சென்னை புறநகர் பேருந்து நிலையம்

ஆசிய கண்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

சென்னை புறநகர் பேருந்து நிலையம்map
Remove ads

சென்னை புறநகர் பேருந்து நிலையம் (அதிகாரப்பூர்வமாக புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்)[1] அல்லது பரவலாக கோயம்பேடு பேருந்து நிலையம் என்பது இந்தியாவின், சென்னை மாநகரின் கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும். 37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையம், ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரியதாகும்.[2] ஐ. எஸ். ஓ 9001:2000 தரச் சான்றிதழும் இப்பேருந்து நிலையம் பெற்றுள்ளது.[2]

விரைவான உண்மைகள் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்சென்னை புறநகர் பேருந்து நிலையம், பொது தகவல்கள் ...

கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கும் தெற்காசிய விளையாட்டுகளுக்காக கட்டப்பட்ட சிற்றூருக்கும் இடையே உள்வட்டச் சாலை (சவகர்லால் நேரு சாலை)யில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையம் 103 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.[3] இதனை நவம்பர் 18, 2002 இல் அன்றைய முதல்வர் புரட்சி தலைவி டாக்டர்அம்மாஜெ. ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார். 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாளன்று, அப்போதைய தமிழக முதல்வராக இருந்த புரட்சி தலைவி டாக்டர் அம்மா ஜெயலலிதா அவர்களால் நிறுவப்பட்டது.[4] இப்பேருந்து நிலையம் ஒரே சமயத்தில் 270 பேருந்துகளையும், நாளொன்றுக்கு 2000 பேருந்துகளையும் 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது.[3]

இந்தப் பேருந்து நிலையத்தின் பின்புறம் சென்னை மெட்ரோ தனது இருக்கைப் பெட்டிகள் பணிமனையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

Remove ads

வரலாறு

புறநகர் பேருந்து நிலையம் முதலில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு அண்மையில் ஏறத்தாழ 1.5  ஏக்கர் பரப்பளவில் பிராட்வே முனையம் என அமைந்திருந்தது.[5] வளர்ந்து வந்த போக்குவரத்துத் தேவைகளை இந்த முனையம் சந்திக்க இயலாமல் போனதால் ஓர் புதிய முனையத்தை கோயம்பேட்டில் கட்டமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக சூன் 6, 1999 அன்று நடைபெற்ற கால்கோள் விழாவிற்கு அன்றைய முதல்வர் மு. கருணாநிதி தலைமையேற்றார். சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தினால் திட்டமிட்டு, வடிவமைக்கப்பட்ட இந்த வளாகம்  103 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது.[3] இதனை நவம்பர் 18, 2002இல் அன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா திறந்து வைத்தார்.[6]

Remove ads

சேவைகள்

Thumb
சென்னையிலிருந்து அனைத்து நகரிடை பேருந்துகளும் இயக்கப்படுகின்ற சென்னைப் புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரும் பேருந்து நிலையமாக விளங்குகிறது.

இந்த நிலையத்தில் மூன்று கிளைகளில் ஆறு நடைமேடைகளும் 180 பேருந்து நிறுத்துமிடங்களும் உள்ளன. இங்கு எந்த நேரத்திலும் 270 சேவைப் பேருந்துகள் நிறுத்தப்படவும், ஓய்வுநிலையாக 60 பேருந்துகளும் நிறுத்தப்படவும் கூடும். நகரின் முக்கிய வாயிலாக விளங்கும் இந்த முனையம் 2000 பேருந்துகளையும் 200,000 பயணிகளையும் மேலாளும் திறனுடையது.[3] இங்கு தற்போது ஒரே நேரத்தில் 500 பேருந்துகளும், நாளொன்றுக்கு 3,000 பேருந்துகளும் 250,000 பயணிகளும் பயன்படுத்துகின்றனர்.[7] 36.5-ஏக்கர் (148,000 m2) பரப்பளவில் அமைந்துள்ள இந்நிலையத்தில் 17,840 sq ft (1,657 m2) பரப்பில் பயணிகளுக்கான வசதிகளும் 25,000 sq ft (2,300 m2) பரப்பில் தானிகள், வாடகை உந்துகள் மற்றும் தனியார் தானுந்துகளும் 16,000 sq ft (1,500 m2) பரப்பில் இரு சக்கர தானுந்துகளும் நிறுத்த வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.[3] மேலும் இங்கு மூன்று தங்கு விடுதிகளும், மூன்று சிற்றுணவகங்களும் மூன்று பயணர் சரக்கு வைக்குமிடங்களும் பத்து பயணச்சேவை முகமையகங்களும் கடைகளும் பேரங்காடிகளும் தாவருவிகளும் வாடகைக்கான தங்கு கூடங்களும் (குளிர்பதனப்படுத்தப்பட்ட மற்றும் அல்லாத) கழிவறைகளும் உள்ளன; இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கும் பாதுகாப்பு வீரர்கள், இலவசமாக தூய குடிநீர், 24 மணி நேர இலவச முதலுதவி மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் வசதிக்கு சக்கர இருக்கைகளும் வழங்கப்படுகின்றன. இங்கு ஒருநாளைக்கு 500,000 பேருக்கும் மேலாக வந்துபோவதாகவும் 4,800 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மதிப்பிட்டுள்ளது.

Remove ads

தன்னுந்து நிறுத்துமிடங்கள்

இந்தப் பேருந்து முனையத்தில் 1,500 முதல் 2,000 வரையிலான ஈராழி தன்னுந்துகளும் 60 நாற்சக்கர தன்னுந்துகளும் நிறுத்தக்கூடிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.[8] 2008 ஆம் ஆண்டில் நுழைவாயிலில் பேருந்துகளும் ஈராழி தன்னுந்துகளும், பிற தன்னுந்துகளும் நெரிசலை ஏற்படுத்தாதிருக்கும் பொருட்டு தரைக்குக் கீழே ஓர் ஈரடுக்கு ஈராழி தானுந்து நிறுத்தும் வசதியை அமைக்கத் திட்டமிடப்பட்டது. 9 கோடி திட்டச்செலவில் ஒருநாளுக்கு 3000 ஈராழி தன்னுந்துகள் நிறுத்தும் தேவையை கருத்தில் கொண்டு இதன் வடிவமைப்பு திட்டமிடப்பட்டது. சனவரி 2009இல் 6,000-ச.மீ பரப்பில் துவங்கிய இப்பணி ஆகத்து 2010இல் 17 கோடி செலவில் நிறைவுற்றது. இந்த நிறுத்தும் வசதியைத் திசம்பர் 26, 2010இல் அன்றைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.[9]

சென்னை நகரத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் கட்டப்பட்ட இது போன்றதொரு நிறுத்தற் வசதி இதுவே முதலாவதாகும். பேருந்து வளாகத்தின காலிமனையில் உள் வட்டச் சாலையை ஒட்டி இரண்டு தளங்களில் கட்டப்பட்டுள்ளது. 3000 ச.மீ பரப்புள்ள ஒவ்வொரு தளத்திலும் 1500 ஈராழி வண்டிகள் நிறுத்தப்படக் கூடும். முதல் தளம் 10 அடிகள் (3.0 m) ஆழத்திலும் இரண்டாம் தளம் 20 அடிகள் (6.1 m) ஆழத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. இதனை அணுக இரு சாய்தளங்களும் மூன்று மாடிப்படிகளும் உள்ளன. தீயணைப்புச் சாதனங்களும் கண்காணிப்புக் காமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. நிறுத்தற்கூடத்தின் மேற்கூரையில் தெளிப்புப் பாசனத்துடன் கூடிய பூங்கா, நீரூற்று மற்றும் நடப்பவர்களுக்கான சுற்றுப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.[10][11]

பேருந்து நிலையத்தில் விளம்பரங்கள்

Thumb
வெளியூர் பேருந்துகளுக்கான வடக்குப்புர நுழைவாயில்

சென்னையில் விளம்பரம் வெளியிட பெரும் வசதியளிக்கும் வளாகங்களில் இந்தப் பேருந்து முனையமும் ஒன்றாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தால் வெளியிடங்களில் விளம்பரப் பதாகைகள் அமைக்கத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில்[சான்று தேவை] சென்னை வானூர்தி நிலையம், சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம் மற்றும் இங்கு மட்டுமே உள்வாயில்-வெளிவாயில்களில் சட்டப்படி விளம்பரப் பதாகைகள் அமைக்க இயலும் என்ற நிலையில் இந்த வளாகத்தில் 100,000 சதுர அடிகள் (9,300 m2) பரப்பிற்கு காட்சிபடுத்தக்கூடிய வெளி அமைந்துள்ளது.

Remove ads

மற்ற வசதிகள்

சூன் 2009இல், சென்னை மாநகரக் காவல் இங்கு "சிறார்-கவனிப்பு மையம்" ஒன்றை அமைத்து காணாமற் போனவர்களைக் கண்டுபிடிக்கவும், வழிதவறிய சிறுவர்களுக்கும் உதவி வருகின்றனர். மேலும் சிறுவர்களுக்கெதிரான துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்களுக்கும் ஆவன செய்து வருகின்றனர்.[12]

இந்த முனையத்தில் 64 மூடியச் சுற்று ஒளிப்படக் கருவிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

சென்னை ஒப்பந்த பயணச்சேவை பேருந்து நிலையம்

சென்னை ஒப்பந்த பயணச்சேவை பேருந்து நிலையம் (Chennai Contract Carriage Bus Terminus, CCCBT), பரவலாக ஓம்னி பேருந்து நிலையம் சென்னை புறநகர் பேருந்து நிலையத்திற்கு அடுத்து ஒப்பந்த அடிப்படையில் (எதிர் பட்டியலிடப்பட்ட வழிதடங்களில்) வெளியூர் செல்லும் தனியார் பேருந்துகள் நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 80 பேருந்துகள் நிறுத்தவும், 100 பயணமில்லாப் பேருந்துகள் நிறுத்தவும், 50 பயணச் சேவை முகமையகங்கள் இயங்கவும் ஒரு நேரத்தில் 120 பயணியர் தங்கக்கூடிய 14 பயணியர் காத்திருப்புக் கூடங்களும் அமைந்துள்ளன. இதனையும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மேற்பார்த்து வருகிறது. நாளொன்றுக்கு 200 பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.[13]

Remove ads

பேருந்து சேவைகள்

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களின் தலைநகர்களுக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களின் முக்கிய இடங்களுக்கும், பேருந்துகளை இயக்குகிறது.

நடைமேடைகள்

மேலதிகத் தகவல்கள் பாந்து எண், பேருந்து செல்லும் ஊர் பெயர் ...
Remove ads

வருங்காலத் திட்டங்கள்

சென்னை மெட்ரோ இப்பேருந்து வளாகத்தினுள் உயரத்தில் அமைந்ததாகத் தனது தொடர்வண்டி நிலையத்தை அமைத்துள்ளது. மூன்று வழிகளுடன் ஒரு கி.மீ. தொலைவும் 11 மீ அகலமும் கொண்ட மேம்பாலம் காளியம்மன் கோவில் சாலை - சவகர்லால் நேரு சாலை சந்திப்பில் கட்டமைக்கப்படுகிறது. 50 கோடி செலவில் மதிப்பிடப்பட்டுள்ள இத்திட்டத்தினால் விருகம்பாக்கத்திற்கும், கோயம்பேட்டிற்கும் இடையேயான போக்குவரத்து பயனடையும். தற்போது இந்த சந்திப்பை ஒரு மணி நேரத்திற்கு 18,000 தானுந்துகள் கடப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.[14]

நகரத்தினுள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க துணை புறநகர் பேருந்து நிலையங்கள் 80 கோடி செலவு மதிப்பீட்டில் வேளச்சேரியிலும் மாதவரத்திலும் கட்டப்படத் திட்டமிடப்படுள்ளன.[15] கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் இராசீவ் காந்தி சாலையில் செல்லும் 300 பேருந்துகள் வேளச்சேரி பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும். வடக்கு பெரும் முதன்மைச் சாலையில் (ஜி. என். டி ரோடு) செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும். ஆந்திரா செல்லும் பேருந்துகளும் மாதவரத்திலிருந்து இயக்கப்படும். இந்த இரு துணை பேருந்து நிலையங்களும் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை ஒத்த வசதிகளுடன் அமைக்கப்படும். எட்டு ஏக்கர் பரப்பில் அமையவிருக்கும் மாதவரம் நிலையம் 200 பேருந்துகளை இயக்கும் திறனுடன் விளங்கும். 48 கோடி செலவில்[15] 12 ஏக்கர் பரப்பில் கட்டப்பட இருக்கும் வேளச்சேரி நிலையத்தில் 300 பேருந்துகள் இயங்கக் கூடியதாவிருக்கும்.[16] இருப்பினும், சென்னை மோனோரெயில் திட்டம் நிறைவேற்றப்படுவதைக் கருத்தில்கொண்டு வேளச்சேரி பேருந்து நிலையப் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.[15]

தற்போதுள்ள ஓம்னி பேருந்து நிலையத்திற்கு எதிராக உள்ள 4 ஏக்கர் காலியிடத்தில் ஒருங்கிணைந்த பலநிலை நிறுத்தற்கூடம் அமைக்கப்பட உள்ளது. தரைக்குக் கீழே இரு தளங்கும் தரைக்கு மேலும் தளங்களுடன் அமையவிருக்கும் இந்த நிறுத்தற்கூடத்தில் பணியில் இல்லாத தனியார் ஓம்னி வண்டிகளும் பல்வேறு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளும் நிறுத்தலாம். இதன் கடைசி மேல்தளத்தில் 400 நான்கு சக்கர தானுந்துகள் நிறுத்தவும் அதன் கீழுள்ள தளத்தில் 1000 ஈராழித் தன்னுந்துகள் நிறுத்தவும் வசதி செய்யப்படும். முதல் தளத்தில் பணியில் இல்லா அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படும். தற்போதுள்ள ஒப்பந்தப் பயணச்சேவைப் பேருந்து நிலையம் இந்த நிறுத்தற்கூடத்தின் தரைத்தளத்திற்கு மாற்றப்படும்.[17]

Remove ads

பெயர் மாற்றம்

அக்டோபர் மாதம், 2018 ஆம் ஆண்டு நடந்த எம். ஜி. ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் க. பழனிசாமி பங்கேற்று உரையாற்றிய போது, கோயம்பேடு பேருந்து நிலையம் இனி டாக்டர் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர் பெயரில் அழைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி அக்டோபர் 10, 2018 அன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயரை புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று மாற்றி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.[18]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads