திருக்குறள்

புகழ்பெற்ற தமிழ் செவ்விலக்கிய நூல் From Wikipedia, the free encyclopedia

திருக்குறள்
Remove ads

திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது.[1] இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.[2][3][4] இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல் ஆகும். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் புற வாழ்விலும் நலமுடன் வாழ்வதற்குத் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பொதுத்தன்மைக்கும் மதச்சார்பற்ற தன்மைக்கும் பெயர் பெற்றது.[5][6] இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுகிறார். இந்நூலின் காலம் பொ.ஊ.மு. 300 முதல் பொ.ஊ. 5-ம் நூற்றாண்டு வரை எனப் பலவாறு கணிக்கப்படுகிறது. இந்நூல் கடைச்சங்கத்தின் கடைசிப் படைப்பாகக் கருதப்பட்டாலும் மொழியியல் பகுப்பாய்வுகள் இந்நூல் பொ.ஊ. 450 முதல் 500 வரையிலான கடைச்சங்க காலத்திற்குப் பிறகு இயற்றப்பட்டதாகக் குறிக்கின்றன.[7]

விரைவான உண்மைகள் நூலாசிரியர், செயற்பாட்டிலுள்ள தலைப்பு ...
மேலதிகத் தகவல்கள் தமிழ் இலக்கியம் ...

திருக்குறள் இந்திய அறிவாய்வியல், மீவியற்பியல் ஆகியவற்றின் மிகப் பழமையான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதனை "உலகப் பொதுமறை", "பொய்யாமொழி", "வாயுறை வாழ்த்து", "முப்பால்", "உத்தரவேதம்", "தெய்வநூல்" எனப் பல பெயர்களாலும் அழைக்கின்றனர்.[8][9] இந்நூல் அகிம்சையை மையமாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது.[10][11][12][13][14] இன்னா செய்யாமை, புலால் உண்ணாமை,[15][16][17][18][19][a] வாய்மை, இரக்கம், அன்பு, பொறுமை, சுயகட்டுப்பாடு, நன்றியுணர்வு, கடமை, சான்றாண்மை, ஈகை, விருந்தோம்பல், இல்வாழ்க்கை நலம், பரத்தையரோடு கூடாமை, கள்ளாமை, மது உள்ளிட்ட போதைப்பொருட்களையும் சூதாடுவதையும் தவிர்த்தல், கூடாஒழுக்கங்களை விலக்குதல் முதலிய தனிநபர் ஒழுக்கங்களையும் போதிக்கிறது.[20] கூடுதலாக, ஆட்சியாளர் மற்றும் அமைச்சர்களின் ஒழுக்கங்கள், சமூகநீதி, அரண், போர், கொடியோருக்குத் தண்டனை, கல்வி, உழவு போன்ற பலவிதமான அரசியல், சமூகத் தலைப்புகளைப் பற்றிப் பேசுகிறது.[21][22][23] மேலும் நட்பு, காதல், இல்வாழ்வு, அகவாழ்க்கை பற்றிய அதிகாரங்களும் உள்ளன.[20][24] சங்ககாலத் தமிழரிடையே காணப்பட்ட குற்றங்களையும் குறைகளையும் மறுத்துரைத்து அவர்தம் பண்பாட்டு முரண்களைத் திருத்தியும் பிழைப்பட்ட வாழ்வியலை மாற்றியும் தமிழர் நாகரிகத்தை நிரந்தரமாக வரையறை செய்த நூலாகத் திருக்குறள் திகழ்கிறது.[25]

குறள் இயற்றப்பட்ட காலத்திலிருந்து அறம், சமூகம், அரசியல், பொருளாதாரம், சமயம், மெய்யியல், ஆன்மிகம் முதலிய துறைகளைச் சார்ந்த அறிஞர்களாலும் தலைவர்களாலும் பரவலாகப் போற்றப்பட்டு வந்துள்ளது.[26] இவர்களில் இளங்கோவடிகள், கம்பர், லியோ டால்ஸ்டாய், மகாத்மா காந்தி, ஆல்பர்ட் சுவைட்சர், இராமலிங்க அடிகள், வ. உ. சிதம்பரம்பிள்ளை, காரல் கிரவுல், ஜி. யு. போப், அலெக்சாந்தர் பியாதிகோர்சுகி, யூ ஹ்சி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். தமிழ் இலக்கியங்களில் மிகவும் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூலாகவும் சுட்டப்படக்கூடிய நூலாகவும் திருக்குறள் திகழ்கிறது.[27] இந்நூல் நாற்பதுக்கும் மேற்பட்ட இந்திய, அயல் நாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது உலகில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட பண்டைய படைப்புகளில் ஒன்றாகும். 1812-ஆம் ஆண்டு முதன்முறையாக அச்சுக்கு வந்ததிலிருந்து இடையறாது அச்சில் உள்ள நூலாகக் குறள் திகழ்கிறது.[28] அனைத்து நூல்களிலும் காணப்படும் சிறந்த அறங்களைத் தேர்ந்தெடுத்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பொதுப்படையாக வழங்கும் இயல்புக்காக குறளின் ஆசிரியர் அறிஞர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறார்.[29]

Remove ads

பெயர்க்காரணம்

திருக்குறள் என்ற சொல் திரு மற்றும் குறள் என்ற இரண்டு தனிப்பட்ட சொற்களாலான ஒரு கூட்டுச் சொல் ஆகும். திரு என்பது தமிழில் மதிப்பையும் மேன்மையையும் குறிக்கும் ஒரு சொல். குறள் என்றால் "குறுகிய, சுருக்கமான, சுருக்கப்பட்ட" என்று பொருள்.[2] தொல்காப்பியம் கூறும் இரு பாவகைகளான குறுவெண்பாட்டு மற்றும் நெடுவெண்பாட்டு ஆகியவற்றில் குறுவெண்பாட்டுதான் சுருங்கிக் "குறள் பாட்டு" என்றாகிப் பின்னர்க் "குறள்" என்றானது. அஃதாவது "குறுகிய செய்யுள்" என்பதே "குறள்".[30] இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய தமிழின் முதல் நூலும் ஒரே பழைய நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால், குறள் என்றும் அதன் உயர்வு கருதித் திரு என்ற அடைமொழியுடன் திருக்குறள் என்றும் பெயர் பெறுகிறது. மிரான் வின்சுலோவின் கூற்றுப்படி, ஓர் இலக்கியச் சொல்லாகக் குறள் என்பது ஈரடி கொண்ட, முதலடியில் நான்கு சீர்களும் இரண்டாமடியில் மூன்று சீர்களுமுடைய ஒரு பாவகையைக் குறிக்கிறது.[31]

Remove ads

காலம்

திருக்குறளின் காலம் பொ.ஊ.மு. 300 முதல் பொ.ஊ. 450 வரை என்று பலவாறு கருதப்படுகிறது. தமிழ் மரபின் வாயிலாக இந்நூல் கடைச்சங்கத்தின் கடைசி நூலாக அறியப்படுகிறது. சோமசுந்தர பாரதியார், மா. இராஜமாணிக்கனார் முதலானோர் இக்கருத்தை நிறுவிக் குறளின் காலம் பொ.ஊ.மு. 300 என்று உரைக்கின்றனர். வரலாற்று அறிஞர் கே.கே.பிள்ளை குறளின் காலம் பொ.ஊ.மு. முதலாம் நூற்றாண்டு என்று நிறுவுகிறார்.[7]

செக் நாட்டுத் தமிழ் ஆய்வாளர் கமில் சுவெலபில் இவற்றை ஏற்க மறுக்கிறார். குறள் சங்ககாலத்தைச் சேர்ந்த நூல் அன்று என்றும் அதன் காலம் பொ.ஊ. 450 முதல் பொ.ஊ. 500 வரை இருக்கலாம் என்றும் 1974-இல் வெளிவந்த தமிழ் இலக்கிய வரலாற்றைப் பற்றிய தனது ஆய்வில் சுவெலபில் நிறுவுகிறார்.[7][32] நூலில் மொழியமைப்பையும், அதில் வரும் முந்தைய நூல்களைப் பற்றிய குறிப்புகளையும், வடமொழி இலக்கியங்களிலிருந்து பெறப்பட்ட சில கருத்துகளையும் தனது கூற்றுக்குச் சான்றாக அவர் காட்டுகிறார்.[8] குறளில் வள்ளுவர் சங்கநூல்களில் காணப்படாத பல புதிய இலக்கண நடைகளைப் படைத்துள்ளார் என்று குறிப்பிடும் சுவெலபில், குறள் இதர பண்டைய தமிழ் நூல்களைவிட அதிகமாக வடமொழிச் சொற்பயன்பாட்டைக் கையாள்கிறது என்றும் சுட்டிக்காட்டுகிறார்.[33] குறளின் தத்துவங்கள் பண்டைய இந்தியாவில் பரவலாகக் காணப்பட்ட மெய்யியலின் ஒரு பகுதி என்பதைச் சுட்டும் சுவெலபில், வள்ளுவர் தமிழ் இலக்கிய மரபுடன் மட்டும் தொடர்புடையவர் அல்லர் என்றும் அவர் இந்தியத் துணைக்கண்டம் முழுதும் வியாபித்திருந்த ஒருங்கிணைந்த பண்டைய இந்திய அறநெறி மரபையும் சார்ந்தவர் என்றும் நிறுவுகிறார்.[34]

1959-ஆம் ஆண்டு எஸ். வையாபுரிப்பிள்ளை தனது ஆய்வின் முடிவாகத் திருக்குறள் பொ.ஊ. ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தோ அதற்குப் பிற்பட்டதோ ஆகும் என்று குறிப்பிட்டார். குறளில் வடமொழிச் சொற்கள் விரவியிருப்பதையும், நூலில் வள்ளுவர் சுட்டும் வடமொழி நூல்கள் பொ.ஊ. முதல் ஐந்து நூற்றாண்டுகளில் இயற்றப்பட்ட நூல்களாக இருக்க வாய்ப்புள்ளது என்பதையும், அதற்கு முன்புவரை இல்லாத இலக்கணங்களைக் குறளில் வள்ளுவர் பயன்படுத்தியிருப்பதையும் வையாபுரிப்பிள்ளை ஆதாரமாகக் காட்டுகிறார்.[32][b] இதன் ஒரு பகுதியாகக் குறளில் காணப்படும் 137 வடமொழிச் சொற்களின் பட்டியலொன்றையும் அவர் பதிப்பித்தார்.[35] பின்னர் வந்த தாமஸ் பரோ, முர்ரே பார்ன்ஸன் எமீனோ உள்ளிட்ட அறிஞர்கள் இப்பட்டியலிலுள்ள சொற்களில் 35 வடமொழிச் சொற்களல்ல என்று கருதினர். இவற்றில் மேலும் சில சொற்களின் தோற்ற வரலாறு சரியாகத் தெரியவில்லை என்றும் வரவிருக்கும் ஆய்வுமுடிவுகள் இவற்றில் சில தமிழ்ச் சொற்கள் என்றே நிறுவ வாய்ப்புள்ளது என்றும் சுவெலபில் கருதுகிறார்.[35] ஆயினும் மீதமுள்ள 102 வடமொழிச் சொற்களை ஒதுக்கிவிட முடியாதென்றும் வள்ளுவர் கூறும் கருத்துகளில் சில ஐயப்பாடின்றி அர்த்தசாஸ்திரம், மனுதர்ம சாஸ்திரம் முதலிய வடமொழி இலக்கியங்களிலிருந்து வந்தவையே என்றும் சுவெலபில் கூறுகிறார்.[35]

பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் வந்த ஐரோப்பிய அறிஞர்களும் கிறித்தவ மதபோதகர்களும் குறளின் காலத்தைக் பொ.ஊ. 400-இல் தொடங்கிக் பொ.ஊ. 1000 வரை பலவாறு வரையறை செய்தனர்.[36] தற்காலத்தைய அறிஞர்கள் குறளின் காலம் என்று ஒருமித்தமாக ஏற்பது சுமார் பொ.ஊ. ஐந்தாம் நூற்றாண்டு என்றே பிளாக்பர்ன் கருதுகிறார்.[36]

இந்த வாதங்களுக்கிடையில் 1921-ஆம் ஆண்டு தமிழக அரசு மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியினை ஏற்று பொ.ஊ.மு. 31-ஆம் ஆண்டினை வள்ளுவர் பிறந்த ஆண்டாக அறிவித்தது.[7][37][38][39]CITEREFPolilan_et_al.,_2024 இதன் விளைவாக அன்று தொடங்கி தமிழகத்தில் ஆண்டுகளைக் குறிக்கத் திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப்படுகின்றது. தமிழக நாட்காட்டிகளில் ஜனவரி 18, 1935 அன்று முதல் வள்ளுவர் ஆண்டு சேர்க்கப்பட்டது.[40][c]

Remove ads

நூலாசிரியர்

"பெயரறியா ஆசிரியரால் இயற்றப்பட்ட பெயரறியா நூல்."

இ. எஸ். ஏரியல், 1848[41]

திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.[3] இவரைப் பற்றிய நம்பகப்பூர்வமான தகவல்கள் மிகவும் அரிதாகவே கிடைக்கப்பெறுகின்றன.[42] இவரது இயற்பெயரையோ இவர் இயற்றிய நூலான திருக்குறளின் உண்மைப் பெயரையோ இன்றுவரை யாராலும் அறுதியிட்டுக் கூற இயலவில்லை.[43] திருக்குறள் கூட அதன் ஆசிரியரின் பெயரையோ அவரைப் பற்றிய விவரங்களையோ எங்கும் குறிப்பிடுவதில்லை.[44] குறளுக்கு அடுத்து சில நூற்றாண்டுகளுக்குப் பின் தோன்றிய சைவமத நூலான திருவள்ளுவமாலையில் தான் முதன்முறையாகத் திருவள்ளுவரின் பெயர் குறிப்பிடப்படுகிறது.[3] ஆயினும் இந்நூலில் கூட வள்ளுவரின் பிறப்பு, குடும்பம், பின்புலம் போன்ற எந்தத் தகவலும் கிடைப்பதற்கில்லை. வள்ளுவரின் வாழ்வைப் பற்றிக் கூறப்படும் செய்திகள் யாவையும் நிரூபிக்கும்படியான பண்டைய நூல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என்பதே உண்மை. 19-ஆம் நூற்றாண்டில் அச்சகங்கள் தோன்றிய பின்னர் வள்ளுவரைப் பற்றிய பல செவிவழிச் செய்திகள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் கதைகளாக அச்சிடப்பட்டன.[45]

Thumb
கன்னியாகுமரியில் ஒரு பாறைத்திட்டில் தமிழகக் கடற்கரையைப் பார்த்த வண்ணம் எழுப்பப்பட்டுள்ள வள்ளுவரின் சிலை

வள்ளுவரைப் பற்றிய பலதரப்பட்ட செய்திகளைப் போல் அவரது சமயத்தைப் பற்றியும் பலதரப்பட்ட செய்திகள் வரலாற்றுச் சான்றுகளின்றி விரவிக்கிடக்கின்றன. வள்ளுவர் தனது நூலினைப் பொதுப்படையாகவும் எந்த ஒரு சமூகத்தையும் குறிப்பிடாமலும் இயற்றியுள்ளதால் அதனைப் பல விதங்களில் பொருட்கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது. இதன் விளைவாகக் குறளானது பண்டைய இந்திய சமயங்களால் தங்கள் வழிநூலாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது.[8] "கால மதிப்பீட்டில் குறளானது ஏனைய இந்திய இலக்கியங்களைப் போலவே சரியாக வரையறுக்கப்பட முடியாததாகவே உள்ளது" என்று சுவைட்சர் தனது நூலில் குறிப்பிடுகிறார்.[46]

வள்ளுவர் சமண சமயத்தையோ இந்து சமயத்தையோ சார்ந்தவராக இருந்திருப்பார் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.[47][48][49][50][51][52] இவ்விரு சமயங்களின் பிரதான தர்மமான இன்னா செய்யாமை என்ற அறத்தை வள்ளுவர் தனது நூலின் மைய அறமாகக் கொண்டு மற்ற அறங்களைக் கையாண்டிருப்பதிலிருந்து இது புலனாகிறது.[17][a] வள்ளுவர் இந்துவா சமணரா என்ற கேள்வி தமிழ்ச் சமூகத்தால் பரவலாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது என்று தனது 1819-ஆம் ஆண்டு குறள் மொழிபெயர்ப்பு நூலில் எல்லீசன் (பிரான்சிசு வயிட் எல்லீசு) குறிப்பிடுகிறார்.[53] வள்ளுவரது தார்மீக சைவம் மற்றும் கொல்லாமை ஆகிய அறங்களைப் பற்றிய அதிகாரங்கள் சமண மதச் சிந்தனைகளைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன என்று கூறும் சுவெலபில்,[17][a] கடவுளுக்கு வள்ளுவர் தரும் அடைமொழிகளும் அருள்சார்ந்த அறங்களுக்கு அவர் தரும் முக்கியத்துவமும் இக்கருத்துக்கு வலு சேர்க்கின்றன என்று விளக்குகிறார்.[42] வள்ளுவர் தமக்கு முந்தைய தமிழ், வடமொழி ஆகிய இரு இலக்கிய அறிவினையும் சாலப்பெற்றவராகவும் "சிறந்தவற்றை மட்டும் தேரும் சிந்தையுள்ள ஒரு கற்றறிந்த சமண அறிஞராகவும்" இருந்திருக்கக்கூடும் என்பது சுவெலபில்லின் கருத்து.[42] எனினும் பண்டைய திகம்பர சமண நூல்களிலோ சுவேதம்பர சமண நூல்களிலோ வள்ளுவரைப் பற்றியோ குறளைப் பற்றியோ எந்த ஒரு குறிப்பினையும் காணமுடிவதில்லை. இந்து சமய பக்தி இலக்கியங்களில் சுமார் எட்டாம் நூற்றாண்டு வாக்கில் வள்ளுவரும் குறளும் குறிப்பிடப்படுகையில் சமண நூல்களில் வள்ளுவர் முதன்முதலாகக் குறிப்பிடப்படுவது 16-ஆம் நூற்றாண்டில்தான்.[54]

"எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும்
பொதுப்படக் கூறுதல் இவர்க்கு இயல்பு."

பரிமேலழகர் (வள்ளுவரைப்
பற்றிக் குறிப்பிடுகையில்),
பொ.ஊ. 13-ம் நூற்றாண்டு[55]

வள்ளுவர் இந்து சமயத்தைச் சேர்ந்தவராக இருந்திருப்பார் என்ற கருத்தும் அறிஞர்களிடையே சம அளவில் இருந்து வருகிறது. குறளில் காணப்படும் போதனைகள் பலவும் இந்து தர்ம நூல்களில் காணப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் சுட்டுகின்றனர்.[50][51] அறம், பொருள், இன்பம் என்ற வீடுபேறினை நோக்கிய குறளின் பகுப்புமுறைகள் முறையே இந்து தர்ம புருஷார்த்த பகுப்பு முறையின் முதல் மூன்றின் அடிப்படையில் அமைந்திருப்பதும்,[52][56] அகிம்சையினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட குறளானது பொருட்பாலில் இந்து தர்ம நூல்களில் ஒன்றான அர்த்தசாஸ்த்திரத்தினை ஒத்ததாய் அரசியல் மற்றும் போர்முறைகளைக் கூறியிருப்பதும்[49] அவர்கள் காட்டும் சான்றுகளில் சில. தனிமனிதனாகத் தன் அன்றாட வாழ்வில் கொல்லாமையைக் கடைப்பிடித்த பின்னரே ஒருவனுக்குப் படைவீரனாகப் போரில் கொல்லும் விதிவிலக்கு அளிக்கப்படுவதும் மன்னனாக ஒருவன் அரியணையில் அமர்ந்த பின்னரே குற்றவாளிகளுக்கு மரணதண்டனை அளிக்கும் உரிமை அவனுக்கு வழங்கப்படுவதும் இந்து தர்ம முறையினை வலியுறுத்துகிறது.[57][f] வள்ளுவர் குறட்பாக்கள் 610 மற்றும் 1103-களில் திருமாலைக் குறிப்பிடுவதும் குறட்பாக்கள் 167, 408, 519, 565, 568, 616, மற்றும் 617-களில் இலக்குமியைக் குறிப்பிடுவதும் வைணவ தத்துவங்களைக் குறிக்கின்றன.[58][59] இந்து சமயத்திலிருந்து தோன்றிய சுமார் 24 வெவ்வேறு தொடர்களை குறள் முழுவதும் குறைந்தபட்சம் 29 இடங்களில் வள்ளுவர் எடுத்தாண்டிருப்பதை பி. ரா. நடராசன் பட்டியலிடுகிறார்.[59] தருக்க ரீதியான முறையில் குறளை அலசினால் வள்ளுவர் இந்து என்பதும் அவர் சமணரல்லர் என்பதும் புலப்படும் என்று பிராமணீய மறுப்பு அறிஞரான பூர்ணலிங்கம் பிள்ளை கூறுகிறார்.[60] வள்ளுவர் தென்னிந்திய சைவ மரபினைச் சேர்ந்தவர் என்று மாத்தேயு ரிக்கா கருதுகிறார்.[61] குறளானது அத்வைத்த வேதாந்த மெய்யியலை ஒத்து இருப்பதாக தென்னக மக்கள் போற்றுவதாகவும் அது அத்வைத்த வாழ்வு முறையினை போதிப்பதாகவும் தென்னிந்தாவில் வசித்த இறையியல் அறிஞரான தாமஸ் மன்னினேசாத் கருதுகிறார்.[62] தமிழ் இலக்கிய அறிஞரும் குறளை ரஷ்ய மொழியில் மொழிபெயர்ப்பாளருமான யூரிஜ் யாகோவ்லெவிட்ச் கிளாசோவ் திருவள்ளுவரை ஒரு இந்துவாகப் பார்க்கிறார் என்று கமில் ஸ்வெலெபிலின் மதிப்பாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[63]

அறிஞர்களுக்கிடையில் இவ்வளவு கருத்து வேறுபாடு இருப்பினும், வள்ளுவர் தனது சார்பற்ற தன்மையினாலும் அனைவருக்குமான பொது அறங்களைக் கூறுவதனாலும் அனைத்து சாராராலும் பெரிதும் போற்றப்படுகிறார்.[64] அனைத்து நூல்களிலும் காணப்படும் அனைத்து சிறந்த அறங்களையும் தேர்ந்தெடுத்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பொதுப்படையாக வழங்கும் தனது இயல்புக்காக பரிமேலழகர் உள்ளிட்ட அறிஞர்களால் வள்ளுவர் பெரிதும் பாராட்டப்படுகிறார்.[29] அவரது நூலான குறள் "உலகப் பொதுமறை" என்று வழங்கப்படுகிறது.[65][66][67][68]

Remove ads

உள்ளடக்கம்

திருக்குறள் 133 அதிகாரங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதிகாரத்திற்குப் பத்து குறட்பாக்கள் வீதம் மொத்தம் 1,330 குறட்பாக்களைக் கொண்டது.[69][g] அனைத்துப் பாக்களும் குறள் வெண்பா வகையில் அமைக்கப்பட்டதாகும். மேலும் ஒவ்வொரு அதிகாரத்தின் பத்துப் பாக்களும் அவ்வதிகாரத்தின் கருப்பொருளாக விளங்கும் அறநெறியினை வலியுறுத்துவதாக அமைந்துள்ளன. இந்நூல் மூன்று பகுதிகளாக அல்லது "பால்களாகப்" பகுக்கப்பட்டுள்ளது:[69][70]




Thumb

திருக்குறள்

  அறம் (28.6%)
  பொருள் (52.6%)
  இன்பம் (18.8%)
  • முதற் பால்—அறம்: ஒருவர் தன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய அறங்களைப் பற்றியும் யோக தத்துவத்தைப் பற்றியும் கூறுவது (அதிகாரங்கள் 1–38)
  • இரண்டாம் பால்—பொருள்: ஒருவர் தன் சமூக வாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய அறங்களை, அதாவது சமூகம், பொருளாதாரம், அரசியல், மற்றும் நிருவாகம் ஆகிய விழுமியங்களைப் பற்றிக் கூறுவது (அதிகாரங்கள் 39–108)
  • மூன்றாம் பால்—காமம்/இன்பம்: ஒருவர் தன் அகவாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய அறங்களைப் பற்றிக் கூறுவது (அதிகாரங்கள் 109–133)

இந்நூலிலுள்ள 1,330 குறள்களில் முதல் 40 குறள்கள் கடவுள், மழை, சான்றோரது பெருமை மற்றும் அறத்தின் பெருமை ஆகியவற்றையும், அடுத்த 340 குறள்கள் அன்றாட தனிமனித அடிப்படை நல்லொழுக்க அறங்களைப் பற்றியும், அடுத்த 250 குறள்கள் ஆட்சியாளரின் ஒழுக்கங்கள் குறித்த அறங்களைப் பற்றியும்; அடுத்த 100 குறள்கள் அமைச்சர்களின் அறங்களைப் பற்றியும், அடுத்த 220 குறள்கள் நிர்வாக அறங்களைப் பற்றியும், அடுத்த 130 குறள்கள் நேர்மறை மற்றும் எதிர்மறையான சமூக ஒழுக்கங்கள் குறித்த அறங்களைப் பற்றியும், கடைசி 250 குறள்கள் இன்ப வாழ்வு குறித்த அறங்களைப் பற்றியும் பேசுகின்றன.[24][71]

அறத்துப்பாலில் 380 பாக்களும், பொருட்பாலில் 700 பாக்களும், காமம் அல்லது இன்பத்துப்பாலில் 250 பாக்களும் உள்ளன. ஒவ்வொரு பா அல்லது குறளும் சரியாக ஏழு சொற்களைக் கொண்டது. இச்சொற்கள் சீர்கள் என அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு குறளும் முதல் வரியில் நான்கு சீர்களும் இரண்டாவது வரியில் மூன்று சீர்களும் பெற்றிருக்கும். ஒரு சீர் என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ்ச் சொற்களின் கூட்டுச்சொல். எடுத்துக்காட்டாக, "திருக்குறள்" என்ற சொல் "திரு" மற்றும் "குறள்" என்ற இரண்டு சொற்களை இணைப்பதன் மூலம் உருவாகும் ஒரு சீராகும்.[69] திருக்குறளை மொத்தம் 9,310 சீர்கள் அல்லது 14,000 சொற்களைக் கொண்டு வள்ளுவர் பாடியுள்ளார். இவற்றில் ஏறத்தாழ 50 சொற்கள் வடமொழிச் சொற்களாகவும் மீதமுள்ள அனைத்தும் தூய தமிழ்ச் சொற்களாகவும் அமைந்துள்ளன.[72] திருக்குறளில் மொத்தம் 42,194 எழுத்துக்கள் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மிகச் சிறிய குறட்பாக்கள் (குறள் 833 மற்றும் 1304) 23 எழுத்துக்களைக் கொண்டதாகவும், மிக நீளமான குறட்பாக்கள் (குறள் 957 மற்றும் 1246) 39 எழுத்துக்களைக் கொண்டதாகவும் உள்ளன.[73] மொத்தமுள்ள 133 அதிகாரங்களில் 339 எழுத்துக்களைக் கொண்டு ஐந்தாவது அதிகாரம் மிக நீளமான அதிகாரமாகவும் 280 எழுத்துக்களுடன் 124-வது அதிகாரம் மிகச் சிறிய அதிகாரமாகவும் விளங்குகின்றன.[74]

இந்திய அறிவாய்வியல் மற்றும் மீவியற்பியல் ஆகியவற்றின் மிகப் பழமையான படைப்புகளில் ஒன்றாகத் திருக்குறள் கருதப்படுகிறது.[75] அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் கூறுகள் தமிழ் இலக்கிய மரபின் அகம், புறம் என இருவகைகளின் பாற்படும் என்பது தொல்காப்பியத்தின் கூற்று.[76]

திருக்குறள் நூற் பிரிவு அட்டவணை

அறத்துப்பால் (1-38)

1. கடவுள் வாழ்த்து
2. வான் சிறப்பு
3. நீத்தார் பெருமை
4. அறன் வலியுறுத்தல்
5. இல்வாழ்க்கை
6. வாழ்க்கைத் துணைநலம்
7. மக்கட்பேறு
8. அன்புடைமை
9. விருந்தோம்பல்
10. இனியவை கூறல்
11. செய்ந்நன்றி அறிதல்
12. நடுவுநிலைமை
13. அடக்கம் உடைமை
14. ஒழுக்கம் உடைமை
15. பிறன் இல் விழையாமை
16. பொறை உடைமை
17. அழுக்காறாமை
18. வெஃகாமை
19. புறங்கூறாமை
20. பயனில சொல்லாமை
21. தீவினை அச்சம்
22. ஒப்புரவு அறிதல்
23. ஈகை
24. புகழ்
25. அருள் உடைமை
26. புலால் மறுத்தல்
27. தவம்
28. கூடா ஒழுக்கம்
29. கள்ளாமை
30. வாய்மை
31. வெகுளாமை
32. இன்னா செய்யாமை
33. கொல்லாமை
34. நிலையாமை
35. துறவு
36. மெய் உணர்தல்
37. அவா அறுத்தல்
38. ஊழ்

பொருட்பால் (39-108)

39. இறைமாட்சி
40. கல்வி
41. கல்லாமை
42. கேள்வி
43. அறிவுடைமை
44. குற்றம் கடிதல்
45. பெரியாரைத் துணைக்கோடல்
46. சிற்றினம் சேராமை
47. தெரிந்து செயல்வகை
48. வலி அறிதல்
49. காலம் அறிதல்
50. இடன் அறிதல்
51. தெரிந்து தெளிதல்
52. தெரிந்து வினையாடல்
53. சுற்றம் தழால்
54. பொச்சாவாமை
55. செங்கோன்மை
56. கொடுங்கோன்மை
57. வெருவந்த செய்யாமை
58. கண்ணோட்டம்
59. ஒற்றாடல்
60. ஊக்கம் உடைமை
61. மடி இன்மை
62. ஆள்வினை உடைமை
63. இடுக்கண் அழியாமை
64. அமைச்சு
65. சொல்வன்மை
66. வினைத்தூய்மை
67. வினைத்திட்பம்
68. வினை செயல்வகை
69. தூது
70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
71. குறிப்பு அறிதல்
72. அவை அறிதல்
73. அவை அஞ்சாமை
74. நாடு
75. அரண்
76. பொருள் செயல்வகை
77. படைமாட்சி
78. படைச்செருக்கு
79. நட்பு
80. நட்பு ஆராய்தல்
81. பழைமை
82. தீ நட்பு
83. கூடா நட்பு
84. பேதைமை
85. புல்லறிவாண்மை
86. இகல்
87. பகை மாட்சி
88. பகைத்திறம் தெரிதல்
89. உட்பகை
90. பெரியாரைப் பிழையாமை
91. பெண்வழிச் சேறல்
92. வரைவில் மகளிர்
93. கள் உண்ணாமை
94. சூது
95. மருந்து
96. குடிமை
97. மானம்
98. பெருமை
99. சான்றாண்மை
100. பண்புடைமை
101. நன்றியில் செல்வம்
102. நாண் உடைமை
103. குடி செயல்வகை
104. உழவு
105. நல்குரவு
106. இரவு
107. இரவச்சம்
108. கயமை

இன்பத்துப்பால் (109-133)

109. தகையணங்குறுத்தல்
110. குறிப்பறிதல்
111. புணர்ச்சி மகிழ்தல்
112. நலம் புனைந்து உரைத்தல்
113. காதற் சிறப்பு உரைத்தல்
114. நாணுத் துறவு உரைத்தல்
115. அலர் அறிவுறுத்தல்
116. பிரிவாற்றாமை
117. படர் மெலிந்து இரங்கல்
118. கண் விதுப்பு அழிதல்
119. பசப்பு உறு பருவரல்
120. தனிப்படர் மிகுதி
121. நினைந்தவர் புலம்பல்
122. கனவு நிலை உரைத்தல்
123. பொழுது கண்டு இரங்கல்
124. உறுப்பு நலன் அழிதல்
125. நெஞ்சொடு கிளத்தல்
126. நிறை அழிதல்
127. அவர் வயின் விதும்பல்
128. குறிப்பு அறிவுறுத்தல்
129. புணர்ச்சி விதும்பல்
130. நெஞ்சொடு புலத்தல்
131. புலவி
132. புலவி நுணுக்கம்
133. ஊடல் உவகை

நூலின் கட்டமைப்பு

திருக்குறள் ஒரு தனி ஆசிரியரின் படைப்பாகும். இக்கூற்றை நிரூபிக்கும் வகையில் இந்நூலானது “ஒரு நிலையான மொழியமைப்பையும் முறையான கட்டமைப்பையும் சீரான பொருளமைப்பையும் கொண்டுள்ளது” என்று சுவெலபில் கூறுகிறார்.[77] குறள் பலரால் இயற்றப்பட்ட ஒரு தொகுப்பு நூல் அன்று என்றும் அதன் உள்ளடக்கத்தில் எந்த ஒரு பிற்சேர்க்கைகளும் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.[77] இந்நூலினை மூன்று பால்களாகப் பகுத்தது இதன் ஆசிரியரே ஆகும். ஆனால் குறளின் உரைகளில் காணப்படும் துணைப்பிரிவுகளான "இயல்" பாகுபாடுகள் பின்னர் வந்த உரையாசிரியர்களால் செய்யப்பட்டவை.[78][79] குறளுரைகளில் இயல் பாகுபாடுகள் உரைக்கு உரை வேறுபட்டிருப்பதும் அதிகாரங்கள் இயல் விட்டு இயல் மாறி அமைந்துள்ளதுமே இதற்குச் சான்றுகளாகும்.[78][79][80] எடுத்துக்காட்டாக, பரிமேலழகரின் உரையில் கீழ்க்கண்டவாறு அமைந்துள்ள இயல் பிரிவுகள் மணக்குடவரின் உரையிலிருந்து பெரிதும் மாறுபடுகின்றன:[80]

  • அதிகாரங்கள் 1–4: பாயிரம்
  • அதிகாரங்கள் 5–24: இல்லறவியல்
  • அதிகாரங்கள் 25–38: துறவறவியல்
  • அதிகாரங்கள் 39–63: அரசியல்
  • அதிகாரங்கள் 64–95: அங்கவியல்
  • அதிகாரங்கள் 96–108: ஒழிபியல்
  • அதிகாரங்கள் 109–115: களவியல்
  • அதிகாரங்கள் 116–133: கற்பியல்

இவ்வாறு இயல் பாகுபாடுகள் பிற்காலச் சேர்க்கைகளாகவே அறியப்பட்டாலும், குறட்பாக்கள் அனைத்தும் பலதரப்பட்ட உரைகளுக்கிடையிலும் பிற்சேர்க்கைகள் ஏதுமின்றி அவற்றின் உண்மை வடிவம் மாறாது பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.[77][80] அறத்துப்பாலிலுள்ள அதிகாரங்கள் இல்லறம், துறவறம் என இரு இயல்களாக இடைக்கால உரையாசிரியர்களால் பகுக்கப்பட்டாலும், இவை நூலாசிரியரது பகுப்பன்று என்பதால் அவற்றில் இருக்கும் அனைத்துமே நூலாசிரியரால் இல்லறத்தானுக்கு அல்லது சாமானியனுக்குச் சொல்லப்பட்டவை தான் என்பது புலப்படுகிறது.[81] "ஒரு மனிதன் பல நிலைகளில் மகனாக, தந்தையாக, கணவனாக, நண்பனாக, குடிமகனாக ஆற்ற வேண்டிய கடமைகளை திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்" என்று தாய்வானிய அறிஞர் யூசி கூறுவது இங்குக் குறிப்பிடத்தக்கது.[82] குறளில் உள்ள "துறவறம்" என்பது இல்லற வாழ்க்கையைக் கைவிட்டுத் துறவறம் மேற்கொள்வதைக் குறிப்பதோ துறவிகளுக்காகக் கூறப்பட்டவையோ அல்ல. மாறாக, தனிநபர் ஒவ்வொருவரும் தனது அளவற்ற ஆசைகளைக் கைவிடுவதையும் அறநெறி பிறழாது சுயக்கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதையுமே "துறவற" அதிகாரங்கள் கூறுகின்றன என்று ஏ. கோபாலகிருட்டிணன் நிறுவுகிறார்.[81][j] சிரக்கியூஸ் பல்கலைக்கழக சமயவியல் பேராசிரியரான ஜோஅன் பன்ஸோ வாக்ஹார்ன் குறளை "ஒரு இல்லறத்தானுக்குக் கூறப்பட்ட அறவழி வாழ்வுக்கான பிரசங்கம்" என்று கூறுகிறார்.[83]

முப்பால் எனும் பகுப்பைப் போல் குறள்களை அதிகாரங்களாகத் தொகுத்ததும் நூலாசிரியர் தான்.[84] இயல் பகுப்புகளையும் அதிகார வைப்புமுறையினையும் மட்டுமே உரையாசிரியர்கள் மாற்றியுள்ளனர். ஒவ்வொரு அறத்தையும் பத்துக் குறட்பாக்களாகப் பாடி அவற்றின் தொகுப்பினை அதிகாரம் என்று பெயரிட்டாளும் மரபு வள்ளுவரிடம் காணப்படுவதாகவும் ஒவ்வோரதிகாரத்திற்கும் தலைப்பினை அவரே வழங்கியுள்ளார் என்றும் சோ. ந. கந்தசாமி கூறுகிறார்.[84] மேலும் அந்தந்த அதிகாரத்தில் பொதிந்துள்ள குறட்பாக்களில் பயின்றுவரும் தொடரினையே பெரிதும் பேணி அதிகாரத் தலைப்பாக வள்ளுவர் அமைத்துள்ளதாகவும் அவர் உரைக்கிறார்.[84] இதற்கு விதிவிலக்காக ஒவ்வொரு பால்களிலும் ஓர் அதிகாரம் உண்டு: அறத்துப்பாலில் வரும் "கடவுள் வாழ்த்து" அதிகாரமும் (முதல் அதிகாரம்), பொருட்பாலில் வரும் "படைச் செருக்கு" அதிகாரமும் (78-ஆம் அதிகாரம்), காமத்துப்பாலில் வரும் "படர்மெலிந்திரங்கல்" அதிகாரமும் (117-ஆவது அதிகாரம்) அவற்றில் வரும் குறள்களில் பயின்றுவராத சொல்லை அதிகாரத் தலைப்பாகக் கொண்டுள்ளன.[85] இவ்வாறு முரணாக இருப்பினும் இவையனைத்துமே வள்ளுவரால் சூட்டப்பட்ட பெயர்களேயாம்.[86] குறளின் முதலதிகாரத்தின் தலைப்பு தொல்காப்பிய மரபின் வழியே சூட்டப்பட்டதென்றே கந்தசாமி துணிகிறார்.[86]

சுவெலபிலின் கூற்றுப்படி குறளானது ஐயத்திற்கிடமின்றிச் சீரான அமைப்போடும் கவனத்தோடும் இயற்றப்பட்ட ஒரு நூலாகும்.[87] கருத்துகளில் இடைவெளியோ வெற்றிடமோ இன்றிக் குறட்பாக்கள் ஒவ்வொன்றும் தத்தம் அதிகாரத்தினின்று பிரித்தெடுக்க இயலா வண்ணம் கோர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.[78] ஒவ்வொரு குறட்பாவும் அமைவுப் பொருள், மூதுரைப் பொருள் என இரு வகையான பொருட்களைத் தரவல்லது.[78] குறட்பாக்களை அவை பயின்றுவரும் அதிகாரத்திலிருந்து தனியே நீக்கிப் பார்த்தால் அவை தங்களது அமைவுப் பொருளை இழந்து, தங்களுக்கே உரிய மூதுரைப் பொருளை மட்டும் தந்து ஒரு தனிப் பழமொழி போல் ஒலிக்கவல்லவை.[78] தனித்து நிற்கையில் குறட்பாக்கள் ஒவ்வொன்றும் குறுகிய வெண்பாக்களுக்கே உரிய அனைத்து இலக்கணங்களையும் வெவ்வேறு வகைகளில் கொண்ட நன்னெறிப் பாக்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றன.[78] அதிகாரங்களுக்குள் பயின்று வருகையில் குறட்பாக்கள் தங்களது இயல்பான மூதுரைப் பொருளோடு தாங்களிருக்கும் அதிகார அமைப்பின் வழி வரும் அமைவுப் பொருளையும் சேர்த்து உரைத்து நூலாசிரியரின் உள்ளப்பாங்கினை வெளிப்படுத்துவதாய் அமைகின்றன.[78] இவ்வகையில் குறள்கள் வெறும் நீதிக்கருத்துகளைக் கூறும் தனிப்பாக்களாக மட்டும் இருந்துவிடாமல் நூல்முழுதும் இழைந்தோடும் அடிப்படை அறத்தின் ஆழ்பொருளை முழுமையாக அகழ்ந்தெடுத்துத் தரும் பாக்களாக உருமாறுகின்றன.[78] இவ்வகையில் நூலின் நடையானது ஒரு முழுமையற்ற மனிதனை அறங்கள் கொண்டு செதுக்கி அவனை உணர்வு, சிந்தனை, சொல், செயல் என அனைத்து அளவிலும் அகவாழ்விலும் தினசரி வாழ்விலும் அறம் பிறழாத நல்ல இல்லறத்தானாகவும் புற வாழ்வில் சிறந்த குடிமகனாகவும் மாற்றுகிறது என்கிறார் சுவெலபில்.[88]

இலக்கிய அளவில், திருக்குறள் நடைமுறை அறநெறிக் கருத்துகளைச் செய்யுள் வடிவில் சுருக்கமாகவும், நேர்த்தியாகவும், தெளிவாகவும், வலுவுடனும் அனைவரும் ஏற்குமாறும் தரும் ஒரு நூலாகும். இந்நூல் முழுவதும் வள்ளுவர் செய்யுளின் அழகு, ஓசைநயம், கூறல் முறை போன்றவற்றில் கவனம் செலுத்தாது கூறவந்த அறத்திற்கே முழுமையாக முக்கியத்துவம் தந்திருப்பது நோக்கத்தக்கது.[89]

இயல் பாகுபாடுகள்

வள்ளுவர் முப்பாலாக மட்டுமே இயற்றிய நூலினை உரையாசிரியர்கள் இயல்களாகப் பல்வேறு வகையில் பகுத்துள்ளனர். இதன் விளைவாகக் குறளின் அதிகாரங்களின் வரிசை உரையாசிரியர்களால் பலவாறு மாற்றப்பட்டுள்ளன.[90] அறத்துப்பாலினைச் சிறுமேதாவியார் "பாயிரம்," "அறம்", "ஊழ்" என்று மூன்று இயல்களாகவும்,[91][92] பரிமேலழகர் முதலானோர் "பாயிரம்," "இல்லறம்," "துறவறம்" என மூன்று இயல்களாகவும் ஏனையோர் "பாயிரம்," "இல்லறம்," "துறவறம்," "ஊழ்" என நான்கு இயல்களாகவும் பிரித்துள்ளனர்.[93][94] பொருட்பாலினை உரையாசிரியர்கள் மூன்று முதல் ஆறு இயல்களாகப் பிரித்துள்ளனர். பரிமேலழகர் "அரசியல்," "அங்கவியல்," "ஒழிபியல்" என மூன்றாகப் பகுக்கையில் ஏனையோர் ஆறு இயல்கள் வரைப் பகுத்துள்ளனர்.[95][96][97] காமத்துப்பாலினை உரையாசிரியர்கள் இரண்டு முதல் ஐந்து இயல்களாகப் பகுத்துள்ளனர்.[93][98] பரிமேலழகர் "களவியல்," "கற்பியல்" என இரண்டாகவும், காலிங்கர், பரிப்பெருமாள், மோசிகீரனார் முதலானோர் "ஆண்பால் கூற்று," "பெண்பால் கூற்று," "இருபாலர் கூற்று" என மூன்றாகவும், மணக்குடவர் "குறிஞ்சி," "முல்லை," "மருதம்," "நெய்தல்," "பாலை" என ஐந்தாகவும் பகுத்துள்ளனர்.[99] இப்பகுப்புகள் யாவும் நூலாசிரியரதன்று என்பதால் இவை உரைக்கு உரை பெரிதும் மாறுபட்ட வகையில் அமைந்திருக்கின்றன. இன்றைய அறிஞர்களும் பதிப்பகத்தார்களும் பெரும்பாலும் பரிமேலழகரின் பகுப்பு முறையினைத் தழுவியே உரைகளை வெளியிடுவதால் அதிகார அமைப்பும், இயல் பாகுபாடும், குறள் வரிசைகளும் பரிமேலழகரைத் தழுவியே பெரிதும் பின்பற்றப்படுகின்றன.[100]

நூலின் சாரம்

Thumb
திருவள்ளூரில் உள்ள ஒரு விலங்குகள் புகலிடத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை.

குறள் ஒரு நடைமுறை அறவழி வாழ்வுக்கான படைப்பாகும்.[6][101] அஃது ஒரு மனிதனுக்கு இந்த உலகோடும் அதில் வாழும் பல்லுயிரோடும் உள்ள அறவழித் தொடர்பினைக் கூறும் நோக்குடன் எழுதப்பட்ட ஒரு நூல்.[102] ஆகச்சிறந்த ஒரு அறநூலாக இருந்தாலும், கவிநயம் மிக்க ஒரு படைப்பாக இது இயற்றப்படவில்லை.[103] ஒரு சிறந்த செய்யுள் நூலாகவோ படைப்பிலக்கியமாகவோ திகழும் நோக்கோடு இந்நூல் எழுதப்படவில்லை என்றும் இந்நூலில் கவிரசம் ததும்பும் இடங்கள் ஏதேனும் உண்டென்றால் அவற்றைக் காமத்துப்பாலில் மட்டுமே பார்க்கமுடியும் என்றும் சுவெலபில் கூறுகிறார்.[104] இவ்வாறு நூலின் அழகையோ பாநயத்தையோ விடுத்து அறங்களை மட்டுமே அடிக்கோடிட்டுக் காட்டும் வழக்கிலிருந்தே வள்ளுவரின் நோக்கம் ஒரு சிறந்த அறநூலினைப் படைப்பது தானேயன்றிச் சிறந்த இலக்கியப் படைப்பினை நல்குவதன்று என்பது புலப்படுகிறது.[104]

தமிழ் மரபிற்கிணங்க கடவுள் வாழ்த்தைக் கொண்டு நூலினைத் தொடங்கும் வள்ளுவர், அதன் பின்னர் அனைத்துயிருக்கும் அமிழ்தமாய்த் திகழும் மழையின் பெருமையையும் சான்றாண்மையும் அறமும் பிறழாத சான்றோரது பெருமையையும் கூறிவிட்டு[105][106] அதன் பின் நூலின் மையக் கருத்தான அறத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பின்னரே தனிமனித அறங்களை ஒன்றன்பின் ஒன்றாகப் போதிக்கத் தொடங்குகிறார்.[105][107] அறமானது வாழ்வின் அனைத்து நிலைகளிலும் வலியுறுத்தப்பட்டு அதோடு ஊழ்வினை என்பதும் விளக்கப்படுகிறது.[108] மானிட சமூகத்தின் மிக அடிப்படைத் தொழிலாக உழவினைப் பொருட்பாலில் வலியுறுத்தும் வள்ளுவர், இதன் காரணமாகவே உழவிற்கு அச்சாணியாகத் திகழும் மழையினைக் கடவுளுக்கு அடுத்தபடியாக வைத்துத் தொழுவது இங்கு நோக்கத்தக்க ஒன்றாகும்.[105][109]

முழுவதும் அறத்தை மையமாக வைத்தே இயற்றப்பட்டதால்[110][111] திருக்குறள் "அறம்" என்ற பெயராலும் வழங்கப்படுகிறது.[84][112][113][114] தனது காலத்தில் காணப்பட்ட மற்ற நூல்கள் இன்னவர்க்கு இன்ன அறம் என்று அறத்தைப் பிரித்துக் கூற முற்படுகையில், வள்ளுவர் மட்டும் "அறம் அனைவருக்கும் பொது" என்று மாறுபாடின்றிக் கூறுகிறார்.[115] அவரைப் பொறுத்தவரை பல்லக்கினைச் சுமப்பவனாயினும் அதில் அமர்ந்து பயணிப்பவனாயினும் இருவருக்கும் அறம் ஒன்றே என்கிறார் விஷ்வேஷ்வரன்.[115][116] பலனுக்காக அன்றி அறம் செய்யும் நோக்குடன் மட்டுமே அறம் செய்தல் வேண்டும் என்று தனது நூல் முழுவதும் வள்ளுவர் வலியுறுத்துவதாகச் சுவைட்சர் கூறுகிறார்.[117] வள்ளுவர் அறத்தைப் பற்றிப் பேசும்போது அவற்றை சாதி அடிப்படையிலான கடமைகளாக அன்றி பொது நன்மைகளாகவும் அரசியலைப் பற்றிப் பேசும்போது அதை அரசனுக்குக் கூறாமல் ஒரு தனிமனிதனுக்குக் கூறுவதாகவும் ஜப்பானிய இந்தியவியலாளரான தகனோபு தகாஹஷி குறிப்பிடுகிறார்.[118] இந்த நோக்குடனேயே குறளானது அடிப்படை அறங்களை முதற்பாலிலும், சமூக அரசியல் அறங்களை இரண்டாம் பாலிலும், அக உணர்வுகளைக் கவிதைகளாக மூன்றாம் பாலிலும் கொண்டு திகழ்கிறது.[119][120] அளவில் முதற்பாலைவிட இரு மடங்காகவும், மூன்றாமதை விட மும்மடங்காகவும் இயற்றப்பட்டுள்ள இந்நூலின் இரண்டாம் பாலானது அரசாட்சி முறைகளை உரைக்கும் இடங்களில் கூட சற்றும் அறம் பிறழாது அவற்றை உரைப்பது அறத்திற்கு இந்நூலாசிரியர் தரும் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுவதாக உள்ளது.[121][122]

குறளானது அகிம்சை என்னும் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும்.[10][11][12][13][14] "குறள் கொல்லாமையையும் இன்னா செய்யாமையையும் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறது" என்று சுவைட்சர் தனது நூலில் குறிப்பிடுகிறார்.[117] குறள் கூறும் தனிநபர் அடிப்படை அறங்களில் மிக முக்கியமானவையாக கொல்லாமையும் வாய்மையும் திகழ்கின்றன.[123][124][125] பி. எஸ். சுந்தரம் தனது நூலின் அறிமுகப் பகுதியில் "மற்ற மறங்களிலிருந்து தப்பித்தாலும் 'நன்றி மறத்தல்' என்ற மறத்திலிருந்து யாரும் தப்பிவிட முடியாது" என்று விளக்குகிறார்.[18] தலைவன்–தலைவிக்கு இடையே காணப்படும் அகப்பொருளைக் கூறும் காமத்துப்பாலில் கூட வள்ளுவரது அறம் இழைந்தோடுவது மிகவும் தெய்வீகத் தன்மை வாய்ந்தது என்றும் இதுபோன்ற தன்மையே குறளை மற்ற அறநூல்களிலிருந்து வேறுபடுத்துகிறது என்றும் நல்லசாமி பிள்ளை கருதுகிறார்.[126] அறத்துப்பாலில் "பிறன்மனை நோக்காமை" என்ற அறத்தையுரைத்த வள்ளுவர் காமத்துப்பாலில் ஆசை நாயகிகள் எவரையும் நாடாது "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற மரபின் வழி நின்று தலைவியை மட்டும் நாடும் ஒரு தலைவனைச் சித்திரிப்பதன் வாயிலாகக் "காமத்துப்பாலைப் போன்ற கவிச்சுதந்திரம் மிக்க இடங்களில் கூட வள்ளுவரது அறம் சற்றும் தொய்வடையாமல் ஒலிப்பதே அவரது அறச்சிந்தனைக்கு ஒரு சான்று" என்று கோபாலகிருஷ்ண காந்தி நிறுவுகிறார்.[127] புறவாழ்வின் ஒழுக்கங்களைக் கூறும் பொருட்பாலில் போர்க்களத்து வெற்றியையும் வீரத்தின் பெருமையையும் போற்றும் நூலாசிரியர் அறத்தையும் நீதியையும் நிலைநாட்டும் பொருட்டு மட்டுமே மரணதண்டனையை விதிக்கும் உரிமையினை ஆட்சியாளனுக்கு வழங்குகிறார்.[16][128][129]

குறள் வெறும் இரகசியம் மிகுந்த தத்துவங்களைப் போதிக்கும் நூலன்று என்றும் அஃது உலகியல் சார்ந்த நடைமுறைக் கோட்பாடுகளை நிறுவும் மெய்யியல் நூல் என்றும் கெளசிக் இராய் உரைக்கிறார்.[130] வள்ளுவர் தனது அரசியல் கோட்பாட்டினைப் படை, குடிமக்கள் (குடி), கையிருப்புப் பொருளாதாரம் (கூழ்), அமைச்சர்கள், நட்புவட்டம், அரண் ஆகிய ஆறு கருக்களைக் கொண்டு நிறுவுகிறார்.[130] பாதுகாப்பு அரண்களின் முக்கியத்துவத்தில் தொடங்கி எதிரியின் அரணைப் பற்றத் தேவையான முன்னேற்பாடுகள் வரை வள்ளுவரது பரிந்துரைகள் நீள்கின்றன.[130][131] நாடாளும் ஒருவன் தனது படைகளோடு எப்பொழுதும் போருக்கு ஆயத்த நிலையில் இருக்கவேண்டுமென்பதையும் இடம், காலம், சூழல் ஆகியற்றை ஆராய்ந்து அறம் தாழ்ந்த எதிரி நாட்டை வீழ்த்தவேண்டுமென்பதையும் உரைக்கும் குறள், அறம் தவறாத நாடாயின் அஃது அரண் கொண்டு பாதுகாக்கப்பட வேண்டியது என்பதையும் வலியுறுத்துகிறது. படையின் சிறப்பினைக் கூறும் அதிகாரங்கள் அச்சம் தவிர்த்து அறத்தைக் காக்கும் பொருட்டு உயிர்த்துறக்கவும் முற்படும் படைவீரர்களைக் கொண்ட ஒழுங்குடன் நிறுவப்பட்ட படையே சிறந்த படை என்ற இந்துதர்மப் போராயத்த முறையினைப் பிரதிபலிப்பதாக உள்ளன.[132][133]

ஆட்சியாளர் ஒருவர் தம் அமைச்சர்களோடு கலந்தாய்ந்து அறவழியில் நீதியினை நிலைநிறுத்தும் வகையில் நாடாள்வதன் மூலக்கூறுகளைக் குறள் உரைக்கிறது.[134] நாடாள்பவர் ஒருவருக்குச் சட்டங்களை இயற்றல், செல்வங்களை ஈட்டல், மக்களையும் வளங்களையும் காத்தல், பொருளாதாரத்தை முறையாகப் பங்கீடு செய்தல் ஆகியவையே முதன்மையான செயற்பாடுகள் எனக் குறள் கூறுகிறது.[130][134] நீதி தவறாத ஆட்சி, நடுநிலை தவறாத நிலைப்பாடு, குடிகளைக் காக்கும் திறன், நீதியும் தண்டனையையும் தவறாது வழங்கும் மாண்பு முதலியன நாடாள்வோரின் கடமைகளாகும் என்கிறது வள்ளுவம்.[134] கூடவே கொடுங்கோண்மை, வெருவந்த செய்தல், அற்றாரைத் தேறுதல் போன்ற தீய செயல்களை நாடாள்வோர் தவிர்க்காவிடில் அவை அனைவருக்கும் துன்பத்தைத் தந்து செல்வத்தைக் கரைத்து அரசையே கலைத்துவிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்.[135]

நூல் முழுவதும் அறங்களைக் குறிப்பாகக் கூறாது பொதுப்படையாகவே கூறுவதை வள்ளுவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.[68] ஒவ்வொரு மனிதனுக்கும் அறங்களின் அடிப்படையினை அறியவைப்பதன் வாயிலாகக் குறிப்பிட்ட சூழ்நிலை ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட தீர்வை நல்காது அனைத்து சூழ்நிலைகளையும் அந்நபரால் கையாள இயலுமாறு பொதுப்படையாகவே போதிக்கிறார்.[68] வள்ளுவரது இந்த நிலைப்பாட்டினைக் குறள் முழுவதிலும் காணலாம்.[68] எடுத்துக்காட்டாகக் கடவுளை வழிபடுமாறு கூறும் வள்ளுவர், வழிபாட்டு முறையைப் பற்றிக் கூறுவதில்லை; கடவுளை "வாலறிவன்", "அந்தணன்", "ஆதிபகவன்", "எண்குணத்தான்", "தனக்குவமை இல்லாதான்", "பொறிவாயில் ஐந்தவித்தான்", "வேண்டுதல் வேண்டாமை இலான்", "மலர்மிசை ஏகினான்" என்றெல்லாம் அழைக்கும் ஆசிரியர், கடவுளின் பெயரை எங்கும் குறிப்பிடுவதில்லை; அறநூல்களையும் மறைநூல்களையும் குறிப்பிடும் வள்ளுவர், அவற்றை அவற்றின் பெயர் கொண்டு அழைப்பதில்லை; ஈகை வேண்டும் என்று வலியுறுத்தும் அவர், எவற்றையெல்லாம் தானமாகக் கொடுக்கவேண்டும் என்று உரைப்பதில்லை; கற்றல் வேண்டும் என்று கூறும் அவர், எவற்றைக் கற்க வேண்டும் என்று பட்டியலிடுவதில்லை; வரிகளைப் பரிந்துரைக்கும் அவர், மன்னன் மக்களிடமிருந்து எவ்வளவு தொகையை வரிப்பணமாகப் பெறவேண்டும் என்று குறிப்பிடுவதில்லை; அரசன், நிலம், நாடு எனக் குறிக்கும் அவர், எந்த ஒரு அரசனின் பெயரையோ நாட்டின் பெயரையோ குறிப்பதி்ல்லை.[68] குறள் "உலகப் பொதுமறை" என்றும் வள்ளுவர் "பொதுப்புலவர்" என்றும் அழைக்கப்படுவதற்கு இவையே காரணங்களாக அமைகின்றன.[68]

உவமைகள், உருவகங்கள், முரண் தோற்றங்கள்

Thumb
எட்வார்டு ஜெவிட் ராபின்சன் 1873-ஆம் ஆண்டு பதிப்பித்த தமிழ் விஸ்டம் என்ற நூலில் காணப்படும் வள்ளுவரது பண்டைய ஓவியம்.[136]

உவமைகளுக்கும் உருவகங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காது அறங்களை வலியுறுத்தும் நோக்குடன் மட்டுமே வள்ளுவர் அவைகளைப் பயன்படுத்தியிருப்பதைக் குறள் முழுவதிலும் காணமுடிகிறது.[137] ஓர் அதிகாரத்தில் நேர்மறையாகவோ புகழ்ந்தோ பயன்படுத்திய அதே உவமைகளையும் உருவகங்களையும் மற்றொரு அதிகாரத்தில் எதிர்மறையாகவோ இகழ்ந்தோ பயன்படுத்த அவர் தயங்குவதில்லை.[137][138] இவ்வகையில் அறங்களை விளக்க முரண்போல் தோன்றும் கருத்துகளையும் வேண்டுமென்றே அவர் பல இடங்களில் பயன்படுத்துகிறார்.[71] எடுத்துக்காட்டாக,

  • "கள்ளுண்ணாமை" அதிகாரத்தில் கள்ளின் தீமையை உரைக்கும் வள்ளுவர்,[139] "தகையணங்கு உறுத்தல்" அதிகாரத்தில் உள்ளன்பானது கள்ளைக் காட்டிலும் மகிழ்ச்சியைத் தரவல்லது (குறள் 1090) என்று உள்ளன்பின் மேன்மையை உரைக்கக் கள்ளை உவமையாகப் பயன்படுத்துகிறார்.[140]
  • "செல்வத்துள் செல்வம் எது?" என்ற கேள்விக்கு "அருளுடைமை" அதிகாரத்தில் அருள் (குறள் 241) என்றும் "கேள்வி" அதிகாரத்தில் கேட்டல் (குறள் 411) என்றும் வள்ளுவர் பதிலுரைக்கிறார்.[137]
  • பிற அறங்களைக் கைவிட நேர்ந்தாலும் எந்நிலையிலும் கைவிட முடியாத அறங்கள் என்று பிறன்மனை நோக்காமை (குறள் 150), புறங்கூறாமை (குறள் 181) வாய்மை (குறள் 297) என்று பலவற்றைச் சுட்டும் வள்ளுவர் முடிவாக வாய்மையைக் கூட இரண்டாம் நிலைக்குத் தள்ளி கொல்லாமைக்கு முடிசூட்டுகிறார் (குறள் 323).[141]
  • "ஊழ்" அதிகாரத்தில் தமக்குரிய ஒன்றை ஒருவர் நீக்க முயன்றாலும் நீங்காது (குறள் 376) என்றுரைக்கும் வள்ளுவர்,[142][143] "மடியின்மை" அதிகாரத்தில் தம் குடியோடு வந்த குற்றமும் மடி (சோம்பல்) நீங்கின் நீங்கும் (குறள் 609) என்கிறார்.[144]
  • "மக்கட்செல்வம்" அதிகாரத்தில் ஒரு மனிதன் பெறக்கூடிய பெரும் பேறாகச் சான்றாண்மை மிக்க நன்மக்கட் செல்வங்களைக் கூறும் வள்ளுவர்,[145][146] "அடக்கமுடைமை" அதிகாரத்தில் அது தன்னடக்கத்தால் பெறப்படும் ஒன்று என்கிறார்.[147]

முரண்போல் தோன்றும் இவ்விடங்களுக்கிடையிலுள்ள அறத்தொடர்பினை உரையாசிரியர்கள் பதின்மரில் தொடங்கி அதன் பின் வந்த பலரும் தங்களது உரைகளில் தெளிவுபடுத்தியுள்ளனர். குறட்பாக்கள் 380 மற்றும் 620, 481 மற்றும் 1028, 373 மற்றும் 396, 383 மற்றும் 672 ஆகியவற்றிற்கு இடையிலுள்ள அறத்தொடர்பினை பரிமேலழகர் தனது உரையில் தெளிவுபடுத்தியிருப்பது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.[148]

Remove ads

உரைகளும் மொழிபெயர்ப்புகளும்

உரைகள்

Thumb
திருக்குறள் ஓலைச் சுவடி.

தமிழ் இலக்கிய வரலாற்றில் அதிகமாக அலசப்பட்ட நூலான திருக்குறள், கிட்டத்தட்டத் தமிழின் அனைத்து தலைசிறந்த அறிஞர்களாலும் கையாளப்பட்டு இவர்களுள் பலரால் ஏதோ ஒரு வகையில் உரையெழுதப்பட்ட நூல் என்ற பெருமையும் உடையது.[149][k] குறட்பாக்களைத் தங்கள் பாக்களில் எடுத்தாண்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பெரியபுராணம் உள்ளிட்ட பண்டைய தமிழிலக்கியங்கள் யாவும் குறளுக்குச் செய்யுள் வடிவில் எழுந்த முதல் உரைகள் என்று அறிஞர்களால் கருதப்படுகின்றன.[150]

உரைநடையில் குறளுக்கான பிரத்தியேக உரைகள் எழத் தொடங்கியது சுமார் பத்தாம் நூற்றாண்டு வாக்கில்தான். பத்தாம் நூற்றாண்டு தொடங்கி பதிமூன்றாம் நூற்றாண்டு வரை இருந்த காலகட்டத்தில் குறைந்தபட்சம் பத்து அறிஞர்கள் குறளுக்கு முதன்முறையாக உரைநடை பாணியில் உரை வரைந்தனர். பதின்மர் என்றழைக்கப்படும் இவர்கள் மணக்குடவர், தருமர், தாமத்தர், நச்சர், பரிதியார், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காலிங்கர், மற்றும் பரிமேலழகர் முதலானோர் ஆவர். இவர்களில் மணக்குடவர், பரிதியார், காலிங்கர், பரிபெருமாள், பரிமேலழகர் ஆகியோரது உரைகள் மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளன. தருமர், தாமத்தர், நச்சர் ஆகியோரது உரைகளின் ஒரு சில பகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன. திருமலையரது உரையும் மல்லரது உரையும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. பதின்மரது உரைகளின் வாயிலாகவே திருக்குறள் இன்று நமக்கு முழுமையாகக் கிடைத்திருக்கிறது. பதின்மர் உரைகளில் சிறப்பாகக் கருதப்படுவது பரிமேலழகர், மணக்குடவர், மற்றும் காலிங்கர் ஆகியோரது உரைகள்தான்.[24][149][151] பதின்மருரைகளில் 900 குறட்பாக்களில் அறிஞர்கள் பாடபேதங்களைக் கண்டறிந்துள்ளனர். இவற்றுள் 217 இடங்கள் அறத்துப்பாலிலும், 487 இடங்கள் பொருட்பாலிலும், 196 இடங்கள் காமத்துப்பாலிலும் இடம்பெற்றிருக்கின்றன.[152]

குறளுரைகளில் வரலாற்றில் தனிச்சிறப்பு வாய்ந்ததும் அறிஞர்களால் போற்றப்படுவதும் பரிமேலழகர் விருத்தியுரை ஆகும். இது பொ.ஊ. 1272-ஆம் ஆண்டு வாக்கில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த அறிஞரும் உரையாசிரியர்கள் பதின்மரில் கடையாக வாழ்ந்தவருமான பரிமேலழகரால் இயற்றப்பட்டது.[153] குறளின் மூலத்திற்கு இணையாகப் பரவலாகப் பதிப்பிக்கப்பட்டு பயிலப்படும் இவ்வுரை தமிழிலக்கிய வரலாற்றில் தனிச்சிறப்பு வாய்ந்த நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.[154] இவ்வுரை பல நூற்றாண்டுகளாக அறிஞர் முதல் பாமரர் வரை அனைத்து நிலைகளிலும் ஆக்கம் பெற்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அறிஞர்களுக்கான இதன் ஆராய்ச்சித் தொகுப்பு ஒன்று 1965-ம் ஆண்டு வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் என்பவரால் பதிப்பிக்கப்பட்டது.[153] பரிமேலழகர் தனது வைணவ இந்து சமய நெறிகளின் பார்வையின் அடிப்படையில் உரையினைக் கொண்டு சென்றுள்ளார் என்று நார்மன் கட்லர் கூறுகிறார். தாம் வாழ்ந்த பதிமூன்றாம் மற்றும் பதினான்காம் நூற்றாண்டின் தமிழகத்து இலக்கிய, சமய, கலாச்சாரக் கட்டமைப்புகளைத் தழுவியவாறு குறள் கூறும் அறங்களை வழுவாது தனது உரையில் பரிமேலழகர் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் பல்வேறு கோணங்களில் ஆராயவும் விளங்கிக்கொள்ளவும் ஏதுவான ஓர் உரையாக அவரது உரை உள்ளது என்றும் கட்லர் கருதுகிறார்.[154]

பதின்மர்களின் உரைகளைத் தவிர மேலும் மூன்று உரைகளேனும் இடைக்காலத்தில் இயற்றப்பட்டுள்ளன.[155] ஆயின் இவற்றின் ஆசிரியர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை.[155] இவற்றில் ஒன்று "பழைய உரை" என்ற பெயரிலும் மற்றொன்று பரிதியாரின் உரையைத் தழுவியும் இயற்றப்பட்டுள்ளன. மூன்றாவது "ஜைன உரை" என்ற பெயரில் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தால் 1991-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பெற்றது.[156] இவ்வுரைகளைத் தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளின் காலகட்டத்தில் சோமேசர் முதுமொழி வெண்பா, முருகேசர் முதுநெறி வெண்பா, சிவசிவ வெண்பா, இரங்கேச வெண்பா, வடமாலை வெண்பா, தினகர வெண்பா, ஜினேந்திர வெண்பா உள்ளிட்ட சுமார் 21 வெண்பா உரைகள் இயற்றப்பட்டன. இவையாவும் குறளுக்கான செய்யுள் வடிவ உரைகளாகும்.[157][158][159] திருமேனி இரத்தினக் கவிராயர் (பதினாறாம் நூற்றாண்டு),[160] இராமானுஜ கவிராயர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு),[160] திருத்தணிகை சரவணபெருமாள் ஐயர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு),[161] ஆகியோரது உரைகள் இருபதாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சிறந்த உரைகளில் அடக்கம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் பல புதிய உரைகள் குறளுக்கு இயற்றப்பட்டன. இவற்றுள் கவிராச பண்டிதர், உ. வே. சுவாமிநாத ஐயர் ஆகியோரது உரைகள் அறிஞர்களால் நவீனகால சிறப்புறு உரைகளாகக் கருதப்படுகின்றன.[162] இருபதாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூற்றுக்கணக்கான உரைகளில் கோ. வடிவேலு செட்டியார்,[163] கிருஷ்ணாம்பேட்டை கி. குப்புசாமி முதலியார்,[164] அயோத்தி தாசர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, திரு. வி. கா., பாரதிதாசன், மு. வரதராசன், நாமக்கல் கவிஞர், திருக்குறளார் வே. முனுசாமி, தேவநேயப் பாவாணர், மு. கருணாநிதி, சாலமன் பாப்பையா ஆகியோரது உரைகள் குறிப்பிடத்தக்கவையாகும். மு. வரதராசனின் 1949-ஆம் ஆண்டு முதன்முதலில் அச்சிடப்பட்ட "திருக்குறள் தெளிவுரை" என்ற உரை ஒரே பதிப்பகத்தாரால் 200-க்கும் அதிகமான பதிப்புகளில் வெளிவந்து மிக அதிகமாக அச்சிடப்பெற்ற நவீன உரையாகத் திகழ்கிறது.[165]

பத்தாம் நூற்றாண்டில் மணக்குடவர் உரையில் தொடங்கி 2013-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 382 அறிஞர்களால் இயற்றப்பட்ட சுமார் 497 குறளுரைகள் தமிழில் வெளிவந்துள்ளன என்றும் இவற்றில் 277 அறிஞர்களேனும் குறளுக்கு முழுமையாக உரையெழுதியுள்ளனர் என்றும் கு. மோகனராசு கணக்கிடுகிறார்.[166]

மொழிபெயர்ப்புகள்

Thumb
1856-ஆம் ஆண்டு கார்ல் கிரவுல் பதிப்பித்த குறளின் இலத்தீன் மொழிபெயர்ப்பு (வில்லியம் ஜெர்மன் என்பவரது ஆங்கிலக் குறிப்புகளுடன்). குறளின் முதல் ஜெர்மானிய மொழிபெயர்ப்பினையும் கிரவுல் பதிப்பித்தார்.[167]

தமிழ் இலக்கியங்களில் மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூலாகவும் உலகின் மிக அதிக மொழிபெயர்ப்புகளைக் கண்ட நூல்களில் ஒன்றாகவும் திருக்குறள் திகழ்கிறது. 1975-ஆம் ஆண்டின் முடிவில் குறள் 20 மொழிகளுக்குக் குறையாமல் மொழிபெயர்க்கப்பட்டிருந்ததாக சுவெலபில் தனது நூலில் குறிப்பிட்டிருந்தார்.[168] வடமொழி, இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, மராத்தி, குஜராத்தி, உருது ஆகிய இந்திய மொழிகளிலும், பர்மீயம், மலாய், சீனம், ஃபிஜியன், இலத்தீன், பிரெஞ்சு, ஜெர்மானியம், ரஷ்யன், போலிஷ், ஸ்வீடிஷ், தாய், ஆங்கிலம் ஆகிய அயல் மொழிகளில் அதுவரை குறளை மொழிபெயர்த்திருந்தார்கள்.[168]

இடைக்காலங்களில் குறளுக்கு உரைகள் எழுந்த காலகட்டத்தில் திருக்குறள் பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆயினும் இக்கூற்றினை நிரூபிக்கும் விதமான மொழிபெயர்ப்பு ஓலைச்சுவடிகள் இதுவரை மிக அரிதாகவே கிடைக்கப்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னைப் பல்கலைக்கழக நூலகராக இருந்த எஸ். ஆர். ரங்கநாதன் என்பவர் குறளின் மலையாள மொழிபெயர்ப்பு ஓலைச்சுவடி ஒன்றைக் கண்டெடுத்தார். மலையாள நாட்காட்டி ஆண்டு 777 என்று குறிக்கப்பட்டிருந்த அந்த ஓலைச்சுவடியின் இயற்றப்பட்ட ஆண்டினை சுவெலபில் 1595 என்று அறுதியிடுகிறார்.[169]

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் குறள் பல ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. குறிப்பாகக் கிறித்தவ மதபோதகர்கள் தங்களது மதப் பிரசார செயல்களின் ஒரு பகுதியாக குறள் உள்ளிட்ட இந்திய இலக்கியங்களை மொழிமாற்றம் செய்யத் துவங்கினர். இதன் விளைவாக குறளின் ஐரோப்பிய மொழிபெயர்ப்பு எண்ணிக்கை மேலும் கூடியது.[170] குறளின் முதல் ஐரோப்பிய மொழிபெயர்ப்பு 1730-இல் 'வீரமாமுனிவர்' என்றழைக்கப்படும் கான்ஸ்டான்ஷியஸ் ஜோசஃப் பெச்கி என்பவரால் இலத்தீன் மொழியில் செய்யப்பட்டது. ஆனால் அவர் குறளின் முதல் இரண்டு பால்களை மட்டுமே மொழிபெயர்த்தார். காமத்துப்பாலை படிப்பதென்பதும் மொழிபெயர்ப்பதென்பதும் ஒரு கிறித்தவ மதபோதகருக்கு உகந்ததல்ல என்று அவர் கருதியதால் அதை மொழிமாற்றம் செய்யாமல் விட்டுவிட்டார். குறளின் முதல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு 1767-ஆம் ஆண்டு பெயர் தெரியாத ஒரு அறிஞரால் செய்யப்பட்டது. எனினும், இது விரைவில் வழக்கின்றி உலகறியாது போய்விட்டது. வழக்கிலுள்ள முதல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு 1848-ஆம் ஆண்டு இ. எஸ். ஏரியல் என்பவரால் செய்யப்பட்டது. அவரும் குறளை முழுவதுமாக மொழிமாற்றம் செய்யாது சில பகுதிகளை மட்டுமே மொழிபெயர்த்தார். குறளின் முதல் ஜெர்மன் மொழிபெயர்ப்பு கார்ல் கிரவுல் என்பவரால் செய்யப்பட்டு 1856-ஆம் ஆண்டு இலண்டன், லைப்சிக் ஆகிய இரு நகரங்களிலும் பதிப்பிக்கப்பட்டது.[167][171] கூடுதலாக, 1856-ஆம் ஆண்டு கிரவுல் குறளை இலத்தினிலும் மொழிபெயர்த்தார்.[27]

ஆங்கிலத்தில் குறள் முதன்முறையாக 1794-ஆம் ஆண்டு ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவன அதிகாரியான என். இ. கின்டர்ஸ்லி என்பவராலும் 1812-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு அதிகாரியான எல்லீசன் என்பவராலும் மொழிபெயர்க்கப்பட்டது. இவை இரண்டுமே பகுதி மொழிபெயர்ப்புகள் மட்டுமே. கின்டர்ஸ்லி குறளின் ஒரு பகுதியை மட்டும் மொழிபெயர்க்கையில் எல்லீசன் 69 குறட்பாக்களைச் செய்யுள் நடையிலும் 51 குறட்பாக்களை உரைநடையிலும் என மொத்தம் 120 குறட்பாக்களை மொழிபெயர்த்தார்.[172][173] எட்வார்டு ஜெவிட் ராபின்சன் என்ற மதபோதகர் 1873-ஆம் ஆண்டில் பதிப்பித்த தி டமில் விஸ்டம் என்ற நூலிலும், அதன் பின்னர் 1885-ஆம் ஆண்டில் விரிவாக்கிப் பதிப்பித்த தி டேல்ஸ் அன்ட் போயம்ஸ் ஆஃப் செளத் இன்டியா என்ற நூலிலும் குறளின் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் மட்டும் மொழிபெயர்த்திருந்தார்.[174][175] மற்றுமொரு மதபோதகரான வில்லியம் ஹென்றி ட்ரூ 1840-இல் அறத்துப்பாலையும் 1852-இல் பொருட்பாலின் ஒரு பகுதியையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். நூலில் தனது உரைநடை மொழிபெயர்ப்புடன் சேர்த்து குறளின் மூலத்தையும் பரிமேலழகரின் உரையையும் இராமானுஜ கவிராயரின் விளக்கவுரையையும் பதிப்பித்தார். ஆனால், பொருட்பாலில் காணப்படும் குறளின் 63-ஆவது அதிகாரம் வரை மட்டுமே ட்ரூ மொழிபெயர்த்திருந்தார். பெச்கியைப் போலவே ட்ரூவும் இன்பத்துப்பாலை மொழிபெயர்க்காது இருந்துவிட்டார்.[176] இவற்றை 1885-ஆம் ஆண்டு ஜான் லாசரஸ் என்ற மதபோதகர் மெருகேற்றி கூடவே ட்ரூ மொழிபெயர்க்காது விட்டிருந்த பொருட்பாலின் மீதமிருந்த அதிகாரங்களையும் இன்பத்துப்பால் முழுவதையும் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதுவே குறள் முழுவதற்குமான முதல் ஆங்கில மொழிபெயர்ப்பாக உருவானது.[176] 1886-ஆம் ஆண்டு ஜி. யு. போப் என்ற மதபோதகர் செய்த செய்யுள் நடை மொழிபெயர்ப்பு குறள் முழுவதற்கும் ஒரே நபரால் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாக மாறியது. இதுவே குறளை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்திய நூலாகவும் அமைந்தது.[177]

இருபதாம் நூற்றாண்டில் குறள் பல தெற்காசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இவற்றில் சில அதுவரை வெளிவந்த குறளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தழுவியே செய்யப்பட்டவை ஆகும்.[169] இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் குறளுக்குச் சுமார் 24 ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிவந்திருந்தன. இவற்றில் சில ஆங்கிலேய அறிஞர்களாலும் மற்றவை இந்திய அறிஞர்களாலும் செய்யப்பட்டவையாகும். குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இந்திய அறிஞர்களில் வ. வே. சு. ஐயர், கே. எம். பாலசுப்பிரமணியம், சுத்தானந்த பாரதியார், ஆ. சக்கிரவர்த்தி, மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, சி. இராஜகோபாலசாரி, பி. எஸ். சுந்தரம், வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர், ஜி. வான்மீகநாதன், கஸ்தூரி சீனிவாசன், எஸ். என். ஸ்ரீராமதேசிகன், கே. ஆர். சீனிவாச ஐயங்கார் ஆகியோர் முக்கியமானவர்களாவர்.[178] கிட்டு சிரோமனி என்பவரால் குறள் நரிக்குறவர்களின் மொழியான வாக்ரி போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[179] 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை தரமணியில் இயங்கிவரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் திருக்குறளை 102 மொழிகளில் மொழிபெயர்க்கத் துவங்கிவிட்டதாக அறிவித்தது.[180] மிக அண்மையில் பப்புவா நியூ கினியின் தோக் பிசின் மொழியில் குறள் மொழிபெயர்கப்பட்டு 22 மே 2023 அன்று வெளியிடப்பட்டது.[181]

2024-ஆம் ஆண்டு நிலவரப்படி, குறளானது 57 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மொத்தம் 350 மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. இவற்றில் 143 மொழிபெயர்ப்புகள் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகும்.[182]

மொழிபெயர்ப்புச் சிக்கல்களும் திரிபுகளும்

Thumb
சென்னை வி.ஜி.பி. பொழுதுபோக்குப் பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய திருக்குறள் நூல்.

ஏழு சீர்களுக்குள் கூறவந்த அனைத்தையும் அடக்கிவிடும் ஆற்றல் கொண்டதும் தன்னியல்பிலேயே மிகவும் நுட்பம் வாய்ந்ததுமான குறள்வெண்பா பா வகைகளில் மிகவும் பொருளடர்த்தி கொண்ட தனது அரிய தன்மையினால் அறநெறிக் கருத்துக்களை உரைக்க மிகவும் ஏதுவான பாவகையாக விளங்குகிறது.[183] சுவெலபில் போன்ற அறிஞர்களால் "சுருக்கத்தின் உச்சமாகக் குறுகிய அதிசயம்" என்று வர்ணிக்கப்படும் குறள்வெண்பா, தமிழ் மொழியின் அமைப்பிலக்கணத்தை ஒத்தே பரிணமித்த பாவகையாகும். இதன் காரணமாகவே இப்பாவகையிலான செய்யுட்களை மொழிபெயர்க்கும் முயற்சிகள் இன்றுவரை மிகவும் சிக்கல் வாய்ந்ததாகவே அறிஞர்களால் கருதப்படுகிறது.[184] குறளை மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்வதைக் குறித்துக் கூறுகையில், "நடையழகிலோ சொல்வன்மையிலோ எந்த ஒரு மொழிபெயர்ப்பும் திருக்குறளின் தமிழ் மூலத்திற்கு இணையாக இருக்க இயலாது" என்று ஹெர்பர்ட் ஆர்தர் பாப்லி உரைக்கிறார்.[185] குறளின் ஒரு பகுதியை மொழிபொயர்த்து முடித்தவுடன் கார்ல் கிரவுல் "குறளின் வசீகரத் தன்மையினை எந்த ஒரு மொழிபெயர்ப்பாலும் நல்க இயலாது. குறள் வெள்ளி இழைகளுக்கிடையில் பதிக்கப்பட்ட தங்கக் கனி" என்று கூறினார்.[27] திருக்குறள் கூறும் உண்மையான பொருளை எந்த ஒரு மொழிபெயர்ப்பைக் கொண்டும் அறிய முடியாது என்றும் குறளின் தமிழ் மூலத்தைப் படிப்பதன் வாயிலாக மட்டுமே வள்ளுவர் கூறிய ஆழ்பொருளை அறிய முடியும் என்றும் சுவெலபில் கூறுகிறார்.[33]

குறளின் மொழிபெயர்புக்கே உரிய இதுபோன்ற சிக்கல்களுக்கிடையில் சில அறிஞர்கள் வள்ளுவத்துக்கு ஒவ்வாத தங்களது சொந்தக் கருத்துக்களை குறளின் சிந்தனைகளில் ஏற்றியும் வலிந்து பொருள்கொண்டும் மொழிபெயர்த்து விடுகின்றனர். இதனால் குறள் கூறும் சிந்தனைகள் பலவாறு திரிக்கப்பட்டும் சிதைக்கப்பட்டும் பொருள் காணப்படுகின்றன. காலனித்துவ காலத்திலிருந்து கிறித்தவ மதபோதகர்களின் மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் கிறித்தவக் கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு இணங்க உரையைத் திரித்து எழுதியதற்காக விமர்சிக்கப்படுகின்றன. குறிப்பாக வீரமாமுனிவர் எனப்படும் பெச்கி முதலான கிறித்தவ மதபோதகர்களது மொழிபெயர்ப்புகளில் இதுபோன்ற திரிபுகளைப் பல இடங்களில் காணமுடிகின்றது. வி. இராமசாமி தனது ஆய்வுநூலில் கூறுகையில், "பிற மொழிபெயர்ப்பாளர்கள் 'பிறவிப்பெருங்கடல்' என்பதை 'பல பிறவிகளாகிய கடல்' என்று மொழிபெயர்க்கையில் பெச்கி அச்சொல்லை 'இப்பிறப்பின் கடல்' என்றும் 'பிறவாழி' என்ற சொல்லை 'துயரமான வாழ்க்கைக் கடல்' என்றும் மொழிபெயர்ப்பதன் மூலம் குறள் கூறும் சிந்தனையை பெச்கி வேண்டுமென்றே திரிக்க முயல்கிறார்".[186] மேலும் "இதன் மூலம் பெச்கி கூற வரும் பொருள் 'துன்பப் பெருங்கடலை நீந்துவோர்' என்றாகும்" என்றும் "கிறித்தவத் தத்துவத்தில் மறுபிறவி மற்றும் ஒரே ஆத்மாவுக்குப் பல பிறவிகள் போன்ற சிந்தனைகள் கிடையாது என்பதே இதற்குக் காரணம்" என்றும் இராமசாமி துணிகிறார்.[186]

"அன்றிலிருந்து இன்றுவரை குறளுக்கு உரை எழுதும்போதும் குறளை மொழிமாற்றம் செய்யும் போதும் பல அறிஞர்கள் குறள் கூறும் சிந்தனைகளோடு தங்களது கலாச்சார சிந்தனைகளையும் சேர்த்து நூல்களைச் செய்து விடுகின்றனர்" என்று நார்மன் கட்லர் கூறுகிறார்.[187] பதின்மூன்றாம் நூற்றாண்டில் பரிமேலழகர் குறளின் சிந்தனைகளை அன்றைய பிராமணிய சிந்தனைகளோடு இணைத்துப் பொருள்கண்டார்.[187] பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிறித்தவ மதபோதகர்கள் குறளின் சிந்தனைகளை கிறித்தவக் கொள்கைகளுக்கேற்றார் போல் பொருள்தர முயன்றனர்.[187]

Remove ads

அச்சிடப்படுதல்

Thumb
1812-இல் முதன் முதலாக அச்சிடப்பட்ட திருக்குறள் மூலம்

குறளின் முதல் மொழிபெயர்ப்பு 1595 மலையாளத்தில் செய்யப்பட்டது என்று சுவெலபில், சஞ்சீவி ஆகியோர் கூறுகின்றனர்.[188][189][190][l] எனினும் இம்மொழிபெயர்ப்பு பதிப்பிக்கப்படாமலும் 1933–34-ஆம் ஆண்டு கொச்சி அகழ்வாராய்ச்சித் துரை தனது ஆண்டு அறிக்கையில் இதைப்பற்றிய விவரத்தினை வெளியிடும்வரை வெளியுலகுக்குத் தெரியாமலும் இருந்திருக்கிறது.[188]

திருக்குறள் முதன்முதலில் தாளில் அச்சிடப்பட்டு பதிப்பிக்கப்பட்டது 1812-ஆம் ஆண்டில் ஆகும். தஞ்சை ஞானப்பிரகாசர் என்பவர் மரத்தால் செய்யப்பட்ட அச்சுக்களைக் கொண்டு குறள் மற்றும் நாலடியாரின் ஓலைகளிலிருந்து எடுக்கப்பட்ட மூலப் பிரதிகளை அச்சிட்டார்.[191] 1835-ஆம் ஆண்டில்தான் ஆங்கிலேய அரசு இந்தியர்களுக்கு அச்சிட அனுமதி வழங்கியது என்பதால் குறள் தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூலாகவும்[192] நாலடியார் இரண்டாவது நூலாகவும் ஆயின.[193] ஆங்கிலேய அரசு அதிகாரியும் தமிழ் மற்றும் வடமொழி ஆர்வலருமான பிரான்சிசு வைட் எல்லிசு 1825-ஆம் ஆண்டு சென்னையில் தமிழ் சங்கமொன்றை நிறுவி மக்களைப் பழைய தமிழ் ஓலைச்சுவடிகளை அச்சிட தன்னிடம் எடுத்து வருமாறு அழைப்பு விடுத்தார்.[194] மதுரையில் ஐரோப்பிய அரசு அதிகாரியான ஜார்ஜ் ஹார்ங்டன்னிடம் சமையல் பணிபுரிந்த கந்தப்பன் என்பவர் 1825 தொடங்கி 1831-க்கு இடைப்பட்ட காலத்தில் திருக்குறள், திருவள்ளுவமாலை, நாலடியார் ஆகியவற்றின் ஏடுகளைச் சமையலுக்கு எரிக்கப்படவிருந்த விறகுகளுக்கு மத்தியில் கண்டெடுத்து எல்லீசனிடம் கொடுக்க 1831-ஆம் ஆண்டு இவையாவும் எல்லீசனின் மேலாளர் முத்துசாமி பிள்ளை மற்றும் தமிழறிஞர் தாண்டவராய முதலியார் ஆகியோரது உதவியுடன் பதிப்பிக்கப்பட்டன.[194] இதனைத் தொடர்ந்து 1833, 1838, 1840, மற்றும் 1842 ஆகிய ஆண்டுகளில் திருக்குறள் அடுத்தடுத்து அச்சிடப்பட்டது.[28] மகாலிங்க ஐயர் குறளின் 24 அதிகாரங்களுக்கு மட்டும் உரையினைப் பதிப்பிக்க, அதன் பின்னர் பல குறளுரைகள் அச்சுக்கு வரத் தொடங்கின.[195] அது முதல் குறள் தொடர்ந்து அச்சிடப்பட்டு வந்துள்ளது.[28] 1925 வரை குறள் சுமார் 65 பதிப்புக்கு மேல் வெளிவந்துள்ளது.[28] 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த எண்ணிக்கை ஐநூறைத் தாண்டியது.[196]

குறளின் முதல் ஆராய்ச்சியுரை இந்து சமய மடங்களில் கண்டெடுக்கப்பட்ட சுவடிகளிலிருந்தும் தனியே கிடைக்கப்பெற்ற சுவடிகளிலிருந்தும் 1861-ஆம் ஆண்டு ஆறுமுக நாவலரால் பதிப்பிக்கப்பட்டது.[197][198] பத்தொன்பதாம் நூற்றாண்டில் குறள் மற்றும் இதர தமிழிலக்கிய நூல்களைப் பலதரப்பட்ட ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து அவற்றிலிருந்து சந்தி பிரித்த வெண்பாக்களை முறைப்படுத்தி அச்சிடுவதில் ஆறுமுக நாவலர் அனைவருக்கும் முன்னோடி என்று சுவெலபில் பாராட்டுகிறார்.[198]

குறளுக்கான பரிமேலழகருரை முதன் முதலில் 1840-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது.[199] 1850-ஆம் ஆண்டு வேதகிரி முதலியாரின் உரையோடு திருக்குறள் அச்சிடப்பட்டது.[195] இதன் மறுபதிப்பு 1853-இல் வெளிவந்தது. இப்பதிப்பே திருக்குறள் முழுவதும் முதன்முறையாக உரையோடு வெளிவந்த பதிப்பாகும்.[195] 1917-ஆம் ஆண்டு முதன்முறையாக மணக்குடவருரை வ. உ. சிதம்பரம் பிள்ளையால் தொகுத்து வெளியிடப்பட்டது.[98][200] ஆயின் அவர் அறத்துப்பாலை மட்டுமே பதிப்பித்தார்.[98] மணக்குடவருரை முழுவதும் முதன்முதலாக கே. பொன்னுசாமி நாடாரால் 1925-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது.[201] 2013-ஆம் ஆண்டு முடிய பரிமேலழகருரை முப்பதுக்கும் மேற்பட்ட பதிப்பகத்தார்களால் இருநூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகளாக வெளிவந்துள்ளது.[165] முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்ட அன்று முதல் இதுவரை அதிகமாக அச்சிடப்பட்ட குறளுரையாகப் பரிமேலழகருரை திகழ்கிறது.[165]

திருக்குறள் 1970-களில் தொடங்கி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் கிட்டு சிரோமணி என்பவரால் தமிழ்ப் பிராமி எழுத்துகள், பல்லவர் காலத்து எழுத்துகள், வட்டெழுத்துகள் உள்ளிட்ட பல்வேறு பண்டைய தமிழெழுத்துகளில் உருவாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.[202][203]

Remove ads

பண்டைய இலக்கியங்களுடனான ஒப்பீடு

Thumb
1960-ஆம் ஆண்டு இந்திய அஞ்சல்துறை வெளியிட்ட வள்ளுவரின் உருவம் தாங்கிய அஞ்சல் தலை.

குறள் பண்டைய தமிழ் இலக்கிய மரபினைச் சேர்ந்த நூல் மட்டுமன்று; அது "பண்டைய இந்திய ஒருங்கிணைந்த அறநெறி மரபினைச் சேர்ந்த" ஓர் அற இலக்கியப் படைப்பு ஆகும்.[34] குறளில் காணப்படும் சிந்தனைகளும் மேற்கோள்களும் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் அர்த்தசாஸ்திரம், நீதிசாரம், காமசூத்திரம் போன்ற பண்டைய இலக்கியங்கள் பலவற்றையும் பல இடங்களில் ஒத்து இருக்கிறது என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.[56]

குறள் தனக்கு முந்தைய தமிழிலக்கிய நூல்களிலிருந்து பெரிய அளவில் சிந்தனைகளையும் செய்யுள் வரிகளையும் பெற்றுள்ளது என்று சுவெலபில் கருதுகிறார்.[204] எடுத்துக்காட்டாக, குறளின் காலத்துக்கு முந்தைய குறுந்தொகையிலிருந்து பல சொல்லமைப்புகளையும் நற்றிணையிலிருந்து பல வரிகளையும் திருக்குறளில் காணலாம்.[204] அதுபோலவே குறளுக்குப் பிந்தைய நூல்கள் பலவும் குறளின் சொல்லாட்சியினைப் பெரிதும் பின்பற்றுவதையும் காணமுடிகிறது. பத்தாம் நூற்றாண்டுக்கு முன் குறளைப் போற்றிப் பல புலவர்களால் இயற்றப்பட்ட திருவள்ளுவமாலையும் ஏனைய சிற்றிலக்கியங்களும் குறள் வரிகளைத் தங்களுக்குள் பதித்துக்கொண்டுள்ளன.[205] ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் இயற்றப்பட்ட காதல் இலக்கியமான பெருங்கதை பல இடங்களில் குறளின் வரிகளையும் சிந்தனைகளையும் சுட்டுகிறது.[206] ஆறாம் நூற்றாண்டு வாக்கில் படைக்கப்பட்ட பெளத்த இலக்கியமான மணிமேகலை தனது 22.59–61 பாடல்களில் குறளைக் மேற்கோள் காட்டுகிறது. சமணத்தைச் சாடும் இந்நூலானது குறளின் சிந்தனைகளைத் தன்னில் ஏற்பது நோக்கத்தக்கது.[207]

திருக்குறளின் இரண்டாம் பாலிலுள்ள கருத்துக்கள் பலவும் அர்த்தசாஸ்திரத்தை ஒத்து இருந்தாலும் சில முக்கிய அம்சங்களில் குறள் அர்த்தசாஸ்திரத்திலிருந்து வேறுபடுகிறது. கெளட்டிலியர் கூறுவதைப் போலல்லாது வள்ளுவர் தனது நூலில் ஒரு நாட்டின் முக்கிய அம்சமாக அதன் படையினைக் கருதுகிறார். எப்பொழுதும் போரினை எதிர்கொள்ளும் ஆயத்த நிலையில் சீராகவும் சிறப்பாகவும் பயின்று வைக்கப்பட்டு திறன்பட ஒழுகுவோரது தலைமையில் நடத்தப்படும் ஒரு படையானது ஒரு நாட்டின் இன்றியமையா அங்கமாகும் என்று வள்ளுவர் கூறுகிறார்.[130]

குறளின் பொருட்பால் என்பது தார்மீக சிந்தனையின் அடிப்படையில் நன்னெறிகளை உள்ளடக்கிய நூல் என்று ஹஜேலா கூறுகிறார்.[208] நாடாளும் அமைச்சர்களில் துவங்கி அரசு அலுவலர்கள் வரை மக்கள் அனைவரும் அறம்சார்ந்த வாழ்வினில் மட்டுமே பயணப்பட வேண்டும் என்று குறள் கூறுகிறது.[119] மனுஸ்ருமிருதியைப் போலன்றி குறள் எவ்விதமான பாகுபாட்டு முறைகளுக்கோ ஒரு குறிப்பிட்ட நாட்டை ஆள்பவர்க்கோ முக்கியத்துவம் தருவதில்லை. அருளும் அறமும் கொண்ட எவரும் அந்தணரே என்று குறள் உரைக்கிறது.[209] தனது காலத்தைய மற்ற நூல்களைப் போலல்லாது குறள் பெண்களைத் தாழ்த்தியோ பிறரைச் சார்ந்த நிலையிலிருத்தியோ செய்யாமல் அவர்களின் தனிதன்மைகளைப் போற்றுகிறது என்று சுவைட்சர் குறிக்கிறார்.[117]

உலக இலக்கியங்கள்

குறளின் சிந்தனைகள் பண்டைய உலக இலக்கியங்கள் பலவற்றோடும் பல இடங்களில் ஒத்து இருப்பதை அறிஞர்கள் கவனிக்கத் தவறுவதில்லை. ஹிதோபதேசம், பஞ்சதந்திரக் கதைகள், திருமந்திரம், கன்பியூசியஸின் லுன் யூ, ஆதிகிரந்தம், விவிலியத்தின் நீதிமொழிகள், புத்தரின் தம்மபதம், பாரசிக நூல்களான குலிஸ்தான், புஸ்தான் உள்ளிட்ட பல புனித நூல்களோடும் குறளை அறிஞர்கள் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளனர்.[210][211]

குறளும் கன்பியூசியஸின் தத்துவங்களான லுன் யூ என்றழைக்கப்படும் கன்பியூசிய அனலெக்டுகளும் பல ஒத்த கருத்துக்களைப் பகிர்வது கவனிக்கத்தக்கது. வள்ளுவர், கன்பியூசியஸ் இருவருமே தனிநபரின் அறங்களுக்கும் நன்னடத்தைகளுக்கும் முதலிடம் தருபவர்கள். வள்ளுவரைப் போலவே கன்பியூசியஸும் தனிமனித அறநெறிகள், கண்ணோட்டம், பெரியோரைப் பேணுதல் ஆகியவற்றைப் போதித்து நீதியைத் தழுவிய சட்டதிட்டங்களைப் போற்றியும் அருள், அறம், நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றை வாழ்வின் அடிப்படைகளாகக் கொண்டும் தனது போதனைகளைத் தந்துள்ளார்.[212] அகிம்சையையும் அன்பையும் அடித்தளமாகக் கொண்டு வள்ளுவம் இயற்றப்பட்டுள்ளதைப் போல் ஜென் என்னும் அடித்தளத்தைக் கொண்டு இயற்றப்பட்டவை கன்பியூசியத் தத்துவங்களாகும்.[213][14] இவற்றுக்கு அப்பால் கன்பியூசியஸிலிருந்து வள்ளுவர் இரு வகைகளில் வேறுபடுகிறார். முதலாவதாக, கன்பியூசியஸ் போல் ஒரு தத்துவ மேதை மட்டுமின்றி வள்ளுவர் ஒரு புலவருமாவார். இரண்டாவதாக, கன்பியூசியஸ் இன்பம் குறித்து ஏதும் கூறாதிருக்கையில் வள்ளுவர் இன்பத்திற்கு ஒரு பாலையே ஒதுக்கியுள்ளார்.[214] கன்பியூசியஸ் தத்துவத்தில் குழந்தை வளர்ப்பு என்பது வாழ்வின் நீட்சிக்கும் சமூகத்தின் நலனுக்கும் ஒரு முக்கியமான அங்கமாகும். "ஒரு மனிதன் தனக்கு மேலுள்ள பெரியோர்களான பெற்றவர்களையும் தனக்குக் கீழுள்ள மனைவி மற்றும் குழந்தைகளையும் பேணிப் பாதுகாப்பதற்குத் தேவையானவற்றை ஒரு அறிவிற் சிறந்த அரசன் தனது ஒவ்வொரு குடிமகனுக்கும் நல்க வேண்டியது அவசியம்" என்கிறது லுன் யூ.[215] வள்ளுவத்தின் மக்கட் செல்வம், இறைமாட்சி ஆகிய அதிகாரங்கள் இக்கருத்துக்களை நினைவுறுத்துவதாக அமைகின்றன.

Remove ads

சமூகத்தின் வரவேற்பு

Thumb
Thumb
காலவெள்ளத்தில் வள்ளுவரின் மாறுபட்ட தோற்றங்கள். இடம்: வள்ளுவரின் சைவ சமய ஓவியம்; வலம்: இலண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்கத் துறை வளாகத்தில் காணப்படும் வள்ளுவர் சிலை.

குறள் இயற்றப்பட்ட காலம் முதலாக அனைவராலும் பெரிதும் போற்றப்பட்டு வந்துள்ளது. சங்கம் மருவிய காலத்துப் புலவர்களும் இடைக்காலப் புலவர்களும் பலவாறு குறளையும் வள்ளுவரையும் புகழ்ந்துப் பாடியுள்ளனர். அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் என்று ஒளவையார் குறளின் நுண்மையைப் போற்றுகிறார்.[24][216][217] திருவள்ளுவமாலை என்ற பெயரில் தனிப் புலவர்கள் பலரால் போற்றி எழுதப்பட்டுத் தொகுக்கப்பட்ட பாக்களால் படப்பெற்ற ஒரே தமிழ் இலக்கியமும் திருக்குறளே ஆகும்.[24] சைவம், வைணவம், சமணம், பௌத்தம் உள்ளிட்ட இந்தியத் துணைக் கண்டத்து மதங்களனைத்தும் குறளை வெகுவாகப் பாராட்டியும் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருமுறை, பெரிய புராணம், கம்ப இராமாயணம் உள்ளிட்ட தங்களது இலக்கியங்களில் குறளை வைத்துப் பாடியும் பேணிவந்துள்ளன.[218]

எச்சமயத்தையும் சாராது அறங்களைப் பொதுப்படக் கூறுவதால் இந்தியாவிற்குள்ளும் வெளியிலும் என இருநிலையிலும் திருக்குறள் பரவலாகப் போற்றப்படுகிறது.[219] ரஷ்ய அறிஞர் அலெக்சாந்தர் பியாதிகோர்சுகி குறளை "இந்திய மற்றும் அகில உலக இலக்கியங்களின் தலையான படைப்பு" என்று பாராட்டுகிறார்.[220] இதற்குக் காரணம் குறளில் காணப்படும் இலக்கியச் சுவை மட்டுமல்ல என்றும் உலகிலுள்ள அனைவருக்கும் எல்லா காலத்திற்கும் பொருந்தும் அறச் சிந்தனைகளை வள்ளுவம் தன்னுள் கொண்டுள்ளதுமே ஆகும் என்று அவர் உரைக்கிறார்.[220] உலகப் பொது அறங்களை உரைப்பதால் வள்ளுவரை "பிரபஞ்சப் புலவர்" என்று போற்றுகிறார் ஜி. யு. போப்.[68][221] "குறளைப் போல் தலைச்சிறந்த அறங்களை மூதுரைகளாக உரைத்த நூலொன்றை உலகில் வேறெங்கும் காண்பதரிது" என்று ஆல்பர்ட் சுவைட்சர் கருதுகிறார்.[219][222] குறளை "இந்துக் குறள்" என்று போற்றிய லியோ டால்ஸ்டாய் அதனை மகாத்மா காந்திக்குப் பரிந்துரைத்தார்.[223][224] காந்தி குறளை "அறவாழ்வுக்கு தலையாய வழிகாட்டும் இன்றியமையா நூல்" என்றும் "வள்ளுவரின் வரிகள் என் உயிர்வரை சென்று ஊடுருவியுள்ளன. அவரைப் போல் அறப் பொக்கிஷத்தை நல்கியவர் எவருமில்லை" என்றும் கூறியுள்ளார்.[219]

"வள்ளுவரின் குறளை அவரது தாய்மொழியிலேயே கற்க வேண்டும் என்பதற்காகவே நான் தமிழ் பயில விரும்புகிறேன் ... நம்மில் சிலருக்கே வள்ளுவர் என்ற பெயர் தெரியும். வட இந்தியர்களுக்கு இப்பெரும் மகானின் பெயர் தெரிந்திராது. ஞானச் சிந்தனை பொக்கிஷத்தை இவரைப் போல் அள்ளித் தந்தவர் வேறொருவர் கிடையாது." ... "அற வாழ்விற்கான தன்னிகரில்லா நூல் இதுதான். வள்ளுவரின் பொன்மொழிகள் என் ஆன்மாவை ஊடுருவியவை."

— மகாத்மா காந்தி[225]

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு வந்த கிறித்தவ மதபோதகர்கள் குறளின் சிந்தனைகளைப் படித்து அவற்றை கிறித்தவ போதனைகளுடன் ஒப்பீடு செய்யத் துவங்கினர். அதன் விளைவாக அவர்களுள் பலர் குறளை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய முற்பட்டனர். சீர்திருத்தத் திருச்சபை போதகரான எட்வார்டு ஜெவிட் ராபின்சன் "குறளில் அனைத்தும் உள்ளன; அதில் இல்லாதது எதுவும் இல்லை" என்று கூறியுள்ளார்.[219] ஆங்கிலிக்க மதபோதகர் ஜான் லாசரஸ் "வேறெந்தத் தமிழ் நூல்களாலும் குறளின் தூய்மையை நெருங்க இயலாது" என்றும் "குறள் தமிழ் மொழிக்கு ஒரு ஓங்கி நிற்கும் புகழாரம்" என்றும் கூறுகிறார்.[219] அமெரிக்க கிறித்தவ மதபோதகர் இம்மான்ஸ் இ. வயிட் "உலகின் அனைத்து தலைச் சிறந்த அறச் சிந்தனைகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பே திருக்குறள்" என்று போற்றுகிறார்.[219]

வரலாறு முழுவதிலும் அரசியல், ஆன்மிகம், சமூகவியல் என அனைத்துத் தரப்பினராலும் போற்றப்பட்ட நூலாகத் திருக்குறள் இருந்து வந்திருக்கிறது. "குறள் அன்பின் நெறியாகவும் ஆத்மார்த்த வாழ்வின் வரையறையாகவும் திகழ்கிறது" என்றும் "அனைத்து காலத்திற்கும் பொருந்தும் அழிவற்ற இந்நூலானது மனிதகுலத்தின் அனைத்துச் சிந்தனைகளையும் தன்னுள் நீக்கமறக் கொண்டுள்ளது" என்றும் இராஜாஜி கருதுகிறார்.[219] "வாழ்வியலை போதிக்கும் அறநூல்களில் குறள் நிகரற்றது" என்று கே. எம். முன்ஷி கூறுகிறார்.[219] "குறு வெண்பாக்களைக் கொண்ட திருக்குறள் திட்டமிட்ட சிந்தனைகளிலும் அவற்றை சிறப்பாக வெளிப்படுத்தும் விதத்திலும் இதுவரை வந்த நூல்களனைத்திலும் சிறந்தது" என்று தேசியவாதியும் யோகியுமான அரவிந்தர் கருதுகிறார்.[219] "தமிழின் தலையாய நூலான திருக்குறள் மனித சிந்தனைகளின் தூய்மையான வெளிப்பாட்டின் உச்சம்" என்று குறளை 1848-ல் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்த இ. எஸ். ஏரியல் கூறுகிறார்.[226] "உலகின் ஒட்டுமொத்த சிந்தனைகளின் உறைவிடமாகவும் அறங்களின் வழிகாட்டியாகவும் ஆன்மிக அறிவின் புதைவிடமாகவும் திகழும் நூல் திருக்குறள்" என்று முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் சாகீர் உசேன் கூறுகிறார்.[219]

வரலாற்று ஆவணங்கள்

Thumb
2020 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த வள்ளுவரின் மணற்சிற்பம்

குறளைப் பற்றிய கல்வெட்டுகள், செப்பேடுகள், மேலோலைகள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்களைத் தமிழகத்தில் பரவலாகக் காணலாம். இடைக்காலத் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தின் முதன்மையான ஆட்சி நூலாகத் திருக்குறள் திகழ்ந்துள்ளது.[227] இடைக்கால குறள் உரைகளான பதின்மர் உரைகளில் பரிதியார், பரிப்பெருமாள், காலிங்கர், மல்லர் ஆகியோரது உரைகள் கொங்கு மண்டலத்தில் தோன்றியவையாகக் கருதப்படுகின்றன.[228] சேலம் மாவட்டம் மல்லூர் அருகிலுள்ள பொன்சொரிமலையில் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணக் கல்வெட்டு ஒன்றில் "தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா னெங்ஙன மாளு மருள்" என்ற புலால் மறுத்தல் அதிகாரத்துக் குறட்பா காணப்படுகிறது. 1617-ஆம் ஆண்டின் கொங்கு நாட்டு பூந்துறை நாட்டார் மேலோலை, 1798-ஆம் ஆண்டின் கொங்கு நாட்டுப் நாரணபுரத்து பல்லடம் அங்காள பரமேசுவரி கொடைச் செப்பேடு, நாமக்கல் மாவட்டம் கபிலக்குறிச்சிப் பகுதியில் காணப்படும் பதினெட்டாம் நூற்றாண்டின் கபிலமலைச் செப்பேடு, பழனி வீரமுடியாளர் மடத்துச் செப்பேடு, கொங்கு நாட்டு காரையூர் செப்பேடு, பழையகோட்டை ஏடு, மற்றும் சென்னை இராயப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோயிலில் காணப்படும் 1818-ஆம் ஆண்டின் எல்லீசன் கல்வெட்டுகள் போன்றவை திருக்குறளைப் பற்றிய குறிப்புகளைக் கொண்ட மேலும் சில வரலாற்று ஆவணங்களாகும்.[229]

சமூகத் தாக்கம்

திருவள்ளுவரின் உருவப்படங்கள் நெடுங்காலமாக சைவர்களாலும் சமணர்களாலும் வரையப்பட்டு வழங்கப்பட்டு வந்தன. கொண்டை வைத்த உருவம் துவங்கி தலைமுடி மழித்த உருவம் வரை பல்வேறு வகையில் இப்படங்கள் காணப்பபடுகின்றன. 1960-ஆம் ஆண்டு, கே. ஆர். வேணுகோபால சர்மா என்ற ஓவியர் வரைந்த கொண்டை முடியும் தாடியுடனுமான உருவப்படம் ஒன்றினை தமிழக மற்றும் இந்திய அரசாங்கங்களால் ஏற்றுக்கொண்டு பயன்படுத்தத் தொடங்கின.[230] 1960-களுக்குப் பின்னர் இதுவே அரசு அலுவலகங்களிலும் பொது இடங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.[127] 1964-ஆம் ஆண்டு இப்படத்தினை இந்தியப் பாராளுமன்றத்தில் அப்போதைய குடியரசுத் தலைவர் சாகீர் உசேன் திறந்து வைத்தார். 1967-ஆம் ஆண்டு தமிழகத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் வள்ளுவரது உருவப்படம் ஒன்று இருக்க வேண்டும் எ்னறு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.[231][m]

இருபதாம் நூற்றாண்டில் குறளுக்குப் பலர் இசையமைத்துப் பாடி அரங்கேற்றியுள்ளனர். இவர்களுள் மயூரம் விஸ்வநாத சாஸ்திரி, ரமணி பரத்வாஜ் ஆகியோர் அடங்குவர். குறளை முழுமையாகப் பாடி குறள் கச்சேரி நடத்தியவர்களுள் எம். எம். தண்டபாணி தேசிகர், சிதம்பரம் சி. எஸ். ஜெயராமன் ஆகியோர் முதன்மை வாய்ந்தவர்களாவர்.[232] மதுரை சோமசுந்தரம், சஞ்ஜய் சுப்பிரமணியன் ஆகியோரும் குறளை இசையாகப் பாடியுள்ளனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மயூரம் விஸ்வநாத சாஸ்திரி திருக்குறள் முழுவதற்கும் இசையமைத்தார்.[233] 2016-ஆம் ஆண்டு சனவரி மாதம் சித்திரவீணா என். ரவிகிரண் குறள் முழுவதற்கும் 16 மணி நேரத்திற்குள் இசையமைத்து சாதனை படைத்தார்.[232][234]

Thumb
சென்னை மெட்ரோ தொடர்வண்டியினுள் காணப்படும் ஒரு குறட்பா பலகை.

1818-ஆம் ஆண்டு அப்போதைய சென்னை நகர ஆட்சியராக இருந்த எல்லீசன் வள்ளுவரின் உருவம் பதித்த தங்க நாணயங்களை வெளியிட்டார்.[235][n][o] பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வள்ளலார் இராமலிங்க அடிகளார் குறளறங்களைப் பரப்பும் பொருட்டு நாள்தோறும் பொதுமக்களுக்கான திருக்குறள் வகுப்புகளை நடத்தத் துவங்கினார்.[195] 1968-ஆம் ஆண்டு அரசுப் பேருந்துகளில் அனைவரும் பார்க்கும்படியாகக் குறட்பாவை ஏந்திய பலகை ஒன்றை வைக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. குறளின் நினைவாகக் கன்னியாகுமரியிலிருந்து புதுதில்லி வரை 2,921கிலோமீட்டர் தொலைவு இயக்கப்படும் தொடர்வண்டிக்கு இந்திய இரயில்வே "திருக்குறள் அதிவேக விரைவுத் தொடருந்து" என்று பெயரிட்டுள்ளது.[236]

திருக்குறள் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வோடு ஒன்றிய ஒரு இலக்கியமாகும். அனைத்து நிலை மக்களும் எல்லா வேளைகளிலும் குறட்பாக்களைக் கையாளப்படுகின்றனர். இயக்குநர் கே. பாலச்சந்தரின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா தனது படங்களின் துவக்கத்தில் திருக்குறளின் முதற்பாவினைப் பாடித் துவங்குவதை வழக்கமாகக் கொண்டது.[232] தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பலவற்றிலும் குறளின் வரிகளும் சிந்தனைகளும் இடம்பெற்றுள்ளன.[237] இருபதாம் நூற்றாண்டிலிருந்து திருக்குறள் சார்ந்த மாநாடுகள் நடத்தும் வழக்கம் துவங்கியது. முதன்முதலாகத் திருக்குறள் மாநாடு ஒன்று 1941-ஆம் ஆண்டு திருக்குறளார் வீ. முனுசாமியாலும்[238] பின்னர் 1949-ஆம் ஆண்டு மேலும் ஒரு குறள் மாநாடு பெரியாராலும்[239] நடத்தப்பட்டன. இம்மாநாடுகளில் பல அறிஞர்களும் அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.[240] அதுமுதல் பல திருக்குறள் மாநாடுகள் தெடர்ந்து நடந்தேறியுள்ளன. ஓவியக்கலை,[241][242] இசை,[232] நடனம்,[243] தெருக்கூத்து, தெரு நிகழ்ச்சிகள்,[244] ஒப்புவித்தல், முற்றோதல்,[245][246] செயற்கூட்ட நிகழ்ச்சிகள்,[247] விடுகதைகள், புதிர்ப்போட்டிகள்[248] எனப் பலவற்றிலும் குறளின் பாக்களும் சிந்தனைகளும் பயன்படுத்தப்படுகின்றன. தமிழக அரசியல் தலைவர்கள் தாங்கள் ஆற்றும் மேடை உரைகளனைத்திலும் குறட்பாக்களை மேற்கோள் காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் குறளைப் பரவலாக எடுத்தாள்கின்றனர். இதுபோல் பேசிய தலைவர்களில் ராம் நாத் கோவிந்த்,[249] ப. சிதம்பரம்,[250] நிர்மலா சீதாராமன்,[250][251] ஆகியோர் அடங்குவர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2020-இல் இந்தியப் படைகளிடம் தாமாற்றிய உரை உட்படப் பல நிகழ்வுகளில் திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ளார்.[252][253] இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய அரசின் அறிக்கையான "2020 இந்தியப் பொருளாதார மதிப்பாய்வு" தனது அறிக்கையில் குறளையும் அர்த்த சாஸ்திரத்தையும் அதிகமாகச் சுட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.[254][255][256]

கோயில்களும் நினைவிடங்களும்

Thumb
Thumb
வள்ளுவருக்கான கோயில்களும் நினைவிடங்களும் தென்னிந்தியாவின் பல பகுதகளில் காணப்படுகின்றன. சென்னையிலுள்ள வள்ளுவர் கோட்டம் (இடம்) கோயில்களில் காணப்படும் தேரின் வடிவில் அதனுள் வள்ளுவர் அமர்ந்திருக்கும் வகையில் அமைக்கப்பட்டதாகும்.[257] இதன் ஒரு பகுதியாக 1,330 குறட்பாக்களும் செதுக்கப்பட்ட தூண்களைக் கொண்ட மண்டபமும் (வலம்) அடங்கும்.[257]

குறளையும் திருவள்ளுவரையும் மக்கள் வழிவழியாகப் போற்றி வருகின்றனர். பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சைவ சமூகத்தினர் மயிலாப்பூரில் உள்ள ஏகாம்பரேசுவரர்–காமாட்சி கோயில் வளாகத்தில் திருவள்ளுவருக்குக் கோயில் ஒன்றை நிறுவினர்.[83] இங்குள்ள ஒரு இலுப்பை மரத்தடியில் தான் வள்ளுவர் பிறந்தார் எனவும் அதே இடத்தில் தான் வள்ளுவரது சீடரான ஏலேலசிங்கன் முதன்முதலில் அவருக்கு ஒரு வழிபாட்டுத் தலத்தை கட்டியதாகவும் நம்பப்படுகிறது. இம்மரத்திற்கடியில் குறளின் ஓலைச்சுவடியினை கையில் ஏந்திவாறு யோக நிலையில் வீற்றிருக்கும் வள்ளுவரது சிலை உள்ளது.[83] அவ்விலுப்பை மரத்தையே தல மரமாகக் கொண்ட இக்கோயிலின் சன்னிதியில் வள்ளுவரின் சிலையோடு அவரது மனைவி வாசுகியின் சிலையும் உள்ளது. இக்கோயில் 1970-களில் பெரிய அளவில் சீரமைக்கப்பட்டது.[258]

Thumb
மயிலாப்பூரில் அமைந்துள்ள கோயிலில் உள்ள வள்ளுவர் சந்நிதி

வள்ளுவருக்கு மேலும் பல கோயில்கள் தென்னிந்தியாவில் பரவலாகக் காணப்படுகின்றன. இவற்றில் முக்கியமான கோயில்கள் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி[259][260] திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பெரிய கலையம்புத்தூர், இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தொண்டி, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெடுவாசல், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வில்வாரணி ஆகிய ஊர்களிலும் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள கஞ்சூர் தட்டன்பாடி, இடுக்கி மாவட்டத்திலுள்ள சேனாபதி ஆகிய ஊர்களிலும் காணப்படுகின்றன.[261] இவற்றில் மயிலாப்பூர், திருச்சுழி உள்ளிட்ட இடங்களில் வள்ளுவர் சைவ மதத்தினரால் 64-வது நாயன்மாராகப் போற்றப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.[259][262] தமிழகத்தில் பலர் அவ்வையார், கபிலர், அகத்திய முனிவர் ஆகியோருடன் வள்ளுவரைத் தங்களது மூதாதையராகக் கருதுகின்றனர் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் டி. தர்மராஜ் கூறுகிறார். குறிப்பாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வள்ளுவரைக் கடவுளாக வழிபடுகிறார்கள் என்றும் அவர் உரைக்கிறார்.[259]

1976-ஆம் ஆண்டு சென்னையில் குறளையும் திருவள்ளுவரையும் நினைவு கூறும் விதமாக வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டது.[257] இந்நினைவிடத்தின் குறிப்பிடத்தக்கக் கூறாக திருவாரூர் தேரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள 39 மீட்டர் (128 அடி) உயரத் தேர் விளங்குகிறது. இதனுள் ஆளுயர வள்ளுவர் சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இத்தேரைச் சுற்றிலும் பளிங்குக் கற்களில் குறட்பாக்கள் பதிப்பிக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.[257] இந்நினைவிடத்தின் முதன்மை வளாகத்தில் 1,330 குறட்பாக்களும் கல்வெட்டுகளாகச் செதுக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.[263]

வள்ளுவரின் சிலைகள் உலக அளவில் பரவலாகக் காணப்படுகின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை கன்னியாகுமரி, சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, விசாகப்பட்டினம், ஹரித்வார், பிரயாக்ராஜ்,CITEREFThe_Hindu_Tamil,_17_March_2025[264] புத்தளம், சிங்கப்பூர், இலண்டன், தாய்வான் ஆகிய இடங்களிலுள்ள சிலைகளாகும்.[265][266] இவற்றுள் மிக உயரமான சிலை கன்னியாக்குமரியில் வங்கக் கடல், அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்றும் கூடும் இடமான இந்திய தீபகற்பத்தின் தென்முனையில் 2000-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 41 மீட்டர் (133 அடி) உயரக் கற்சிலையாகும்.[267] இச்சிலை தற்போது இந்தியாவின் 25-ஆவது பெரிய சிலையாகும். 1968-ஆம் ஆண்டு சனவரி 2 அன்று சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு, தமிழக அரசு சென்னை மெரினா கடற்கரையில் பல ஆளுயரச் சிலைகளை நிறுவியது. அவற்றுள் வள்ளுவரின் முழு உருவச் சிலையும் ஒன்றாகும்.[268]

Remove ads

மரபுத் தாக்கம்

Thumb
கன்னியாக்குமரியில் கடலில் அமைக்கப்பட்டுள்ள வள்ளுவர் சிலை.

குறள் தொன்றுதொட்டு சான்றோர்களால் போற்றிவரப்பட்ட ஒரு தமிழ் நூலாகும்.[188] தமிழ்ப் பண்பாட்டினை நிலையாக வரையறை செய்த நூல் இது என்பது அனைத்து அறிஞர்களாலும் ஒருமனதாக ஏற்கப்படும் கருத்து.[25] இந்தியத் துணைக்கண்ட இலக்கியங்கள் பலவற்றோடும் ஒப்பீடு செய்து அனைத்துத் தரப்பினராலும் பயிலப்படும் நூல் திருக்குறள்.[269] பதினெட்டாம் நூற்றாண்டில் துவங்கி பல ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இந்நூல் உலக அரங்கில் பேசப்படும் இலக்கியமாகத் திகழ்கிறது.[270] குறளால் உந்தப்பட்ட ஆசிரியர்களில் இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனார், சேக்கிழார், கம்பர், லியோ டால்ஸ்டாய், மகாத்மா காந்தி, ஆல்பர்ட் சுவைட்சர், இராமலிங்க அடிகளார், இ. எஸ். ஏரியல், வீரமாமுனிவர், காரல் கிரவுல், ஆகஸ்டு ஃப்ரெட்ரிச் கேமரர், நேதனியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி, எல்லீசன், சார்லஸ் எட்வர்ட் கோவர், ஜி. யு. போப், வினோபா பாவே, அலெக்சாந்தர் பியாதிகோர்சுகி, அப்துல் கலாம், மற்றும் யூ ஹ்சி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இவர்களுள் பலர் குறளை தங்களது தாய்மொழியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர்.[270][271]

தமிழ் மொழியில் அதிகம் சுட்டப்படும் இலக்கியமாகத் திருக்குறள் விளங்குகிறது.[27] பண்டைய நூல்களான புறநானூறு, மணிமேகலை, சிலப்பதிகாரம், பெரிய புராணம், கம்பராமாயணம், திருவள்ளுவமாலை போன்ற அனைத்தும் வள்ளுவராலேயே பெயரிட்டு அழைக்கப்படாத குறளைப் பல்வேறு சிறப்புப் பெயர்களிட்டு தங்களது பாடல்களில் சுட்டுகின்றன.[218] குறளின் வரிகளும் சிந்தனைகளும் புறநானூரில் 32 இடங்களிலும், புறப்பொருள் வெண்பாமாலையில் 35 இடங்களிலும், பதிற்றுப்பத்தில் ஓரிடத்திலும், பத்துப்பாட்டில் ஓரிடத்திலும், சிலப்பதிகாரத்தில் 13 இடங்களிலும், மணிமேகலையில் 91 இடங்களிலும், சீவக சிந்தாமணியில் 20 இடங்களிலும், வில்லிபாரதத்தில் 12 இடங்களிலும், திருவிளையாடற் புராணத்தில் ஏழு இடங்களிலும், கந்தபுராணத்தில் நான்கு இடங்களிலும் சுட்டப்படுகின்றன.[272] கம்பராமாயணத்தில் கம்பர் சுமார் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் குறளைச் சுட்டுகிறார்.[273][274] இந்தியாவிலும் உலக அளவிலும் சைவ, நனிசைவ மற்றும் தாவர உணவுகள் பற்றிய மாநாடுகளில் பரவலாகச் சுட்டப்படும் நூலாகவும் திருக்குறள் விளங்குகிறது.[275][276] மேலும் விலங்குரிமை, கொல்லாமை, புலான் மறுத்தல் உள்ளிட்ட தலைப்புகளில் எழும் சமூக ஊடக, இணைய விவாதங்களில் குறட்பாக்கள் பெரிதும் சுட்டப்படுகின்றன.[277]

Thumb
சென்னையில் 2019-ஆம் ஆண்டு நடந்த ஒரு குறள் சொற்பொழிவு.

ஆங்கிலேய ஆட்சியின் போது திருக்குறள் முதன்முதலாகப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது.[278] எனினும், தேர்ந்தெடுக்கப்பட்ட வெறும் 275 குறட்பாக்கள் மட்டுமே மூன்றாம் வகுப்பு தொடங்கி பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிச் சிறார்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டு வந்தது.[279] இந்திய சுதந்திரத்திற்குப் பின்னரும் பல ஆண்டுகளாக குறளைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கும் முயற்சிகள் பலனளிக்காமல் இருந்து வந்தன.[280] 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் "அறம் பிறழாத குடிமக்களைக் கொண்டதாக இந்நாட்டினை ஆக்கவேண்டும்" என்று பணித்து 2017–2018 கல்வியாண்டு முதல் குறளின் முதல் இரண்டு பால்களிலுள்ள 108 அதிகாரங்களில் காணப்படும் 1,080 குறட்பாக்களையும் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் கட்டாயப் பாடமாகச் சேர்க்கப்பட வேண்டுமென்ற உத்தரவினைப் பிறப்பித்தது.[280][281] மேலும் "வாழ்வியலுக்குத் தேவையான அறங்களையும் அறிவினையும் குறளுக்கு நிகராக நல்கக்கூடிய வேறு ஒரு சமய நூலோ மெய்யியல் நூலோ எங்குமில்லை" என்று கூறி உயர்நீதிமன்றம் தன் தீர்ப்பினை நல்கியது.[282]

மகாத்மா காந்தி உட்பட வரலாற்றில் பலரை அகிம்சையின் வழியில் திருக்குறள் பயணிக்க வைத்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.[283] குறளின் ஜெர்மானிய மொழிபெயர்ப்பு ஒன்றைப் படிக்க நேர்ந்ததன் விளைவாக லியோ டால்ஸ்டாய்க்கு வள்ளுவரின் இன்னா செய்யாமை அதிகாரம் பற்றித் தெரிய வந்ததும், அது வன்முறையை எதிர்க்கும் டால்ஸ்டாயின் சிந்தனைகளுக்கு வலுசேர்த்தது. தனது பொதுவாழ்வின் துவக்கத்தில் மகாத்மா காந்தி டால்ஸ்டாயிடம் அறிவுரை கேட்க, தனது "ஒரு இந்துவுக்கு வரைந்த மடல்" (A Letter to a Hindu) என்று தலைப்பிட்ட ஒரு கடிதம் வாயிலாக டால்ஸ்டாய் வள்ளுவரது இச்சிந்தனைகளை காந்திக்கு அறிமுகம் செய்துவைத்து அவரை அகிம்சை வழியில் நின்று சுதந்திரப் போராட்டத்தினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.[219][223][284] அவ்வறிவுரையின் படி காந்தி தனது சிறைவாழ்வின் போது திருக்குறளைப் படிக்கத் துவங்கி அதன் பின்னர் ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போர் புரிவதென்று முடிவெடுத்தார்.[24] தனது இளவயது முதலே குறளின்பால் ஈர்க்கப்பட்ட 'வள்ளலார்' இராமலிங்க அடிகளார், கொல்லாமையையும் புலால் மறுப்பினையும் மக்களுக்கு வலியுறுத்தி அகிம்சையையும் ஜீவகாருண்யத்தையும் மக்களிடையே பரப்பும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.[271][285]

Remove ads

இவற்றையும் பார்க்க

குறிப்புகள்

a. ^ குறள் "தார்மீக சைவ" அல்லது "சாத்வீக சைவ" வாழ்க்கை முறையினை,[15][213] அதாவது மனிதர்கள் இறைச்சி உண்ணாமலும் வலியுணர் உயிர்களுக்குத் தீங்கு விளைவிக்காமலும் வாழ தார்மீக ரீதியாகக் கடமைப்பட்டுள்ளனர் என்ற கோட்பாட்டை,[19][286] ஆழமாக வலியுறுத்துகிறது.[287][288][289] சைவ மற்றும் நனிசைவ வாழ்க்கை முறைகளின் தார்மீக அடித்தளமாக இருக்கும் அகிம்சை என்ற கருத்து, குறளின் இன்னா செய்யாமை அதிகாரத்தில் (அதிகாரம் 32) விவரிக்கப்பட்டுள்ளது.[19][290] இக்கோட்பாட்டைப் பற்றிய இன்றைய அறிஞர்களின் சிந்தனைகளைப் பற்றி மேலும் அறிய எங்கலின் “The Immorality of Eating Meat" ["இறைச்சியை உண்ணும் ஒழுக்கக்கேடு"] (2000) என்ற கட்டுரையைப் பார்க்கவும்.[286]

b. ^ குறளில் வடமொழிச் சொற்களின் எடுத்துக்காட்டுகளுக்கு சுவெலபிலின் The Smile of Murugan ["முருகனின் சிரிப்பு"] நூலினைப் பார்க்கவும்.[291]

c. ^ தற்போதைய கிரிகோரியன் ஆண்டில் 31 ஆண்டுகளைச் சேர்ப்பதன் மூலம் வள்ளுவர் ஆண்டு பெறப்படுகிறது.[40][292]

d. ^ குறளின் அருட்சார் அறங்களை (அஃதாவது இன்னா செய்யாமை, கொல்லாமை, அன்புடைமை, புலான் மறுத்தல், கண்ணோட்டம், அருளுடைமை ஆகியன) சுவெலபில் ஆபிரகாமிய நூல்களான விவிலியத்தின் இணைச் சட்ட நூலின் அதிகாரத்தோடும் (14:3–14:29) குர்ஆனிலுள்ள அதிகாரத்தோடும் (5:1–5) ஒப்பிடுகிறார்.[17]

e. ^ ஜி. யு. போப்பின் கூற்று ஒரு "தவறான இலக்கியக் காலவரையறை" என்று நல்லசாமி பிள்ளை நிறுவுகிறார்.[293] "இதுபோல் நிறுவ முயலும் போப்பின் முயற்சிக்கு குறளின் முதலிரு பால்கள் பெரும் தடையாகவே விளங்குகின்றன" என்றும் "கிறித்தவ நெறிகளில் காணப்படும் நுணுக்கமான பிழைகளை அசாதாரணமாகப் புறந்தள்ளும் ஆற்றல்மிக்க சிந்தனைகளைக் குறளின் முதலிரு பால்களில் காணலாம்" என்றும் நல்லசாமி பிள்ளை மேலும் கூறுகிறார்.[293] விவிலியம் கூறும் கொல்லாமை வெறும் மனிதக் கொலைகளை மட்டுமே தடுக்க முயலுகையில் குறள் கூறும் கொல்லாமையோ மனிதன் உட்பட அனைத்து விலங்குகளையும் உள்ளடக்கியது என்று லாசரஸ் சுட்டுகிறார்.[294] இதுவே இன்று அறிஞர்களின் ஒருமித்தக் கருத்தாக உள்ளது.[294][295][296]

f. ^ அனந்தநாதன் கூறுவதாவது: "Non-killing is an absolute virtue (aram) in the Arattuppal (the glory of virtue section), but the army's duty is to kill in battle and the king has to execute a number of criminals in the process of justice. In these cases, the violations of the aram [in the earlier section] are justified [by Thiruvalluvar] in virtue of the special duties cast on the king and the justification is that 'a few wicked must be weeded out to save the general public'." (குறள் 550).[57]

g. ^ 1,330 குறள்களும் பொதுவாக மூன்று பால்களிலும் ஒரே தொடர்ச்சியாக நேரியல் பாணியில் எண்ணப்படுகின்றன. குறள்களை அவற்றின் அதிகார எண் மற்றும் அதிகாரத்திற்குள் அவற்றின் பாவரிசை எண் ஆகியவற்றைக் கொண்டும் குறிக்கலாம். எடுத்துக்காட்டாக, 104 ஆம் அதிகாரத்தில் (உழவு) மூன்றாவது குறளை “குறள் 1033” என்றோ “குறள் 104:3” என்றோ குறிப்பிடலாம். இடைக்கால உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் திருக்குறளை பலவாறு இயல்களாகப் பிரித்து அவற்றுள் அதிகார வைப்புமுறையையும் அதிகாரங்களுக்குள் குறள்களின் வைப்புமுறையையும் பலவாறு மாற்றியுள்ளதால், அதிகார வரிசை எண்களும் குறட்பாக்களின் வரிசை எண்களும் உரைக்கு உரை பலவாறு மாற்றமடைந்துள்ளன. இதன் விளைவாக அதிகாரங்களும் குறட்பாக்களும் வள்ளுவரது உண்மையான வரிசைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அதிகார மற்றும் குறட்பாக்களின் வரிசைமுறை பரிமேலழகரின் பகுப்புமுறையின் அடிப்படையில் பின்பற்றப்படுகின்றன.[80]

h. ^ சோ. ந. கந்தசாமி கூறுவதாவது: "பிற்காலத்து ஒளவையாரின் ஞானக்குறளும் உமாபதிசிவத்தின் திருவருட்பயனும் வீட்டுப் பாலாகக் கொள்ளப்பெற்றன. உயிரின் தேவை வீட்டின்பமாக அமைகிறது. பிறவிச் சுழற்சியினின்றும் விடுபட்டு உயிர் பேரின்பப் பேற்றினை எய்துதற்குரிய நெறிகளைத் திருவள்ளுவர் அறத்துப் பாலின் இறுதி அதிகாரங்களில் வரையறுத்துக் கூறியுள்ளமையால், வீட்டுப்பாலினைத் தனியே கூறவெண்டிய தேவை அவர்க்கு ஏற்படவில்லை."[297]

i. ^ இந்து மதத்தின் "நிஷ்காம கர்மா" கோட்பாடு இங்கு நினைவுகூறத்தக்கது. தார்மீக சிந்தனையுடன் அறம் பிறழாது வாழும் ஒரு சாமானியன் "உள்ளத்துறவு", அஃதாவது பற்றற்று கடமையாற்றுதல், மூலமாக ஒரு துறவு மூலம் முனிவர் அடைவதை எளிதில் அடையமுடியும் என்று கூறுகிறது நிஷ்காம கர்மா.[298][299][300] குறள் 629ஐ ஒப்பீட்டுடன் நோக்குக: "இன்பம் விளையும் போது அவ்வின்பத்தில் திளைக்காதவன் துன்பம் விளையும் போது அத்துன்பத்தால் வாடுவதில்லை".[301] உலகப் பற்றினைத் துறக்க வேண்டுமென்று 341 மற்றும் 342 ஆகிய குறட்பாக்கள் வலியுறுத்துகின்றன.[302]

j. ^ துறவறவியல் விளக்கம்: "அவாக்களை அடக்கிக் கட்டுப்படுத்தி, ஒழுக்க நெறி பிறழாது வாழ்வதே துறவறமாகும். அஃதாவது, ஐம்புலன்கள் வழி ஏற்படக் கூடிய நெறி பிறழும் செயல்களை எந்நிலையிலும் துறந்து வாழ்தலே துறவறமாகும் (துறவு நெறியாகும்). இத்துறவறம் இல்லறத்திற்கு மாறுபட்டதோ, இல்லறத்தையே துறப்பதோ இல்லை."[81]

k. ^ ஒரு செய்யுளின் பொருளைத் தற்கால மொழிநடையில் விளக்கிக் கூறுவதே உரை எனப்படும். இது இந்திய மரபில் "பாஷ்யம்" என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆழமாக அலசி ஆராய்ந்ததன் விளைவாக அச்செய்யுளின் ஆழ்பொருளைக் கண்டுணர்ந்த அறிஞர்களால் எழுதப்படுவதாகும்.[303][304][305]

l. ^ இந்த மொழிபெயர்ப்பு இராம வர்மா ஆராய்ச்சி மையத்தின் பதிப்பிதழில் பாகம் VI, பகுதி II; பாகம் VIII, பகுதி; பாகம் IX, பகுதி I ஆகியவற்றில் முறையே 1938, 1940, மற்றும் 1941 ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்டது.[306]

m. ^ 1967-ம் ஆண்டு தேதியிட்ட தமிழ்நாடு அரசு, அரசு ஆணை எண் 1193.[231]

n. ^ சென்னை இராயப்பேட்டையிலுள்ள பெரியபாளையத்தம்மன் கோயிலில் உள்ள கிணற்றின் சுவரில் காணப்படும் கல்வெட்டு எல்லீசனின் வள்ளுவரின் மீதான பற்றைப் பறைசாற்றுவதாக உள்ளது. இக்கிணறானது அப்போது சென்னையில் நிலவிய குடிநீர் பஞ்சத்தைத் தீர்க்க வேண்டி எல்லீசனின் உத்தரவின் படி 1818-ம் ஆண்டு வெட்டப்பட்ட 27 கிணறுகளில் ஒன்றாகும். இந்நீண்ட கல்வெட்டில் எல்லீசன் வள்ளுவரைப் புகழ்ந்துரைத்து தனது குடிநீர் பஞ்சத்தைக் களையும் செயற்பாட்டினை ஒரு குறட்பாவினைக் கொண்டு விளக்குகிறார். எல்லீசன் சென்னை நாணயகத்தின் தலைவராக இருந்தபோது வள்ளுவரின் உருவம் பொறித்த தங்க நாணயங்களை வெளியிட்டார். எல்லீசனின் கல்லறையில் காணப்படும் தமிழ்க் கல்வெட்டில் அவரது குறள் உரையைப் பற்றிய குறிப்பையும் காணமுடிகிறது.[307][308]

o. ^ கல்வெட்டில் காணப்படும் ஆசிரியப்பாவில் இயற்றப்பட்ட செய்யுள் பின்வருமாறு (எல்லீசன் எடுத்தாளும் குறட்பா சாய்வெழுத்துக்களில் உள்ளன):[308][309]
சயங்கொண்ட தொண்டிய சாணுறு நாடெனும் | ஆழியில் இழைத்த வழகுறு மாமணி | குணகடன் முதலாக குட கடலளவு | நெடுநிலம் தாழ நிமிர்ந்திடு சென்னப் | பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே | பண்டாரகாரிய பாரம் சுமக்கையில் | புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான் | தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் | திருக்குறள் தன்னில் திருவுளம் பற்றிய் | இருபுனலும் வாய்த்த மலையும் வருபுனலும் | வல்லரணும் நாட்டிற் குறுப்பு | என்பதின் பொருளை என்னுள் ஆய்ந்து | ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாகன சகாப்த வரு | ..றாச் செல்லா நின்ற | இங்கிலிசு வரு 1818ம் ஆண்டில் | பிரபவாதி வருக்கு மேற் செல்லா நின்ற | பஹுதான்ய வரு த்தில் வார திதி | நக்ஷத்திர யோக கரணம் பார்த்து | சுப திநத்தி லிதனோ டிருபத்தேழு | துரவு கண்டு புண்ணியாஹவாசநம் | பண்ணுவித்தேன்.

Remove ads

மேற்கோள்கள்

மேற்கோள் தரவுகள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads