மகத நாடு

பண்டைக் கால இந்திய இராச்சியம் From Wikipedia, the free encyclopedia

மகத நாடு
Remove ads

மகத நாடு அல்லது மகதம் (Magadha) என்பது ஒரு பகுதி[2] மற்றும் இராண்டாம் நகரமயமாக்கலின் (பொ.ஊ.மு. 600 - பொ.ஊ.மு. 200) 16 மகாஜனபாதங்களில் ஒன்றாகும். இது கிழக்குக் கங்கைச் சமவெளியில் தற்போதைய தெற்கு பீகாரில் (விரிவாக்கத்திற்கு முன்) அமைந்திருந்தது. மகதமானது பிரிகத்ரத அரசமரபு, பிரத்யோதா அரசமரபு (பொ.ஊ.மு. 682–பொ.ஊ.மு. 544), ஹரியங்கா அரசமரபு (பொ.ஊ.மு. 544–பொ.ஊ.மு. 413), சிசுநாக அரசமரபு (பொ.ஊ.மு. 413–பொ.ஊ.மு. 345) மற்றும் மௌரிய அரசமரபால் ஆளப்பட்டது. கிராமகர்கள் என்று அழைக்கப்பட்ட தங்களது உள்ளூர்த் தலைவர்களுக்குக் கீழ் கிராமங்கள் தங்களது சொந்த அவைகளைக் கொண்டிருந்தன. இவற்றின் நிர்வாகமானது செயல், நீதி மற்றும் இராணுவப் பணிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.[3][4]

விரைவான உண்மைகள் மகத இராச்சியம், தலைநகரம் ...
Thumb
மகாஜனபத நாடுகளில் ஒன்றான மகத நாடு

சைனம் மற்றும் பௌத்தத்தின் வளர்ச்சியில் மகதமானது ஒரு முக்கியப் பங்காற்றியது.[5] இதற்குப் பிறகு வட இந்தியாவின் நான்கு சிறந்த பேரரசுகளான நந்தப் பேரரசு (அண். பொ.ஊ.மு. 345–பொ.ஊ.மு. 322), மௌரியப் பேரரசு (அண். பொ.ஊ.மு. 322–பொ.ஊ.மு. 185), சுங்கப் பேரரசு (அண். பொ.ஊ.மு. 185–பொ.ஊ.மு. 78) மற்றும் குப்தப் பேரரசு (அண். பொ.ஊ. 319–பொ.ஊ. 550) ஆகியவை வந்தன. பாலப் பேரரசும் மகதத்தின் மீது ஆட்சி செய்தது. பாடலிபுத்திரத்தில் ஒரு அரச முகாமைப் பேணி வந்தது.[6][7]

போதி கயாவின் பிதிபதிகள் தங்களைத் தாமே மகதாதிபதி என்று குறிப்பிட்டுக் கொண்டனர். 13ஆம் நூற்றாண்டு வரை மகதத்தின் பகுதிகளை ஆண்டு வந்தனர்.[8]

இதன் தலைநகரம் ராஜகிரகம் என்பதாகும். கிழக்கு உத்தரப் பிரதேசம், பிகாரின் பெரும்பகுதி, வங்காளம், மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பகுதிகளையும் உள்ளடக்கி இது விரிவாக்கப்பட்டது. இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் ஆகியவற்றில் மகத நாடு பற்றிய குறிப்புகள் உள்ளன. பௌத்த, சமண நூல்களிலும் மகதம் பற்றிப் பெருமளவு குறிப்புகள் உள்ளன. மகதம் பற்றிய மிகப் பழைய குறிப்பு அதர்வண வேதத்தில் காணப்படுகின்றது.

Remove ads

புவியியல்

Thumb
ஆரம்ப இரும்புக் காலத்தின் போது மகதம் (பொ.ஊ.மு. 1100–பொ.ஊ.மு. 600).
Thumb
16 மகாஜனபாதங்கள் (இராச்சியங்கள்) மற்றும் பிற இராச்சியங்களை பொ.ஊ.மு. 540இல் குறிப்பிடும் வரைபடம்.
Thumb
மகத இராச்சியத்தின் தொடக்க கால விரிவாக்கத்தின் போது கிழக்குக் கங்கைச் சமவெளி.
Thumb
பொ.ஊ.மு. 450 அல்லது பொ.ஊ.மு. 346இல் நந்தப் பேரரசு
Thumb
அண். பொ.ஊ.மு. 250இல் மௌரியப் பேரரசு
Thumb
மகதத்தின் முந்தைய தலை நகரத்தைச் சுற்றி அமைந்திருந்த இராஜகிரகத்தின் சுற்றுச்சுவர். உலகின் மிகப் பழமையான சுற்றுச்சுவர் பகுதிகளில் இவையும் ஒன்றாகும்.

மகத இராச்சியத்தின் நிலப்பரப்பானது அதன் விரிவாக்கத்திற்கு முன்னர் வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கில் முறையே கங்கை, சோன் மற்றும் சம்பா ஆறுகளை எல்லைகளாகக் கொண்டிருந்தது. இதன் தெற்கு எல்லையை விந்திய மலைகளின் கிழக்குப் பகுதி அமைத்தது. இவ்வாறாக, தொடக்க கால மகத இராச்சியத்தின் நிலப்பரப்பானது இந்திய மாநிலமான பீகாரின் தற்போதைய பட்னா மற்றும் கயா மாவட்டங்களுடன் ஒத்துப்போகிறது.[9]

பெரிய மகதப் பகுதியானது கங்கைச் சமவெளியில் இருந்த அண்டைப் பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது. இது ஒரு தனித்துவமான பண்பாடு மற்றும் நம்பிக்கையைக் கொண்டிருந்தது. பெரும்பாலான இரண்டாம் நகரமயமாக்கலானது இங்கு பொ.ஊ.மு. 500இல் ஆரம்பித்தது. இங்கு தான் சைனமும், பௌத்தமும் தோன்றின.[10][not in citation given]

Remove ads

புராண - இதிகாச குறிப்புகள்

பாகவத புராணம் மற்றும் மகாபாரத இதிகாசங்களில், மகத நாட்டின் மன்னர்களில் புகழ் பெற்றவரும், சக்தி வாய்ந்தவருமான ஜராசந்தனைக் குறிக்கிறது. மதுராவின் மன்னரும், தனது மருமகனுமாகிய கம்சனைக் கொன்ற கிருட்டிணன் மீது தீராத பகை கொண்டவன். தருமரின் இராசசூய வேள்விக்கு முன்னர், கிருஷ்ணர், பீமன் மற்றும் அருச்சுனன் உதவியுடன் ஜராசந்தனை மற்போரில் கொன்று, அவனது சிறையில் அடைப்பட்டு இருந்த எண்பத்தாறு மன்னர்களையும்; இளவரசர்களையும் மீட்டனர்.[11]

Remove ads

வரலாறு

இந்தியாவின் பெரிய சமயங்களான பௌத்தம் மற்றும் சமணம் மகத நாட்டிலேயே உருவாயின. இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு பேரரசுகளான மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு ஆகியவற்றின் மூலமும் இதுவே. இப் பேரரசுகளின் காலத்திலேயே இந்தியா அறிவியல், கணிதம், வானியல், சமயம், தத்துவம் ஆகிய துறைகளில் பெரும் முன்னேற்றங்களைக் கண்டது. இது இந்தியாவின் பொற்காலம் எனக் கருதப்படுகின்றது.[12]

Thumb
மன்னர் பிம்பிசாரர் இராஜகிரகத்தில் உள்ள மூங்கில் தோட்டத்திற்கு (வேணுவனா) வருகை புரிகிறார். சாஞ்சியைச் சேர்ந்த ஒரு கலை வேலைப்பாடு.

சில அறிஞர்கள் கீகடப் பழங்குடியினத்தை மகதர்களின் மூதாதையர்களாக இருக்கலாம் என அடையாளப்படுத்துகின்றனர். கீகடப் பழங்குடியினம் இருக்கு வேதத்தில் (3.53.14) இவர்களது ஆட்சியாளர் பிரமகந்தருடன் குறிப்பிடப்படுகின்றனர். மேலும், பிந்தைய கால நூல்களில் மகதத்திற்குச் சமமான பொருளாகக் கீகடம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.[13] அதர்வண வேதத்தில் குறிப்பிடப்படும் மகதர்களைப் போலவே இருக்கு வேதமும் கீகடர்களை ஒரு பகைமை உணர்வுடைய பழங்குடியினமாகக் குறிப்பிடுகிறது. பண்டைய வேத சமய இந்தியாவின் எல்லைகளில் இவர்கள் வாழ்ந்தனர் என்றும், இவர்கள் வேதச் சடங்குகளைச் செய்வதில்லை என்றும் குறிப்பிடுகிறது.[14]

மகத மக்களைப் பற்றிய தொடக்க காலக் குறிப்பானது அதர்வண வேதத்தில் வருகிறது. அங்கர்கள், காந்தாரிகள் மற்றும் முசவத்துகள் ஆகியோருடன் இவர்கள் பட்டியலிடப்படுகின்றனர். கங்கை ஆற்றுக்குத் தெற்கே இருந்த பீகாரின் பகுதியே இந்த இராச்சியத்தின் மையப் பகுதியாகும். இதன் தலைநகரம் இராஜகிரகம் (தற்கால இராஜ்கிர்) பிறகு பாடலிபுத்திரம் (தற்கால பட்னா) ஆகியவை ஆகும். இராஜகிரகமானது தொடக்கத்தில் கிரிவ்ரிஜ்ஜா என்று அறியப்பட்டது. பின்னர் இராஜகிரகம் என்று அஜாதசத்ருவின் ஆட்சியின் போது அறியப்பட்டது. வஜ்ஜி மற்றும் அங்கம் ஆகியவற்றைப் பெற்ற பிறகு முறையே பெரும்பாலான பீகார் மற்றும் வங்காளத்தை உள்ளடக்கியதாக மகதம் விரிவடைந்தது.[15] மகத இராச்சியமானது இறுதியாகப் பீகார், சார்க்கண்டு, ஒடிசா, மேற்கு வங்காளம், கிழக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் தற்போதைய நாடுகளான வங்காளதேசம் மற்றும் நேபாளத்தின் பகுதிகளை இறுதியில் உள்ளடக்கியிருந்தது.[16]

சைன மற்றும் பௌத்த நூல்களில் பண்டைய இராச்சியமான மகதமானது அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறது. இது இராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்களிலும் குறிப்பிடப்படுகிறது.

மகதத்தின் தொடக்க கால ஆட்சியாளர்கள் குறித்து சிறிதளவே தெளிவான தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன. மிகுந்த முக்கியமான ஆதார நூல்கள் பௌத்த பாளி நூல்களும், சமண ஆகம நூல்களும் மற்றும் இந்து புராணங்களும் ஆகும். இந்த ஆதார நூல்களை அடிப்படையாகக் கொண்டு மகதமானது சுமார் 200 ஆண்டுகளுக்கு, அண். பொ.ஊ.மு. 543 முதல் அண். பொ.ஊ.மு. 413 வரை ஹரியங்கா அரசமரபால் ஆளப்பட்டது என்று தோன்றுகிறது.[17]

பௌத்தத்தைத் தோற்றுவித்த கௌதம புத்தர் தனது வாழ்நாளில் பெரும்பாலான காலத்தை மகத இராச்சியத்தில் வாழ்ந்தார். புத்தர் ஞானத்தைப் புத்தகயையில் பெற்றார், தனது முதல் அறநெறி உரையைச் சாரநாத்தில் ஆற்றினார், முதல் பௌத்த மாநாடானது இராஜகிரகத்தில் நடைபெற்றது.[18]

மகாபாரதமானது மகதத்தின் முதல் ஆட்சியாளராகப் பிரகத்ரதரைக் குறிப்பிடுகிறது. பிரகத்ரத அரசமரபின் கடைசி மன்னரான ரிபுஞ்செயன் தனது மந்திரி புலிகாவால் கொல்லப்பட்டார். புலிகா தனது மகன் பிரத்யோதாவைப் புதிய மன்னராகப் பதவியில் அமர வைத்தார். பிரத்யோதா அரசமரபானது பிம்பிசாரரால் நிறுவப்பட்ட ஹரியங்கா அரசமரபால் நீக்கப்பட்டது. பிம்பிசாரர் ஒரு செயல் ஆற்றல் நிறைந்த, விரிவாக்கக் கொள்கைக்குத் தலைமை தாங்கினார். தற்போதைய மேற்கு வங்காளத்தில் இருந்த அங்க இராச்சியத்தை வென்றார். மன்னர் பிம்பிசாரரை அவரது மகன் அஜாதசத்ரு கொன்றார். அண்டை கோசல நாட்டின் மன்னரும் பிம்பிசாரரின் மைத்துனருமான பசேனதி காசி மாகாணத்தை உடனடியாக மீண்டும் வென்றார்.

லிச்சாவியுடன் மன்னர் அஜாதசத்ரு போர் புரிந்ததற்கான காரணம் குறித்து வரலாற்று நூல்கள் சற்றே மாறுபடுகின்றன. லிச்சாவி என்பது கங்கை ஆற்றுக்கு வடக்கே இருந்த ஒரு சக்தி வாய்ந்த பழங்குடி இனமாகும். அஜாதசத்ரு லிச்சாவிகளின் பகுதிகளுக்கு ஒரு மந்திரியை அனுப்பினார் என்றும், லிச்சாவிகளின் ஒற்றுமையைக் குலைப்பதற்காக மூன்று ஆண்டுகள் அம்மந்திரி பணியாற்றினார் என்றும் தோன்றுகின்றது. கங்கை ஆற்றைத் தாண்டி தனது தாக்குதலைத் தொடங்குவதற்காகப் பாடலிபுத்திரப் பட்டணத்தில் ஒரு கோட்டையை அஜாதசத்ரு கட்டினார். தங்களுக்குள் கருத்து வேறுபாடுகளால் பிரிக்கப்பட்டிருந்தச் லிச்சாவிகள் அஜாதசத்ருவுடன் போரிட்டனர். லிச்சாவிகளைத் தோற்கடிக்க அஜாதசத்ருவுக்கு 15 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. அஜாதசத்ரு எவ்வாறு இரண்டு புதிய ஆயுதங்களைப் பயன்படுத்தினார் எனச் சமண நூல்கள் குறிப்பிடுகின்றன. அதில் ஒன்று பெரிய கவண் வில், மற்றொன்று முழுவதுமாக மூடப்பட்ட தேர். அத்தேரில் சுழலும் கதாயுதமானது இணைக்கப்பட்டிருந்தது. இது தற்காலப் பீரங்கி வண்டியுடன் ஒப்பிடப்படுகிறது. பாடலிபுத்திரமானது ஒரு வணிக மையமாக வளர்ந்தது. அஜாதசத்ருவின் காலத்திற்குப் பிறகு மகதத்தின் தலைநகரானது.

ஹரியங்க அரசமரபைச் சிசுநாக அரசமரபானது பதவியில் இருந்து தூக்கி எறிந்தது. கடைசி சிசுநாக ஆட்சியாளரான மகாநந்தி பொ.ஊ.மு. 345இல் மகாபத்ம நந்தனால் அரசியல் கொலை செய்யப்பட்டார். மகாபத்ம நந்தன் ஒன்பது நந்தர்களில், அதாவது மகாபத்ம நந்தன் மற்றும் அவரது எட்டு மகன்கள், ஆகியோர்களில் முதன்மையானவர் ஆவார். தன நந்தன் கடைசியானவர் ஆவார்.

பொ.ஊ.மு. 326இல் அலெக்சாந்தரின் இராணுவமானது மகதத்தின் மேற்கு எல்லையை நோக்கி நெருங்கியது. சோர்வடைந்து இருந்தது மற்றும் கங்கையாற்றங்கரையில் மற்றொரு பெரிய இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைமையால் அச்சமடைந்திருந்த இராணுவமானது இபாசிசு (தற்கால பியாஸ் ஆறு) ஆற்றங்கரையில் கிளர்ச்சியில் ஈடுபட்டது. மேற்கொண்டு கிழக்கே அணிவகுக்க மறுத்தது. தனது அதிகாரி கோயேனுசுவுடன் நடத்திய சந்திப்பிற்குப் பிறகு அலெக்சாந்தர் தெற்கு நோக்கி திரும்புதே நன்மை பயக்கும் என்று இணங்க வைக்கப்பட்டார். சிந்து ஆறு கடலை நோக்கிச் செல்லும் வழியில் வென்று கொண்டு சென்றார்.

பொ.ஊ.மு. 321 வாக்கில் சந்திரகுப்த மௌரியரின் கைகளால் தன நந்தன் தோற்கடிக்கப்பட்டதற்குப் பிறகு நந்த அரசமரபானது முடிவுக்கு வந்தது. தனது வழிகாட்டி சாணக்கியரின் உதவியுடன் சந்திரகுப்த மௌரியர் மௌரியப் பேரரசின் முதல் மன்னரானர். இப்பேரரசானது பிற்காலத்தில் பெரும்பாலான இந்தியாவுக்கு மன்னர் அசோகரின் கீழ் விரிவடைந்திருந்தது. அசோகர் முதலில் "இரக்கமற்ற அசோகர்" என்று அறியப்பட்டார். ஆனால், பிறகு பௌத்தத்தின் ஒரு சீடரான பிறகு "தர்ம சோகர்" என்று அறியப்பட்டார்.[19][20] பிற்காலத்தில், மௌரியப் பேரரசானது முடிவுக்கு வந்தது. அதே போல, சுங்க மற்றும் கராவேலப் பேரரசுகளும் முடிவுக்கு வந்தன. இறுதியாகக் குப்தப் பேரரசு ஆட்சிக்கு வந்தது. குப்தப் பேரரசின் தலைநகரமானது மகதத்தில் இருந்த பாடலிபுத்திரத்தில் தொடர்ந்து நீடித்தது.

மகதத்தின் பாலக் காலத்தின் போது, பொ.ஊ. 11ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் ஓர் உள்ளூர் பௌத்த அரசமரபானது போதி கயாவின் பிதிபதிகள் என்று அறியப்பட்ட பெயருடன் பாலப் பேரரசுக்குத் திறை செலுத்தியவர்களாக ஆட்சி செய்து வந்தனர்.[8]

Remove ads

பௌத்தமும், சைனமும்

பொ.ஊ.மு. 6ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே பல்வேறு சமண இயக்கங்கள் நிலை பெற்றிருந்தன. இவை இந்தியத் தத்துவயியலின் ஆத்திக மற்றும் நாத்திகப் பாரம்பரியங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன.[21] இந்தச் சமண இயக்கமானது பல்வேறுபட்ட மரபு வழி சாராத நம்பிக்கைகளின் வளர்ச்சிக்குக் காரணமானது. ஆன்மா, இயற்கையியல், சட்டங்களை மறுத்த நன்னெறிகள், பொருளியல், நாத்திகம், கடவுளை அறியாமை, விதியே அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணம் என்பது முதல் சுதந்திரமான எண்ணங்கள் வரையிலான தத்துவங்கள், குடும்ப வாழ்க்கைக்கு தீவிர துறவு வாழ்க்கையை குறைபாடற்றதாக எடுத்துக் கொள்ளுதல், கண்டிப்பான அகிம்சை, வன்முறை மற்றும் புலால் உண்ணுவதைத் தவிர்த்து காய்கறிகளை மட்டுமே உண்ணும் பழக்கம் ஆகியவற்றை ஏற்றோ அல்லது மறுத்தோ இத்தகைய நம்பிக்கைகள் திகழ்ந்தன.[22] மகத இராச்சியமானது இந்தப் புரட்சியின் துணிவுடைய மையமாகத் திகழ்ந்தது.

கடைசி மற்றும் 24வது தீர்த்தங்கரரான மகாவீரருக்குப் பிறகு சைனமானது மீண்டும் எழுச்சியடைந்தது, மீண்டும் நிறுவப்பட்டது. பல காலத்துக்கு முன்னர் முதல் சைனத் தீர்த்தங்கரரான ரிசபநாதரால் குறிப்பிடப்பட்ட தத்துவங்கள் மற்றும் பண்டைக்காலச் சைனப் பாரம்பரியங்களின் பரப்பலை மகாவீரர் மீண்டும் நிறுவினார்.[23] கௌதம புத்தர் பௌத்தத்தை நிறுவினார். பௌத்தமானது இராச்சியத்தின் அரசகுலத்தவரின் புரவலத் தன்மையைப் பெற்றது.

Thumb
மகத இராச்சியத்தின் நாணயம், அண். பொ.ஊ.மு. 430 - பொ.ஊ.மு. 320, கர்ஷபணம்
Thumb
மகத இராச்சியத்தின் நாணயம், அண். பொ.ஊ.மு. 350, கர்ஷபணம்

யோகான்னசு புரோங்கோர்ஸ்து என்கிற இந்தியவியலாளரின் கூற்றுப்படி, இந்தோ ஆரிய மக்களின் வேத கால இராச்சியங்களில் இருந்து மகதத்தின் பண்பாடானது அடிப்படையிலேயே வேறுபட்டதாக இருந்தது. புரோங்கோர்ஸ்துவின் கூற்றுப்படி, சமணப் பண்பாடானது பெரிய மகதத்தில் வளர்ச்சி அடைந்தது. பெரிய மகதமானது இந்தோ-ஆரிய நிலத்தைச் சேர்ந்ததாகும். ஆனால், அது வேத காலப் பண்பாடுடையதாக இருக்கவில்லை. இந்தப் பண்பாட்டில் சத்திரியர்கள் பிராமணர்களை விட உயர்ந்தவர்களாக நிலைப்படுத்தப்பட்டனர். இது வேத முதல் நிலை மற்றும் சடங்குகளை நிராகரித்தது.[10][24] பெரிய மகதம் என்கிற ஒரு பண்பாட்டுப் பகுதிக்கு இவர் வாதிடுகிறார். புத்தரும், மகாவீரரும் வாழ்ந்து போதித்த புவியியல் பகுதியைப் பெரிய மகதம் எனத் தோராயமாக இவர் வரையறுக்கிறார்.[10] இந்தத் தனித்துவத்தைப் பரிந்துரைக்குமாறு, சில வேத கால மற்றும் வேத காலத்துக்குப் பிந்தைய சடங்குகளில் ஒரு மகத மனிதன் சமய ரீதியாக வேதம் சாராத காட்டுமிராண்டியாகப் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகிறான். ஏதாவது அல்லது அனைத்து வேதம் சாராத மக்கள் அல்லது சடங்கு ரீதியாகக் கண்டிப்பற்றவர்களுக்காக மகதன் குறிப்பிடப்படுகிறான்.[25]

புத்தரின் காலத்தில் இந்த நிலப்பரப்பானது விரிவடைந்தது. வட மேற்கே கோசல நாட்டின் தலைநகரான சிராவஸ்தியிலிருந்து, தென்கிழக்கே மகதத்தின் தலைநகரான இராஜகிரகம் வரை விரிவடைந்திருந்தது.[26] புரோங்கோர்ஸ்துவின் கூற்றுப்படி, உண்மையில் பெரிய மகதத்தின் ஒரு பண்பாடானது இருந்தது. இலக்கணவியலாளர் பாதாஞ்சலி (அண். பொ.ஊ.மு. 150) மற்றும் அவருக்குப் பிந்தைய காலம் வரை மகதமானது தொடர்ந்து வேதக் கலாச்சாரத்திலிருந்து தனித்துவமாக அடையாளம் காணத்தக்க வகையிலேயே தொடர்ந்தது.[27] சதாப்த பிராமணம் போன்ற வேத நூல்கள், இப்பகுதியில் குடியிருந்தோரைத் தீயவர்களாகக் குறிப்பிடுகின்றன. ஒரு காட்டுமிராண்டி மொழியைப் பேசுபவர்களாகவும் குறிப்பிடுகின்றன. புத்தவியலாளர் அலெக்சாந்தர் வைன்னேயின் கூற்றுப்படி, புத்தருக்கு முந்தைய காலத்தின் போது கிழக்குக் கங்கைச் சமவெளியை வேத கால ஆரியர்களுக்கு எதிரான இந்தப் பண்பாடானது இருந்ததற்கு ஏராளமான சான்றுகள் இருப்பதாகப் பரிந்துரைக்கிறார். மரபு வழிப் பிராமணர்கள் இந்தக் கால கட்டத்தில் மகதத்தில் ஒரு சிறுபான்மையினராக இருந்தனர்.[28]

மகத சமயங்கள் சமணப் பாரம்பரியங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இதில் சைனம், பௌத்தம் மற்றும் ஆசீவகம் ஆகியவையும் அடங்கும். பௌத்தமும், சைனமும் தொடக்க கால மகத மன்னர்களால் ஆதரவளிக்கப்பட்ட சமயங்கள் ஆகும். இம்மன்னர்களில் சிரேனிகர், பிம்பிசாரர் மற்றும் அஜாதசத்ரு ஆகியோரும் அடங்குவர். நந்த அரசமரபானது (பொ.ஊ.மு. 345 - பொ.ஊ.மு. 321) பெரும்பாலும் சைன சமயத்திற்கு ஆதரவளித்தது. இந்தச் சமண சமயங்கள் வேத காலத் தெய்வங்களை வழிபடவில்லை. துறவு நிலை மற்றும் தியானம் போன்ற சில வடிவங்களைப் பயின்றன. பௌத்தத்தில் தூபி என்றழைக்கப்படும் உருளையான சமாதி மேடுகளைக் கட்டின.[27] ஆன்ம அறிவு வழியாக பிறப்பு, மறுபிறப்பு, கர்ம வினை ஆகிய சுழற்சிகளிலிருந்து சில வகை விடுதலைகளை இந்தச் சமயங்கள் பெற முயற்சித்தன.

மகதத்தில் சமயத் தளங்கள்

Thumb
மறுசீரமைக்கப்படுவதற்கு முன்னர், பண்டைக்கால மகாபோதிக் கோயில்.

மகதப் பகுதியில் தற்போது காணப்படும் பௌத்தத் தளங்களில் புத்தகயையில் உள்ள மகாபோதிக் கோயில்[29] மற்றும் நாளந்தா மடாலயம் போன்ற இரண்டு உலகப் பாரம்பரியக் களங்களும் அடங்கும்.[30] பௌத்த உலகத்தில் புனிதப் பயணத்திற்கான மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக மகாபோதிக் கோயில் திகழ்கிறது. இது புத்தர் ஞானம் பெற்ற தளத்தைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது.[31]

Remove ads

மொழி

தேரவாத விளக்க உரைகளின் தொடக்கத்தில் மகத இராச்சியத்தின் மொழியான மககியுடன் பாளி அடையாளப்படுத்தப்படுகிறது. புத்தர் தனது வாழ்நாளின் போது பயன்படுத்திய மொழியாகவும் இது கருதப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானியக் கிழக்கியலாளரான இராபர்ட்டு சீசர் சில்தேர்சு பாளி மொழியின் உண்மையான அல்லது புவியியல் பெயரானது மாகதிப் பிராகிருதம் என்று வாதிட்டார். பாளி என்ற சொல்லுக்கு "கோடு, வரிசை, தொடர்ச்சி" என்ற பொருள்கள் காணப்படுவதால், தொடக்க காலப் பௌத்த மதத்தினர் இச்சொல்லை "நூல்களின் ஒரு தொடர்ச்சி" என்ற பொருளுக்குப் பயன்படுத்தினர். எனவே, பாளிபாஷா என்பதன் பொருள் "நூல்களின் மொழி" என்பதாகும்.[32] எவ்வாறாயினும், மகதியங்கள் என்று குறிப்பிடப்படும் சில கிழக்குச் சிறப்பியல்புகளைப் பாளி தொடர்ந்து கொண்டிருந்தது.[33]

சமஸ்கிருதத்தின் பயன்பாடு குறைந்ததைத் தொடர்ந்து உருவான மூன்று பிராகிருதங்களில் மாகதிப் பிராகிருதமும் ஒன்றாகும். மகதம் மற்றும் அதன் அண்டைப் பகுதிகளில் இம்மொழி பேசப்பட்டது. பிறகு, மககி, மைதிலி மற்றும் போச்புரி போன்ற தற்காலக் கிழக்கு இந்தோ ஆரிய மொழிகளாகப் பரிணாமம் அடைந்தது.[34]

Remove ads

ஆட்சியாளர்கள்

மகதத்தின் இரு குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்கள் பிம்பிசாரர் (இவர் சிரேனிகர் என்றும் அறியப்படுகிறார்) மற்றும் இவரது மகன் அஜாதசத்ரு (இவர் குனிகர் என்றும் அறியப்படுகிறார்) ஆவர். இவர்கள் பௌத்த மற்றும் சைன இலக்கியங்களில் புத்தர் மற்றும் மகாவீரரின் சம காலத்தவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். பிறகு, மகதத்தின் அரியணையானது தவறான வகையில் நந்த அரசமரபைத் (அண். பொ.ஊ.மு. 345 – பொ.ஊ.மு. 322) தோற்றுவித்த மகாபத்ம நந்தனால் கைப்பற்றப்பட்டது. நந்த அரசமரபானது வட இந்தியாவின் பெரும் பகுதியை வென்றது. நந்த அரசமரபானது மௌரியப் பேரரசைத் (அண். பொ.ஊ.மு. 322 – பொ.ஊ.மு. 185) தோற்றுவித்த சந்திரகுப்த மௌரியரால் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டது.

பின் வந்த மன்னர்கள் குறித்து ஒரு மிகுந்த தெளிவற்ற தன்மையானது நிலவுகிறது. மகாபத்ம நந்தனுக்கு முந்தைய துல்லியமான மகத ஆட்சியாளர்களின் வரிசையானது தெளிவற்றதாக உள்ளது. பண்டைக்கால நூல்களில் (இவற்றில் பெரும்பாலானவை இக்காலத்திற்குப் பின்னர் பல நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டன) பலவாராகக் குறிப்பிட்டுள்ள படி, பல நேரங்களில் இந்நூல்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபடுகின்றன. மேலும், சில அறிஞர்களால் எடுத்துக் கொள்ளப்படும் "குறுகிய காலவரிசையிலிருந்து" வேறுபட்டதாக ஒரு "நீண்ட காலவரிசையும்" காணப்படுகிறது. புத்தர் மற்றும் மகாவீரரின் காலவரிசையானது தெளிவற்ற நிலையில் இருப்பதுடன் இது தொடர்புபடுத்தப்படுகிறது.[35]

"குறுகிய காலவரிசையைப்" பரிந்துரைக்கும் வரலாற்றாளர் யோவான் கீயின் கூற்றுப்படி, பிம்பிசாரர் பொ.ஊ.மு. 5ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலேயே[36] ஆட்சி செய்திருக்க வேண்டும். அஜாதசத்ரு பொ.ஊ.மு. 4ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்[37] ஆட்சி செய்திருக்க வேண்டும். அஜாதசத்ருவின் இறப்பிற்குப் பிறகு பதவிக்கு வந்த மன்னர்கள் குறித்துப் பெருமளவிலான தெளிவற்ற நிலை நிலவுவதாகக் கீ குறிப்பிடுகிறார். "அரசவைச் சூழ்ச்சிகள் மற்றும் கொலைகள்" நிறைந்திருந்ததன் காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் என்று கீ குறிப்பிடுகிறார். இக்காலத்தின் போது அரியணையானது அடிக்கடி கை மாறியது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் அரியணைக்கு உரிமை கோரினர். இந்நிலை மகாபத்ம நந்தன் அரியணையைக் கைப்பற்றும் வரையில் தொடர்ந்தது.[37]

ஆட்சியாளர்களின் பட்டியல்

பின் வரும் "நீண்ட கால வரிசையானது" பௌத்த நூலான மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்:[38]

ஹரியங்கா அரசமரபு (அண். பொ.ஊ.மு. 544 – பொ.ஊ.மு. 413)
மேலதிகத் தகவல்கள் ஆட்சியாளர், ஆட்சி (பொ.ஊ.மு.) ...
சிசுநாக அரசமரபு (அண். பொ.ஊ.மு. 413 – பொ.ஊ.மு. 345)
மேலதிகத் தகவல்கள் ஆட்சியாளர், ஆட்சி (பொ.ஊ.மு.) ...
நந்த அரசமரபு (அண். பொ.ஊ.மு. 345 – பொ.ஊ.மு. 322)
மேலதிகத் தகவல்கள் ஆட்சியாளர், ஆட்சி (பொ.ஊ.மு.) ...

மற்ற பட்டியல்கள்

புராணத்தின் படி பட்டியல்

இந்து நூல்கள், பெரும்பாலும் புராணங்கள், ஒரு மாறுபட்ட ஆட்சியாளர்களின் வரிசையைக் கொடுக்கின்றன:[39]

  • சிசுநாக அரசமரபு (360 ஆண்டுகள்)
    • சிசுநாகர் (40 ஆண்டுகள் ஆட்சி செய்தார்)
    • ககவர்ணர் (36 ஆண்டுகள்)
    • சேமதருமர் (20 ஆண்டுகள்)
    • சத்ரௌஜஸ் (29 ஆண்டுகள்)
    • பிம்பிசாரர் (28 ஆண்டுகள்)
    • அஜாதசத்ரு (25 ஆண்டுகள்)
    • தர்பகர் அல்லது தர்சகர் அல்லது ஹர்சகர் (25 ஆண்டுகள்)
    • உதயிண் (33 ஆண்டுகள்)
    • நந்திவர்த்தனர் (42 ஆண்டுகள்)
    • மகாநந்தி (43 ஆண்டுகள்)
  • நந்த அரசமரபு (100 ஆண்டுகள்)
சைன இலக்கியப் படி பட்டியல்

சைன மரபில் ஒரு குறுகிய பட்டியலானது தோன்றுகிறது. அது வெறுமனே சிரேனிகர் (பிம்பிசாரர்), குனிகர் (அஜாதசத்ரு), உதயிண் ஆகியோரைக் குறிப்பிட்டு, அவர்களுக்குப் பிறகு நந்த அரசமரபைக் குறிப்பிடுகிறது.[39]

மௌரியர் வம்சம் (பொ.ஊ.மு. 322–185)

Thumb
மௌரியப் பேரரசு

குப்த வம்சம் (பொ.ஊ. 240–600)

Thumb
குப்தப் பேரரசின் வளர்ச்சியைக் காட்டும் வரைபடம்: முதலாம் சந்திரகுப்தர் விரிவாக்கம் செய்த பகுதிகள் (இளம்பச்சை நிறம்-வடக்கு), சமுத்திரகுப்தர் விரிவாக்கம் செய்த பகுதிகள் (செம்மண் நிறம்-நடுப்பகுதி), இரண்டாம் சந்திரகுப்தர் விரிவாக்கம் செய்த பகுதிகள் (பச்சை நிறம்-மேற்கு)
  1. ஸ்ரீகுப்தர்
  2. கடோற்கசன்
  3. சமுத்திரகுப்தர்
  4. இராமகுப்தர்
  5. இரண்டாம் சந்திரகுப்தர் என்ற விக்கிரமாதித்தியன்
  6. முதலாம் குமாரகுப்தன்
  7. ஸ்கந்தகுப்தர்
  8. இரண்டாம் குமாரகுப்தர்
  9. புருகுப்தர்
  10. நரசிம்மகுப்தர்
  11. மூன்றாம் குமாரகுப்தர்
  12. விஷ்ணுகுப்தர்
Remove ads

மகதத்தைச் சேர்ந்த வரலாற்று நபர்கள்

Thumb
சைனத்தின் 24வது தீர்த்தங்கரரான மகாவீரர் மகதத்தில் ஒரு அரச குடும்பத்தில் பிறந்தார்.

பண்டைக்கால மகதப் பகுதியைச் சேர்ந்த முக்கிய நபர்களில் உள்ளடங்கியவர்கள் பின்வருமாறு:

  • சாரிபுத்திரர் – மகதத்தில் இராஜகிரகத்திற்கு அருகில் அமைந்திருந்த ஒரு கிராமத்தில் ஒரு செல்வச் செழிப்பு மிக்க பிராமணருக்குப் பிறந்தவர். புத்தரின் முதல் இரண்டு தலைமை ஆண் சீடர்களில் முதலாமவராகக் கருதப்படுபவர்.[40]
  • மௌத்கல்யாயனர் – மகதத்தின் கோலிதா கிராமத்தில் பிறந்தவர். புத்தரின் இரண்டு முதன்மைச் சீடர்களில் ஒருவர். இவரது இளமைக் காலத்தில் புத்தரைச் சந்திப்பதற்கு முன்னர் ஆன்மீகத்தைத் தேடிச் சுற்றித் அலைந்தார்.[41]
  • மகாவீரர்சைனத்தின் 24வது தீர்த்தங்கரர். பீகாரின் தற்போதைய வைசாலி மாவட்டத்தில் ஒரு அரச குலச் சத்திரியக் குடும்பத்தில் பிறந்தவர். தனது 30ஆம் வயதில் அனைத்து உலக வாழ்வையும் துறந்தார், துறவியானார். புத்தருக்குச் சற்று வயது மூத்த சமகாலத்தவராக இவர் கருதப்படுகிறார்.[42]
  • மைத்ரிபாதர் – ஒரு 11ஆம் நூற்றாண்டு இந்தியப் பௌத்த மகாசித்தர். மகாமுத்திரை மாற்றத்துடன் தொடர்புபடுத்தப்படுபவர். மகதத்தின் ஜாதகரணி கிராமத்தில் பிறந்தவர். நாளந்தா மற்றும் விக்கிரமசீலா ஆகியவற்றின் மடாலயங்களுடன் தொடர்புபடுத்தப்படுபவர்.[43]
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads