ஐந்திணை எழுபது
ஐந்திணை எழுபது சங்கம் மருவிய காலத் தமிழ் நூல்களுள் ஒன்று From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐந்திணை எழுபது சங்கம் மருவிய காலத் தமிழ் நூல்களுள் ஒன்று. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படும் 18 நூல்கள் கொண்ட தொகுதியுள் அடங்குவது. அகப்பொருள் சார்ந்த இந்நூலை எழுதியவர் மூவாதியார் என்னும் புலவர். கி.பி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது.
ஐந்திணைகள் என்பன முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்னும் ஐந்து வகையான பண்டைத் தமிழர் நிலப்பகுப்புகளாகும். இவ்வைந்து திணைகளையும் பின்னணியாகக் கொண்டு திணைக்கு 14 பாடல்கள் வீதம் மொத்தம் எழுபது பாடல்களைக் கொண்டதால் இந்நூல் ஐந்திணை எழுபது எனப் பெயர் பெற்றது. இந்நூலில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற அடைவில் திணைகள் அமைந்துள்ளன. பாலை நிலம் முல்லையும் குறிஞ்சியும் தம் இயல்புகெட்டுத் தோன்றுவது ஆதலானும், நான்கு திணைகளுக்கும் பொதுவாய் 'நடுவண் ஐந்திணை' என்று சிறப்பிக்கப் பெறுவதனாலும் பாலைத் திணை இதில் நடுவில் அமைக்கப்பட்டு உள்ளது என்பர்.
அகப்பொருள் சார்ந்த ஏனைய பல தமிழ் இலக்கிய நூல்களைப் போலவே, இதுவும் காதல் வயப்பட்ட உள்ளங்களின் அக உணர்வுகளை அக்கால சமூக வாழ்க்கை முறைகளினதும், பண்பாட்டினதும் பின்னணியிலும், அத்தகைய வேறுபட்ட உணர்வுகளுக்குப் பொருத்தமான நிலத்திணைகளின் பின்னணியிலும் எடுத்துக்கூறுகின்றது.
Remove ads
எடுத்துக்காட்டு
- இனத்த வருங்கலை பொங்கப் புனத்த
- கொடிமயங்கு முல்லை தளிர்ப்ப இடிமயங்கி
- யானும் அவரும் வருந்தச் சிறுமாலை
- தானும் புயலும் வரும்.
ஆய்வுக் கருத்துகள்
மற்றொரு பதினெண் கீழ்க்கணக்கு நூலான ஐந்திணை ஐம்பதை அடியொற்றி இந்நூல் எழுதப்பட்டு இருக்கலாம் எனக்கருதப்படுகிறது. எனவேதான் இவ்விருநூல்களுக்கும் இடையில் பெயர் ஒற்றுமை இருக்கிறது எனக் கூறப்படுகிறது. மேலும் இருநூல்களிலும் சில அடிகளும் கருத்துகளும் ஒன்றுபோலவே அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக ஐந்திணை ஐம்பதில் உள்ள 38-ஆம் பாட்டில், "கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படர்ந்த நெறி" என்னும் வரிகள் அப்படியே, ஐந்திணை எழுபதில் உள்ள 36-ஆம் பாட்டில் "கள்ளர் வழங்கும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படர்ந்த நெறி" என இடம்பெற்று உள்ளன.
இந்நூலின் தொடக்கத்தில் விநாயகரைப் பற்றிக் கடவுள் வணக்கப் பாடல் ஒன்று சில பிரதிகளில் காணப்படுகிறது. இக்கடவுள் வாழ்த்து நூலுக்குப் புறம்பாக இருப்பதாலும் இப்பாடலுக்குப் பழைய உரைகாரர் உரை எழுதாததாலும் இது நூலாசிரியரான மூவாதியாரால் இயற்றப்பட்டு இருக்காது எனக் கருதப்படுகிறது.
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads