மதுரை நாயக்கர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மதுரை நாயக்கர்கள், (Madurai Nayak) மதுரையையும், அதைச் சார்ந்த பகுதிகளையும் 1529 தொடக்கம், 1736 வரை ஆண்டார்கள்.[1] தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பலிஜா[2] இனக்குழுவைச் சேர்ந்த இவர்கள் 14ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு உருவானபோது அரசப் பிரதிநிதிகளாக இருந்தனர். விஜயநகரப் பேரரசு பலமிழந்தபோது, தங்கள் ஆட்சிப்பகுதிகளில் தங்களைப் பலப்படுத்திக்கொண்டு பேரரசிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். நிர்வாக முறைகளில் புதுமைகளைப் புகுத்தியதன் மூலம் மதுரை நாயக்கர்கள் மக்களோடு தங்கள் தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டனர். இவற்றுள் தங்கள் நாட்டை 72 பாளையங்களாகப் பிரித்து, நிர்வாகம் மேற்கொண்டது முக்கியமானது.[3]
Remove ads
மதுரை நாயக்கர் தோற்றம்
விஜயநகரத்துப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தளபதி, மண்டலாதிபதி போன்ற பொறுப்புக்களை வகித்தவர் நாகம நாயக்கர். இவருடைய மகன் விசுவநாத நாயக்கர். கிருஷ்ண தேவராயரிடம் அடைப்பைக்காரராக பணிக்குச் சேர்ந்த விசுவநாத நாயக்கர், பேரரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார்.[4] அக்காலத்தில் விஜயநகரப் பேரரசின் கீழிருந்த பாண்டிய மண்டலத்தில் குழப்பங்கள் தலைதூக்கின. அதனை அடக்குவதற்காக விசுவநாத நாயக்கர் படையுடன் அனுப்பிவைக்கப்பட்டார் . எடுத்த பொறுப்பைச் செவ்வனே முடித்த விசுவநாத நாயக்கர், கிருஷ்ண தேவராயரால் மதுரை மண்டலத்தின் நிர்வாகியாக விசுவநாத நாயக்கர் அமர்த்தப்பட்டார். அவருக்கு பின் வந்த அச்சுதராயரால் முறையாக முடிசூட்டப்பட்டார்.[5] இவருடைய பரம்பரையினரே மதுரை நாயக்கர்கள் என அழைக்கப்பட்டவர்கள்.
Remove ads
மதுரை நாயக்கர்களின் மரபு
மதுரை நாயக்கர்கள், பலிஜா (கவரா) என்னும் வணிக குழுவை சேர்த்தவர்கள்[2] என்பதற்கான வரலாற்று சான்றுகள் பின்வருவன.
கர்நாடக கோடிகம் மன்னர்களின் கைபீது, மதுரை நாயக்க அரசை தோற்றுவித்த விசுவநாத நாயக்கர், பலிஜா சாதியில் கரிகாபதி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளது.[6] தெலுங்கு மொழியில் எழுதப்பட்டிருந்த இந்த ஆவணம் காலின் மெக்கன்சி பிரபு காலத்தில் சேகரிக்கப் பெற்றது.
இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தின் பிரதிநிதியான அடால்ஃப் பாசிங், 1677-இல் இடச்சு மொழியில் எழுதிய மிஷன் டூ மதுரை என்னும் வரலாற்று ஆவணத்தில் மதுரை நாயக்க அரசை தோற்றுவித்த விசுவநாத நாயக்கர், வெல்லன் செட்டி என்னும் வணிக மரபை சேர்த்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.[7]
விஜயநகர பேரரசர் முதலாம் வேங்கடரின் தளவாய் அக்ரஹாரம் செப்பேட்டின்படி[8], விஸ்வநாத நாயக்கரின் பேரனும் கிருஷ்ணப்ப நாயக்கரின் மகனும் இளவரசனுமான வீரப்ப நாயக்கரை அய்யப்பொழில் நகரத்தின் அதிபதி என்று செப்பேடு குறிப்பிடுகிறது. வீர பலஞ்சா என்னும் வணிகர்களின் தலைமையிடமாக அய்யப்பொழில் திகழ்ந்தது. வீர பலஞ்சா என்னும் வணிகக்குழுவினர் தங்களை அய்யப்பொழில் நகரத்தின் அதிபதி என்று அழைத்துக்கொள்வதாக கல்வெட்டு ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த வணிகர்கள் தங்களை வீர பலஞ்சா தர்மத்தின் பாதுகாவலர்களாக தங்களை காட்டிக் கொண்டனர். அய்யப்பொழில் என்பது தற்கால கருநாடக மாநில பீசப்பூர் மாவட்டத்தில் உள்ள ஐஹோல் நகரமாகும். இவ்வணிகர்கள் தெலுங்கில் வீர பலிஜா என்றும் கன்னடத்தில் வீர பனாஜிகா என்றும் தமிழில் வீர வளஞ்சியர் என்றும் அழைக்கப்பட்டனர். இதன் பொருள் தீரமிக்க வணிகர்கள் என்பதாகும்.[9]
பதினெட்டாம் நூற்றாண்டில் தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட ஸ்ரீ வம்ச பிரகாசிகை என்னும் வரலாற்று நூலில் மதுரை நாயக்க மன்னரான விஜயரங்க சொக்கநாத நாயக்கர், பலிஜா சாதியில் கரிகாபதி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளது.[10]
வடகரை ஜமீந்தார் இராமபத்ர நாயுடுவின் குடும்பத்தினர் மதுரை நாயக்க மன்னர்களின் நெருங்கிய உறவினர்கள் ஆவார்.[11] இவரின் மூதாதையரான இராமபத்ர நாயக்கர், நாகம நாயக்கரின் நெருங்கிய உறவினர் ஆவார்.[12] இவர் பலிஜா சாதியை சேர்த்தவர்.[13] இவர் தனது உறவினரான விசுவநாத நாயக்கரிடம் இராணுவத் தளபதியாக பணிபுரிந்தார்.[14] இவரின் வம்சாவளியினரே வடகரை ஜாமீன் ஜமீந்தார்கள் ஆவார்.[15]
ஜேம்ஸ் ஹென்றி நெல்சன் 1868-இல் எழுதி வெளியிட்ட மதுரை நாடு ஆவணப்பதிவு என்ற நூலில், வெள்ளிக்குறிச்சி வாழ்ந்து வந்த மதுரை நாயக்க மன்னர்களின் வம்சாவளியினர், கவர பலிஜா இனக்குழு சேர்த்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.[16]
Remove ads
மதுரை நாயக்கர் வம்சம்
முதல் ஐந்து மதுரை நாயக்கர்களும் விஜயநகரப்பேரரசுக்கு விசுவாசமாக அதற்கு அடங்கியே இருந்தார்கள். ஆறாவதாக 1609 தொடக்கம் 1623 வரை மதுரையை ஆண்ட நாயக்கரான முத்துவீரப்ப நாயக்கர், அக்காலத்தில் வலுவிழந்திருந்த விஜயநகரத்துக்குத் திறை கொடுப்பதை நிறுத்திக்கொண்டார். இவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கர் காலம் மதுரை நாயக்கர்களின் பொற்காலம் எனலாம். திருமலை நாயக்கருக்குப் பின்னர் இவ்வம்சத்தைச் சேர்ந்த மேலும் அறுவர் ஆட்சி செய்தனர். இவர்களுள் இராணி மங்கம்மாள் குறிப்பிடத்தக்கவர். இறுதியாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர் இராணி மீனாட்சி. 1732 இல் நாயக்க மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் வாரிசு இல்லாமல் இறந்தபோது அவனது மனைவி மீனாட்சிக்கு ஆட்சிப் பொறுப்புக் கிடைத்தது. எனினும் அரசுரிமைப் போட்டியில் அவருக்கு உதவி செய்யும் சாக்கில் தலையிட்ட கர்நாடக நவாப்பின் மருமகனான சாந்தாசாகிப் அவரை சிறைப்பிடித்து மதுரை அரசையும் கைக்கொண்டார். இதன் மூலம் மதுரை நாயக்கர் வம்சம் ஒரு முடிவுக்கு வந்தது.[17]
மதுரை நாயக்கர்களின் பட்டியல்
- விசுவநாத நாயக்கர் (1529 - 1564)
- முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1564 - 1572)
- வீரப்ப நாயக்கர் (1572 - 1595)
- இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1595 - 1601)
- முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் (1601 - 1609 )
- முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (1609 - 1623)
- திருமலை நாயக்கர் (1623 - 1659)
- இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் (1659 - 1659)
- சொக்கநாத நாயக்கர் (1659 - 1682)
- அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் (1682 - 1689)
- இராணி மங்கம்மாள் (பகர ஆளுனர்) (1689 - 1704)
- விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (1704 - 1732)
- இராணி மீனாட்சி (1732 - 1736)
Remove ads
வழித்தோன்றல்
சிங்கள துவீப கதா என்ற தெலுங்கு இலக்கியம், மதுரையை ஆண்ட நாயக்க மன்னரான முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1563–1573), கண்டி மீது படையெடுத்து போரிட்டு வென்றதாகவும், தனது மைத்துனன் விஜய கோபால் நாயக்கரை கண்டியின் அரசப் பிரதிநிதியாக நியமித்தார் என குறிப்பிடுகிறது.[18]
கண்டி அரச மரபின் கடைசி அரசனான ஸ்ரீ வீர பரக்கிரம நரேந்திரசிங்கன், மதுரை நாயக்க மரபைச் சேர்ந்த பெண்கள் இருவரை மணம் புரிந்திருந்தான்.[19] இருவருக்கும் பிள்ளைகள் இல்லை. எனவே கண்டியின் மரபுரிமை வழக்கின்படி தனது மூத்த அரசியின் தம்பியான ஸ்ரீ விஜய ராஜசிங்கன் தனது வாரிசாக அரசன் தெரிந்தெடுத்தான். மதுரை நாயக்கர் மரபில் பிறந்த ஸ்ரீ விஜய ராஜசிங்கன், கண்டி நாயக்கர் மரபை உருவாக்கியவன் ஆவான். இம்மரபினர் கண்டியைத் தலை நகராகக்கொண்டு 1707 ஆம் ஆண்டுக்கும் 1815 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஆண்டு வந்தனர். இலங்கையின் கடைசி அரச மரபும் இதுவே.
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
உசாத்துணை நூல்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads