காஞ்சிபுரம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia

காஞ்சிபுரம்map
Remove ads

காஞ்சிபுரம், அல்லது காஞ்சீபுரம் (Kancheepuram) அல்லது காஞ்சி, இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும். இது கோவில் நகரம், ஆயிரம் கோவில்களின் நகரம், திருவிழாக்களின் நகரம் என்று பலவாறு அழைக்கப்படுகிறது. இது பாலாறு மற்றும் வேகவதி ஆறுகளின் கரையில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் காஞ்சிபுரம், நாடு ...

முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன. ஆயிரம் கோயில்களின் நகரமான காஞ்சியில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில், கச்சபேசுவரர் கோயில் ஆகிய கோயில்கள் முக்கியமானவை. இவ்வாலயங்களில் சாக்தர், சைவர், வைணவர் எனப் பலவேறு சமயப் பிரிவினரும் வந்து தரிசித்திட வழிவகுத்து இந்து சமயத்திற்குச் சிறப்புச் சேர்க்கின்றன. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த நகரமாகும். ஆகத்து 24, 2021 அன்று, காஞ்சிபுரத்தை மாநகராட்சியாக, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார்.

Remove ads

வரலாறு

Thumb
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலுக்குள் உள்ள சிற்பங்கள் - இது நகரத்தின் மிகப் பழமையான கோயில்
காஞ்சிபுரம் வரலாறு
200 
400 
600 
800 
1000 
1200 
1400 
1600 
1800 
2000 
காஞ்சிபுரத்தை ஆட்சி செய்தவர்களின் வரலாறு, தோராயமாக கால அளவில் கொடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சி நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்புகள் சங்கஇலக்கியப் பாடல்களில் பலவிடங்களில் இருக்கின்றன. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன், காஞ்சி நகரத்தை ஆண்டதைப் பரிபாடல் மூலம் அறிய முடிகின்றது. பொ.ஊ.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது. பொ.ஊ. 2-ஆம் நூற்றாண்டு காலச் சங்கவிலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. பொ.ஊ. 4-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், கலையிலும், தமிழ் மற்றும் சமற்கிருத மொழிகளின் கல்வியிலும் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் தலைநகராக விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் காஞ்சிபுரம் அதன் தலைநகராக உச்சப்புகழினை அடைந்தது.

"நகரேஷூ காஞ்சி" - "நகரங்களுள் காஞ்சி" எனக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்குப் பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய நகரம் காஞ்சி. பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேதவதி ஆறு எல்லையாய் அமைய, நிர்மாணிக்கப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளன. சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் இந்நகரத்திற்குப் பயணம் மேற்கொண்டார். அவரது குறிப்பின்படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்குப் பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் காஞ்சி நகரத்திற்கு கௌதம புத்தர் வருகை புரிந்தார் என்று கூறியுள்ளார்.

புகழ் பெற்ற கைலாசநாதர் கோயிலை எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நரசிம்மன் ஜெயசிம்மன் கட்டத் துவங்கிட, அவரது மகன் மகேந்திர வர்மனால் அப்பணி தொடரப்பட்டது. பின்னர், நந்திவர்மன் பல்லவமல்லன், பரமேஸ்வர விண்ணகரம் என்னும் விஷ்ணு ஆலயத்தைக் கட்டினார். அதே மன்னனே, தற்காலிகமாகச் சமணச் சமயத்தைச் சார்ந்திருந்தபோது, சமணப் பாரம்பரியம் காஞ்சியில் வளரப் பங்காற்றினார். சமண ஆலயங்களும் காஞ்சியில் செழித்தன.

பத்தாம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர்களின் கட்டுப்பாட்டில் காஞ்சி வந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்த சோழர் காலத்திலும், இவர்களுக்குப்பின் ஆட்சி புரிந்த விஜயநகர ஆட்சியிலும் புதிய ஆலயங்களின் கட்டுதலும், ஆலயங்களின் விரிவுபடுத்தலும் மேற்கொள்ளப்பட்டன. ஏகம்பரநாதர் கோயிலுக்குக் கிருஷ்ணதேவ ராயர் கோபுரம் கட்டித் தந்தார். விஜயநகர ஆட்சி வீழ்ந்தபின், காஞ்சியில் பெருங்குழப்பம் நிலவியது. பாரதநாடு முழுதும் இந்துக் கோயில்கள் சூறையாடப்பட்ட இருண்ட காலம் அது. காஞ்சியிலும் அதன் எதிரொலியினால், வரதராஜ பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில் போன்ற கோயில்களில் உற்சவ மூர்த்திகள் மறைத்து வைக்கப்பட்டன.

ஆங்கிலேயர்களின் வருகைக்குப்பின் ஏற்பட்ட போரில் இராபர்ட் கிளைவ், ஏகாம்பரநாதர் கோயிலைத் தனது கோட்டையாகவே பயன்படுத்திக் கொண்டார். இராபர்ட் கிளைவ், வரதராஜ பெருமாள் கோயிலுக்கு ஆபரண நகைகள் பலவும் வழங்கி இருக்கிறார். காஞ்சிபுரம் நகரம் முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

Remove ads

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12.818500°N 79.694700°E / 12.818500; 79.694700 ஆகும். இது சென்னைக்கு தென்மேற்கே 72 கி.மீ. (45 மைல்) தொலைவில் அமைந்துள்ளது, இது பாலாறு ஆற்றின் துணை நதியான வேகவதி ஆற்றின் கரையில் உள்ளது. இந்த நகரம் 11.6 ச.கி.மீ (4.5 ச.மை) பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் கடல் மட்டத்திலிருந்து 105 மீட்டர் (345 அடி) உயரத்தில் இருக்கின்றது. காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள நிலம் தட்டையானது மற்றும் தெற்கு மற்றும் கிழக்கு நோக்கி சாய்ந்துள்ளது. இப்பகுதியில் உள்ள மண் பெரும்பாலும் களிமண் மற்றும் மணல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இவை கட்டுமானத்திற்கு பயன்படுத்த ஏற்றவை ஆகும்.

Remove ads

பொருளாதாரம்

காஞ்சிப்பட்டு

Thumb
காஞ்சிபுரத்தில் நெசவு செய்யப்படுகிற பட்டு சேலை
Thumb
காஞ்சிபுரம் பட்டு புடவைகள் தொங்குகின்றன.

காஞ்சிபுரம் நெசவுத் தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை. பரம்பரைப் பரம்பரையாகப் பட்டுப்புடவைகளை நெய்யும் நெசவாளிகள் இங்கு வாழ்கிறார்கள்.

அறிஞர் அண்ணா நினைவுப் புற்றுநோய் மருத்துவமனை

பேரறிஞர் அண்ணாவின் நினைவாக அன்றைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியால் 1969-இல் காஞ்சிபுரம் ரெயில்வே சாலையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. பின்னர் 1974-இல் காஞ்சிபுரத்தினை அடுத்துள்ள காரப்பேட்டை என்ற இடத்தில் 43 ஏக்கர் பரப்பளவில் தமிழக முதல்வர் கருணாநிதியால் அறிஞர் அண்ணா நினைவுப் புற்றுநோய் மருத்துவமனை என்ற பெயரில் அடிக்கல் நாட்டப்பட்டு, 1981-ஆம் ஆண்டு புற்றுநோயாளிகளின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது. இம்மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறிதல், அந்நோய்க்குச் சிகிச்சை அளித்தல், நோய் குறித்த ஆராய்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் மட்டுமன்றி அண்மை மாநிலங்களான ஆந்திரா, கருநாடகம் மற்றும் கேரளாவிளிருந்தும் நோயாளிகள் பயன்பெறுகின்றனர். இந்தியாவிலேயே முதன் முறையாக இம்மருத்துவமனையில் எம். எஸ். சி. மருத்துவ இயற்பியற் படிப்பு வழங்கப்படுகிறது. சனவரி 20, 2010 அன்று அன்றைய துணை முதல்வர் மு. க. ஸ்டாலின் ரூ.10 கோடி மதிப்பிலான அதிநவீனப் புற்றுநோய்ச் சிகிச்சை மையத்தைத் தொடங்கி வைத்தார்.[சான்று தேவை]

அடிப்படை சுகாதாரம் வசதி இல்லாத 19 ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையை ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் என்பவர் கட்டினர்.[சான்று தேவை]

Remove ads

மக்கள் வகைப்பாடு

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, ம.தொ. ...
மேலதிகத் தகவல்கள் மதவாரியான கணக்கீடு ...

2011-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி 45 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 41,807 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கட்தொகை 164,384 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 88.1% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,005 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 15955 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 956 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். இவ்வூரில் செங்குந்த முதலியார், வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் மிகுதியாக உள்ளனர்.[5] பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,833 மற்றும் 151 ஆகவுள்ளனர். 2011-ஆம் ஆண்டு மதவாரியானக் கணக்கெடுப்பின்படி, காஞ்சிபுரத்தில் இந்துக்கள் 93.38%, முஸ்லிம்கள் 5.24%, கிறிஸ்தவர்கள் 0.83%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.01%, சைனர்கள் 0.4%, 0.11% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.01% பேர்களும் உள்ளனர்.[6]

Remove ads

பாடற்றலம்

நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் பாடற்பெற்ற தலங்களில் காஞ்சிபுரமும் முக்கியமானதாகும். அப்பர், சுந்தரர் மற்றும் சம்பந்தரால் ஏகாம்பரநாதர் மீது திருமுறைகளைப் புனைந்துள்ளார்கள். சுந்தரர், தனது இடது கண்ணில் பார்வையினை இழந்தபின், இத்தலத்திற்கு வந்து பாடிப் பின் மீண்டும் அப்பார்வையினைப் பெற்றாராம். மாணிக்கவாசகர் தமதுத் திருவாசகத்தில் இத்தலத்தைப் பாடியுள்ளார். சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார் மற்றும் ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ஆகிய நாயன்மார்கள் இத்தலத்திலேயே வாழ்ந்துள்ளார்கள்.

Remove ads

திவ்யதேசங்கள்

ஆழ்வார்களானத் திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் நம்மாழ்வார் மற்றும் திருமழிசை ஆழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பதின்மூன்று திவ்யதேசங்களான வரதராஜ பெருமாள் கோயில், திருவெஃகா (சொன்னவண்ணம் செய்தப் பெருமாட் கோயில்), அஷ்டபுஜகரம், ஊரகம்-நீரகம்-காரகம் அடங்கிய உலகளந்தப் பெருமாள் கோயில், திருக்கார்வண்ணப் பெருமாள் கோயில், வைகுந்தநாதப் பெருமாள் கோயில், பச்சைவண்ண-பவளவண்ணப் பெருமாள் கோயில், பாண்டவதூதர்ப் பெருமாள் கோயில், நிலாத்திங்கள் துண்ட பெருமாள் கோயில், திருக்கள்வனூர், திருவேளுக்கை மற்றும் திருத்தண்கா ஆகியன விஷ்ணுக்காஞ்சியிலேயே அமைந்துள்ளன. பொய்கையாழ்வார், எம்பெருமானார் இராமானுஜர், திருக்கச்சி நம்பிகள், வேதாந்ததேசிகர், பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரியர் ஆகிய வைணவப் பெரியோர்கள் இத்தலத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்கள்.

அருணகிரிநாதர் தமது திருப்புகழ்ப் பாடல்களில் காஞ்சியின் குமரக்கோட்டத்தில் உறையும் குமரப் பெருமானைப் பாடியுள்ளார். கந்தபுராணம் இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியர் குமரக்கோட்டத்தினைச் சேர்ந்தவர்.

கர்நாடக இசையின் மும்மூர்த்திகளானத் தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள் மற்றும் முத்துசாமி தீட்சிதர் ஆகிய மூவராலும் பாடப்பெற்றத் தலம் காஞ்சியாகும். தமிழ்த் தியாகராஜர் எனப்போற்றப்படும் பாபநாசம் சிவன் அவர்களும் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.

Remove ads

போக்குவரத்து

சாலைப் போக்குவரத்து

காஞ்சிபுரம் வழியாகச், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, என். எச் 48 நகரின் புறநகர்ப் பகுதியைக் கடந்து செல்கிறது. இங்கிருந்து சென்னை செல்வதற்க்கு, இரண்டு பெரிய பேருந்து வழித்தடங்கள் உள்ளன, ஒன்று பூந்தமல்லி வழியாகவும், மற்றொன்று தாம்பரம் வழியாகவும் செல்லலாம். உள்ளூர்ப் பேருந்துச் சேவைகளைத், தமிழ்நாட்டு மாநிலப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் பிரிவு வழங்குகிறது. 2006-ஆம் ஆண்டு நிலவரப்படி, 191 வழித்தடங்களுக்கு மொத்தம் 403 பேருந்துகள் நகரத்திலிருந்து இயக்கப்பட்டன.

திருவண்ணாமலை மாநகரம் செல்வதற்கு செய்யாறு, ஆரணி, போளூர் வழியாகவும் (அல்லது) வந்தவாசி, சேத்துப்பட்டு, அவலூர்பேட்டை வழியாக செல்லலாம்

மேலதிகத் தகவல்கள் வழி, சேருமிடம் ...

தொடருந்துப் போக்குவரத்து

Thumb
காஞ்சிபுரம் தொடருந்து நிலையம்

காஞ்சிபுரத்தில் தொடருந்து நிலையம் ஒன்று உள்ளது. செங்கல்பட்டு - அரக்கோணம் ரயில் பாதையானது, காஞ்சிபுரம் வழியாக செல்கிறது. புதுச்சேரி மற்றும் திருப்பதிக்கு தினசரி ரயில்கள் இயக்கப்படுகின்றன, மேலும் மதுரைக்கு வாரத்திற்கு ஒரு நாள் விரைவு ரயிலும் மற்றும் நாகர்கோயிலுக்கு வாரத்திற்கு இரண்டு விரைவு ரயிலும் இயக்கப்படுகின்றன.

வானூர்தி நிலையம்

இந்நகரிலிருந்து 72 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆனது, அருகிலுள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையமாகும்.

Remove ads

மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்

மேலதிகத் தகவல்கள் மாநகராட்சி அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ...

காஞ்சிபுரம் மாநகராட்சியானது காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த சி. வி. எம். பி. எழிலரசன் வென்றார்.

2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த க. செல்வம் வென்றார்.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காஞ்சிபுரத்தின் முதல் மேயராக திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் அவர்கள் வெற்றி பெற்று மேயராக பதவியேற்றார்

வானிலை மற்றும் காலநிலை

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், காஞ்சிபுரம், மாதம் ...
Remove ads

படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads