ஈராக்கு
மேற்காசியாவிலுள்ள ஒரு நாடு From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஈராக்கு[a] (Iraq) என்பது மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப்பூர்வமாக ஈராக்கு குடியரசு[b] (Republic of Iraq) என்று அறியப்படுகிறது. இந்நாட்டின் தெற்கே சவூதி அரேபியா, வடக்கே துருக்கி, கிழக்கே ஈரான், தென் கிழக்கே பாரசீக வளைகுடா மற்றும் குவைத்து, தென்மேற்கே ஜோர்தான் மற்றும் மேற்கே சிரியா ஆகியவை எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாடு 4,38,317 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 4.60 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இது உலகிலேயே பரப்பளவின் அடிப்படையில் 58ஆவது மிகப் பெரிய நாடாகவும், 31ஆவது மிக அதிக மக்கள் தொகையையுடைய நாடாகவும் திகழ்கிறது. 80 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்குத் தாயகமாக உள்ள பகுதாதுவானது ஈராக்கின் தலைநகரம் மற்றும் மிகப் பெரிய நகரமாக உள்ளது.
பொ. ஊ. மு. 6ஆம் ஆயிரம் ஆண்டில் தொடங்கி ஈராக்கின் டைகிரிசு மற்றும் புறாத்து ஆறுகளுக்கு இடையிலான செழிப்பான சமவெளிகள் மெசொப்பொத்தேமியா என்று குறிப்பிடப்படுகின்றன. தொடக்க கால நகரங்கள், நாகரிங்கள் மற்றும், சுமேரியா, அக்காதியா, மற்றும் அசிரியா உள்ளிட்ட பேரரசுகளின் எழுச்சிக்கு இவை ஆதரவாக விளங்கின. நாகரிகத் தொட்டில் என்று அறியப்படும் மெசொப்பொத்தேமியாவானது எழுத்து முறைகள், கணிதங்கள், நீர் வழிப் பயணம், காலங்காட்டி, ஒரு நாட்காட்டி, வானியல், சக்கரம், பாய்மரக் கப்பல் மற்றும் ஒரு சட்டத் தொகுதி ஆகியவை உருவாக்கப்படுவதைக் கண்டது. பாரசீகம் மீதான இசுலாமியப் படையெடுப்புக்குப் பிறகு பகுதாதுவானது அப்பாசியக் கலீபகத்தின் தலைநகரமானது. இசுலாமியப் பொற்காலத்தின் போது ஓர் உலகளாவியப் பண்பாட்டு மற்றும் சிந்தனை சார் மையமாக உருவானது. ஞான வீடு போன்ற கல்வி நிலையங்களுக்குத் தாயகமாகத் திகழ்ந்தது. 1258இல் மங்கோலியர்களால் பகுதாது அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து தொற்று நோய்கள் மற்றும் தொடர்ச்சியான பேரரசுகளின் காரணமாக இப்பகுதியானது நீடித்த வீழ்ச்சியை எதிர் கொண்டது. மேலும், கிறித்தவம், யூதம், யசீதியம் மற்றும் மந்தேயியம் ஆகிய சமயங்களில் முக்கியத்துவத்தை ஈராக்கு கொண்டுள்ளது. ஓர் ஆழ்ந்த விவிலிய வரலாற்றை இந்நாடு கொண்டுள்ளது.[1][2][3][4][5]
1932இல் சுதந்திரம் அடைந்ததிலிருந்து நிலையற்ற தன்மை மற்றும் சண்டைகளின் காலங்களுடன் சேர்த்து குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் இராணுவ வளர்ச்சியின் காலங்களையும் ஈராக்கு கண்டுள்ளது. முதலாம் உலகப் போரின் முடிவு வரை ஈராக்கு உதுமானியப் பேரரசின் பகுதியாக இருந்தது. அதற்குப் பிறகு 1921ஆம் ஆண்டில் பிரித்தானியர்களால் ஈராக்கு நிறுவப்பட்டது. 1932இல் ஒரு சுதந்திரமான இராச்சியமாக இது மாற்றமடைந்தது. 1958இல் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து ஈராக்கு ஒரு குடியரசாக உருவானது. முதலில் இதற்கு அப்துல் கரிம் காசிம் தலைமை தாங்கினார். அதற்குப் பிறகு அப்துல் சலாம் ஆரிப் மற்றும் அப்துல் இரகுமான் ஆரிப் ஆகியோர் தலைமை தாங்கினார். பாத் கட்சியானது 1968ஆம் ஆண்டில் அதிகாரத்தைப் பெற்றது. முதலில் அகமது அசன் அல் பக்கர் மற்றும் பிறகு சதாம் உசேன் ஆகியோருக்குக் கீழ் ஒற்றைக் கட்சி அரசை நிறுவியது. 1980 முதல் 1988 வரை ஈரானுக்கு எதிராக மற்றும் பிறகு 1990இல் குவைத்துக்கு எதிரான போர்களுக்குச் சதாம் உசேன் தலைமை தாங்கினார். 2003ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையானது ஈராக்கு மீது படையெடுத்து ஆக்கிரமித்துக் கொண்டது. சதாம் உசேனைப் பதவியிலிருந்து நீக்கியது. கிளர்ச்சி மற்றும் பிரிவினை வன்முறைகளை இது தொடங்கி வைத்தது. ஈராக்கு போர் என்று அறியப்படும் இப்போரானது 2011ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. 2013 முதல் 2017 வரை இசுலாமிய அரசின் உருவாக்கம் மற்றும் தோல்வியுடன் ஈராக்கு மற்றொரு போரை எதிர் கொண்டது. 2011 முதல் 2013 வரையிலான ஓர் இசுலாமியக் கிளர்ச்சியின் ஒரு விளைவாக இந்த அரசு உருவானது. தற்காலத்தில் போருக்குப் பிந்தைய சண்டைகளானவை குறைவான அளவிலேயே தொடர்கின்றன. வளர்ந்து வரும் ஈரானின் செல்வாக்குடன் சேர்த்து 2003ஆம் ஆண்டிலிருந்து ஈராக்கின் நிலைத்தன்மைக்கு ஊறு விளைவிக்கக் கூடியவையாக இவை திகழ்கின்றன.[6][7]
ஒரு கூட்டாட்சி நாடாளுமன்றக் குடியரசாக ஈராக்கானது ஒரு வளர்ந்து வரும் நடுத்தர நிலை சக்தியாகக் கருதப்படுகிறது. ஒரு வேறுபட்ட மக்கள் தொகை, புவியியல் மற்றும் காட்டுயிர்களுக்கு இது தாயகமாக உள்ளது. பெரும்பாலான ஈராக்கியர் முசுலிம்கள் ஆவர். அதே நேரத்தில் கிறித்தவர், சரதுசர், மந்தேயியர், யசீதியர், யர்சனியர் மற்றும் யூதர்கள் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க அளவிலான சிறுபான்மையினருக்கும் இந்நாடு தாயகமாக உள்ளது. ஈராக்கியர் இன ரீதியாக வேறுபட்டவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அரேபியர் ஆவர். மேலும், குர்தியர், துருக்மென், யசீதியர், அசிரியர், ஆர்மீனியர், தோமுகர், பாரசீகர் மற்றும் சபாகியர் ஆகியோரும் காணப்படுகின்றனர். அரபியும், குர்தியும் ஈராக்கின் அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன. அதே நேரத்தில், சுரேத், துருக்கியம் மற்றும் மந்தேயியம் ஆகியவை மாகாண அளவில் பேசப்படுகின்றன. உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் வளங்களில் ஒன்றை ஈராக்கு கொண்டுள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தொழில்துறையையும் கொண்டுள்ளது. இதன் வேளாண்மை மற்றும் சுற்றுலாவுக்காகவும் கூட இந்நாடு பிரபலமானதாக உள்ளது. தற்போது ஈராக்கு அயல் நாட்டு உதவியுடன் மீண்டும் கட்டமைக்கப்பட்டு வருகிறது.[8][9][10][11][12][13][14][15][16]
Remove ads
பெயர்க் காரணம்
ஈராக்கு என்ற பெயருக்கான ஏராளமான வேர்ச் சொல் பரிந்துரைகள் உள்ளன. ஒரு பரிந்துரையானது சுமேரிய நகரமான உரூக்கைக் குறிப்பிடுகிறது, இவ்வாறாக இறுதியாக இப்பெயர் சுமேரியப் பூர்வீகத்தை உடையதாக உள்ளது.[17][18] மற்றொரு சாத்தியமான பெயர்க் காரணமானது நடுப் பாரசீகச் சொல்லான எராக் (பொருள்: "தாழ்நிலங்கள்") என்பதிலிருந்து கிடைக்கப் பெறுகிறது.[19] ஓர் அரபு நாட்டுப்புற பெயர்க் காரணமானது "ஆழமாக வேரூன்றிய, நன்றாக நீர் பெற்ற; செழிப்பான" என்ற பொருளைத் தருகிறது.[20]
நடுக் காலத்தின் போது 'ஈராக் அரபி' ("அரேபிய ஈராக்கு") என்ற பெயரானது கீழ் மெசொப்பொத்தேமியாவையும், 'ஈராக் அசாமி' ("பாரசீக ஈராக்கு")[21] என்ற பெயரானது தற்போதைய நடு மற்றும் மேற்கு ஈரானில் அமைந்திருந்த பகுதியைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது.[21] இச்சொல்லானது வரலாற்று ரீதியாக அம்ரின் மலைகளுக்குத் தெற்கே இருந்த சமவெளியை உள்ளடக்கியிருந்தது. ஆனால், நவீன கால ஈராக்கின் நிலப்பரப்பில் வடக்குக் கோடி மற்றும் மேற்குக் கோடிப் பகுதிகளை உள்ளடக்கியிருக்கவில்லை.[22] 19ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதிக்கு முன்னர் எய்ரகா அரேபிகா என்ற சொல்லானது ஈராக்கைக் குறிப்பதற்காகப் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது.[23][24]
சவத் என்ற சொல்லும் கூட டைகிரிசு மற்றும் புறாத்து ஆறுகளின் வண்டல் சமவெளி பகுதியைக் குறிக்க தொடக்க கால இசுலாமிய காலங்களின் போது பயன்படுத்தப்பட்டது.
ஓர் அரபிச் சொல்லாக ஈராக் (عراق) என்ற சொல்லின் பொருளானது "ஓரம்", "கரை", அல்லது "விளிம்பு" என்று பொருள்படுகிறது. நாட்டுப்புற பெயர்க் காரணத்தின் படி இப்பெயரானது அல்-ஜசீரா பீடபூமியின் தெற்கு மற்றும் கிழக்கில் அமைந்துள்ள பகுதியைப் போல "செங்குத்தான சரிவு" என்று விளக்கம் பெறுகிறது. "அல்-ஈராக் அரபி" பகுதியின் வடக்கு மற்றும் மேற்கு விளிம்புகளை இப்பீடபூமியானது அமைக்கிறது.[25]
அரபி உச்சரிப்பானது [ʕiˈrɑːq] ஆகும். ஆங்கிலத்தில் இது /ɪˈrɑːk/ (ஆக்சுபோர்டு ஆங்கில அகராதியில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரே ஒரு உச்சரிப்பாகவும், மெரியம்-வெப்ஸ்டர் இணைய அகராதியில் முதல் உச்சரிப்பாகவும் இது உள்ளது[26]) அல்லது /ɪˈræk/ (மக்கேரி அகராதி, அமெரிக்கப் பாரம்பரிய அகராதி[27] மற்றும் ரேண்டம் ஹவுஸ் அகராதி ஆகியவற்றில் இப்பெயர் முதலாவதாக உள்ளது[28]) என்று உச்சரிக்கப்படுகிறது.
பிரித்தானியர் 23 ஆகத்து 1921 அன்று அசேமிய மன்னராக ஈராக்கின் முதலாம் பைசலை அமர்த்திய போது இந்நாட்டின் அதிகாரப்பூர்வ ஆங்கிலப் பெயரானது மெசொப்பொத்தேமியாவில் இருந்து உள்நாட்டுப் பெயரான ஈராக்குக்கு மாற்றப்பட்டது.[29] சனவரி 1992இலிருந்து அரசுக்கான அதிகாரப்பூர்வ பெயர் "ஈராக்கு குடியரசு" (சும்கூரியத் அல்-ஈராக்) ஆகும். இது 2005ஆம் ஆண்டு அரசியலமைப்பின் படி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.[30][31][32]
Remove ads
வரலாறு

தொடக்க காலத்தில் அறியப்பட்ட நாகரிகமான சுமேரிய நாகரிகத்திற்குத் தாயகமாக இருந்ததால் நவீன ஈராக்கை உள்ளடக்கிய பகுதிக்கு "நாகரிகத்தின் தொட்டில்" என்ற பொதுவான பெயர் வழங்கப்படுகிறது. செப்புக் காலத்தில் (உபைதுகள் காலம்) தெற்கு ஈராக்கின் செழிப்பான டைகிரிசு-புறாத்து ஆற்றுப் பள்ளத்தாக்கில் சுமேரிய நாகரிகமானது உருவானது.[35]
இங்கு தான் பொ. ஊ. மு. 4ஆவது ஆயிரம் ஆண்டின் பிற்பகுதியில் உலகின் முதல் அறியப்பட்ட எழுத்து முறையானது உருவானது.[36] சக்கரத்தைப் பயன்படுத்தியதாக மற்றும் நகர அரசுகளை உருவாக்கியதாக முதன் முதலில் அறியப்பட்டவர்களாகவும் கூட சுமேரியர்கள் திகழ்ந்தனர். கணிதம், வானியல், சோதிடம், எழுதப்பட்ட சட்டம், மருத்துவம் மற்றும் அமைப்பு ரீதியிலான சமயம் ஆகியவை குறித்த முதன் முதலில் அறியப்பட்ட ஆதாரத்தை அவர்களது எழுத்துக்கள் பதிவு செய்துள்ளன.[35] சுமேரிய மொழியானது ஒரு தனி மொழியாகும். எரிது, பத்-திபிரா, லார்சா, சிப்பர், சுருப்பக், உரூக், கிஷ், ஊர், நிப்பூர், லகாசு, கிர்சு, உம்மா, அமாசி, அதாப், மாரி, இசின், குதா, தெர் மற்றும் அக்சக் ஆகியவை தொடக்க கால சுமேரிய காலத்தைச் சேர்ந்த முதன்மையான நகர அரசுகள் ஆகும்.[35]
அசூர், அர்பேலா (நவீன அர்பில்) மற்றும் அர்ரபா (நவீன கிர்குக்) போன்ற வடக்கிலிருந்த நகரங்களும், 25-ஆம் நூற்றாண்டிலிருந்து அசிரியா என்று அழைக்கப்பட்டு வந்த இப்பகுதியில் அமைந்திருந்தன. எனினும், இக்காலகட்டத்தில் அவை சுமேரியர்களால் ஆட்சி செய்யப்பட்ட நிர்வாக மையங்களாகத் திகழ்ந்தன.
வரலாற்றுக்கு முந்தைய காலம்
பொ. ஊ. மு. 65,000 மற்றும் 35,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வடக்கு ஈராக்கானது ஒரு நியண்டர்தால் பண்பாட்டுக்குத் தாயகமாகத் திகழ்ந்தது. இந்தப் பண்பாட்டின் தொல்லியல் எச்சங்களானவை சானிதர் குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[37] இப்பகுதியானது தோராயமாக பொ. ஊ. மு. 11,000-ஆம் ஆண்டிலிருந்து காலமிடப்படும் புதிய கற்காலத்துக்கு முந்தைய குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சமாதிகளுக்கும் அமைவிடமாக உள்ளது.[38]
தோராயமாக பொ. ஊ. மு. 10,000-ஆம் ஆண்டிலிருந்து வளமான பிறை பிரதேசத்தின் ஒரு பெரிய பகுதியுடன் சேர்த்து ஈராக்கானது மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) என்று அறியப்படும் ஒரு புதிய கற்காலப் பண்பாட்டுக்கான ஒரு மையமாகத் திகழ்ந்தது. இப்பகுதியில் வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் முதல் முறையாகத் தோன்றின. ஈராக்கில் இக்காலகட்டமானது மிலேபாத் மற்றும் நெம்ரிக் 9 போன்ற தளங்களில் அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வந்த புதிய கற்கால காலகட்டமான மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) செவ்வக வடிவ வீடுகளால் பிரநிதித்துவப்படுத்தப்படுகிறது. மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்கால காலகட்டத்தில் கல், ஜிப்சம் மற்றும் எரிக்கப்பட்ட சுண்ணாம்புக் கல் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட கொள்கலன்களை மக்கள் பயன்படுத்தினர். அனத்தோலியாவிலிருந்து கிடைக்கப் பெறும் ஒபிசிதிய கருவிகளின் கண்டுபிடிப்பானது இப்பகுதியில் தொடக்க கால வணிக உறவு முறைகளுக்கு ஆதாரமாக விளங்குகிறது.
மனித குல வளர்ச்சியின் மேற்கொண்ட முக்கியமான தளங்கள் சர்மோவில் (அண். பொ. ஊ. மு. 7,100) அமைந்துள்ளன.[38] ஹலாப் பண்பாடு மற்றும் உபைதுகள் காலத்தின் முன் மாதிரி தளமான தெல் அல்-உபைது (தோராயமாக பொ. ஊ. மு. 6,500 மற்றும் பொ. ஊ. மு.3,800 க்கு இடைப்பட்ட காலம்) ஆகியவற்றைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தளங்கள் காணப்படுகின்றன.[39] வேளாண்மை, கருவிகள் தயாரித்தல் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றில் எப்போதுமே அதிகரித்து வந்த மேம்பாட்டு நிலைகளை முறையே இக்காலகட்டங்கள் காட்டுகின்றன.
வெண்கலக் காலம்
பொ. ஊ. மு. 26-ஆம் நூற்றாண்டில் லகாசுவின் என்னதும் என்ற மன்னன் குறுகிய காலத்திற்கு நீடித்திருந்த பேரரசை உருவாக்கினார். பிறகு உம்மாவைச் சேர்ந்த பூசாரி மன்னனான லூகால்-சேச்-சி இப்பகுதியில் லகாசு அரசமரபின் முதன்மை நிலையைப் பதவியிலிருந்து தூக்கி எறிந்தார். பிறகு உரூக்கைக் கைப்பற்றினார். அதைத் தன்னுடைய தலைநகரமாக்கினார். பாரசீக வளைகுடாவிலிருந்து நடுநிலக் கடல் வரை விரிவடைந்திருந்த ஒரு பேரரசை தான் அமைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.[40] இக்காலகட்டத்தின் போது இருந்து தான் கில்கமெஷ் காப்பியமானது தோன்றுகிறது. இக்காப்பியத்தில் ஊழிவெள்ளம் குறித்த ஒரு கதையும் உள்ளடங்கியுள்ளது.[41] அக்காதின் தோற்றம் மற்றும் அமைவிடமானது இன்னும் தெளிவாக அறியப்படாததாக உள்ளது. அந்த அரசின் மக்கள் கிழக்கு செமித்திய மொழிகளில் ஒன்றான அக்காதிய மொழியைப் பேசினர்.[42] 29-ஆம் மற்றும் 24-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் அசிரியா, எகல்லதும், இசின் மற்றும் லார்சா உள்ளிட்ட அக்காதிய மொழி பேசிய அரசமரபுகளை ஈராக்குக்குள் இருந்த குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இராச்சியங்களும், நகர அரசுகளும் பெறத் தொடங்கின.

எனினும், சுமேரியர்கள் தொடர்ந்து பொதுவாக ஆதிக்கம் மிகுந்தவர்களாக நடு ஈராக்கின் அக்காத் நகரத்தை அடிப்படையாகக் கொண்ட அக்காதியப் பேரரசு (2335 - 2124 பொ. ஊ. மு.) தோன்றும் வரை நீடித்திருந்தனர். அக்காதியப் பேரரசை சர்கோன் நிறுவினார். தெற்கு மற்றும் நடு ஈராக்கிலிருந்த அனைத்து நகர அரசுகளையும் வென்றார். அசிரியாவின் மன்னர்களை அடி பணிய வைத்தார். இவ்வாறாக சுமேரியர்களையும், அக்காதியர்களையும் ஒரே அரசில் ஒன்றிணைத்தார். நீண்ட காலம் நீடித்திருந்த சுமேரிய நாகரிகத்திற்குப் பிறகு மெசொப்பொத்தேமியாவில் தோன்றிய முதல் பண்டைக்காலப் பேரரசாக அக்காதியப் பேரரசு திகழ்ந்தது. நவீன கால ஈரானின் குதியம் மற்றும் ஈலாம் ஆகிய பகுதிகளை வென்றதற்குப் பிறகு, மற்றும் லெவண்டின் அமோரிய மக்கள் மற்றும் எப்லா இராச்சியத்தவர் ஆகியோருக்கு எதிரான ஒரு முழுமையான வெற்றியாக அமைந்திராத வெற்றிகளைப் பெற்றதற்குப் பிறகு தன்னுடைய பேரரசை விரிவாக்க இவர் தொடங்கினார். அக்காதியப் பேரரசானது அநேகமாக பொ. ஊ. மு. 22-ஆம் நூற்றாண்டில் வீழ்ந்தது என்று கருதப்படுகிறது. இப்பேரரசு அமைக்கப்பட்டு 180 ஆண்டுகளுக்குள்ளாகவே இது வீழ்ச்சியடைந்தது. மூன்றாவது ஊர் வம்சம் ஆட்சிக்கு வரும் வரை எந்த ஒரு முக்கியமான ஏகாதிபத்திய அதிகார அமைப்பும் இல்லாதால் ஓர் "இருண்ட காலமானது" தொடங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது. இப்பகுதியின் அரசியல் அமைப்பானது நகர அரசுகளால் நிர்வகிக்கப்பட்ட முந்தைய அரசியல் அமைப்பிற்குப் பின் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[43]
பொ. ஊ. மு. 22-ஆம் நூற்றாண்டின் பிந்தைய பகுதியில் அக்காதியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு ஈராக்கின் தெற்குப் பகுதியை குதியர்கள் சில தசாப்தங்களுக்கு ஆக்கிரமித்திருந்தனர். அதே நேரத்தில், அசிரியா வடக்கில் அதன் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்டியது.[44][45] பெரும்பாலான தெற்கு மெசொப்பொத்தேமியாவானது மீண்டும் ஒற்றை ஆட்சியாளருக்குக் கீழ் ஒன்றிணைக்கப்பட்டது. இது மூன்றாவது ஊர் அரசமரபின் காலத்தின் போது ஒன்றிணைக்கப்பட்டது. குறிப்பாக ஏராளமான கட்டமைப்புப் பணிகளைச் செய்த மன்னனான சுல்கியின் ஆட்சியின் போது இவ்வாறு ஒன்றிணைக்கப்பட்டது. இவரது தந்தை ஊர்-நம்முவால் தொடங்கப்பட்ட ஊரின் தொல் பூசைமுகட்டின் கட்டமைப்பை முடித்து வைத்தது உள்ளிட்டவை இவரின் சாதனைகளில் சிலவாகும்.[46]
பொ. ஊ. மு. 1792-ஆம் ஆண்டில் ஓர் அமோரிய ஆட்சியாளரான அம்முராபி ஆட்சிக்கு வந்தார். பாபிலோனை ஒரு முதன்மையான நகரமாகக் கட்டமைக்கும் பணியை உடனடியாகத் தொடங்கினார். அதன் மன்னனாகத் தன்னைத் தானே அறிவித்தார். அம்முராபி தெற்கு மற்றும் நடு ஈராக்கு, மேலும் கிழக்கே ஈலாம் வரையிலும், மேற்கே மரி வரையிலும் இருந்த பகுதிகளை வென்றார். இப்பகுதி மீதான ஆதிக்கத்திற்காக அசிரிய மன்னனான இசுமே-தகனுடன் எதிர்பார்த்ததைவிட நீண்ட காலம் நீடித்த ஒரு போரில் பிறகு ஈடுபட்டார். குறுகிய காலம் நீடித்திருந்த பாபிலோனியப் பேரரசை உருவாக்கினார். இறுதியாக இசுமே-தகனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த மன்னனை இவர் வென்றார். அசிரியா மற்றும் அதன் அனத்தோலியக் குடியேற்றங்களைத் தன் ஆட்சிக்குட்பட்டதாக்கினார். பொ. ஊ. மு. 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வாக்கில் சுமேரியர்கள் தங்களது பண்பாட்டு அடையாளத்தை இழந்தனர். ஒரு தனித்துவமான மக்களாக அவர்களது நிலையானது முடிவுக்கு வந்தது.[47][48][49] அம்முராபியின் காலத்திலிருந்து தான் தெற்கு ஈராக்கானது பாபிலோனியா என்று அறியப்படத் தொடங்கியது. அதே நேரத்தில், ஈராக்கின் வடக்குப் பகுதியானது ஏற்கனவே நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னராகவே அசிரியாவாக ஒன்றிணைந்திருந்தது. எனினும், அம்முராபியின் பேரரசானது குறுகிய காலமே நீடித்திருந்தது. அவரது இறப்பிற்குப் பிறகு சீக்கிரமே வீழ்ச்சியடைந்தது. அசிரியா மற்றும் தெற்கு ஈராக்கு ஆகிய இரு பகுதிகளும் சீலந்து அரசமரபு என்ற அரசமரபின் வடிவத்தில் உள்நாட்டு அக்காதியர்களின் கைகளுக்குள் மீண்டும் வந்தது.

இதற்குப் பிறகு மற்றுமொரு அயல்நாட்டு மக்களான, ஒரு தனி மொழி பேசிய மக்களாகிய காசியர் பாபிலோனியாவின் கட்டுப்பாட்டை பறித்தனர்.[50] ஈராக்கானது இக்காலகட்டத்திலிருந்து மூன்று அரசியலமைப்புகளாகப் பிரிந்தது. வடக்கே அசிரியா, தெற்கு நடுப் பகுதியில் காசியரின் பாபிலோனியா மற்றும் தொலைதூரத் தெற்கில் சீலந்து அரசமரபு என்று பிரிந்திருந்தது. சீலந்து அரசமரபானது அண். பொ. ஊ. மு. 1380-ஆம் ஆண்டில் காசிய பாபிலோனியாவால் இறுதியாக வெல்லப்பட்டது. காசியர் எவ்வாறு தோன்றினர் என்பது இன்று வரை தெளிவாகத் தெரியவில்லை.[51][52]
மத்திய கால அசிரியப் பேரரசானது (1365–1020 பொ. ஊ. மு.) அறியப்பட்ட உலகத்திலேயே மிக சக்தி வாய்ந்த நாடாக அசிரியா வளர்ச்சியடைவதைக் கண்டது. முதலாம் அசூர்-உபைல்லித்தின் படையெடுப்புகளுடன் தொடங்கி அசிரியாவானது எதிரி குர்ரிய-மித்தானிப் பேரரசை அழித்தது, இட்டைட்டு பேரரசின் பெருமளவிலான நிலப்பரப்புகளைத் தனக்கென இணைத்துக் கொண்டது, காசியரிடமிருந்து வடக்கு பாபிலோனியாவை இணைத்துக் கொண்டது, இப்பகுதியிலிருந்து எகிப்தியப் பேரரசை வெளியேறச் செய்தது, ஈலாம், பிரிசியர், கானானியர், போனீசியர், சிலிசியர், குதியர், தில்முனியர் மற்றும் அரமேயர் ஆகியோரைத் தோற்கடித்தது.[53] இதன் உச்சபட்ச அளவில் மத்திய கால அசிரியப் பேரரசானது காக்கேசியா முதல் தில்முன் (நவீன பகுரைன்) வரையிலும், போனீசியாவின் நடுநிலக் கடல் கடற்கரைகளிலிருந்து ஈரானின் சக்ரோசு மலைத்தொடர் வரையிலும் பரவியிருந்தது. பொ. ஊ. மு. 1235-இல் அசிரியாவின் முதலாம் துகுல்தி-நினுர்த்தா பாபிலோனின் அரியணையைக் கைப்பற்றினார்.
வெண்கலக்கால வீழ்ச்சியின் (1200–900 பொ. ஊ. மு.) போது பாபிலோனியா குழப்பத்தில் மூழ்கியிருந்தது. அசிரியா மற்றும் ஈலாமால் நீண்ட காலத்திற்கு ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது. அசிரியா மற்றும் ஈலாமால் காசியர்கள் அதிகாரத்திலிருந்து துரத்தப்பட்டனர். முதல் முறையாக பாபிலோனியாவானது உள்ளூர் தெற்கு மெசொப்பொத்தேமிய மன்னர்கள் ஆள்வதற்கு இது அனுமதியளித்தது. பொதுவாக அசிரியர் அல்லது ஈலாமிய ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்தவர்களாக இம்மன்னர்கள் இருந்தாலும் இவ்வாறான நிலை இருந்தது. எனினும், இந்த அக்காதிய மன்னர்களால் தெற்கு ஈராக்குக்குள் நுழைந்த இந்த மேற்கு செமித்திய மொழிகளைப் பேசிய புலம் பெயர்ந்தவர்களின் புதிய அலைகளைத் தடுக்க இயலவில்லை. பொ. ஊ. மு. 11-ஆம் நூற்றாண்டின் போது லெவண்டிலிருந்து பாபிலோனியாவிற்குள் அரமேயர்களும், சுதீயர்களும் நுழைந்தனர். இதைத் தொடர்ந்து பொ. ஊ. மு. 10-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 9-ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதி வரை சால்தியர்கள் நுழைந்தனர்.[54] எனினும், சால்தியர்கள் உள்ளூர் மக்கள் தொகைக்குள் உள்ளிழுத்து கொள்ளப்பட்டனர். பாபிலோனியாவின் பூர்வீக மக்கள் தொகையுடன் இணைந்தனர்.[55]
இரும்புக் காலம்
அசிரியாவில் ஒப்பீட்டளவில் வீழ்ச்சிக் காலத்திற்குப் பிறகு புது அசிரியப் பேரரசின் (935–605 பொ. ஊ. மு.) வளர்ச்சியுடன் அசிரியாவானது மீண்டும் ஒரு முறை விரிவடையத் தொடங்கியது. உலக ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இதன் புவிசார் அரசியல் ஆதிக்கம் மற்றும் சித்தாந்தத்தின் காரணமாக புது அசிரியப் பேரரசானது முதல் உலகப் பேரரசாகத் திகழ்ந்ததாக பல ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகிறது.[56][57] தன் உச்ச பட்ச அளவில் இப்பேரரசானது உலகின் மிக வலிமையான இராணுவ சக்தியாகத் திகழ்ந்தது.[58] கிழக்கே ஈரான், பார்த்தியா மற்றும் ஈலாமிலிருந்து மேற்கே சைப்பிரசு மற்றும் அந்தியோக்கியா வரையிலும், வடக்கே காக்கேசியாவிலிருந்து தெற்கே எகிப்து, நூபியா மற்றும் அறபுத் தீபகற்பம் வரையிலும் விரிவடைந்திருந்த ஒரு பேரரசுக்கு மையமாக ஈராக்கு உருவானது.[59] இக்காலகட்டத்தின் போது தான் கிழக்கு அரமேய மொழியின் அக்காதிய தாக்கம் பெற்ற வடிவமானது அசிரியர்களால் அவர்களது இணைப்பு மொழியாகப் பின்பற்றப்படத் தொடங்கியது. அசிரியா மற்றும் பாபிலோனியா ஆகிய இரு பகுதிகளின் பொது மக்களின் மொழியாக அக்காதிய மொழியை மெசொப்பொத்தேமிய அரமேயமானது இடமாற்றத் தொடங்கியது. இந்த மொழியின் வழி வந்த பேச்சு வழக்குகளானவை தெற்கு ஈராக்கின் மாந்தேயியர் மற்றும் வடக்கு ஈராக்கின் அசிரியர்கள் ஆகியோர் மத்தியில் இன்றும் எஞ்சியுள்ளது. அரேபியர்களும், சால்தியர்களும் எழுதப்பட்ட வரலாற்றிலேயே முதல் முறையாக (அண். 850 பொ. ஊ. மு.) மூன்றாம் சல்மனேசரின் ஆண்டுத் தொகுப்பேடுகளில் குறிப்பிடப்பட்டனர்.

புது அசிரியப் பேரரசானது பெரும் பண்பாட்டு முக்கியத்துவத்தின் ஒரு மரபை விட்டுச் சென்றுள்ளது. இதற்குப் பிறகு வந்த பிந்தைய பேரரசுகளுக்கு ஒரு முன் மாதிரியாக புது அசிரியப் பேரரசால் நிறுவப்பட்ட அரசியல் அமைப்புகளானவை உருவாயின. பிந்தைய பேரரசுகளில் உலக ஆதிக்கத்திற்கான உரிமைகள் என்ற இதே போன்ற யோசனைகளுக்கு அகத்தூண்டுதலாக புது அசிரிய மன்னர்களால் அறிவிக்கப்பட்ட பிரபஞ்ச ஆட்சி என்ற சித்தாந்தமானது திகழ்ந்தது. வடக்கு மெசொப்பொத்தேமியாவில் பிந்தைய நாட்டுப்புறக் கதைகள் மற்றும் இலக்கியப் பாரம்பரியங்களில் ஒரு முக்கியப் பகுதியாக புது அசிரியப் பேரரசானது உருவானது. யூதம் மற்றும் அதிலிருந்து கிறித்தவம் மற்றும் இசுலாம் ஆகிய சமயங்களும் புது அசிரியப் பேரரசின் ஆட்சிக் காலத்தால் பெருமளவுக்கு தாக்கம் பெற்றுள்ளன. ஏராளமான விவிலியக் கதைகளானவை முந்தைய அசிரியத் தொன்மக் கதைகள் மற்றும் வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்டவையாகத் தோன்றுகிறது. தொடக்க கால யூத இறையியல் மீதான அசிரியத் தாக்கமானது அதிகமானதாக இருந்தது. புது அசிரியப் பேரரசானது தற்காலத்தில் புது அசிரிய இராணுவத்தின் மட்டு மீறிய மிருகத்தன்மை என்ற ஊகத்திற்கு முதன்மையாக நினைவுபடுத்தப்பட்டாலும் பிற நாகரிகங்களுடன் ஒப்பிடும் போது அசிரியர்கள் மட்டு மீறிய மிருகத் தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை.[60][61]
பொ. ஊ. மு. 7-ஆம் நூற்றாண்டில் இந்தப் பகுதியில் ஒரு தொடர்ச்சியான மிருகத்தனமான உள்நாட்டுப் போர்களின் காரணமாக அசிரியப் பேரரசானது தன்னைத் தானே பிரித்துக் கொண்டது. இதன் முந்தைய அடிபணிந்த பகுதிகளான பாபிலோனியா, சால்தியர், மீடியர், பாரசீகர்கள், பார்த்தியர்கள், சிதியர்கள் மற்றும் சிம்மெரியர்களின் ஒரு கூட்டணியானது அசிரியாவைத் தாக்கும் அளவுக்குத் தனக்கு தானே பலவீனமடைந்த நிலைக்குச் சென்று விட்டது. பொ. ஊ. மு. 605-இல் இதன் பேரரசானது இறுதியாக வீழ்த்தப்பட்டது.[62] அசிரியாவுக்குப் பிறகு குறுகிய காலமே நீடித்திருந்த புது பாபிலோனியப் பேரரசானது (620–539 பொ. ஊ. மு.) ஆட்சிக்கு வந்தது. இது தனக்கு முன்னிருந்த பேரரசின் அளவு, சக்தி அல்லது நீண்ட ஆயுட்காலத்தை அடைவதில் தோல்வியடைந்தது. எனினும், லெவண்ட், கானான், அரேபியா, இசுரேல் மற்றும் யூதேயா ஆகிய பகுதிகள் மீது இது ஆதிக்கம் செலுத்தியது. எகிப்தைத் தோற்கடித்து. தொடக்கத்தில் பாபிலோனானது சால்தியர்களால் ஆட்சி செய்யப்பட்டது. பொ. ஊ. மு. 10-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 9-ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் இப்பகுதிக்கு புலம் பெயர்ந்த இந்த சால்தியர்களின் மிகச் சிறந்த மன்னனான இரண்டாம் நெபுகாத்நேசர் பாபிலோனின் மிகச் சிறந்த மன்னனாக அம்முராபியுடன் போட்டியிடும் நிலைக்கு ஆட்சி செய்தார். எனினும், பொ. ஊ. மு. 556 வாக்கில் சால்தியர்கள் அசிரியராகப் பிறந்த நபோனிதிசு மற்றும் அவரது மகன் மற்றும் குழந்தை மன்னன் பெல்சசாரால் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.[சான்று தேவை]

பாபிலோனுக்குப் பேரரசு மாற்றப்பட்டதானது முதல் முறையாக, பொதுவாக தெற்கு மெசொப்பொத்தேமியாவானது முதல் முறையாக அம்முராபியின் பழைய பாபிலோனியப் பேரரசு வீழ்ச்சியடைந்த காலத்திலிருந்து பண்டைய அண்மைக் கிழக்கை ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு இந்நகரமானது வளர்ச்சியடைந்ததைக் கண்டது. புது பாபிலோனிய ஆட்சிக் காலமானது அதற்கு முன்னர் இருந்திராத அளவுக்குப் பொருளாதார மற்றும் மக்கள் தொகை வளர்ச்சி மற்றும், பண்பாடு மற்றும் கலை வேலைப்பாடுகளின் ஒரு மறுமலர்ச்சியைக் கண்டது. நெபுலேசருக்குப் பிறகு இரண்டாம் நெபுகாத்நேசர் பொ. ஊ. மு. 605-ஆம் ஆண்டு பதவிக்கு வந்தார். நெபுகாத்நேசர் பெற்ற பேரரசானது உலகிலேயே மிக சக்தி வாய்ந்த பேரரசுகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. சியாக்சரேசுவின் மகள் அல்லது பேத்தியான அமிதிசுவைத் திருமணம் செய்ததன் மூலம் மீடியர்களுடனான தன்னுடைய தந்தையின் கூட்டணியை இவர் சீக்கிரமே மீண்டும் வலுப்படுத்தினார். பண்டைய ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான புகழ்பெற்ற பாபிலோனின் தொங்கும் தோட்டமானது நெபுகாத்நேசரால் அவரது மனைவிக்காக கட்டப்பட்டது என சில ஆதாரங்கள் பரிந்துரைக்கின்றன (இந்தத் தோட்டங்கள் உண்மையிலேயே அமைந்திருந்தனவா என்பது விவாதத்திற்குரியதாக உள்ளது). நெபுகாத்நேசரின் 43 ஆண்டு கால ஆட்சியானது பாபிலோனுக்கு ஒரு பொற்காலத்தைக் கொண்டு வந்தது. மத்திய கிழக்கில் மிக சக்தி வாய்ந்த இராச்சியமாக இது உருவானது.[63]
பண்டைக் காலம்
பொ. ஊ. மு. 6-ஆம் நூற்றாண்டில் அண்டை நாடான பாரசீகத்தின் மன்னனான பேரரசர் சைரசு ஒபிசு யுத்தத்தில் புது பாபிலோனியப் பேரரசைத் தோற்கடித்தார். மெசொப்பொத்தேமியாவானது அகாமனிசியப் பேரரசுக்குள் உள்ளிழுத்துக் கொள்ளப்பட்டது. அகாமனிசியர்கள் பாபிலோனைத் தங்களது முதன்மையான தலைநகரமாக உருவாக்கினார். இதே காலகட்டத்தின் வாக்கில் சால்தியர்கள் மறைந்து விட்டனர். அசிரியா மற்றும் பாபிலோனியா ஆகிய இரு அரசுகளுமே அகாமனிசிய ஆட்சியின் கீழ் நீடித்து, செழித்திருந்தாலும் இவ்வாறாக அவர்கள் மறைந்தனர். அகாமனிசிய மன்னர்கள் அசிரிய ஏகாதிபத்திய அரமேயத்தை தம் பேரரசின் மொழியாகத் தக்க வைத்துக் கொண்டனர். இதனுடன் சேர்த்து அசிரிய ஏகாதிபத்தியக் கட்டடக்கலை, மற்றும் கலை மற்றும் கட்டடக்கலையின் ஓர் அசிரியப் பாணி ஆகியவற்றையும் தக்க வைத்துக் கொண்டனர்.[சான்று தேவை]
Remove ads
வரலாறு
- கிமு 4வது ஆயிரவாண்டு முதல் கிமு 3-வது ஆயிரவாண்டு வரை செப்புக் காலத்தில், புறாத்து ஆறு மற்றும் டைகிரிசு ஆற்றுச் சமவெளியில் சுமேரிய நாகரிகம் இருந்த பகுதியே இன்றைய நவீன இராக் ஆகும். இதுவே இராக்கின் தோற்றமாகக் கருதப்படுகிறது.
- கி.மு. 24 ஆம் நூற்றாண்டு முதல் கிமு 21 ம் நூற்றாண்டு வரை இப்பகுதியில் அக்காடியப் பேரரசு ஆட்சி செய்தது
- கி.மு. 2004 ல் எலமைட்டுகளின் படையெடுப்பு மூலம் புதிய அக்கேதியன் நாகரிகம் தெற்கு ஈராக்கில் உருவாகியது
- அதற்கு அடுத்த 14 நூற்றாண்டுகளாக அசிரியர்கள் மற்றும் பாபிலோனியர்களின் மூன்றாவது ஊர் வம்சத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.
- கி.மு.1365-1053 வரை மத்திய அசிரிய பேரரசின் கீழ் இருந்தது.மேலும் பாபிலோன் நகரம் பேரரசின் அதிகார மையமாக இது இருந்தது.இக்காலத்திலேயே ஹம்முராபி, நெபுகத்நேசர் போன்ற புகழ் பெற்ற அரசர்களால் இது ஆளப்பட்டது.
- கிமு ஆறாம் நூற்றாண்டுகளில் புது அசிரியப் பேரரசு மற்றும் புது பாபிலோனியப் பேரரசுகள் ஈராக்கை ஆண்டது.
- கி.மு 3-1 ஆம் நூற்றாண்டு வரை இது ரோமானிய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது.
- கிபி 7 ஆம் நூற்றாண்டில் இது இஸ்லாமிய கலீபாக்களின் கீழ் இருந்தது. இசலமிய பேரரசின் முக்கிய வளர்ச்சியில் இப்பகுதி பெரும் பங்கு வகித்தது.13 ஆம் நூற்றாண்டின் பாக்தாத் முற்றுகையின் போது இப்பேரரசு அழிக்கப்பட்டது.
- ஈராக் நாட்டின் நவீன எல்லைகள் 1920 இல் ஒட்டோமான் பேரரசு சேவெர்ஸ் உடன்படிக்கை மூலம் வரையறுக்கப்பட்டது.மேலும் இது மெசொப்பொத்தேமியாவின் பகுதியின் ஐக்கிய ராஜ்யத்தின் அதிகார மையமாக இருந்தது.
- 1921 ஆம் ஆண்டு ஒரு முடியரசு நிறுவப்பட்டது மற்றும் 1932 ல் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்றது.
- 1958 ஆம் ஆண்டு மன்னர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட பின் ஈராக்கு குடியரசு உருவாக்கப்பட்டது.
- ஈராக்கில் 1968 முதல் 2003 வரை பாத் கட்சி மூலம் ஆட்சிசெய்யப்பட்டது. பன்னாட்டு படைகள் தலைமையிலான படையெடுப்பிற்குப் பிறகு பாத் கட்சி அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டு நாடாளுமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டன.
- 2011 ல் ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின.
உள்நாட்டுக் கலவரம்
ஈராக்கு நாட்டில் ஆளும் சியா பிரிவு இஸ்லாமியர்களின் மீது வெறுப்புக்கொண்ட சுன்னி பிரிவு இஸ்லாமிய அமைப்பான இராக்கிலும் சாமிலும் இசுலாமிய அரசு (ஐஎஸ்ஐஎல்) என்ற இயக்கம் பல தீவிரவாதச்செயல்களை மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பலுஜா என்ற நகரைக் கைப்பற்றிய இவர்கள் தற்சமயம் 2014ஆம் ஆண்டு 11ஆம் தேதி சூன் மாதம் நகரத்தைக் கைப்பற்றிய மொசுல் நகரைக்கைப்பற்றி அங்கு வாழ்ந்த மக்களை விரட்டினர்.[64]
Remove ads
புவியியல்
ஈராக்கு 29° லிருந்து 38° வடக்கு அட்சரேகை வரையிலும் 39° லிருந்து 49° கிழக்கு தீர்க்க ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.இதன் மொத்த பரப்பளவு 437,072 சதுர கி.மீ (168,754 சதுர மைல்) ஆகும்.மேலும் இது உலகின் 58 வது பெரிய நாடாக உள்ளது. ஈராக்கில் அதிக அளவு பாலைவன பகுதிகளை கொண்டுள்ளது,எனினும் யுப்ரிடீஸ் மற்றும் டைக்ரிஸ் ஆறுகள் ஆண்டுதோறும் 60.000.000 கன மீட்டர் வளமான வண்டல் மண்ணை சமவெளி பகுதியில் கொண்டுவந்து சேர்க்கின்றது.நாட்டின் வடக்கு பகுதி பெரும்பாலும் மலைகள் நிறைந்து காணபடுகின்றது இந்நாட்டின் உயர்ந்த பகுதி பெயரிடப்படாத 3,611 மீ (11,847 அடி) உயர மலையாகும் எனினும் இது உள்ளூர் மக்களால் சீக்கா தர் (கருப்பு கூடாரம்) என்று அழைக்கப்படுகிறது.மேலும் ஈராக்கு பாரசீக வளைகுடா பகுதியில் 58 கி.மீ. (36 மைல்) நீள கடலோர பகுதியையும் கொண்டுள்ளது.
Remove ads
காலநிலை
ஈராக்கில் மிக மிதவெப்ப மண்டல சூடான வறண்ட காலநிலையை நிலவுகிறது. இங்கு சராசரி கோடை வெப்பம் 40 °C (104 °F) க்கு அதிகமாக உள்ளது. எனினும் நாட்டின் பெரும்பாலான பகுதியில் 48 °C (118.4 °F) க்கு மேல் நிலவுகிறது. குளிர்காலத்தில் பகல்நேர வெப்பநிலை 21 °C (69.8 °F) ஆகவும் இரவு நேர வெப்பநிலை 2-5 டிகிரி செல்சியஸ் வரை குறையலாம். மேலும் குறைவாகவே மழை பெய்கிறது. மழையளவானது ஆண்டுக்கு 250 மி.மீ க்கு குறைவானது. மலைப்பாங்கான வடக்குப் பகுதிகளில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
Remove ads
பொருளியல் நிலை

ஈராக்கின் பொருளியலில் எண்ணெய்த்துறை பெரும்பங்கு வகிக்கிறது; அன்னியச்செலாவணி வருமானத்தில் ஏறத்தாழ 95% இதிலிருந்து கிடைக்கின்றது. மற்ற துறைகள் வளர்ச்சியடையாததால் வேலையின்மை 18%–30% ஆகவும் தனிநபர் மொத்த தேசிய உற்பத்தி $4,000க்கு குறைந்தும் உள்ளது.[8] 2011ஆம் ஆண்டில் முழுநேரப் பணிகளில் கிட்டத்தட்ட 60% பொதுத்துறையில் இருந்தன.[65] பொருளியலில் முதன்மை வகிக்கும் எண்ணெய் ஏற்றுமதித் தொழில், மிகக் குறைந்தளவே வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றது.[65] தற்போது மிகுந்த குறைந்தளவிலேயே பெண்கள் பணிகளில் பங்கேற்கின்றனர் (2011இல் மிக உயர்ந்த மதிப்பீடாக 22% இருந்தது).[65]
அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு முன்னதாக, ஈராக்கின் திட்டமிட்ட பொருளாதாரம் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்கவில்லை. பெரும்பாலான தொழில்கள் அரசுத்துறையில் இருந்தன. வெளிநாட்டுப் பொருட்களின் இறக்குமதியைத் தவிர்க்க கடும் தீர்வைகள் நிலவின.[66] 2003இல் அமெரிக்கப் படையெடுப்பிற்குப் பிறகு கூட்டணி தற்காலிக அரசு பொருளியலை தனியார்மயமாக்கும் ஆணைகளை இட்டு அன்னிய நேரடி முதலீட்டிற்கு வழிவகுத்தது.

Remove ads
ஈராக்கின் பண்டைய நகரங்கள்
மேலும் பார்க்க
குறிப்புகள்
மேற்கோள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
