட கிளர்ச்சி குறித்து எண்ணக் கூட இல்லை". "உள்ளூர் மக்களைத் தடுப்பதற்காக சில விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வரவும், கிளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கும் செல்வம் மற்றும் உடைமைகளை அவர்கள் அடைய விடாமல் தடுப்பதற்கும், சவாரி செய்ய ஒரு குதிரை இல்லாத நிலைக்கும், நல்ல ஆடைகளை அணிய இயலாத நிலைக்கும் அல்லது வாழ்வில் எந்த ஒரு வசதிகளையும் அனுபவிக்க விடாமல் உள்ளூர் மக்கள் தாழ்ந்த நிலைக்கும் தள்ளப்பட வேண்டும்" என்று கூட இவர் ஆணையிட்டார்.[89]
வளமான நிலத்தின் ஒரு பெரும் மண்டலத்தை நேரடியாக நிர்வகிக்கப்பட்ட மன்னனின் நிலப்பரப்பின் கீழ் அலாவுதீன் கொண்டு வந்தார். நில வரிகள், நிலக் கொடைகள் மற்றும் குத்தகை முறையை தோவாப் பகுதியில் நீக்கியதன் மூலம் இவ்வாறு கொண்டு வந்தார்.[90] வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் விவசாய உற்பத்திப் பொருட்கள் மீது 50% கரச் வரியை இவர் விதித்தார். தில்லியில் அந்நேரத்தில் பரவலாக இருந்த சமய நம்பிக்கையின் படி அனுமதியளிக்கப்பட்ட அதிகபட்ச அளவாக 50% இருந்தது.[91]
இவருடைய ஆட்சியில் நீண்ட காலத்திற்கு நீடித்திருந்த ஓர் அமைப்பாக அலாவுதீன் கல்சியின் வரி அமைப்பு அநேகமாகத் திகழ்ந்தது. 19ஆம் நூற்றாண்டு அல்லது 20ஆம் நூற்றாண்டு வரையிலும் கூட இது எஞ்சியிருந்தது. ஆளும் வர்க்கத்தினர் விவசாயியின் மிகுதியான உற்பத்தியில் இருந்து எடுத்துக் கொண்ட முதன்மையான வரி வடிவமாக நில வரி (கரச் அல்லது மால்) இக்காலத்தில் இருந்து உருவானது.
— இந்தியாவின் கேம்பிரிச் பொருளாதார வரலாறு: அண்.1200-அண்.1750, [92]
இடைப்பட்ட பதவிகளிலிருந்த உள்ளூர் கிராமப்புறத் தலைவர்களையும் கூட அலாவுதீன் நீக்கினார். அறுவடை செய்தவர்களிடமிருந்து கரச் வரியை நேரடியாக வசூலிக்கத் தொடங்கினார்.[93] விவசாயம் மீது எந்த ஒரு மேற்கொண்ட வரிகளையும் இவர் விதிக்கவில்லை. வரி வசூலிப்பதற்காக இடைப்பட்ட பதவிகளில் இருந்தோர் பெற்ற பணத்தை இவர் இரத்து செய்தார்.[94] நிலப் பகுதியின் அளவைப் பொறுத்து வரி செலுத்தப்பட வேண்டும் என்ற அலாவுதீனின் கோரிக்கையின் பொருளானது அதிக நிலங்களையுடைய செழிப்பான மற்றும் சக்தி வாய்ந்த கிராமங்கள் அதிக வரிகளைச் செலுத்த வேண்டியிருந்தது என்பதாகும்.[95] கிராமப்புறத் தலைவர்களைப் பிறரைப் போலவே அதே அளவு வரிகளைச் செலுத்த இவர் கட்டாயப்படுத்தினார். விவசாயிகள் மீது சட்டத்துக்குப் புறம்பான வரிகளை விதிப்பதில் இருந்து அவர்களைத் தடை செய்தார்.[95] எந்த ஒரு கிளர்ச்சிகளையும் தடுப்பதற்காக இவரது நிர்வாகமானது கிராமத் தலைவர்களுக்கு அவர்களது செல்வம், குதிரைகள் மற்றும் ஆயுதங்களை கிடைக்க விடாமல் செய்தது.[96] இந்தத் தலைவர்களை ஒடுக்கியதன் மூலம் கிராமப் புற சமுதாயத்தின் பலவீனமான பிரிவினரின் காப்பாளராக அலாவுதீன் தன்னை தோன்றச் செய்தார்.[97] எனினும், நில உரிமையாளர்களின் கோரிக்கைகளில் இருந்து அறுவடை செய்பவர்கள் சுதந்திரமாகச் செயல்பட்ட போதிலும், அரசு விவசாயிகள் மீது அதிகப்படியான வரிகளை விதித்தது என்பதன் பொருளானது "தன்னுடைய அறுவடை மற்றும் தன்னுடைய உணவுத் தேவைகளைத் தவிர்த்து விவசாயிகளுக்கு மீதம் கிடைத்தது என்று ஒன்றுமில்லை என்ற அளவுக்கு இருந்தது" என்பதாகும்.[94]
இந்த நில மற்றும் விவசாயச் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்காக ஒரு வலிமையான மற்றும் செயலாற்றல் மிக்க வருவாய் நிர்வாக அமைப்பை அலாவுதீன் ஏற்படுத்தினார். இவரது அரசாங்கமானது பல கணக்காளர்கள், வசூலிப்பாளர்கள் மற்றும் முகவர்களைப் பணிக்குச் சேர்த்தது. இந்த அதிகாரிகளுக்கு நல்ல ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால், லஞ்சங்களைப் பெற்றார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டால் இவர்கள் கடுமையான தண்டனைக்குரியவர்களாக ஆயினர். பற்று வரவுக் கணக்குப் புத்தகங்கள் தணிக்கை செய்யப்பட்டன. சிறிய முரண்பாடுகள் கூட தண்டனைக்குள்ளாக்கப்பட்டன. அவர்களுக்கு என கணக்கிடப்பட்ட வரிகளைச் செலுத்துவதில் காலம் தாழ்த்தக்கூடாது என்ற பயமானது பெரிய நில உடைமையாளர்கள் மற்றும் சிறிய அறுவடையாளர்கள் ஆகிய இருவருக்குமே ஏற்பட்டது என்பது இந்நடவடிக்கைகளின் தாக்கமாக இருந்தது.[98]
அலாவுதீனின் அரசாங்கமானது தம் முசுலிம் அல்லாத குடிமக்கள் மீது ஜிஸ்யா வரி விதித்தது. இவரது முசுலிம் குடிமக்கள் சகாத்துக்குப் பங்களிக்க வேண்டும் என்பதைக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.[99] இசுலாமியச் சட்டத்தால் இசைவளிக்கப்படாத குடியிருப்புகள் (கரி) மற்றும் மேய்ச்சல் (சரை) வரிகளையும் கூட இவர் விதித்தார்.[100] மேற்கொண்டு, பாரம்பரியமாக ஐந்தில் ஒரு பங்கு ஆட்சியாளருக்குப் பங்காக (கும்சு) கொடுக்கப்பட்டதற்கு மாறாக, போரில் கொள்ளைப் பொருட்களாக தனது வீரர்கள் பெற்றதில் ஐந்தில் நான்கு பங்கை கொடுக்க வேண்டும் என இவர் கோரிக்கை விடுத்தார்.[99]
அலாவுதீன் ஒரு பரவலான வேறுபட்ட சந்தைப் பொருட்களுக்கு விலைக் கட்டுப்பாட்டு அளவு முறைகளைக் கொண்டு வந்தார்.[87] அலாவுதீனின் அரசவையாளர் அமீர் குஸ்ராவ் மற்றும் 14ஆம் நூற்றாண்டு எழுத்தாளரான அமீது கலந்தர் ஆகியோர் பொது நன்மைக்காக இத்தகைய மாற்றங்களை அலாவுதீன் அறிமுகப்படுத்தினார் என்று பரிந்துரைக்கின்றனர்.[101] எனினும், தன்னுடைய வீரர்களுக்கு குறைவான ஊதியங்கள் ஏற்கத்தக்கதாக இருக்க வேண்டும் என்றும், இவ்வாறாக ஒரு பெரிய இராணுவத்தை அவரால் பேண இயலும் என்பதற்காக விலைகளை அலாவுதீன் குறைக்க விரும்பினார் என்பதை பரணி குறிப்பிடுகிறார்.[102][103] மேலும், உள்ளூர் வணிகர்கள் செல்வம் ஈட்டினர் என்றும், அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற சுல்தானின் எண்ணத்திலிருந்தே அலாவுதீனின் சந்தைச் சீர்திருத்தங்கள் உருவாயின என்றும் பரணி குறிப்பிடுகிறார்.[95]
பொருட்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட விலைகளில் விற்கப்படுகின்றன என்பதை உறுதி செய்ய அலாவுதீன் சந்தை மேற்பார்வையாளர்கள் மற்றும் ஒற்றர்களை நியமித்தார். அவர்களிடமிருந்து சுதந்திரமான அறிக்கைகளைப் பெற்றார். ஒரு கள்ளச் சந்தையைத் தடுப்பதற்காக இவரது நிர்வாகமானது விவசாயிகள் மற்றும் வணிகர்கள் தானியங்களைச் சேமித்து வைப்பதைத் தடை செய்தது. அரசாங்கத்தால் நடத்தப்பட்ட தானியக் கிடங்குகளை நிறுவியது. இங்கு அரசாங்கத்தின் பங்கு தானியங்கள் சேமிக்கப்பட்டன. யமுனை ஆற்றின் பக்கவாட்டில் குறிப்பிடப்பட்ட தொலைவுகளில் இருந்த கிராமங்களில் பொருட்களைக் கொண்டு செல்லும் ஊழியர்களை மறு குடியமர்த்த கட்டாயப்படுத்தியதையும் கூட இவரது அரசாங்கம் செய்தது. இதன் மூலம் தில்லிக்குத் தானியங்கள் வேகமாகக் கொண்டு செல்லப்படுவது எளிதாக்கப்பட்டது.[104]
அலாவுதீனின் வாழ் நாளின் போது மழைப்பொழிவு குறைவாக இருந்த போதும் கூட பொருட்களின் விலைகள் அதிகரிக்க அனுமதிக்கப்படவில்லை என குஷ்ராவ் மற்றும் பரணி போன்றோர் குறிப்பிடுகின்றனர்.[105] விலைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியவர்கள் அல்லது அவற்றை மீற முயற்சித்த (போலி எடைக் கற்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றின் மூலம்) கடைக்காரர்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டன.[106]
அலாவுதீன் ஒரு பெரிய நிலையான இராணுவத்தைப் பேணி வந்தார். 16ஆம் நூற்றாண்டு வரலாற்றாளர் பெரிஷ்தாவின் கூற்றுப் படி இதில் 4,75,000 குதிரைப்படை வீரர்களும் அடங்குவர்.[107] தன்னுடைய படை வீரர்களுக்கு ஒப்பீட்டளவில் குறைவான ஊதியத்தை கொடுத்ததன் மூலம் இத்தகைய ஒரு பெரிய இராணுவத்தை இவரால் சேர்க்க முடிந்தது. தன்னுடைய படை வீரர்களுக்கு குறைவான ஊதியங்கள் ஏற்கத்தக்கவையாக உள்ளதை உறுதி செய்வதற்காக சந்தை விலைக் கட்டுப்பாடுகளை இவர் அறிமுகப்படுத்தினார்.[103] தன்னுடைய தளபதிகள் மற்றும் படை வீரர்களுக்கு நிலங்களைக் கொடையாக கொடுப்பதற்கு இவர் எதிர்ப்பு தெரிவித்து இருந்த போதிலும் ஒவ்வொரு வெற்றிகரமான படையெடுப்புகளுக்குப் பிறகும் இவர் தாராள குணத்துடன் அவர்களுக்கு பொருளை அளித்தார். குறிப்பாக, தக்காணத்தில் நடைபெற்ற படையெடுப்புகளில் இவ்வாறு அளித்தார்.[108]
ஒவ்வொரு படை வீரனுக்குமான பங்கின் ஒரு விளக்கத்தை அலாவுதீனின் அரசாங்கமானது பேணி வந்தது. வீரர்களின் குதிரைகள் மற்றும் ஆயுதங்களை ஆய்வு செய்வதற்காக இராணுவத்தை எப்போதாவது கண்டிப்பான ஆய்வுகளுக்கு உட்படுத்தினார். எந்த ஒரு குதிரையும் இரண்டு முறை ஆய்வுக்கு கொண்டு வரப்படக்கூடாது அல்லது ஆய்வின் போது ஒரு தரம் குறைந்த குதிரையால் இடம் மாற்றப்படக் கூடாது என்பதற்காக குதிரைகளுக்கு தரத்தை நிர்ணயிக்கும் ஓர் அமைப்பை அலாவுதீன் நிறுவினார்.[109]
இசுலாமானது மதுபானங்களைத் தடை செய்துள்ள போதிலும் 13ஆம் நூற்றாண்டில் தில்லி சுல்தானகத்தின் முசுலிம் அரச குடும்பத்தினர் மற்றும் உயர் குடியினர் மத்தியில் குடிப் பழக்கமானது பொதுவானதாக இருந்தது. அலாவுதீனே ஒரு கடுமையான குடிப்பழக்கத்தைக் கொண்டிருந்தார். கிளர்ச்சிகளைத் தடுக்கும் தனது விதிமுறைகளின் ஒரு பகுதியாக அலாவுதீன் மதுவிலக்கை அமல்படுத்தினார். மது பானங்களை அளவுக்கு மீறிப் பயன்படுத்துவது என்பது மக்களை ஒன்று கூடுவதற்கும், அவர்களது சிந்திக்கும் ஆற்றலை இழப்பதற்கும், மற்றும் கிளர்ச்சி குறித்து எண்ணுவதற்கும் காரணம் என இவர் நம்பினார். இவரது குடிமக்கள் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் போது அலாவுதீன் மகிழ்ச்சியாக வாழ்வைக் கழிப்பதாக ஓர் உயர் குடியினர் கண்டித்ததற்குப் பிறகு அலாவுதீன் மதுபானத்தைத் தடை செய்தார் என்று இசாமி என்ற வரலாற்றாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த குறிப்பீடானது ஒரு வதந்தியாகத் தோன்றுகிறது.[110]
இறுதியாக அலாவுதீன் பிற போதைப் பொருட்களையும் கூட தடை செய்தார்.[110] சூதாட்டத்தையும் கூட இவர் தடை செய்தார். குடிகாரர்கள் மற்றும் சூதாட்டக்காரர்களை தில்லியிலிருந்து விலக்கி வைத்தார். இவர்களுடன் போதைப் பொருட்களை விற்பவர்களும் விலக்கி வைக்கப்பட்டனர்.[111] அலாவுதீனின் நிர்வாகமானது விதிகளை மீறியவர்களைக் கடுமையாகத் தண்டித்தது. தில்லியில் மட்டுமல்லாமல் அதைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் மதுபானங்கள் கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்தது. இருந்த போதிலும், மதுபானமானது சட்டத்துக்குப் புறம்பாக உற்பத்தி செய்யப்பட்டு தில்லிக்குக் கடத்தப்படுவது தொடர்ந்தது.[112] சில காலத்திற்குப் பிறகு, அலாவுதீன் தனது கண்டிப்பான நடவடிக்கைகளைத் தளர்த்திக் கொண்டார். தனி நபர் பயன்பாட்டிற்காக மது தயாரிப்பதையும், குடிப்பதையும் அனுமதித்தார். எனினும், மதுவின் பொது வினியோகம் மற்றும் குடிப்பது என்பது தொடர்ந்து தடை செய்யப்பட்டிருந்தது.[113]
உயர்குடியினர் மீதான தனது கட்டுப்பாட்டின் நிலையையும் கூட அலாவுதீன் அதிகப்படுத்தினார். உயர்குடியினரின் கிளர்ச்சியைத் தடுப்பதற்காக அவர்களது செல்வத்தைப் பறிமுதல் செய்து அவர்களின் சக்தி மையங்களில் இருந்து அவர்களை நீக்கினார். உயர்குடியினரால் நிர்வகிக்கப்பட்ட அறக்கொடை சார்ந்த நிலங்களும் கூட பறிமுதல் செய்யப்பட்டன. விசுவாசமற்றவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டன. போரில் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் அதிகமாக வேண்டுமென கிளர்ச்சி செய்த படை வீரர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளும் கூட சிறைப்படுத்தப்பட்டனர். உயர்குடியினரின் தனி வீடுகளை அடைந்த ஒரு செயலாற்றல் வாய்ந்த ஒற்றர் இணையமும் உருவாக்கப்பட்டது. உயர்குடியினக் குடும்பங்களுக்கு இடையிலான திருமண பந்தங்களானவை மன்னனால் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்ற நிலை இருந்தது.[114]
அலாவுதீன் பால்வினைத் தொழிலைத் தடை செய்தார். தில்லியில் விலை மாதராக இருந்த அனைவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும் என ஆணையிட்டார்.[111] முறைபிறழ்புணர்ச்சியை மட்டுப்படுத்தவும் கூட அலாவுதீன் நடவடிக்கைகளை எடுத்தார்.[115]
அலாவுதீன் போலி அறிஞர்களைத் தடை செய்தார்.[116]
இவரது வாழ்வின் கடைசி ஆண்டுகளின் போது அலாவுதீனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இவரது அதிகாரிகள் மீது மிகவும் நம்பிக்கையின்மையை இவர் கொண்டிருந்தார். அனைத்து சக்தியையும் தன்னுடைய குடும்பம் மற்றும் தன்னுடைய அடிமைகளின் கையில் குவிக்கத் தொடங்கினார்.[117] வைசிராய் (நைப்) என்ற பதவிக்கு உயர்த்தப்பட்டதற்குப் பிறகு, சட்டப் படி இல்லாவிட்டாலும் சுல்தானகத்தின் நடைமுறை ரீதியிலான ஆட்சியாளராக இவரது அடிமை-தளபதியான மாலிக் கபூர் உருவானார்.[118][119]
ஏராளமான அனுபவம் வாய்ந்த நிர்வாகிகளை அலாவுதீன் நீக்கினார். வசீர் (பிரதம மந்திரி) அலுவலகத்தை நீக்கினார். தன்னுடைய மந்திரி சராப் கைனியை மரண தண்டனைக்கு உட்படுத்தவும் கூட செய்தார். இந்த அதிகாரிகளை தனது எதிரிகள் மற்றும் ஒரு அச்சுறுத்தலாக கருதிய மாலிக் கபூர் இந்த ஒழித்துக் கட்டலை நடத்துமாறு அலாவுதீனை இணங்கச் செய்தார் என்று தோன்றுகிறது.[117] அலாவுதீனின் மூத்த மகன்களான கிசிர் கான் மற்றும் ஷாடி கானை கண் பார்வையற்றவர்களாக கபூர் ஆக்கினார். மாலிக் கபூரின் சக்திக்கு சவால் விடுக்கும் நிலையில் இருந்த ஒரு செல்வாக்கு மிகுந்த உயர்குடியினரும், அலாவுதீனின் மைத்துனருமான அல்ப் கானை கொல்லுமாறு ஆணையிட அலாவுதீனை இவர் இணங்கவும் கூட வைத்தார் என்று குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அலாவுதீனைப் பதவியிலிருந்து தூக்கி எறிய சதித் திட்டம் தீட்டினர் என்று ஆதாரம் இல்லாவிட்டாலும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. எனினும், இது கபூரின் பரப்புரையாகவும் கூட இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[117]
4 சனவரி 1316 அன்று இரவில் அலாவுதீன் இறந்தார்.[120] "சிலரிடம்" இருந்து பெற்ற தகவலின் படி கபூர் இவரைக் கொலை செய்தார் என பரணி எழுதினார்.[121] இரவு முடியும் போது அலாவுதீனின் உடலை சிரி என்ற இடத்திற்கு கொண்டு வந்தார். அலாவுதீனின் இறப்பிற்கு முன்னர் கட்டப்பட்டிருந்த அலாவுதீனின் கல்லறையில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஒரு ஜமா மசூதிக்கு வெளியே இந்தக் கல்லறை இருந்தது என்று கூறப்பட்டது. ஆனால், இதில் எந்த ஒரு கட்டடங்களும் தற்போது துல்லியமாக அடையாளப்படுத்தப்படவில்லை. சிரியில் உள்ள மேடுகளில் ஒன்றின் கீழ் இந்த இரு கட்டடங்களின் சிதிலமடைந்த அடித்தளங்கள் அநேகமாக இருக்கலாம் என்று வரலாற்றாளர் பானர்சி பிரசாத் சக்சேனா குறிப்பிடுகிறார்.[120]
அடுத்த நாளே அலாவுதீனின் இளைய மகன் சிகாபுதீனை ஒரு கைப்பாவை முடியரசனாக கபூர் நியமித்தார்.[120] எனினும், இதற்குப் பிறகு சீக்கிரமே கபூர் கொல்லப்பட்டார். அலாவுதீனின் மூத்த மகன் முபாரக் கான் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.[122]
தில்லியின் மெக்ராலியில் குதுப் வளாகத்தின் பின் புறம் அலாவுதீனின் சமாதியும், இவருக்கென அர்ப்பணிக்கப்பட்ட மதராசாவும் உள்ளன.[123]
அலாவுதீனின் மனைவியரில் மலிகா-இ-சகான் என்ற பட்டத்தைக் கொண்டிருந்த ஜலாலுதீனின் மகள் மற்றும் அல்ப் கானின் சகோதரியான மகுரு ஆகியோரும் அடங்குவர்.[6] இந்து மன்னர் தேவகிரியின் இராமச்சந்திராவின் மகளான சத்யபாலியையும் கூட இவர் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணம் அநேகமாக 1296ஆம் ஆண்டு தேவகிரி ஊடுருவல்[124] அல்லது தேவகிரி 1308ஆம் ஆண்டு வெல்லப்பட்டதற்குப்[125] பிறகு நடைபெற்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. அலாவுதீனுக்கு சத்யபாலியுடன் சிகாபுதீன் ஒமர் என்ற ஒரு மகன் இருந்தான். இவன் இவருக்குப் பிறகு அடுத்த கல்சி ஆட்சியாளராகப் பதவிக்கு வந்தான்.[124]
அலாவுதீன் கமலா தேவி என்ற ஓர் இந்துப் பெண்ணையும் திருமணம் செய்து கொண்டிருந்தார். இவர் குசராத்தின் வகேலா மன்னனான கர்ணனின் முதன்மையான அரசியாக இருந்தார்.[126] ஒரு படையெடுப்பின் போது கல்சி படைகளால் இப்பெண் பிடிக்கப்பட்டார். போரில் வெல்லப்பட்ட பொருட்களின் ஒரு பகுதியாகத் தில்லிக்குப் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டார்.[127][128] தனது புதிய வாழ்வுக்கு இவர் இறுதியாக ஒத்திசைந்து போனார்.[129] பெரிஷ்தாவின் கூற்றுப் படி, 1306 மற்றும் 1307க்கு இடைப்பட்ட ஏதோ ஒரு காலத்தில் கமலா தேவி தனது மகள் தேவல் தேவியை அவரது தந்தை இராஜா கரனின் பாதுகாப்பில் இருந்து கொண்டு வருமாறு அலாவுதீனிடம் கோரிக்கை விடுத்தார்.[129][130] தேவல் தேவியை உடனடியாக அனுப்புமாறு இராஜா கரனுக்கு அலாவுதீன் ஓர் ஆணையை அனுப்பினார்.[130] தேவல் தேவி இறுதியாக தில்லிக்குக் கொண்டு வரப்பட்டார். அரண்மனையில் தனது தாயுடன் வசித்தார்.[131]
1296இல் அலாவுதீன் கௌசு-இ-அலை (பிந்தைய கௌசு-இ-காசு) என்ற நீர்த்தேக்கத்தைக் கட்டமைத்தார். இது 70 ஏக்கர் பரப்பளவை ஆக்கிரமித்திருந்தது. கல்-கல்தச்சு வேலைப்பாட்டால் செய்யப்பட்ட சுவர்களைக் கொண்டிருந்தது. படிப்படியாக இது மணலால் மூடப்பட்டது. 1354 வாக்கில் பிரூசு சா துக்ளக் இத்தேக்கத்திலிருந்து கரம்பை நீக்கினார். 1398இல் தில்லி மீது படையெடுத்த தைமூர் தன் சுயசரித நினைவுக்குறிப்புகளில் நகரத்திற்கு ஆண்டு முழுவதும் நீர் ஆதாரமாக விளங்கிய நீர்த் தேக்கம் இது என்று குறிப்பிட்டுள்ளார்.[132]
14ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் அலாவுதீன் சிரி கோட்டையைக் கட்டினார். இக்கோட்டையின் மதில்களில் சதுரமாக வெட்டப்பட்ட பெரிய கற்களையுடைய கல்தச்சு வேலைப்பாட்டின் (சுண்ணாம்பு மற்றும் சுண்ணாம்புக்கலவை) சில தடயங்கள் காணப்பட்டாலும் முதன்மையாக இடி மானங்களைப் (சேறு) பயன்படுத்தி இது கட்டப்பட்டது.[132] 1303ஆம் ஆண்டின் மங்கோலியப் படையெடுப்பின் போது சிரி கோட்டையில் அலாவுதீன் முகாமிட்டிருந்தார். மங்கோலியர்கள் திரும்பிச் சென்ற பிறகு தன்னுடைய முகாம் இருந்த தளத்தில் கசிர்-இ-கசர் கோட்டையை இவர் கட்டினார். மதில்களையுடைய சிறிய நகரமானது தைமூரின் காலத்திலும் எஞ்சியிருந்தது. இந்நகரம் ஏழு வாயிற்கதவுகளைக் கொண்டிருந்ததாக தைமூர் தனது நினைவுக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். 1545இல் சேர் சா சூரியால் இது அழிக்கப்பட்டது. இதன் சிதிலமடைந்த சுவர்களில் வெறும் சில மட்டுமே தற்போது எஞ்சியுள்ளன.[133]
அலாவுதீன் அலாய் தர்வாசாவின் கட்டுமானத்தைத் தொடங்கி வைத்தார். இது 1311ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. குத்புத்தீன் ஐபக்கால் கட்டப்பட்ட குவ்வதுல் இசுலாம் மசூதிக்குச் செல்லும் தெற்கு வாயிற் கதவாக இது பயன்படுத்தப்பட்டது.[134] இவர் அலாய் மினாரின் கட்டுமானத்தையும் கூட தொடங்கி வைத்தார். குதுப் மினாரைப் போல் இருமடங்கு அளவுடையதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இது கட்டப்பட்டது. ஆனால், இத்திட்டமானது கைவிடப்பட்டது. அநேகமாக இவர் இறந்த போது இது கைவிடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[135]
அலாய் தர்வாசாவை அதன் கட்டுமானம் மற்றும் வடிவமைப்பு ஒத்துள்ளதன் காரணமாக சௌசத் கம்பாவுக்கு அருகில் உள்ள லால் மகால் (சிவப்பு அரண்மனை) மணற்கல் கட்டுமானக் கட்டடமானது அலாவுதீனால் கட்டப்பட்டது என்று குறிப்பிடப்படுகிறது.[136]
1311இல் அலாவுதீன் 100 ஏக்கர் பரப்பளவுள்ள கௌசு-இ-சம்சி நீர்த் தேக்கத்தை மறு சீரமைப்பும் செய்தார். இது 1229ஆம் ஆண்டுல் சம்சுத்தீன் இல்த்துத்மிசுவால் கட்டப்பட்டிருந்தது. இதன் மையப் பகுதியில் ஒரு குவிமாடத்தையும் கூட இவர் கட்டமைத்தார்.[132]
சிக்கந்தர் சானி என்ற பட்டத்தைப் பயன்படுத்திய நாணயங்களை கல்சி அச்சிட்டார். சிக்கந்தர் என்ற பழைய பாரசீக மொழிச் சொல்லின் பொருள் 'அலெக்சாந்தர்' என்பதாகும். இப்பட்டத்தைப் பேரரசர் அலெக்சாந்தர் பிரபலப்படுத்தி இருந்தார். அதே நேரத்தில், அரபு மொழியில் சானி என்ற சொல்லுக்கு 'இரண்டாம்' என்பது பொருளாகும். சிக்கந்தர்-இ-சானி என்று நாணயத்தில் உள்ள எழுத்துக்கள் 'இரண்டாவது அலெக்சாந்தர்' என்று மொழி பெயர்க்கப்படுகின்றன. இவரது இராணுவ வெற்றிகள் காரணமாக இவ்வாறான பட்டத்தை இவர் பயன்படுத்தினார்.[137]
அலாவுதீன் தக்காணம் மற்றும் தென்னிந்தியாவில் நடத்தப்பட்ட படையெடுப்புகள் மூலமாக தனது கருவூலத்தில் ஏராளமான செல்வத்தைக் குவித்தார். பல நாணயங்களையும் வெளியிட்டார்.[138][139]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.