புறநானூறு

சங்க இலக்கியம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு, நந்தா விளக்கம் என்றும் வழங்கப்படும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களில் புறநூல்களுள் ஒன்று. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை. இந்நூலின் பாக்கள் 4 அடி முதல் 40 அடி வரையிலான ஆசிரியப்பாவால் அமைந்து உள்ளன. சிறுபான்மையாக வஞ்சி அடிகளும் விரவி வரும்.[1] புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன. இதனை ஜி. யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

மேலதிகத் தகவல்கள் தமிழ் இலக்கியம் ...
Remove ads

பாடியவர்கள்

இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150க்கும் மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. இந்நூலில் அதிக பாடல்களைப் பாடியவர் ஔவையார் (33 பாடல்கள்) ஆவார். அவரை அடுத்து அதிக பாடலைப் பாடியவர் கபிலர் (28 பாடல்கள்) ஆவார். இந்நூலில் இடம்பெறும் புலவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தையோ நாட்டையோ சார்ந்தவர்கள் அல்லர். அரசன் முதல் எளிய குயவன்மகள் வரை பல்வேறு நிலைகளில் இருந்த ஆடவரும் பெண்டிருமான புலவர்கள் பாடியுள்ளனர். புலவர் அரசர்களைப் பாடியதை ”அவனை அவர் பாடியது” என்று சொல்வதன் மூலம் புலவர்களுக்கிருந்த செல்வாக்கும் மதிப்பும் புலனாகிறது.

Remove ads

நூல் அமைப்பு

இந்நூலில் பாடல்கள் தொகுக்கப்படும்போது ஒருவகை இயைபு கருதி, முதலில் முடிமன்னர் மூவர், அடுத்து குறுநில மன்னர், வேளிர் ஆகியோரைப் பற்றிய பாடல்களும் அதனை அடுத்துப் போர்ப் பற்றிய பாடல்களும் கையறுநிலைப்பாடல், நடுகல், மகளிர் தீப்பாய்தல் என்று தொகுத்துள்ளனர். புறப்பொருள் கருத்துகளைத் தழுவிப் பாடப்பட்ட இந்நூலில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் திணை, துறை, பாடினோர், பாடப்பட்டோர், பாடப்பட்ட சூழல் போன்ற குறிப்புகள் உள்ளன.

Remove ads

புறப்பொருள்

அகப்பாடல்கள் ஐந்திணை ஒழுக்கங்களைக் குறித்தது போலப் புற ஒழுக்கங்களைக் குறித்து அமைந்த பழங்கால வாய்பாட்டுப் பாடல் நமக்கு விளக்குகிறது.

பாடல்:

வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்.[2]

இப்புற ஒழுக்கங்களை வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என்ற எட்டுத் திணைகளாகக் குறிப்பிடுகின்றன. இதில் பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய திணைகளும் அடங்கும். திணையின் உட்பிரிவு துறை எனப்படுகிறது.

புறப்பாடல்கள் புற ஒழுக்கங்களான போர்த்திறம், வள்ளல் தன்மை, மகளிர் மாண்பு, சான்றோர்களின் இயல்பு போன்றவற்றைக் குறிப்பிடுகின்றன.

புறநானூறு வழி அறியலாகும் செய்திகள்

அக்காலத் தமிழ் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதாரம், கல்வி, நாகரிகம், கலை வளர்ச்சி, வீரம், கொடை, ஆடை, அணிகலன், பழக்க வழக்கங்கள், வாணிபம் போன்ற பல செய்திகளைப் புறநானூறு வழி அறியலாம்.

சமூக நிலை

பெண்கள் மங்கல அணி அணிதல், இறந்தவரைத் தாழியில் கவித்தல், நடுகல் நடுதல், நட்ட கல்லைச் சுற்றி மயிற்பீலி அணிவித்து மது வார்த்தல், கணவனை இழந்த பெண்கள் அணிகளைக் களைந்து, கைம்மை நோன்பு நோற்றல், உடன்கட்டையேறல் போன்ற பழக்க வழக்கங்களையும் 10 வகை ஆடைகளையும், 28 வகை அணிகலன்களையும் 30 படைக்கலக்கருவிகளையும் 67வகை உணவுகளையும் எடுத்து இயம்புகின்றன. பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்குக் கையில் வேல் கொடுத்துப் போருக்கு அனுப்பும் மகளிர், முறத்தால் புலியை விரட்டும் மகளிர் எனப் பெண்களின் வீரத்தையும் போற்றுகின்றன. அக்கால சமூக நிலையைக் காட்டும் கண்ணாடி எனப் புறநானூறு விளங்குகிறது.

Remove ads

வரலாற்றுக் குறிப்புகள்

புறநானூற்றுப் பாடல்களில் ஏராளமான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. பாண்டியன் நெடுஞ்செழியன் முதலான 15 பாண்டிய மன்னர்களையும் கரிகாற்சோழன் போன்ற 18 சோழ அரசர்களையும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் போன்ற 18 சேர அரசர்களையும் சிறப்பித்துப் பாடியுள்ளனர். பண்டைய போர்க் களங்களான வெண்ணிப்பறந்தலை, வாகைப்பறந்தலை, கழுமலம், தகடூர், தலையாலங்கானம், கானப்பேரெயில் போன்ற போர்க்களங்கள் குறிப்பிட்டுள்ளன.

Remove ads

எடுத்துக்காட்டுப் பாடல்

தொடியுடைய தோண்மணந்தனன்
கடிகாவிற் பூச்சூடினன்
தண்கமழுஞ் சாந்துநீவினன்
செற்றோரை வழிதபுத்தனன்
நட்டோரை யுயர்புகூறினன்
வலியரென வழிமொழியலன்
மெலியரென மீக்கூறலன்
பிறரைத்தா னிரப்பறியலன்
வேந்துடை யவையத் தேங்குபுகழ் தோற்றினன்
வருபடை எதிர் தாங்கினன்
பெயர்படை புறங்கண்டனன்
கடும்பரிய மாக்கடவினன்
நெடுந்தெருவிற் றேர்வழங்கினன்
ஓங்குகியல களிறூர்ந்தனன்
தீஞ்செறி தசும்புதொலைச்சினன்,
பாணுவப்பப் பசிதீர்த்தனன்
மயக்குடைய மொழிவிடுத்தனன், ஆங்குச்
செய்ப வெல்லாஞ் செய்தன னாகலின்
இடுக வொன்றோ சுடுக வொன்றோ
படுவழிப் படுகவிப் புகழ்வெய்யோன் றலையே.
- நம்பி நெடுஞ்செழியன் - புறம் - பாடல் 235
Remove ads

மொழிபெயர்ப்புகள்

பேராசிரியர் யோர்ச். எல். அகார்ட் என்பவரால் புறநானூறு The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் (1999) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஜி.யு.போப் (போப்பையர்) என்பவரால் புற நானூற்றின் பல பாடல்கள் " Extracts from purananooru & Purapporul venbamalai" எனும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பதிப்பு வரலாறு

சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் 1894-ஆம் ஆண்டு பழைய உரையோடு (முதல் 266 பாடல்களுக்கு மட்டுமே பழைய உரை கிடைத்துள்ளது) நூல் முழுமைக்கும் குறிப்புரையும் எழுதி முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்.[3]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads