இலங்கை நாடாளுமன்றம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலங்கை நாடாளுமன்றம் அல்லது இலங்கைப் பாராளுமன்றம் (Parliament of Sri Lanka) 225 அங்கத்தவர்களைக் கொண்ட ஓரவையுடைய சட்டமன்றமாகும். இலங்கை நாடாளுமன்றம் 6 ஆண்டுக்கால தவணையைக் கொண்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தை ஒத்த முறையை கொண்டுள்ளது. சபாநாயகர் அல்லது அவர் சமூகமளிக்காத போது பிரதி சபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அல்லது குழுக்களின் பிரதித் தலைவர் சபைக்கு தலைமை தாங்குவார். நாட்டின் நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவர் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்க அல்லது கலைப்பதற்கு அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.
மொத்தம் 225 அங்கத்தவர்களில் 196 அங்கத்தவர்கள் 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து பொது வாக்கெடுப்பின் மூலமும், மிகுதி 29 அங்கத்தவர்கள் தேசிய அளவில் கட்சிகள் பெரும் வாக்கு எண்ணிக்கைக்கேற்ப கட்சிகளின் தேசியப் பட்டியலிருந்தும் தெரிவு செய்யப்படுகின்றனர்.



Remove ads
வரலாறு
கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி பிரித்தானிய இலங்கையின் முதலாவது சட்டமன்றம் இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை, மற்றும் இலங்கை சட்டவாக்கப் பேரவை ஆகியன 1833, மார்ச் 13 ஆம் நாள் நிறுவப்பட்டன. நிறைவேற்றுப் பேரவையில் குடியேற்றச் செயலாளர், இராணுவப் படைகளின் கட்டளை அதிகாரி, சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், பொருளாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். நிறைவேற்றுப் பேரவையின் கடமைகள் பொதுவாக இலங்கை ஆளுநருக்கு ஆலோசனை வழங்கல் மட்டுமே. ஆனாலும் இவ்வாலோசனைகளை ஆளுனர் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கவில்லை. ஆரம்பத்தில் பிரிந்த்தானியர் மட்டுமே உறுப்பினர்களாகவிருந்தனர், பின்னர் இலங்கையரும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். சட்டவாக்கப் பேரவைக்கு முதலில் 16 உறுப்பினர்களும், பின்னர் 49 உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை இலங்கையின் குடிமக்களில் குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.
1931 இல் சட்டவாக்கப் பேரவை இல்லாதொழிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக 101 உறுப்பினர்களுடன் இலங்கை அரசாங்க சபை நிறுவப்பட்டது. இதற்கான உறுப்பினர்கள் டொனமூர் அரசியலமைப்பின் மூலம் இன, சாதி, மதம், பால் என்ற வேறுபாடின்றி அனைத்து வயது வந்தவர்களுக்கும் முதற் தடவையாக தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டது.
1948 பெப்ரவரி 4 இல் இலங்கை விடுதலை அடைய முன்னர், 1947 ஆம் ஆண்டில் சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி, அரசாங்க சபை கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஈரவை நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையை ஒத்த செனட் சபை என்ற மேலவையும், பிரதிநிதிகள் சபை என்ற கீழவையும் அமைக்கப்பட்டன. கீழவைக்கான உறுப்பினர்கள் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரதிநிதிகள் சபையில் 101 உறுப்பினர்கள் (1960 இல் 157 ஆக அதிகரிக்கப்பட்டது) தேர்ந்தெடுக்கப்பட்டனர். செனட் சபைக்கான 30 உறுப்பினர்களில் 15 பேரை பிரதிநிதிகள் சபை தேர்ந்தெடுத்தது. ஏனைய 15 பேரையும் மகாதேசாதிபதி நியமித்தார்.
1971 அக்டோபர் 2 இல் செனட் சபை கலைக்கப்பட்டது. 1972 மார்ச் 22 இல் இலங்கை குடியரசானது. பிரதிநிதிகள் சபைக்குப் பதிலாக தேசிய அரசுப் பேரவை உருவாக்கப்பட்டது. இதற்கு 168 பேர் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1977 ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக தேசிய அரசுப் பேரவை கலைக்கப்பட்டு இலங்கை நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.
Remove ads
நாடாளுமன்றக் கட்டடங்கள்
பிரித்தானியக் குடியேற்ற அரசாங்கத்தின் கீழ், இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை, இலங்கை சட்டவாக்கப் பேரவை ஆகியன 1833 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட போது, இந்த அவைகள் கொழும்பில் உள்ள கோர்டன் கார்டன்சிற்கு எதிரில் உள்ள கட்டடம் ஒன்றில் கூடினர். இக்கட்டடம் தற்போது "குடியரசுக் கட்டடம்" என அழைக்கப்படுகிறது. இங்கு இப்போது இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அமைந்துள்ளது. 1930, சனவரி 29 இல் இலங்கைக்கான பிரித்தானிய ஆளுநர் சர் ஹெர்பர்ட் ஸ்டான்லி (1927–1931) காலிமுகத் திடலுக்கு எதிரே நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைத்தார். இங்கு இலங்கை அரசாங்க சபை (1931-1947), பிரதிநிதிகள் சபை (1947–1972), தேசிய அரசுப் பேரவை (1972–1977), இலங்கை நாடாளுமன்றம் (1977–1981) ஆகியவற்றின் அமர்வுகள் இடம்பெற்றன. இன்று இக்கட்டடம் அரசுத்தலைவரின் செயலகமாக இயங்குகிறது.
1979 சூலை 4 இல், அன்றைய பிரதமர் ஆர். பிரேமதாசா கொழும்பில் இருந்து 16 கி.மீ. கிழக்கே கோட்டே நகரில் தியவன்ன நதியில் அமைந்துள்ள 12 ஏக்கர் தீவில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்க நாடாளுமன்றத்தில் இருந்து அனுமதி பெற்றார். இக்கட்டடம் ஜெஃப்ரி பாவா என்பவரால் வடிவமைக்கப்பட்டு, இலங்கை அரசின் நிதியுதவியில் கட்டப்பட்டது. 1982 ஏப்ரல் 29 இல் இக்கட்டடத்தை அன்றைய அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா திறந்து வைத்தார்.
Remove ads
கடைசித் தேர்தல்
Remove ads
குறிப்புகள்
- இக்கூட்டணியில் அகில இலங்கை மக்கள் காங்கிரசு (இது அம்ப்பாறையில் தனித்துப் போட்டியிட்டது), சுதந்திர மக்கள் காங்கிரசு, ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை சுதந்திரக் கட்சி (தயாசிறி அணி), சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு (அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் இது தனித்துப் போட்டியிட்டது), தமிழ் முற்போக்குக் கூட்டணி (தொழிலாளர்களின் தேசிய ஒன்றியம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி) ஆகிய கடிகள் உள்ளன.
- புதிய சனநாயக முன்னணியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (நுவரெலியாவில் இது ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டது), மகாஜன எக்சத் பெரமுன, தேசிய ஐக்கியக் கூட்டணி, தேசிய காங்கிரசு, புதிய இலங்கை சுதந்திரக் கட்சி, இலங்கை சுதந்திரக் கட்சி (நிமல் அணி), இலங்கை மக்கள் கட்சி, இலங்கை பொதுசன முன்னணி (ரணில்-சார்பு), ஐக்கிய தேசியக் கட்சி.
- இக்கூட்டணியில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, சனநாயக இடது முன்னணி, சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களின் அணி, மவ்பிம சனதா கட்சி, பிவிதுரு எல உறுமய ஆகியன உள்ளன.
- இக்கூட்டணியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியன உள்ளன.
- The தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டது.
- முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads